செய்திகள் - 14.03.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆண்டுத் தியானத்தை முடித்து வத்திக்கான் திரும்பியுள்ளார்
2. சிரியாவில் போர் நிறுத்தம் இடம்பெற ஆயர்கள் அழைப்பு
3. தலிபான்கள் பகுதியில் திருத்தந்தையின் உணர்வோடு கலந்து மறைப்பணியாற்றுகிறோம், பாகிஸ்தான் திருஅவைத் தலைவர்
4. செக் குடியரசின் அருள்பணியாளர் Halik அவர்களுக்கு Templeton விருது
5. உக்ரேனின் அமைதிக்காவும், கூறுபடாநிலைமைக்காகவும் செபிக்குமாறு முதுபெரும் தந்தை Klyment அழைப்பு
6. கந்தமால் பாலியல் வன்கொடுமை விவகார்த்தில் மூன்று பேர் குற்றவாளிகள், நீதிமன்றம் தீர்ப்பு
7. சிறார் வணிகம் அதிகரிப்பு, ஐ.நா. வல்லுனர் எச்சரிக்கை
8. அறிவுச்சொத்துக் காப்புரிமைக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2013ல் சாதனை
9. 2.5 கோடி டன் உணவுப்பொருள் உற்பத்தி இலக்கு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆண்டுத் தியானத்தை முடித்து வத்திக்கான் திரும்பியுள்ளார்
மார்ச்,14,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது ஆண்டுத் தியானத்தை இவ்வெள்ளிக்கிழமை காலையில் முடித்து உள்ளூர் நேரம் முற்பகல் 11.29 மணிக்கு வத்திக்கான் திரும்பியுள்ளார்.
கடந்த ஞாயிறு மாலை தொடங்கிய இத்தியானத்துக்குச் சிந்தனைகளை வழங்கிய பேரருள்திரு Angelo De Donatis அவர்களுக்கு அனைவர் சார்பாக தனது நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவார்த்தையின் விதையோடு நாங்கள் அனைவரும் இல்லம் திரும்புகிறோம், நம் ஆண்டவர் மழையை அனுப்பி அந்த விதையை வளரச் செய்வார், அவ்விதை வளர்ந்து கனிகளைக் கொணரும், அந்த விதைக்காகவும், ஆண்டவர் நமக்கு அனுப்பவிருக்கும் மழைக்காகவும், அந்த விதையை விதைத்த தங்களுக்காகவும் நன்றி சொல்வதாகவும் கூறினார் திருத்தந்தை.
எங்கள் அனைவருக்காகவும் செபியுங்கள், நாங்கள் பாவிகள், ஆயினும் இயேசுவை நெருங்கிப் பின்செல்வதற்கு நல்மனதைக் கொண்டிருக்கிறோம் என்றும் திருத்தந்தை, தியான மறையுரையாளரிடம் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அவருடன்
சேர்ந்து தியானம் செய்த திருப்பீட தலைமையக அதிகாரிகள் அனைவரும் தியானம்
முடிந்து அரிச்சாவிலிருந்து பேருந்தில் திரும்பினர். பேருந்திலேயே தியானம்
செய்யச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர்கள் ஒன்றாய் இருக்கும்படி என்ற இறைவசனம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புனிதபூமித் திருப்பயணத்துக்கான தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. சிரியாவில் போர் நிறுத்தம் இடம்பெற ஆயர்கள் அழைப்பு
மார்ச்,14,2014. சிரியாவில் போர் நிறுத்தம் இடம்பெற வேண்டுமென்றும், ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடரப்பட்டு, நாட்டில் போர் முடிவடைவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுள்ளனர் ஆயர்கள்.
சிரியாவின் தற்போதைய போர்ச் சூழலை முன்னிட்டு லெபனன் நாட்டில் கூட்டம் நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ள சிரியா ஆயர்கள், போரினால் நாட்டுக்குள்ளேயும், நாட்டுக்கு வெளியேயும் புலம்பெயர்ந்துள்ள மக்களின் துன்பங்களை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு விசுவாசிகளைக் கேட்டுள்ளனர்.
