சிரிய போரால் 55 இலட்சம் குழந்தைகள் பாதிப்பு
சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போரால் அந்த நாட்டில் உள்ள, 55 இலட்சம் குழந்தைககளின் வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகளுக்கான ஐ.நா. அமைப்பு (யுனிசெஃப்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிரியா உள்நாட்டுப் போர் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் இந்தப் போரால் அந்நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை மிகவும் கடுமையானது. வன்முறைகளில் 10,000க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டச் சத்துக் குறைபாடும், நோயும் அவர்களின் வளர்ச்சியை பாதித்துள்ளன. இந்தப் போர்ச் சூழ்நிலைகள் அவர்களின் மனதில் உளவியல் ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாததால் அவர்களின் கல்வித் திறனும் தடைப்பட்டுள்ளது. அந்நாட்டில் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளில் பாதி அளவாகக் கருதப்படும் 28 இலட்சம் குழந்தைகள் இந்தப் போரால் தங்களது கல்வியை இழந்துள்ளனர்.
குழந்தைகள் வாழ்வதற்கு ஆபத்து நிறைந்த இடங்களில் தற்போது சிரியாவும் ஒன்று. ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களது வாழ்க்கை, கல்வி, உறவினர்கள், நண்பர்கள், வீடு ஆகியவற்றை இழந்துள்ளனர்.
இளைஞர்கள் தங்கள் தலைமுறையை இழந்துள்ளனர். சுமார் 30 இலட்சம் குழந்தைகள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 12 இலட்சம் குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். குடிநீர் மற்றும் உணவுக்காக பல குழந்தைகள் அகதிகளாக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்று யுனிசெஃப் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
No comments:
Post a Comment