Monday 21 December 2015

செய்திகள்-21.12.15

செய்திகள்-21.12.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீட நிர்வாகிகளுக்கு திருத்தந்தை உரை

2. பெற்றோர், பிள்ளைகள்மீது காட்டும் அன்பே விலைமதிப்பில்லாப் பரிசு

3. முஸ்லிம் சிறுமி உருவாக்கிய கிறிஸ்மஸ் குடில்

4. இயேசு கிறிஸ்துவைச் சந்திக்கும் வியப்பை உணர்வோம்

5. இந்தியாவில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபம்

6. சிரியா, லிபியா, நிக்கராகுவா, கோஸ்டா ரிக்காவில் அமைதிக்கு அழைப்பு

7. உலக மனித ஒருமைப்பாட்டுத் தினம்

8. சிறுபான்மை இனத்தவரைக் கொல்வது இனப்படுகொலை

------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீட நிர்வாகிகளுக்கு திருத்தந்தை உரை

டிச.21,2015. திருப்பீட தலைமையகத்திற்குத் தேவைப்படும் இன்றியமையாத கூறுகளை வலியுறுத்திய அதேவேளை, இரக்கத்தின் யூபிலி ஆண்டு சுட்டிக்காட்டும் நன்றியுணர்வு, புதுப்பித்தல், தவம், ஒப்புரவு ஆகியவற்றின் பாதையைப் பின்செல்லுமாறு திருப்பீட நிர்வாகப் பொறுப்பிலுள்ளவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானிலுள்ள கிளமெந்தினா அறையில் திருப்பீட நிர்வாகத்தில் பொறுப்பில் உள்ளவர்களைச் சந்தித்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்து நீண்ட உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த சில நாள்களாக எனக்கு காய்ச்சல், அதனால் நாற்காலியில் அமர்ந்துகொண்டு உரை வழங்குகிறேன், மன்னிக்கவும் எனவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு இதே சந்திப்பில் திருப்பீட தலைமையகத்தைப் பாதித்திருந்த 15 நோய்கள் பற்றிக் கூறினேன், இன்று அதற்கான நோய் எதிர்ப்பு மருந்துகளையும் கூறுகிறேன் என்றுரைத்த திருத்தந்தை, திருப்பீட தலைமையகத்தில் நாம் சந்தித்த துர்மாதிரிகைகள் வேதனையை அளித்தாலும், திருப்பீடச் சீர்திருத்தங்கள், மேலும் மிக உறுதியோடும், பொறுப்புணர்வோடும் தொடர்ந்து இடம்பெறும் என்றும் கூறினார்.
பரிந்துரைகள் மற்றும் இலஞ்சத்தை எப்படி எதிர்கொள்வது, ஆன்மாக்களைப் புண்படுத்தி, நம் சான்று வாழ்வின் நம்பகத்தன்மையை அச்சுறுத்தும் துர்மாதிரிகைகளையும், அதிகாரத்துவப் பாணியில் செயலாற்றுவதையும் எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றியும் விளக்கினார் திருத்தந்தை. மேலும், நன்மைபுரிவதை அழிக்கும் கோட்பாடாக மாறும் உண்மையில்லாத பிறரன்பு, அன்பில்லாத உண்மை நேர்மையற்ற தீர்ப்புக்கு இட்டுச்செல்லும்.. என்று, மறைப்பணி, கனிவு உட்பட பல கூறுகளைக் குறிப்பிட்டுப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். இறுதியில், அருளாளர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட செபத்தோடு இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். நாம் அனைவரும் உழைப்பாளர்கள், கட்டட மேலாளர்கள் அல்ல, நாம் பணியாளர்கள், மெசியா அல்ல. நமக்குச் சொந்தமில்லாத எதிர்காலத்தின் இறைவாக்கினர்கள் நாம் என்று இச்செபம் நிறைவடைகின்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. பெற்றோர், பிள்ளைகள்மீது காட்டும் அன்பே விலைமதிப்பில்லாப் பரிசு

டிச.21,2015. பெற்றோர், பிள்ளைகளுக்கு வழங்கும் மிகவும் விலைமதிப்பில்லாத பரிசு பொருள்கள் அல்ல, மாறாக, அவர்கள் பிள்ளைகள்மீது காட்டும் அன்பே என்று வத்திக்கான் பணியாளர்களிடம் இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள் நண்பகலில் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில், வத்திக்கானில் பணியாற்றும் அனைவரையும், அவர்களின் குடும்பத்தினருடன் சந்தித்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் பணியாற்றும் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
வத்திக்கானில் இடம்பெற்ற துர்மாதிரிகைகளுக்கு மன்னிப்புக் கேட்ட திருத்தந்தை, வத்திக்கான் பணியாளர்கள், தங்களின் திருமண வாழ்வை மேம்படுத்தி, பிள்ளைகளோடு நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் பண்பை, எல்லாவற்றிற்கும் மேலாக, முதல் காரியமாகச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
பிள்ளைகள் முதிர்ச்சிப் பண்பில் வளர்வதற்கு அவர்களுடன் உரையாடல் நடத்துமாறும், தாத்தா பாட்டிகளையும், வயதானவர்களையும் அன்புடன் பராமரிக்குமாறும், பிள்ளைகள் வளர்ப்பில் தாத்தா பாட்டிகளின் முக்கியத்துவத்தை உணருமாறும் பரிந்துரைத்தார் திருத்தந்தை. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும், அன்றைய நாள் மாலைக்குள் சமாதானம் செய்துகொள்ள வேண்டுமென்பதை மறக்கக் கூடாது, இந்தப் பனிப்போர் அடுத்த நாளைக்குத் தொடரக் கூடாது, அடுத்த நாளைக்கு அந்தப் பனிப்போரைத் தொடர அனுமதிப்பது, மிகவும் ஆபத்தானது என்றும், இச்சந்திப்பில் கலந்துகொண்ட திருமணமான தம்பதியரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
திருமணத்தின் அடிப்படைக் கூறு, திருமண வாழ்வையும், பிள்ளைகளையும் பராமரிப்பதாகும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றாட வாழ்வில் கணவருக்கும் மனைவிக்கும் இடையே, பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே, சகோதர சகோதரிகளுக்கு இடையே இரக்கப்பண்பு விளங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. முஸ்லிம் சிறுமி உருவாக்கிய கிறிஸ்மஸ் குடில்

டிச.21,2015. சனவரி முதல் நாள் மாலை 5 மணிக்கு உரோம் தூய மேரி மேஜர் பசிலிக்காவில் புனிதக் கதவைத் திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவனின் அன்னையாம் புனித கன்னி மரியாவின் விழா நாளும், 49வது உலக அமைதி நாளுமான சனவரி முதல் தேதியன்று தூய மேரி மேஜர் பசிலிக்காவில் புனிதக் கதவைத் திறந்து வைப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், ஈசா என்ற ஒரு முஸ்லிம் சிறுமி உருவாக்கிய கிறிஸ்மஸ் குடிலை, கடந்த புதன் பொது மறைக்கல்வி உரையின் இறுதியில் ஆசிர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். சிற்பி Gilberto Perlotto அவர்களின் உதவியுடன், குறைந்தது 103 நாடுகளைச் சேர்ந்த 208 மரத்துண்டுகளால், இக்குடிலை உருவாக்கியிருக்கிறார் சிறுமி ஈசா.
இம்மரத்துண்டுகள், போர் மற்றும் குற்ற வன்முறைகள் இடம்பெறும் இடங்கள், இயற்கை அல்லது மனிதர் காரணமாக இடம்பெற்ற பேரிடர்ப் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவை. வட இத்தாலியின் வெனெத்தோ மாநிலத்தில் Pedavenaவில் துன்புறும் சிறார்க்கென அமைக்கப்பட்டுள்ள வில்லா சான் பிரான்சிஸ்கோ இல்லத்தில் வாழ்கின்ற சிறுமி ஈசா இக்குடிலை அமைத்துள்ளார். 
இந்தக் குடில் அமைக்கப்பட்ட முறை குறித்து கேள்விப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்குடிலின் முன்பாக சிறிது நேரம் அமைதியாகச் செபித்து ஆசிர்வதித்தார். மேலும், இக்குடில் திருத்தந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் வத்திக்கான் அதிகாரிகள் கூறினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. இயேசு கிறிஸ்துவைச் சந்திக்கும் வியப்பை உணர்வோம்

டிச.21,2015. கடவுளின் மாபெரும் கொடையாகிய இயேசு கிறிஸ்துவைச் சந்திக்கும்போது கிடைக்கும் வியப்பை உணர்வோம் என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் வியப்புப் பற்றியும், மனித சமுதாயத்தை மீட்பதற்காக இயேசு கிறிஸ்துவை அவர் அனுப்பிய அவரது மாபெரும் கொடை பற்றியும் பேசினார்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, கொடைகளில் எல்லாம் சிறந்த கொடை என்றும், தகுதியற்ற நமக்கு அவர் கொணர்ந்துள்ள மீட்பு, இயேசுவைச் சந்திப்பதில் கிடைக்கும் வியப்பை உணரச் செய்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
அடுத்த மனிதரில், வரலாற்றில், திருஅவையில் இயேசுவைச் சந்திக்காவிட்டால், அவரைச் சந்திப்பதன் வியப்பை நம்மால் கொண்டிருக்க இயலாது என்றுரைத்த திருத்தந்தை, அடுத்த மனிதர், வரலாறு, திருஅவை ஆகிய மூன்று வியப்பின் இடங்கள் பற்றி விளக்கினார்.
"கிறிஸ்மஸை அர்த்தமுள்ள வகையில் சிறப்பிக்க வேண்டுமெனில் வியப்பின் இடங்களில் குடியிருக்க நாம் அழைக்கப்படுகிறோம். நம் அன்றாட வாழ்வில் இந்த  வியப்பின் இடங்களில் எவை? முதல் இடம், நம்முடன் வாழும் மனிதர்கள். ஏனெனில் இயேசுவின் பிறப்பிலிருந்து, ஒவ்வொரு மனிதரின் முகமும் இறைமகனின் சாயலைத் தாங்கியுள்ளது. இந்தச் சாயலை குறிப்பாக ஏழைகளின் முகத்தில் காண்கிறோம். காரணம், கடவுள் இந்த உலகில் ஏழையாக நுழைந்தார். ஏழைகள் தம்மை முதலில் பார்க்க அனுமதித்தார். இரண்டாவது வியப்பின் இடம் வரலாறு. அதை விசுவாசக் கண்கொண்டு நோக்கினால் இந்த உண்மை புரியும். பல நேரங்களில் இதைச் சரியாகவே புரிந்துகொள்கிறோம். ஆனால், இந்த உலகம், பொருளாதாரச் சந்தையால் தீர்மானிக்கப்பட்டு, நிதி அமைப்பால் கட்டுப்படுத்தப்பட்டு, அதிகார வர்க்கத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும்போது வரலாறு பற்றிய நமது பார்வை பின்னோக்கிச் செல்கிறது. ஆனால் கிறிஸ்மஸ் கடவுள் இவை அனைத்தையும் புரட்டிப் போடுகிறார். எவ்வாறெனில், அன்னை மரியா பாடியதுபோன்று, வலியவர் அரியணையினின்று இறக்கப்படுவர், எளியோர் உயர்த்தப்படுவர், பசித்திருப்பவர் பல நலன்களால் நிரப்பப்படுவர், செல்வர் வெறுங்கையராய் அனுப்பப்படுவர். மூன்றாவது வியப்பின் இடம் திருஅவை. இதை ஒரு சமய நிறுவனமாக நோக்காமல், ஒரு தாயாக நோக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுள் தமது அனைத்து மகிழ்வாக இருந்த தம் ஒரேயொரு மகனை நமக்கு அளித்ததன் வழியாக, அவர் தம்மையே நம் அனைவருக்கும் அளித்தார், சீயோனின் தாழ்மையும் ஏழையுமான மரியா, மிக உன்னதமானவரின் திருமகனின் தாயாக மாறினார் என்றும் கூறினார் திருத்தந்தை.
கடவுளின் மாபெரும் கொடையையும், முன்னரே தெரிந்துகொள்ள முடியாத அவரின் வியப்பையும் உணர்ந்து கொள்வதற்கு அன்னை மரியாவின் உதவியை நாடுவோம் என்றும் திருப்பயணிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. இந்தியாவில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபம்

டிச.21,2015. இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், இந்தியாவில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனைவரும் செபிப்போம் என்று சொல்லி, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து அருள் நிறைந்த மரியே என்ற செபத்தைச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடும் வெள்ளத்தால் அண்மையில் பாதிக்கப்பட்ட அன்புக்குரிய இந்திய மக்களை இந்நேரத்தில் நினைக்கின்றேன் என்றுரைத்த திருத்தந்தை, இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு இறைவன் நிறைசாந்தியை அளிக்குமாறும் செபிப்போம் என்று கேட்டுக்கொண்டார்.
சென்னையில் அண்மையில் இடம்பெற்ற கடும் வெள்ளத்தால் அந்நகரின் 48 இலட்சம் மக்களில் பெருமளவினர் நோயின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை கூறுகின்றது.
இன்னும், தங்கள் குடில்களில் வைக்கும் பாலன் இயேசு திருவுருவங்களை, இம்மூவேளை செப உரைக்குக் கொண்டு வந்திருந்த உரோம் மற்றும் அந்நகரைச் சுற்றியுள்ள இடங்களின் சிறாரை வாழ்த்தியதோடு தனக்காகச் செபிக்குமாறும் அச்சிறாரைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. சிரியா, லிபியா, நிக்கராகுவா, கோஸ்டா ரிக்காவில் அமைதிக்கு அழைப்பு

டிச.21,2015. சிரியா, லிபியா, நிக்கராகுவா, கோஸ்டா ரிக்கா ஆகிய நாடுகளில் அமைதி நிலவவும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டை தான் பாராட்டுவதாகத் தெரிவித்த திருத்தந்தை, நம்பிக்கை நிறைந்த விருப்பத்துடனும், மனத்தாராள உணர்வுடனும் இந்த அமைதிப் பாதையில் தொடர்ந்து செயல்படுமாறு விண்ணப்பித்தார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள சிரியா குறித்த அமைதித் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு, அனைத்துலக சமுதாயம் தெளிவான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், லிபியாவில் தேசிய ஒன்றிப்பு அரசு, அண்மையில் கொண்டுவந்துள்ள திட்டம் அந்நாட்டின் எதிர்காலத்தில் நம்பிக்கையைக் கொண்டுவந்துள்ளது, இத்திட்டம் வெற்றியடையுமாறும் செபிக்கக் கேட்ட திருத்தந்தை, நிக்கராகுவா மற்றும் கோஸ்டா ரிக்கா நாடுகளுக்கிடையே சிதைந்திருந்த உறவுகள் சீர்செய்யப்படுமாறும் கூறினார்.
இவ்விரு நாடுகளுக்கிடையே இடம்பெற்ற எல்லைப் பிரச்சனைக்குக் கடந்த வாரத்தில்  பன்னாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பற்றிக் குறிப்பிட்டு, உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு வழியாக இவ்விரு நாடுகளும் உடன்பிறந்த உணர்வை வளர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. உலக மனித ஒருமைப்பாட்டுத் தினம்

டிச.21,2015. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 2030ம் ஆண்டின் புதிய வளர்ச்சித் திட்ட இலக்கை செயல்படுத்துவதில் தீவிரம்காட்டி அனைவருக்கும் நல்லதோர் எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்கு முயற்சிப்போம் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.
டிசம்பர் 20, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மனித ஒருமைப்பாட்டுத் தினத்திற்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கேட்டுள்ளார் பான் கி மூன்
உலகளாவிய ஒருமைப்பாட்டுணர்வின் அடிப்படையில் மனிதரின் வளர்ச்சி மற்றும் வளமைக்கு ஒத்துழைப்பு வழங்க உலகத் தலைவர்கள் இசைவு தெரிவித்திருப்பதைக் குறிப்பிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், பாரிசில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தமும், இப்பூமியின் மற்றும் அதன் மக்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட முக்கியமான ஒரு மைல்கல் என்றும் கூறினார்

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி

8. சிறுபான்மை இனத்தவரைக் கொல்வது இனப்படுகொலை

டிச.21,2015. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். இஸ்லாமிய அரசு அமைப்பால், சிறுபான்மை மதத்தினர் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும், ஓர் இனப்படுகொலை என்று கருதவேண்டும் என்று ஐ.நா.விடம் அழுத்தம் கொடுக்குமாறு, பிரிட்டனின் அறுபதுக்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டேவிட் கேமரூன் அவர்களிடம் கோரியுள்ளனர்.
யஜிதிகள் போன்ற சிறுபான்மை மதத்தினர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான, திட்டமிட்ட பாலியல் வன்செயல்கள், கடத்தல்கள் மற்றும் ஒட்டுமொத்த படுகொலைகளில் ஐ.எஸ் அமைப்பு ஈடுப்பட்டுள்ளதற்கான ஆதாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எழுதிய தங்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் புரிந்துவரும் கொடூரங்களுக்குத் தண்டிக்கப்படுவார்கள் என்ற செய்தி ஐ.எஸ் அமைப்பினரைச் சென்றடைய வேண்டும் என்றும் அக்கடிதம் கோருகிறது.
இதற்கிடையே, சிரியாவில் ஐ.எஸ் இஸ்லாமிய அரசின் ஆயுதக் குழுவினர் அமெரிக்கா தலைமையிலான கூட்டு நாடுகளால் தோற்கடிக்கப்பட்டால், அக்குழுவின் வெற்றிடத்தை நிரப்ப குறைந்தது 15 கிளர்ச்சிக் குழுக்கள் தயாராக உள்ளதாக புதிய ஆய்வொன்று கூறுகின்றது.

ஆதாரம் : பிபிசி/வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...