தவக்காலத்தில் உண்ணாநோன்பு இருந்து துன்புறும் மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ள ஆயர்கள், சிரியா அரசுடனும், மக்களுடனும் தங்களின் தோழமையுணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆலயங்கள், மசூதிகள் என வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுவதைக் கண்டித்துள்ள சிரியா ஆயர்கள், தீவிரவாதத்தின் அனைத்து வகையான செயல்களும் கைவிடப்படுமாறும் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும், கத்தோலிக்கத்
திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓராண்டை நிறைவுசெய்துள்ள
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குத் தங்களின் நல்வாழ்த்துக்களையும்
செபங்களையும் தெரிவித்துள்ளனர் சிரியா ஆயர்கள்.
ஆதாரம் : CNS
3. தலிபான்கள் பகுதியில் திருத்தந்தையின் உணர்வோடு கலந்து மறைப்பணியாற்றுகிறோம், பாகிஸ்தான் திருஅவைத் தலைவர்
மார்ச்,14,2014. “செல்லுங்கள், உங்களின் அடுத்தவருக்குப் பணி செய்வதற்கு அஞ்ச வேண்டாம்” என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஊக்கமூட்டும் வார்த்தைகள், பாகிஸ்தானில்
மனிதர் எளிதில் செல்ல முடியாத இடங்களில் மறைப்பணியாற்றுவதற்கு உந்து
சக்தியாக இருக்கின்றன என்று அந்நாட்டு திருஅவைத் தலைவர் ஒருவர் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்வியாழனோடு(மார்ச்13) ஓராண்டு நிறைவடைந்துள்ளதையொட்டி Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய Quetta அப்போஸ்தலிக்க நிர்வாகி பேரருள்திரு ரெனால்டு லாரன்ஸ், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தோழமையில் மறைப்பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில், ஆயுதம் ஏந்திய தலிபான் குழுக்கள் மறைந்து வாழும் பலுசிஸ்தான் பகுதியில் மறைப்பணியாற்றிவரும் பேரருள்திரு லாரன்ஸ் அவர்கள், மனிதர் எளிதில் செல்ல முடியாத இப்பகுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைப்பணி ஆர்வத்தில் பங்குகொண்டு, அதே ஆர்வத்துடனும், துணிச்சலுடனும் பணிசெய்து வருவதாகத் தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் மனிதர் மற்றும் உலகுக்குக் கிறிஸ்துவை வழங்குவதே அவரின் நோக்கமாக இருக்கின்றது என்றும் உரைத்த பேரருள்திரு லாரன்ஸ் அவர்கள், திருத்தந்தையின் உணர்வோடு கலந்து, இந்த எல்லைப்புறப் பகுதியில் கடினமான சூழல்களில் கிறிஸ்துவை அறிவித்து வருகிறோம் என்று கூறினார்.
ஆதாரம் : Fides
4. செக் குடியரசின் அருள்பணியாளர் Halik அவர்களுக்கு Templeton விருது
மார்ச்,14,2014. உலகெங்கும் புரிந்துகொள்ளுதலையும், பல்சமய உரையாடலையும் ஊக்குவிப்பதற்கு அருள்பணியாளர் Tomas Halik அவர்கள் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டும் விதமாக, அவ்வருள்பணியாளருக்கு 2014ம் ஆண்டின் Templeton விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செக் குடியரசின் அருள்பணியாளர் Tomas Halik அவர்கள் இவ்வாண்டுக்கான Templeton விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, John Templeton நிறுவனம் இவ்வியாழனன்று அறிவித்தது.
65 வயதாகும் அருள்பணியாளர் Halik அவர்கள், தனது 18வது வயதில் கத்தோலிக்கத்தைத் தழுவினார். இரகசியமாக குருத்துவப் படிப்பை முடித்த இவர், இரகசியமாகவே
குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் குருவானது இவரது தாய்க்கே
தெரியாது. 1989ம் ஆண்டில் செக் குடியரசில் கம்யூனிசம் வீழ்த்தப்படுவதற்கு
முன்னர், அருள்பணியாளர் Halik, பல்கலைக்கழகத்திலும், கிறிஸ்தவ சமூகத்திலும் விசுவாசம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை மறைவாக ஊக்குவித்து வந்தார்.
