1. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையும் அனைத்துக் கிறிஸ்தவர்களும் விசுவாசத்தை அறிவிப்பதற்குத் துணிச்சலைக் கொண்டிருக்க வேண்டும்
2. சிரியா நாட்டு அகதிகளுக்கு இன்னும் அதிகமான மனிதாபிமான உதவிகளுக்குத் திருத்தந்தை அழைப்பு
3. திருத்தந்தை பிரான்சிஸ் அமைதிக்காகச் செபம்
4. நான்கு இறையடியார்களின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகளுக்குத் திருத்தந்தை ஒப்புதல்
5. Rana Plaza கட்டிட விபத்துக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பு, பங்களாதேஷ் காரித்தாஸ்
6. CRI பொதுச் செயலர் அருள்பணி ஜோ மன்னத் ச.ச
7. ஊடகவியலாளரின் பாதுகாப்புக்கு ஐ.நா. அதிகாரிகள் அழைப்பு
8. ஆண்டுதோறும் 2,70,000க்கு மேற்பட்ட பாதசாரிகள் கொல்லப்படுகின்றனர் : ஐ.நா.நிறுவனம்
9. 2012, அதிகமான வெப்ப ஆண்டுகளில் ஒன்று
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையும் அனைத்துக் கிறிஸ்தவர்களும் விசுவாசத்தை அறிவிப்பதற்குத் துணிச்சலைக் கொண்டிருக்க வேண்டும்
மே,03,2013. திருஅவையும், அனைத்துக் கிறிஸ்தவர்களும் விசுவாசத்தை, உயிர்த்த இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தை வழங்குவதற்குத் துணிச்சலைக் கொண்டிருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
துணிச்சலை இழக்கும்போது திருஅவை வெதுவெதுப்பான சூழலில் நுழைகின்றது, துணிச்சல் இல்லாமல் வெதுவெதுப்பாகவுள்ள அரைகுறைக் கிறிஸ்தவர்கள் திருஅவையைப் புண்படுத்துகின்றனர் என்று கூறினார் திருத்தந்தை.
இன்றைய
சமுதாயத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் துணிச்சலுடன் இருக்க வேண்டும் என்பது
குறித்து இவ்வெள்ளியன்று காலை நிகழ்த்திய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.
ஏனெனில் வெதுவெதுப்பான சூழல், பிரச்சனைகளை நம் மத்தியில் உருவாக்குகின்றது, அதனால் இறைவனை நோக்கிச் செபிப்பதற்கு நம்மில் துணிச்சல் இல்லாமல் போய்விடுகின்றது, பொறாமைகள், தன்னலம், எரிச்சல் போன்றவையும் நம்மில் முன்னோக்கிச் செல்கின்றன, இவை திருஅவையின் நன்மைக்கு நல்லதல்ல என்றும் திருத்தந்தை கூறினார்.
நாம் அனைவரும் பெற்றுள்ள விசுவாசத்தை நம் வாழ்வாலும் வார்த்தையாலும் அறிவிக்க வேண்டும், இதற்கு அடிப்படையாகத் தேவையான துணிச்சல் என்னும் அருளை இயேசுவிடம் கேட்க வேண்டுமென்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட சமூகத்தொடர்பு அவைத் தலைவர் பேராயர் Claudio Maria Celli, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து இவ்வெள்ளியன்று காலை கூட்டுத்திருப்பலி நிகழ்த்தினார். சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும் திருத்தந்தையின் மெய்க்காப்பாளர் படைத்தளபதி Daniel Rudolf Anrigம், மெய்க்காப்பாளர்களும் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.
1527ம்
ஆண்டில் உரோம் சூறையாடப்பட்டபோது திருத்தந்தையைப் பாதுகாப்பதற்காகப்
போரிட்ட 189 சுவிஸ் படைவீரர்களில் 147 பேர் கொல்லப்பட்டனர். இது நடந்த மே
6ம் தேதியன்று ஆண்டுதோறும் வத்திக்கானில் புதிய சுவிஸ் கார்ட்ஸ் பணியில் சேர்க்கப்படுகின்றனர்.
திருஅவை மற்றும் திருத்தந்தைக்குப் பிரமாணிக்கத்துடன் இருந்து, அழகான சாட்சியத் தொண்டுகளை இந்த சுவிஸ் கார்ட்ஸ் ஆற்றி வருகின்றனர் என்று சொல்லி, அவர்களுக்குச் சிறப்பான வாழ்த்துக்களை இத்திருப்பலியின் முடிவில் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. சிரியா நாட்டு அகதிகளுக்கு இன்னும் அதிகமான மனிதாபிமான உதவிகளுக்குத் திருத்தந்தை அழைப்பு
மே,03,2013. லெபனன் அரசுத்தலைவர் Michel Sleiman, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார்.
25 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் அரசுத்தலைவர் Sleiman.
லெபனனின் தற்போதைய நிலை, அந்நாட்டின் பல்வேறு சமூகங்களுக்கு இடையே உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு, இன்னும், சிரியாவில் இடம்பெறும் சண்டை போன்ற விவகாரங்கள் இச்சந்திப்பில் இடம்பெற்றன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
லெபனனிலும், அதன் அண்டை நாடுகளிலும் பெருமளவான எண்ணிக்கையில் வாழும் சிரியா நாட்டு அகதிகள் குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், சிரியா நாட்டு அகதிகளுக்கு மேலும் அதிகமான மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுமாறு இச்சந்திப்பில் அழைப்பு விடுத்தார்.
மேலும், மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியும், உறுதியான
தன்மையும் ஏற்படுவதற்கு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே
பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டியதன் முக்கியத்துவமும் இச்சந்திப்பில்
வலியுறுத்தப்பட்டதாகத் திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் அமைதிக்காகச் செபம்
மே,03,2013. ஓ! புனித பிரான்சிஸ் அசிசியாரே, எம் இதயங்களில் அமைதி நிலவ இறைவனிடம் எமக்காகப் பரிந்துபேசும் என்று அமைதிக்காகச் செபித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் அசிசி நகரில் புனித பிரான்சிஸின் கல்லறையில் அமைக்கப்பட்டுள்ள வெப்காமைப் பார்த்த பின்னர், sanfrancesco.org என்ற இணையதளத்தில் இச்செபத்தை எழுதியுள்ளார் திருத்தந்தை.
மேலும், மே மாதத்தில் குடும்பங்களில் செபமாலையைச் சேர்ந்து செபிப்பது எவ்வளவு அழகானது. செபம், குடும்ப வாழ்வை உறுதிப்படுத்துகின்றது என்று இவ்வெள்ளிக்கிழமையன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், இச்சனிக்கிழமை
மாலை 6 மணிக்கு உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்கா சென்று அனைத்து
விசுவாசிகளுடன் சேர்ந்து செபமாலை செபிக்கவுள்ளார் திருத்தந்தை.
மே மாதம் அன்னைமரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம் என்பதால், இம்மாதத்தின் சனிக்கிழமையன்று புனித மேரி மேஜர் பசிலிக்கா செல்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. நான்கு இறையடியார்களின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகளுக்குத் திருத்தந்தை ஒப்புதல்
மே,03,2013. இரண்டு இத்தாலியர், ஓர் இஸ்பானியர், ஒரு
போலந்து நாட்டவர் என நான்கு இறையடியார்களின் பரிந்துரைகளால் நடைபெற்ற
புதுமைகளை இவ்வியாழனன்று அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் Cagliariல் 1812ம் ஆண்டு பிறந்த சிசிலியின் அரசி Maria Cristina, இத்தாலியின் Bosaroவில் 1924ம் ஆண்டு பிறந்த Maria Bolognesi, இஸ்பெயினின் Palma de Mallorcaவில் 1833ம் ஆண்டு பிறந்த அருள்பணி Gioacchino Rosselló i Ferrà, போலந்தின் Wieluńல் 1885ம் ஆண்டு பிறந்த Maria Teresa ஆகிய நான்கு இறையடியார்களின் பரிந்துரைகளால் புதுமைகள் நடைபெற்றுள்ளன.
