Friday 23 September 2016

செய்திகள் - 22.09.16

செய்திகள் - 22.09.16
------------------------------------------------------------------------------------------------------

1. வீண்பெருமை ஆன்மாவை உடைக்கும் நோய் திருத்தந்தையின் மறையுரை

2. திருத்தந்தை - வரலாற்றை முதலில் எழுதுவது, பத்திரிக்கையாளர்களே

3. அமைதியின் வாய்க்கால்களாக வாழ்க திருத்தந்தையின் வாழ்த்து

4. 'நுண்ணுயிர் எதிர்ப்புச் சக்தியின் அழிவு' - கர்தினால் பரோலின்

5. கொலம்பியா அமைதி ஒப்பந்தம் நிகழ்வில், கர்தினால் பரோலின்

6. மதத்தின் பெயரால் வன்முறைகள், கடைசி காலத்தின் அறிகுறிகள்

7. அசிசி அமைதி விழாவைக் குறித்து, லூத்தரன் சபைத் தலைவர்

8. சிரியா மக்களைப் பந்தாடிவரும் சக்திவாய்ந்த அரசுகள்

------------------------------------------------------------------------------------------------------

1. வீண்பெருமை ஆன்மாவை உடைக்கும் நோய் திருத்தந்தையின் மறையுரை

செப்.22,2016. எலும்புகள், சக்தியிழந்து, உடையும் நிலையை அடையச் செய்யும் osteoporosis என்ற நோய், உடலில் ஏற்படுவதுபோல்,  ஆன்மாவின் osteoporosis நோய், வீண்பெருமையால் உண்டாகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், "வீண், முற்றிலும் வீண்" என்று சபையுரையாளர் கூறும் வார்த்தைகளை மையப்படுத்தி, மறையுரைக் கருத்துக்களை வழங்கினார் திருத்தந்தை.
இயேசுவைக் குறித்து கேள்விப்படும் குறுநில மன்னன் ஏரோது, திருமுழுக்கு யோவானை, தான் கொலை செய்ததை மறக்கமுடியாமல், உள்ளத்தில் போராட்டங்களைச் சந்திக்கிறார் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, ஏரோதின் தந்தையும், குழந்தை இயேசுவைக் கொல்ல முயன்ற குற்றத்தை மனதில் சுமந்து போராடியவர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
குற்றங்களைப் புரிவோர் ஒருபோதும் மன நிம்மதியுடன் வாழ முடியாது என்று தன் மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, குற்றங்கள் புரிவதற்கு, பேராசை, வீண் பெருமை, அகந்தை ஆகியவை அடித்தளங்களாக உள்ளன என்று கூறினார்.
இன்றைய முதல் வாசகத்தில் கூறப்பட்டுள்ள வீண் பெருமை பற்றி பேசியத் திருத்தந்தை, osteoporosis நோயினால் பாதிக்கப்பட்ட எலும்புகள், வெளிப்புறத்தில் அழகாகத் தெரிந்தாலும், அது உள்ளூற நோயுற்று இருப்பதுபோல், வீண் பெருமை கொள்ளும் ஆன்மா, வெளிப்புறத்தில் அழகாக இருந்தாலும், உள்ளுக்குள் நோயுற்று துன்புறுகிறது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை - வரலாற்றை முதலில் எழுதுவது, பத்திரிக்கையாளர்களே