1946ம் ஆண்டுக்குப் பின்னர், 1990ம் ஆண்டில் முன்னாள் செக்கோஸ்லோவாக்கியா, முதல் சனநாயகத் தேர்தல்களை நடத்தியபோது, தேசிய ஆன்மீகப் புதுப்பித்தல் என்ற கிறிஸ்தவ ஒன்றிப்புத் திட்டத்தையும் நடத்தியவர் அருள்பணியாளர் Halik.
ஆதாரம் : CNS
5. உக்ரேனின் அமைதிக்காவும், கூறுபடாநிலைமைக்காகவும் செபிக்குமாறு முதுபெரும் தந்தை Klyment அழைப்பு
மார்ச்,14,2014. உக்ரேன் நாட்டின் Crimea தன்னாட்சி பகுதி குறித்த பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு வருகிற ஞாயிறன்று இடம்பெறவுள்ளவேளை, அப்பகுதி மக்களின் வாழ்வு தற்போது அச்சுறுத்தலில் இருப்பதாக ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளின் முதுபெரும் தந்தையர்கள் கூறியுள்ளனர்.
Crimea தன்னாட்சி பகுதியின் நெருக்கடிநிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, உக்ரேன் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை Klyment அவர்கள், நாட்டின் அமைதிக்காவும், கூறுபடாநிலைமைக்காகவும் செபிக்குமாறு கேட்டுள்ளார்.
1933ம் ஆண்டில் உக்ரேன் நாடு கடும் பஞ்சத்தால் வாடியபோதும், 1941ம்
ஆண்டில் நாத்சி அமைப்பினர் யூதர்களைச் சுட்டுக்கொன்றபோதும் ஐரோப்பா
செயலற்று இருந்தது போல தற்போதும் இருக்கின்றது என்று குறை கூறியுள்ளார்
முதுபெரும் தந்தை Klyment.
இதற்கிடையே, ஒருவர் தன்னை உக்ரேனைச் சார்ந்தவர் என்று அறிமுகப்படுத்தினால், அவர் Bandera ஆதரவாளர், எனவே அவர் கொலைசெய்யப்பட வேண்டும் என்ற பிரச்சாரங்கள் இடம்பெறுவதாக உக்ரேன் ஊடக மையம் கூறியுள்ளது.
ஆதாரம் : AsiaNews
6. கந்தமால் பாலியல் வன்கொடுமை விவகார்த்தில் மூன்று பேர் குற்றவாளிகள், நீதிமன்றம் தீர்ப்பு
மார்ச்,14,2014.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 2008ம் ஆண்டில் கத்தோலிக்க அருள்சகோதரி
ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரம் தொடர்பாக மூன்று பேர்
குற்றவாளிகள் எனவும், ஆறு பேர் குற்றமற்றவர்கள் எனவும் இந்திய நீதிமன்றம் ஒன்று இவ்வெள்ளியன்று தீர்ப்பளித்துள்ளது.
2008ம்
ஆண்டில் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கு எதிராக இடம்பெற்ற
வன்முறையில் அருள்சகோதரி மீனா பார்வா இந்து தீவிரவாதக் கும்பல் ஒன்றால்
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் 10 பேர் குற்றவாளிகள் என
முன்னர் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மற்றொருவர் காணாமற்போய்விட்டார்.
அருள்பணியாளர் Thomas Chellan அவர்களுடன் திவ்யஜோதி மேய்ப்புப்பணி மையத்தில் பணிசெய்தவர் அருள்சகோதரி
மீனா. இவ்விருவரும் இந்து தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டு பலமாக
அடிக்கப்பட்டனர். இச்சகோதரியை முதலில் உயிரோடு எரிக்க நினைத்த வன்முறைக்
கும்பல் ஒன்று, அவ்வாறு செய்யாமல் கும்பலாகப் பாலியல் வன்கொடுமையைச் செய்துள்ளது.