திருப்பீட
புனிதர்நிலைக்கு உயர்த்தும் பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ
தலைமையிலான குழு இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து
இந்நால்வர் குறித்த விபரங்களைச் சமர்ப்பித்தது.
இறையடியார் அருள்பணி Gioacchino, இயேசு மரி திருஇதயங்கள் சபையை நிறுவியவர். இறையடியார் மரிய தெரேசா, குழந்தை இயேசுவின் கார்மேல் சகோதரிகள் சபையை ஆரம்பித்தவர்.
ஓர் இறையடியார், அருளாளர் நிலைக்கும், புனிதர் நிலைக்கும் உயர்த்தப்படுவதற்கு அவர் பரிந்துரையால் ஒவ்வொரு நிலைக்கும் குறைந்தது ஒரு புதுமையாவது நடந்திருக்க வேண்டும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. Rana Plaza கட்டிட விபத்துக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பு, பங்களாதேஷ் காரித்தாஸ்
மே,03,2013. பங்களாதேஷில் Rana Plaza என்ற
எட்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்துக்கு நாம் ஒவ்வொருவரும்
பொறுப்பேற்க வேண்டும் என்று அந்நாட்டு காரித்தாஸ் இயக்குனர் Benedict Alo D'Rozario கூறினார்.
Rana Plaza
கட்டிட விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்குத் திருத்தந்தை
செபித்ததோடு மனித மாண்பின் மதிப்பு உணரப்பட வேண்டுமென அழைப்பு
விடுத்ததற்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டுமென்று கூறினார் D'Rozario.
அனைத்துலக தொழிலாளர் தினத்தன்று புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியிலும் Rana Plaza கட்டிட விபத்து குறித்து திருத்தந்தை குறிப்பிட்டார் என்றுரைத்த D'Rozario, அங்கு வேலை செய்தவர்களுக்கு நியாயமான ஊதியம் கொடுக்கப்படவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார் என்றார்.
கடந்த மாதம் 24ம் தேதி இடம்பெற்ற இக்கட்டிட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அங்கு
இடம்பெறும் மீட்புப்பணிகளுக்கும் காரித்தாஸ் நிறுவனம் உதவி செய்து
வருகின்றது என்றும் அவர் ஆசியச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஆதாரம் : AsiaNews
6. CRI பொதுச் செயலர் அருள்பணி ஜோ மன்னத் ச.ச
மே,03,2013. CRI எனப்படும் இந்திய இருபால் துறவுசபைகளின் பொதுச் செயலராக, சலேசிய சபையின் அருள்பணியாளர் ஜோ மன்னத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் 1,30,000த்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இருபால் துறவுசபைகளின் செயலராக நியமிக்கப்பட்டுள்ள அருள்பணி ஜோ மன்னத், வருகிற 24ம் தேதியன்று பொறுப்பேற்கிறார்.
இவரது பதவி காலம் நான்கு ஆண்டுகள்.
ஆதாரம் : UCAN
7. ஊடகவியலாளரின் பாதுகாப்புக்கு ஐ.நா. அதிகாரிகள் அழைப்பு
மே,03,2013. ஒவ்வொரு நாளும் பேச்சுச் சுதந்திரம் புதிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிவரும்வேளை, ஒவ்வொரு நாட்டிலும் ஊடகவியலாளருக்குப் பாதுகாப்புகள் அளிக்கப்படுமாறு ஐ.நா. அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
இவ்வெள்ளிக்கிழமையன்று 20வது அனைத்துலக பத்திரிகை சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, ஐ.நா.பொதுச்செயலரும் யுனெஸ்கோ நிறுவன இயக்குனரும் இணைந்து வெளியிட்டுள்ள செய்தியில், இன்று உலகில் ஊடகவியலாளர் எதிர்கொள்ளும் சித்ரவதைகள், தடுப்புக்காவல்கள் மற்றும் பிற துன்பங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
உலகில் கடந்த பத்து ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் சண்டை இடம்பெறாத இடங்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்று யுனெஸ்கோ நிறுவனம் கூறியுள்ளது.