செப்.22,2016. மனித சமுதாயத்தில் தாக்கங்களை உருவாக்கும் ஒரு சில துறைகளில், பத்திரிகை துறையும் ஒன்று என்றும், அத்துறையில் பணியாற்றுவோருக்கு கூடுதல் பொறுப்புக்கள் உள்ளன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்தாலிய தேசிய பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் 400 பேரை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, மனித வரலாற்றின் நிகழ்வுகளை, பத்திரிக்கையாளர்களே முதலில் எழுதுகின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.
ஆன்மீகத்தில் ஆழமான உண்மைகளை உணர, தியானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துரிதமாக செயல்படும் பத்திரிகை துறையில் தியானங்கள் சாத்தியமில்லை என்றாலும், அத்துறையில் பணியாற்றுவோர் நின்று, நிதானித்து தகவல்களை வெளியிடுவது அவசியம் என்று கூறினார்.
உண்மையை நேசிப்பது, செய்யும் தொழிலை, சட்டங்களையும் தாண்டி, வாழ்வாக்குவது, மனித மாண்பைக் காப்பது என்ற மூன்று கருத்துக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த பத்திரிகை துறை பிரதிநிதிகளோடு பகிர்ந்துகொண்டார்.
பொய்மையை ஒரு தொழிலாக மாற்றிவரும் பல சமுதாய அமைப்புக்களுக்கு மத்தியில், உண்மையை நேசிப்பதும், அதனை தங்கள் தொழிலில் அச்சமின்றி எடுத்துரைப்பதும் பத்திரிக்கையாளர்களுக்கு உள்ள அடிப்படை சவால் என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.
பத்திரிகை துறையினரின் கருத்துக்கள் மக்களை சென்றடைவது எளிதென்பதால், அத்துறையில் பணியாற்றுவோர் உண்மையான மனித மாண்பை பாதுக்காக்கும் வகையில் தங்கள் பணியை ஆற்றவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
பொதுவாக, பத்திரிக்கை துறையினர், சமுதாயத்தை பிளவுபடுத்தி, அழிப்பதற்குப் பதில், மக்களை கட்டியெழுப்பும் வண்ணம் பணியாற்றினால், இவ்வுலகில் சந்திப்புக்கள் பெருகும், தர்மம் தழைக்கும் என்று திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. அமைதியின் வாய்க்கால்களாக வாழ்க திருத்தந்தையின் வாழ்த்து

செப்.22,2016. "இறைவனின் அன்பால் சூழப்படுவதற்கு நம்மை நாமே எவ்வளவுக்கெவ்வளவு அனுமதிக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நம் வாழ்வு மறுமலர்ச்சியடையும்" என்று, இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இத்துறவு இல்லத்தில் வாழும் அனைவருக்கும், இறைவன் தன் அமைதியைப் பொழிந்து ஆசீர்வதிப்பாராகஎன்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  அசிசி நகர் பிரான்சிஸ்கன் துறவு இல்லத்தின் குறிப்பேட்டில் எழுதினார் என்று, அசிசி திருத்தல செய்தித் தொடர்பாளர், அருள்பணி Enzo Fortunato அவர்கள் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 20, கடந்த செவ்வாயன்று அசிசி நகரில் இடம்பெற்ற உலக அமைதி செப நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள சென்றிருந்த திருத்தந்தை, பிரான்சிஸ்கன் துறவு இல்லத்தில் வாழ்வோரைச் சந்தித்த வேளையில், அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில், தன் வாழ்த்துக்களை, இஸ்பானிய மொழியில், தன் கைப்பட எழுதி வைத்தார்.
பிரான்சிஸ்கன் சகோதரர்கள், எளிமை உணர்வோடும், உடன்பிறந்தோர் உணர்வோடும் வாழ்வதை தொடர்வார்களாக என்றும், முழுமையான அமைதியை உய்த்துணரும் சகோதரர்கள், அவ்வமைதியை அனைவருக்கும் வழங்கும் வாய்க்கால்களாக வாழ்வார்களாக என்றும், திருத்தந்தை தன் வாழ்த்துக்களில் கூறியுள்ளார்.
இந்த வாழ்த்துக்களை, ஒரு சிறிய சகோதரனும், பணியாளருமான தான் வழங்குவதாக திருத்தந்தை தன் வாழ்த்துச் செய்தியின் இறுதியில் எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. 'நுண்ணுயிர் எதிர்ப்புச் சக்தியின் அழிவு' - கர்தினால் பரோலின்