இக்குற்றம் தொடர்பாக 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
ஆதாரம் : BBC
7. சிறார் வணிகம் அதிகரிப்பு, ஐ.நா. வல்லுனர் எச்சரிக்கை
மார்ச்,14,2014. உலகில் நாடுகளுக்கிடையே தொடர்புகள் அதிகரித்துவரும்வேளை, சிறார் பாலியல் வணிகமும், அவர்கள் பிற தொழில்களுக்கு விற்கப்படுவதும் அதிகரித்து வருவதாக ஐ.நா. வல்லுனர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகில் இலட்சக்கணக்கான சிறார் பாலியல் வணிகத்தால் பாதிக்கப்பட்டுவரும்வேளை, இக்குற்றத்தைத் தடுப்பதற்கு உலக அளவில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு, ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 25 வது அமர்வில், சிறார் வணிகம் குறித்து சிறப்பு அறிக்கை சமர்ப்பித்த Najat Maalla M’jid கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறாரைத் தவறான வழியில் பயன்படுத்தும் குற்றக்கும்பலுக்குத் தண்டனை வழங்காமல் இருப்பது, இக்குற்றம் குறித்த சமூகச் சகிப்புத்தன்மை, இந்த வணிகத்துக்கு உலக அளவில் ஏற்பட்டுள்ள கோரிக்கை போன்றவை, இக்குற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணங்கள் என்று, Maalla M’jid தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டம் இம்மாதம் 25ம் தேதியன்று நிறைவடையும்.
ஆதாரம் : UN
8. அறிவுச்சொத்துக் காப்புரிமைக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2013ல் சாதனை
மார்ச்,14,2014. அறிவுச்சொத்துக்
காப்புரிமைக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2013ம் ஆண்டில்
இரண்டு இலட்சத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிவுச்சொத்து நிறுவனமான WIPO கூறியுள்ளது.
காப்புரிமை ஒத்துழைப்பு உடன்பாட்டின்கீழ், கடந்த ஆண்டில் காப்புரிமை கோரி ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்ட 2,05,300 விண்ணப்பங்களில் 56 விழுக்காடு அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்தும், 29 விழுக்காடு சீனாவிலிருந்தும் சமர்ப்பிக்கப்பட்டன என, WIPO நிறுவன இயக்குனர் Francis Gurry கூறினார்.
2012ம் ஆண்டில் 1,94,000மாக இருந்த இவ்வெண்ணிக்கை, 2013ம் ஆண்டில் 5.1 விழுக்காடு அதிகரித்தது என்றும் கூறிய Gurry, ஆராய்ச்சிகளுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்குமெனப் போடப்படும் முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும், உலக அளவில், வாகனத் தொழிற்சாலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காப்புரிமை கேட்கும் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன எனவும் கூறினார்.
உலக அறிவுச்சொத்து தினம் ஏப்ரல் 26ம் தேதியாகும்.
ஆதாரம் : UN
9. 2.5 கோடி டன் உணவுப்பொருள் உற்பத்தி இலக்கு
மார்ச்,14,2014.
இந்தியாவில் 12வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 2 கோடியே 50 இலட்சம் டன்
உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று
மத்திய திட்டக்குழு உறுப்பினர் கே.கஸ்தூரிரங்கன் தெரிவித்தார்.
வேளாண் அறிவியலாளர் "நார்மன் போர்லாக்' நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற வேளாண்மை குறித்த
கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் உரையாற்றியபோது இதனை அறிவித்தார்
கஸ்தூரிரங்கன்.
கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் வேளாண்மை வளர்ச்சி அடைந்துள்ளது எனவும், இந்தியாவில் பல கோடிப் பேருக்கு உணவு அளிப்பது தவிர, தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களையும் வேளாண்மை வழங்குகிறது எனவும் கஸ்தூரிரங்கன் கூறினார்.
12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 2 கோடியே 50 இலட்சம் டன் உணவுப் பொருள்களில், 1 கோடி டன் அரிசி, 80 இலட்சம் டன் கோதுமை, 40 இலட்சம் டன் பருப்பு வகைகள், 30 இலட்சம் டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கஸ்தூரிரங்கன் கூறினார்.
வேளாண்மை குறித்த இக்கருத்தரங்கம் 15ம் தேதி நிறைவடைகிறது.
ஆதாரம் : தினமலர்
No comments:
Post a Comment