அமைதிக்கான நோபல் பரிசு: தேர்வாளர்கள் பட்டியலில் புதின், ஸ்னோடென்
இந்த ஆண்டின் அமைதிக்காக வழங்கப்படும் நோபல் பரிசுக்கான தேர்வாளர்கள் பட்டியலில் இடம்பெறுபவர்களின் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது என்று நார்வே மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த நோபல் பரிசு கமிட்டி நேற்று குறிப்பிட்டுள்ளது.
இதில் அமெரிக்காவின் ரகசியத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எட்வர்ட் ஸ்னோடென், பாகிஸ்தானின் பள்ளி மாணவி மலாலா யூசுப்சாய் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போன்றோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆண்டுதோறும் இந்த தேர்வு பட்டியலில் இடம்பெறுவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவது நோபல் பரிசின் மீது மக்களுக்கு அதிகரித்துள்ள ஆர்வத்தைக் குறிப்பிடுவதாக நோபல் நிறுவனத்தின் தலைவரான கிர் லுண்டேஸ்டட் கூறினார்.
தங்களின் கமிட்டி தேர்வாளர்கள் பட்டியலை ஆய்வு செய்து தேர்வு செய்யப்படுவோரின் பெயர்களை ஆஸ்லோவில் வரும் அக்டோபர் 10 ஆம் தேதியன்று அறிவிக்க இருப்பதாக அவர் கூறினார். இவ்வாறு தேர்வு பெறுபவர்களின் பெயர்கள் முன்கூட்டி அறிவிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
வழக்கம்போல தேர்வாளர்களின் விபரங்களை அறிவிக்க மறுத்த அவர் அமைதி விருதுக்கு வந்திருக்கும் 278 தேர்வாளர்களில் 47 நிறுவனங்களின் பெயர்களும் அடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். பொதுவாக இந்த தேர்வாளர்கள் பட்டியல் 50 வருடங்களுக்கு ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
தேர்வுக் கமிட்டியின் முதல் சுற்றில்கூட பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்படக்கூடும். ஆனால் இதுமட்டுமே கமிட்டியின் ஒப்புதலுக்கான அறிகுறி ஆகாது என்று இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சிரியாவின் மீது அமெரிக்கா போர் தொடுக்காமல் அந்நாட்டின் ரசாயன ஆயுதங்களை சர்வதேச கட்டுப்பாட்டின்கீழ் அழிக்க முயற்சி மேற்கொண்டதால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பெயர் அமைதிக்கான விருதுப் பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், தற்போது உக்ரைனின் கிரிமியா பகுதியில் ரஷ்யா மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு முயற்சிகள் புதினுக்கு இந்த விருது கிடைப்பதற்கு எதிரானதாக அமையக்கூடும் என்ற கருத்துகளும் நிலவுகின்றன.
No comments:
Post a Comment