ஊடகவியலாளர் கொல்லப்படும் குற்றங்களில் பத்துக்கு ஒன்பது பேர் தண்டிக்கப்படாமலேயே விடப்படுகின்றனர் என்றும் யுனெஸ்கோ கூறியுள்ளது.
“பேசுவதற்குப் பாதுகாப்பு : அனைத்து ஊடகங்களிலும் பேச்சு சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு” எனும் தலைப்பில் இவ்வாண்டு இவ்வுலக தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
ஆதாரம் : UN
8. ஆண்டுதோறும் 2,70,000க்கு மேற்பட்ட பாதசாரிகள் கொல்லப்படுகின்றனர் : ஐ.நா.நிறுவனம்
மே,03,2013. ஆண்டுதோறும் 2,70,000க்கு மேற்பட்ட பாதசாரிகள் தங்களது உயிரை இழக்கும்வேளை, போக்குவரத்துப் பாதுகாப்புகளை மேம்படுத்த வேண்டுமென்று அரசுகளைக் கேட்டுள்ளது WHO என்ற அனைத்துலக நலவாழ்வு நிறுவனம்.
ஆண்டுதோறும் 12 கோடியே 40 இலட்சம் பேர் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர், இவ்வெண்ணிக்கையில் 22 விழுக்காட்டினர் பாதசாரிகள் என்று கூறும் WHO நிறுவனம், பாதசாரிகளைப் பாதுகாப்பதற்கு மிகுந்த கவனம் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளது.
அனைத்துலக சாலை பாதுகாப்பு வாரத்தை மே 6, வருகிற திங்களன்று தொடங்கவுள்ள WHO நிறுவனம், உலகின் சாலைகளில் ஒவ்வொரு வாரமும் 5,000த்துக்கு அதிகமான பாதசாரிகள் கொல்லப்படுகின்றனர் என்றும் கூறியது.
2011ம்
ஆண்டு முதல் 2020ம் ஆண்டுவரை சாலை பாதுகாப்புக்கானப் பத்தாண்டு என்ற
நடவடிக்கையையும் அனைத்துலக நலவாழ்வு நிறுவனம் கடைப்பிடித்து வருகிறது.
ஆதாரம் : UN
9. 2012, அதிகமான வெப்ப ஆண்டுகளில் ஒன்று
மே,03,2013. 1850ம் ஆண்டுக்குப் பின்னர், 2012ம் ஆண்டு அதிகமான வெப்பம் மிகுந்த ஆண்டாக இருந்ததாக WMO என்ற உலக வானிலை அமைப்பு கூறியுள்ளது.
தொழிற்சாலைகள் வெளியேற்றுகின்ற கரியமிலவாயு, புவியைத் தொடர்ச்சியாக வெப்பமூட்டுகின்றது என்பதற்கு இது மற்றுமோர் அடையாளம் என்று ஐ.நா. அமைப்பான WMOன் பொது இயக்குனர் Michel Jarraud கூறியுள்ளார்.
வழக்கமாக குளிர்ச்சியான காலநிலையைத் தரும் பசிபிக் காலநிலைத் தன்மையான La Niña தன்மையின் மத்தியிலும் 2012ம் ஆண்டு மிகவும் வெப்பமாக இருந்ததாகவும் Jarraud கூறியுள்ளார்.
வறட்சி, வெள்ளம், சூறாவளிகள் போன்ற தாக்கங்களுடன், துருவப்
பகுதியில் கோடைகாலத்தில் கடலில் பனி உருகுவதும் காலநிலை மாற்றத்தை
காண்பிக்கும் கவலையளிக்கும் மற்றுமோர் அடையாளம் என்றும் அவ்வமைப்பு
கூறுகிறது.
சராசரி வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் 27வது ஆண்டாகவும் 2012ம் ஆண்டு இருக்கின்றது எனக் கூறும் உலக வானிலை அமைப்பு, 1850ம் ஆண்டு முதல் காலநிலை குறித்த பதிவுகளைப் பதிவு செய்து வருகிறது.
ஆதாரம் : ZeeNews
No comments:
Post a Comment