செப்.22,2016. நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை குறைக்கவும், அழிக்கவும் வழிசெய்யும் முறைகள் இன்று உலகில் பரவி வருவது, மனிதர்கள், மற்றும் பிற உயிர்களுக்கு ஆபத்தாக முடியும் என்பதால், கத்தோலிக்கத் திருஅவை மிகுந்த கவலை கொண்டுள்ளது என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. பொது அவையில் தெரிவித்தார்.
நியூ யார்க் நகரில், ஐ.நா. பொது அவையில் நடைபெறும் பல்வேறு கூட்டங்களில், செப்டம்பர் 19, இத்திங்கள் முதல் கலந்துகொண்டு, உரையாற்றிவரும் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், 'நுண்ணுயிர் எதிர்ப்புச் சக்தியின் அழிவு' (Antimicrobial Resistance) என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் இப்புதனன்று வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.
"வர்த்தக மற்றும் சுயநல ஆசைகளுக்காக, மனித உடலிலும், ஏனைய உயிர்களிலும் தேவையற்ற வழிகளில் குறுக்கீடுகள் செய்வது, இவ்வுலகை, இன்னும் அழகற்றதாய், வறுமை நிறைந்ததாய் மாற்றிவிடும்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய சொற்களை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் நினைவுறுத்தினார்.
நுண்ணுயிர் எதிர்ப்புச் சக்தியின் அழிவால் அதிக அளவில் பாதிக்கப்படுவது, கருவில் உள்ள குழந்தைகளும், அதிக நோயினால் வாடுவோரும் என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், பிறக்காத குழந்தைகள், நோயுற்றோர், முதியோர் ஆகியோரை வர்த்தக உலகம் ஒரு சுமையாகக் கருதுவது இந்த முயற்சியில் தெளிவாகிறது என்று கூறினார்.
சமுதாயத்திற்கு வழங்கப்படும் நலப்பணிகள், அனைவருக்கும் சமமாக, தரம் மிகுந்ததாக இருக்கவேண்டும் என்பதே, திருப்பீடம் உலக அமைப்புக்களுக்கு முன் வைக்கும் பணிவான வேண்டுகோள் என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. கொலம்பியா அமைதி ஒப்பந்தம் நிகழ்வில், கர்தினால் பரோலின்

செப்.22,2016. தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டில், அரசுக்கும், புரட்சிக்குழுவான FARCக்கும் இடையே செப்டம்பர் 26, வருகிற திங்களன்று, அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்வில், திருப்பீடத்தின் சார்பில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஆகஸ்ட் 24ம் தேதி அரசுக்கும், புரட்சிக்குழுவுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம், 52 ஆண்டுகளாக அந்நாட்டில் நிலவி வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொணர்ந்துள்ளன என்று, ஊடகங்கள் கூறிவருகின்றன.
செப்டம்பர் 26ம் தேதி, Cartagena நகரில் நடைபெறும் இந்த அமைதி ஒப்பந்த கையெழுத்திடல் நிகழ்வில், பிற நாடுகளின் அரசுத் தலைவர்கள் 13 பேர், ஐ.நா.வின் உயர் அதிகாரிகள், மற்றும் உலக வங்கியின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்வர் என்றும், பின்னர் இந்த ஒப்பந்தம் மக்களின் வாக்கெடுப்பிற்கு அக்டோபர் 2ம் தேதி செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் இந்த ஒப்பந்தம் உருவான உடனேயே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு தரப்பினரையும், கொலம்பிய மக்களையும் வாழ்த்தி, செய்தியொன்றை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1964ம் ஆண்டு முதல், அரசுக்கும், FARC குழுவுக்கும் இடையே நிகழ்ந்துவந்த உள்நாட்டுப் போரினால், இதுவரை, 2,60,000த்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று, CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி

6. மதத்தின் பெயரால் வன்முறைகள், கடைசி காலத்தின் அறிகுறிகள்

செப்.,22,2016. மதத்தின் பெயரால் வன்முறைகள் இடம்பெறுவது என்பது, இறுதித் தீர்ப்பு நாள் நெருங்கி வருகிறது என்பதற்கான காலத்தை உணர்த்தும் அடையாளங்கள் என உரைத்துள்ளனர், லெபனனின் பல்சமய தலைவர்கள்.
உலக அமைதிக்காக அனைத்து நாடுகளிலும் பல்சமய செப வழிபாடுகள் இடம்பெறவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்திருந்த விண்ணப்பத்தையொட்டி, லெபனனின் அமைதி, நீதி அவையால் Harissa எனுமிடத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த செபக்கூட்டத்தில் பங்குபெற்ற கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் Druze மதங்களின் 16 உயர்மட்டப் பிரதிநிதிகள், மதத்தின் பெயரால் இடம்பெறும் வன்முறைகளை நியாயப்படுத்தும் முயற்சிகள் குறித்து கண்டனத்தை வெளியிட்டனர்.
Harissa மரியன்னை திருத்தலத்தில் இடம்பெற்ற இப்பல்சமய வழிபாட்டில், பங்குபெற்றோர், லெபனனிலும், மத்தியக்கிழக்குப் பகுதியிலும் இணக்க வாழ்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். Maronite முதுபெரும் தந்தை Bechara Boutros Rai அவர்களும், இவ்வழிபாட்டில், இடையிடையே அமைதிக்கான விண்ணப்பங்களை எழுப்பினார்.
இந்த செப வழிபாட்டின் இறுதியில், கிறிஸ்தவ தலைவர்களுடன், Shiite இஸ்லாமிய மதத்தலைவர் Ahmed Abdel Amir Kabalan, Druze மதப் பிரதிநிதி Sami Aboul Mouna  ஆகியோர் இணைந்து, அமைதிக்கான பொதுச்செபத்தை உரத்த குரலில் செபித்தனர்.

