ராணுவத்தை பலப்படுத்த சீனா முடிவு ரூ.8 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
சீனா தனது ராணுவத்தை பலப்படுத்துவதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.8 லட்சம் கோடியை செலவிட உள்ளதாக தெரிவித்துள்ளது.உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய ராணுவ படையை கொண்ட நாடாக சீனா விளங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இது தனது ராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக பல்லாயிரம் கோடி பணத்தை தண்ணீராக செலவழித்து வருகிறது.ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தனது ராணுவ மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கத்தோடு தனது ராணுவத்தை பலப்படுத்தி வரும் சீனா இந்த நிதியாண்டில் ரூ.8 லட்சம் கோடியை ராணுவத்திற்காக ஒதுக்கியுள்ளது.இது கடந்த ஆண்டை விட 12.2 சதவிகிதம் அதிகமாகும்.
கடந்த பல வருடங்களாகவே சீனா தனது ராணுவ செயல்பாடுகளின் விரிவாக்கத்துக்காக, ஆண்டுதோறும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ராணுவத்தை நவீனப்படுத்துவது, போர் தளவாடங்கள் வாங்கி குவிப்பது உள்ளிட்ட பல்வேறு முனைப்புகளையும் செய்து வருகிறது.
இதன்மூலம் ஆசிய பிராந்தியத்தில் தனது ராணுவ வலிமையை நிலை நிறுத்தலாம் என்று சீனா கருதுகிறது.இதுகுறித்து சீன பிரதமர் லீ கெ கியாங் நேற்று பீஜிங்கில் நடைபெற்ற தேசிய மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் பேசும் போது, சீன ராணுவப் படைகளின் முழுமையான புரட்சிகர தன்மையை அதிகரிக்கவும், அவற்றை நவீனப்படுத்தவும், அவற்றின் செயல்பாடுகளை அதிகரிக்கவும், குற்றங்களைத் தடுத்து நிறுத்தி, போர்த் திறன்களை உயர்த்தவுமே சீன ராணுவத்துக்கான பட்ஜெட் தொகை உயர்த்தப்பட்டு வருகிறது என்றார்.ஆண்டுதோறும் தங்கள் நாட்டு ராணுவத்துக்காக பட்ஜெட்டில் அதிக அளவு நிதி ஒதுக்குவதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment