Saturday, 3 May 2014

செய்திகள் - 02.05.14

செய்திகள் - 02.05.14
------------------------------------------------------------------------------------------------------

1. கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள் தொடர்வது குறித்து திருத்தந்தை கவலை

2. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி. பொருளாதார அவையுடன் திருத்தந்தை சந்திப்பு.

3. பாப்பிறைக் கழகத்தின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கு திருத்தந்தை பாராட்டு

4. திருத்தந்தை விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைமுறை மற்றவர்களுக்கு வழிகாட்டுபவைகளாக இருக்கவேண்டும்

5. மதங்களிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் திருத்தந்தை ஆதரவு.

6. நைஜரில் அரசியல்வாதிகளின் நேர்மையற்ற நிலைகளால் வன்முறைகள் பெருகுவதாக ஆயர்கள் கவலை 

7. இலங்கையில் கடந்த 6 ஆண்டுகளில் 11531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள்!

8. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசியல் பழிவாங்கல்களுக்கும் பயன்படுத்திக் கொள்கிறது : அமெரிக்கா அறிக்கை!

------------------------------------------------------------------------------------------------------

1. கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள் தொடர்வது குறித்து திருத்தந்தை கவலை

மே02,2014.  இயேசு நமக்கு கற்றுத் தந்த பாடத்துடனும், அவர் வழங்கிய அன்புடனும் நடைபோடவேண்டிய நாம், சில மதத்தலைவர்களின் வெளிவேடங்களையும், அதேவேளை, கிறிஸ்தவத்திற்காக துன்பங்களை அனுபவிக்கவேண்டிய நிலைகளையும் காண்கிறோம் என இவ்வெள்ளிக்கிழமை காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதிகாலத் திருஅவையில் இயேசுவுக்காக பெரும் துன்பங்களை கிறிஸ்தவர்கள் அனுபவித்ததுபோல் இன்றும் சில நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரானக் கொடுமைகள் தொடர்கின்றன என, தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய காலை திருப்பலியில் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில நாடுகளில் விவிலியங்களை வைத்திருந்ததற்காகச் சிறைத்தண்டனை வழங்கப்படுவதையும், சிலுவையை அணிந்ததற்காக அபராதம் விதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்தவர்களை சகிக்க முடியாத தலைவர்கள் ஆதிகாலத்தில் இருந்ததைப்போல், இப்போதும் மதத்தின் பெயரால் உயிரைப் பறிப்பவர்கள் உள்ளார்கள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பெயரால் விசுவாசிகள் சிலுவையிலறையப்பட்டுக் கொல்லப்பட்ட செய்தியைப் படித்தபோது தான் கண்ணீர்விட்டு அழுததாகவும் கூறினார்.
இயேசுவுக்காகத் தங்கள் உயிரை இழப்பதை பெரும் கௌரவமாகக் கருதும் கிறிஸ்தவர்கள் இன்றும் பெரும் எண்ணிக்கையில் இருப்பது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி. பொருளாதார அவையுடன் திருத்தந்தை சந்திப்பு.

மே02,2014.  'தந்தையாம் இறைவனைவிட பொறுமையுடையவர் எவருமில்லை. அவர் அளவிற்கு புரிந்துகொள்பவரும், காத்திருக்கத் தெரிந்தவரும் எவருமில்லை' என தன் வெள்ளிக்கிழமை டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதே நாளில் அங்கோலா அரசுத்தலைவர் Jose Eduardo dos Santosயையும் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருப்பீடப் பொருளாதார நிலைகளை ஆய்வுச் செய்யும் அவை அங்கத்தினர்களை       இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிதி விவகாரங்களில் திருப்பீடம் வெளிப்படையாகவும், திறமையாகவும் செயல்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
திருப்பீட நிர்வாகம் மேலும் சிறப்புடன் செயல்பட சீர்திருத்தங்களைக் கொணரும் நோக்கில் இந்த பொருளாதார சிறப்பு அவை உருவாக்கப்பட்டது என்ற திருத்தந்தை, இப்பணியில் திருஅவைக்கான விசுவாசமும் நுண்ணறிவும் முக்கிய இடம்வகிக்கின்றன என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. பாப்பிறைக் கழகத்தின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கு திருத்தந்தை பாராட்டு

மே02,2014.  தன் பிறரன்பு நடவடிக்கைகள் மூலம் வளரும் நாடுகளுக்கு எண்ணற்ற உதவிகளை ஆற்றிவரும் பாப்பிறைக் கழகத்தின் அங்கத்தினர்களுக்கு இவ்வெள்ளிக்கிழமையன்று தன் நன்றியை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் இதயத்திற்கு வெகு அருகாமையில் இருக்கும் பிறரன்பு நடவடிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட பாப்பிறை பிறரன்புக் கழகம், பல்வேறு கல்வி நடவடிக்கைகளுக்கும் பிறரன்பு நடவடிக்கைகளுக்கும் தொடர்ந்து ஆற்றிவரும் பணிகள் குறித்து தன் பாராட்டுகளை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரில் மேல்படிப்பை மேற்கொள்ள வரும் குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினருக்கு இந்த பாப்பிறைக் கழகம் ஆற்றிவரும் உதவிகளை குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், இதன்மூலம் வருங்காலத் தலைமுறைத் தலைவர்களை உருவாக்கவும், அவர்கள்வழி திருச்சபையின் சமூகப் படிப்பினைகளுக்கு உயிர்கொடுக்கவும் உதவி வருவதைப் பாராட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைமுறை மற்றவர்களுக்கு வழிகாட்டுபவைகளாக இருக்கவேண்டும்

மே02,2014.  விளம்பரங்கள், தொலைக்காட்சி என இன்று கால்பந்து விளையாட்டு ஒரு வியாபாரம்போல் மாறிவிட்டாலும் பொருளாதாரக் கூறுகள் விளையாட்டை ஆட்சிச் செய்ய அனுமதிக்கக் கூடாது என தன்னைச் சந்தித்த இத்தாலிய வீரர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியக் கால்பந்துக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் விளையாட உள்ள ஃபுளாரன்ஸ் மற்றும் நேப்பிள்ஸ் நகர்களின் குழுக்களையும் இத்தாலிய கால்பந்து விளையாட்டுப் பிரதிநிதிகளையும் இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்துபோது திருத்தந்தை பிரான்சிஸ், கால்பந்து விளையாட்டு, சமூகப்பொறுப்புணர்வை எதிர்பார்க்கும் ஒன்று என்றும் எடுத்துரைத்தார்.
பொருளாதாரக் கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்போது விளையாட்டுத் துறை மாசுபடுத்தப்பட்டுவிடும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ், விளையாட்டுத் துறையின் மாண்பு எப்போதும் காக்கப்படவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார்.
கால்பந்து விளையாட்டு வீரர்களின் விசிறிகளுள் பெரும்பான்மையினோர் சிறார்களும் இளையோரும் என்பதால், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைமுறை மற்றவர்களுக்கு வழிகாட்டுபவைகளாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. மதங்களிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் திருத்தந்தை ஆதரவு.

மே02,2014.  இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெகுவாக ஆதரவளிப்பதாக அறிவித்தார் கர்தினால் Jean-Louis Tauran.
அல்ஜீரியாவின் அன்னாபா எனுமிடத்தின் புனித அகுஸ்தினார் பேராலயத்தின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள திருத்தந்தையின் பிரதிநிதியாக அங்குச் சென்றுள்ள, மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Tauran, பத்திரிகையாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், இந்த பேராலயத்தை மீண்டும் சீரமைக்க உதவிய ஆல்ஜீரிய அரசுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் தன் நன்றியை வெளியிடுவதாகவும் கூறினார்.
அல்ஜீரிய நாட்டில் ஒவ்வொரு பங்குதள நடவடிக்கைகள் மூலமும் கிறிஸ்தவர்களிடையேயும் இஸ்லாமியர்களிடையேயும் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க, மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவை ஊக்கமளித்துவருவதாக மேலும் கூறினார் கர்தினால் Tauran.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. நைஜரில் அரசியல்வாதிகளின் நேர்மையற்ற நிலைகளால் வன்முறைகள் பெருகுவதாக ஆயர்கள் கவலை 

மே02,2014.  நைஜர் நாட்டு அரசியல்வாதிகளின் அரசியல் மோசடிகள், அந்நாட்டில் பயங்கரவாத மோதல்கள் அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளன என அந்நாட்டு ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் பதவியிலிருப்போர் தங்கள் அதிகாரத்தை சுய இலாபங்களுக்காகப் பயன்படுத்துவதுடன், சட்டங்களையும் தங்களுக்கு இயைந்தாற்போல் வளைப்பதாகக் குற்றஞ்சாட்டிய நைஜர் ஆயர்கள், அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் மோசடிகளை கைவிடும்போதே பயங்கரவாத மோதல்கள் முடிவுக்குவரும் எனத் தெரிவித்தனர்.
உணவு நெருக்கடியை எதிர்நோக்கிவரும் ஏழை நாடான நைஜரில் தற்போது நைஜீரிய அகதிகளும் உள்புகுந்துள்ளதால் நிலைமை சீர்கேடடைந்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : FIDES

7. இலங்கையில் கடந்த 6 ஆண்டுகளில் 11531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள்!
மே02,2014.  இலங்கையில் கடந்த ஆறு ஆண்டுகளில் பெண்கள் மீது 11531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2007ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 11531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவங்கள் தொடர்பில் 12229 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பத்து பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது.
இலங்கையில் ஆயிரம் பெண்களில் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் வடக்கில் 119 பாலியல் வன்முறைச் சம்பவங்களும், 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் 256 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பில் 332 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : Neruppu

8. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசியல் பழிவாங்கல்களுக்கும் பயன்படுத்திக் கொள்கிறது : அமெரிக்கா அறிக்கை!

மே02,2014.  இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டப் பின்னரும், விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக ஆரம்பித்திருப்பதாக தெரிவித்து, தேடுதல்கள், திடீர் கைதுகள் போன்றவற்றை இலகுப்படுத்தும் வகையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுலாக்கியுள்ள இலங்கை அரசாங்கம், பல புலம்பெயர்ந்த அமைப்புகளுக்கு தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் சில அரசியல் பழிவாங்கல்களுக்கும் பயன்படுத்திக் கொள்கிறது என்று தன் அறிக்கையில் சுட்டிக்காட்டும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து சர்வதேச புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆதாரம் : Neruppu

No comments:

Post a Comment