ஆதாரம் : FIDES/வத்திக்கான் வானொலி

7. அசிசி அமைதி விழாவைக் குறித்து, லூத்தரன் சபைத் தலைவர்

செப்.22,2016. உலக அமைதி வேண்டி, அசிசி நகரில் நிகழ்ந்த பல் சமய வழிபாட்டில், அமைதியை வளர்க்க முயலும் அனைத்து நல்ல உள்ளங்களையும் அடையாளம் காண முடிந்தது என்று, எவஞ்செலிக்கல் லூத்தரன் சபையின் தலைவர், Heiner Bludau அவர்கள் கருத்து தெரிவித்தார்.
"அமைதிக்காகத் தாகம்: உரையாடலில் மதங்களும் கலாச்சாரங்களும்" என்ற தலைப்பில், சாந்த் எதிஜியோ (Sant'Egidio) குழுமத்தினர், அசிசி நகரில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், உலக லூத்தரன் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்ட Heiner Bludau அவர்கள், அசிசி நகரில் பல்வேறு சமயங்களிடையே நிலவிய மனம் திறந்த உரையாடல் குறித்து மகிழ்வுடன் பேசினார்.
30 ஆண்டுகளுக்கு முன், புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், இந்த முயற்சியைத் துவங்கியபோது, இவ்வுலகிற்குத் தேவைப்பட்ட அமைதி, தற்போது இன்னும் பல மடங்கு அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதை, அனைத்து மதங்களைச் சேர்ந்த நல் மனம் கொண்டோரும் உணர்ந்துள்ளனர் என்று, லூத்தரன் சபைத் தலைவர் Heiner Bludau அவர்கள், எடுத்துரைத்தார்.
இத்தாலி நாட்டில் வாழ்ந்துவரும் லூத்தரன் சபையினரின் எண்ணிக்கை 7000 என்றும், இவர்களிடையே ஜெர்மன், இத்தாலியம் ஆகிய இரு மொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன என்றும், இத்தாலிய லூத்தரன் சபை அறிக்கையொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. சிரியா மக்களைப் பந்தாடிவரும் சக்திவாய்ந்த அரசுகள்

செப்.22,2016. உலகின் சக்திவாய்ந்த அரசுகளும், அமைப்புகளும் சிரியா நாட்டை ஒரு விளையாட்டுத் திடலாக மாற்றி, அங்கு வாழும் மக்களை, பந்துகளைப்போல் உதைத்து விளையாடுகின்றனர் என்று, சிரியாவின் காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு கூறியுள்ளது.
செப்டம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் உலகெங்கும் சிறப்பிக்கப்பட்ட அமைதி நாள்களையொட்டி, காரித்தாஸ் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு மடலில், சிரியா நாட்டின் அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் முற்றிலும் அழிக்கப்பட்டு வருவது குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் சிரியாவில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், சிறிதளவு நிம்மதியைத் தந்தது என்றாலும், தேவைப்படும் மக்களுக்கு உதவிகள் கொண்டு செல்லும் வேளையில், மீண்டும் தாக்குதல்கள் நிகழ்ந்தது அதிர்ச்சியைத் தந்துள்ளது என்று, காரித்தாஸ் அதிகாரி, Sandra Awad அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறியுள்ளார்.
இன்று சிரியா மக்களுக்கு அமைதி ஒன்றே மிக முக்கியமான தேவை என்று கூறிய Awad அவர்கள், அந்த அமைதியை வழங்க மறுக்கும் உலகச் சக்திகள், நாட்டு மக்களை அநீதமான முறையில் பந்தாடிவருவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment