Thursday, 13 March 2014

செய்திகள் - 13.03.14

செய்திகள் - 13.03.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் முதல் ஆண்டு நிறைவு நாளில் பல்வேறு ஆயர்கள் அவைகளிலிருந்து திருத்தந்தைக்கு வாழ்த்துக்கள்

2. வத்திக்கான் உயர் அதிகாரிகளின் ஆண்டு தியானத்தின் நான்காம் நாள் சிந்தனை

3. புனித இஞ்ஞாசியார் சொல்லித்தந்த பாடங்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மீகத்தில் தெளிவாக வெளிப்படுகிறது - La Civiltà Cattolica இதழின் ஆசிரியர்

4. திருத்தந்தையைப் பற்றிய புதிய நூல் - "ஹலோ, நான் பிரான்சிஸ் பேசுகிறேன்"

5. லிஸ்பன் கர்தினால் Jose 'da Cruz Policarpo அவர்கள், இறைவனடி சேர்ந்தார்

6. அரசுத்தலைவருடன் கலந்து பேசத் தயார் - நிக்கராகுவா ஆயர் பேரவை

7. பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்: பொதுமக்கள் காலில் விழுந்து சத்தியாகிரக பிரச்சாரம்

8. இலங்கையில் மனிதப் புதைகுழிகளை காவல்துறை ஆய்வு செய்ய அனுமதி

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் முதல் ஆண்டு நிறைவு நாளில் பல்வேறு ஆயர்கள் அவைகளிலிருந்து திருத்தந்தைக்கு வாழ்த்துக்கள்

மார்ச்,13,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைமைப் பொறுப்பிற்குத் தெரிவு செய்யப்பட்டதன் முதல் ஆண்டு நிறைவு நாளான இவ்வியாழனன்று, "தயவுசெய்து எனக்காகச் செபியுங்கள்" என்ற குறுகியச் செய்தியைத் தன் Twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
திருத்தந்தையும், வத்திக்கான் உயர் அதிகாரிகளும் தங்கள் ஆண்டு தியானத்தை மேற்கொண்டிருந்தாலும், இந்த முதலாண்டு நிறைவையொட்டி பல்வேறு ஆயர்கள் அவைகளிலிருந்து திருத்தந்தைக்கு வாழ்த்துக்கள் வந்தவண்ணம் உள்ளன.
தன் முதல் ஆண்டு பணிநிறைவு நாளன்று தியானத்தில் ஈடுபட்டுள்ளத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு இத்தாலியத் தலத்திருஅவையின் நன்றிகள், செபத்தின் வழியாக வெளியிடப்படுகின்றன என்று இத்தாலிய ஆயர் பேரவையின் செய்தி கூறுகிறது.
தன் எளிமையான வார்த்தைகளாலும், வாழ்வாலும் திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த ஓராண்டளவாக கத்தோலிக்கர்களை மட்டுமல்லாமல், மத நம்பிக்கையற்ற நல்ல உள்ளத்தோர் அனைவரையும் கவந்துள்ளார் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Joseph Edward Kurtz அவர்கள் செய்தி அனுப்பியுள்ளார்.
இவ்வுலகின் அடிப்படை குடும்பங்கள் என்றும், அவற்றைக் கட்டியெழுப்புவதே திருஅவையைக் கட்டியெழுப்புவதன் முதல் பணி என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உணர்ந்திருப்பதால், அவர் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்று போலந்து ஆயர்கள் பேரவையின் தலைவர், பேராயர் Jòzef Michalik அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி, கான்கிளேவ் சிறப்புக் கூட்டத்தில் கூடியிருந்த கர்தினால்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தேர்ந்தெடுத்தபோது அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை முழுமையாக நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை என்று போர்த்துகல் ஆயர் பேரவையின் தலைவர் José Manuel Macário அவர்கள் கூறியுள்ளார்.
புனித பிரான்சிஸ் அவர்களின் பெயரைத் தெரிவுசெய்துள்ள திருத்தந்தையின் முதல் ஆண்டு பணி நிறைவையொட்டி, இத்தாலியின் அசிசி நகரில் புனித பிரான்சிஸ் அவர்களின் கல்லறை அடங்கிய பசிலிக்காவில் மாலை 7 மணியளவில் சிறப்புச் செப வழிபாடு நடைபெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. வத்திக்கான் உயர் அதிகாரிகளின் ஆண்டு தியானத்தின் நான்காம் நாள் சிந்தனை

மார்ச்,13,2014. இயேசு இவ்வுலகில் பயன்படுத்திய மொழி, எளிய மக்களால், குறிப்பாக, துன்புறும் மக்களால் புரிந்துகொள்ளக்கூடிய மொழியாக இருந்தது என்று அருள் பணியாளர் ஆஞ்செலொ தே தொனாத்திஸ் அவர்கள் கூறினார்.
திருத்தந்தையும் வத்திக்கான் உயர் அதிகாரிகளும் மேற்கொண்டு வரும் ஆண்டு தியானத்தை வழிநடத்தும் அருள் பணியாளர் தொனாத்திஸ் அவர்கள், நான்காம் நாள் தியானத்திற்கு வழங்கிய சிந்தனையில் இவ்வாறு கூறினார்.
இறைவனின் அன்புக்குச் சான்று பகரும் வழிகளில் நம்மைப் பேசவிடாமல் தடுக்கும் இவ்வுலக மொழிகளுக்குச் செவிகொடுக்காமல் இருக்க நாம் பழகவேண்டும் என்று அருள் பணியாளர் தொனாத்திஸ் அவர்கள், வத்திக்கான் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தன் மூன்றாம் நாள் சிந்தனையாக தீய ஆவி பிடித்த ஒருவரை இயேசு குணப்படுத்திய நிகழ்வைக் குறித்துப் பேசிய அருள் பணியாளர் தொனாத்திஸ் அவர்கள், தொடர்ந்து அந்த நிகழ்வையொட்டியே தன் சிந்தனைகளை வழங்கினார்.
இயேசுவால் குணமாக்கப்பட்ட அந்த மனிதர் நற்செய்தியைப் பரப்பும் பணியாளராக ஊரெங்கும் சென்று இயேசுவிடமிருந்து தான் பெற்ற நன்மைகளைப் பறைசாற்றினார் என்று அருள் பணியாளர் தொனாத்திஸ் அவர்கள் விளக்கினார்.
மாற்கு நற்செய்தி 5ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்த நிகழ்வை அடுத்து, இரத்தப் போக்குடைய பெண் ஒருவரை இயேசு குணமாக்கிய நிகழ்வையும் அருள் பணியாளர் தொனாத்திஸ் அவர்கள், தன் சிந்தனைகளில் பகிர்ந்துகொண்டார்.
இயேசுவை அடைவதற்கு நாம் பல உயர்வான கட்டுமானங்களை அமைத்தும், அவரைக் காணமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்தப் பெண்ணைப்போல, எளியவர்கள், எவ்வித ஏற்பாடுகளும் இல்லாமல் இயேசுவைத் தொட்டுவிடுகின்றனர் என்று அருள் பணியாளர் தொனாத்திஸ் அவர்கள், திருத்தந்தையும் வத்திக்கான் உயர் அதிகாரிகளும் மேற்கொண்டு வரும் ஆண்டு தியான சிந்தனைகளின் நான்காம் நாள் விளக்கிக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. புனித இஞ்ஞாசியார் சொல்லித்தந்த பாடங்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மீகத்தில் தெளிவாக வெளிப்படுகிறது - La Civiltà Cattolica இதழின் ஆசிரியர்

மார்ச்,13,2014. இவ்வுலகிற்கு தன் கதவுகளைத் திறந்துவிடும் திருஅவையாக கத்தோலிக்கத் திருஅவையை வெளிப்படுத்தியது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் ஆண்டு பணியின் ஒரு முக்கிய அம்சம் என்று உரோம் நகரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க இதழின் ஆசிரியர் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனம்விட்டுப் பேசிய முதல் நேர்காணலைப் பதிவு செய்த La Civiltà Cattolica இதழின் ஆசிரியர், இயேசு சபை அருள் பணியாளர் Antonio Spadaro அவர்கள், திருத்தந்தையின் முதல் ஆண்டு பணிகள், திருஅவையின் தலைவர் என்ற முறையில் அவர் வழங்கிய பாடங்கள் ஆகியவை குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவரைச் சுற்றி இருக்கும் எதார்த்தங்களின் அடிப்படையில் ஒருவரின் ஆன்மிகம் உருவாகவேண்டும் என்று புனித இஞ்ஞாசியார் சொல்லித்தந்த பாடங்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மீகத்தில் தெளிவாக வெளிப்படுகிறது என்று அருள் பணியாளர் Spadaro அவர்கள், எடுத்துரைத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆழமான அமைதியை ஒவ்வொரு நாளும் உணர்வதால், திருஅவையைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகளைக் குறித்து நன்கு அறிந்துள்ளபோதிலும், அப்பிரச்சனைகள் தன் உள்ளத்தின் அமைதியைக் குலைக்காதவண்ணம் வாழ்வதையும் நாம் காணமுடிகிறது என்று அருள் பணியாளர் Spadaro அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தையைப் பற்றிய புதிய நூல் - "ஹலோ, நான் பிரான்சிஸ் பேசுகிறேன்"

மார்ச்,13,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதலாம் ஆண்டு பணிநிறைவையோட்டி, மார்ச் 12, இப்புதனன்று, வத்திக்கான் நூலகம் ஒரு புதிய நூலை வெளியிட்டுள்ளது.
"ஹலோ, நான் பிரான்சிஸ் பேசுகிறேன்: திருத்தந்தையும், ஓராண்டு தொடர்புகளில் புரட்சியும்" என்ற தலைப்பில், திருவாளர் Massimo Enrico Milone அவர்கள் எழுதியுள்ள இந்நூலில், திருத்தந்தையின் முக்கியமான படிப்பினைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2013ம் ஆண்டு, மார்ச் 16ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 6000க்கும் அதிகமான ஊடகத் துறையினரைச் சந்தித்த முதல் நிகழ்விலிருந்து, 2014ம் ஆண்டு மார்ச் 5ம் தேதியன்று Corriere della Sera இதழுக்கு அவர் அளித்த பேட்டி வரையிலும், திருத்தந்தை வெளியிட்ட முக்கியமான கருத்துக்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
மக்களுடன் நேரடியாக, மிகவும் எளிய வழிகளில் தொடர்பு கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஓராண்டளவாய் ஊடகத்தைப் புரட்சிகரமான முறையில் பயன்படுத்தியுள்ள வழிகள், இந்நூலில் அலசப்பட்டுள்ளன என்று ஆசிரியர் Milone அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. லிஸ்பன் கர்தினால் Jose 'da Cruz Policarpo அவர்கள், இறைவனடி சேர்ந்தார்

மார்ச்,13,2014. போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் உயர்மறை மாவட்டத்தின் முன்னாள் முதுபெரும் தந்தையான கர்தினால் Jose 'da Cruz Policarpo அவர்கள், இப்புதனன்று தன் 78வது வயதில் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவரோடும் ஒப்புரவோடும், சகிப்புத் தன்மையோடும் வாழும் பக்குவம் பெற்ற கர்தினால் Policarpo அவர்கள், கத்தோலிக்கத் திருஅவைக்கு மட்டுமல்ல, போர்த்துக்கல் நாட்டிற்கும் சிறப்பான பணியாற்றியவர் என்று போர்த்துக்கல் நாட்டு பிரதமர் Pedro Passos Coelho அவர்கள் கூறினார்.
1936ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி பிறந்த கர்தினால் Policarpo அவர்கள், உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்தும் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
1961ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட Policarpo அவர்கள், 1998ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டு முடிய லிஸ்பன் உயர் மறைமாவட்டத்தின் முதுபெரும் தந்தையாகப் பணியாற்றினார்.
முன்னாள் திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான்பால் அவர்களால், 2001ம் ஆண்டு, இவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். கர்தினால் Policarpo அவர்களின் மறைவையடுத்து, திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 217ஆகக் குறைந்துள்ளது. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள் 120 பேர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. அரசுத்தலைவருடன் கலந்து பேசத் தயார் - நிக்கராகுவா ஆயர் பேரவை

மார்ச்,13,2014. நிக்கராகுவா அரசுடன் அந்நாட்டு ஆயர் பேரவை உரையாடலையும், ஒத்துழைப்பையும் மேற்கொள்ள தயாராக உள்ளது என்று அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் René Sócrates Sándigo Jirón அவர்கள் கூறியுள்ளார்.
நிக்கராகுவா நாட்டின் உண்மை நிலையை ஆய்வு செய்து, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தகுந்த தீர்வுகளைக் காண, நாட்டின் அரசுத்தலைவர் Daniel Ortega அவர்களுடன் கலந்து பேசத் தாங்கள் தயார் என்று ஆயர் Jirón அவர்கள் எடுத்துரைத்தார்.
அண்மையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக உய்ரத்தப்பட்ட Leopoldo Brenes அவர்களுடன் நன்றித் திருப்பலி கொண்டாடிய அந்நாட்டு ஆயர்கள், இத்திங்கள் முதல் புதன் முடிய மேற்கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ஆயர் Jirón அவர்கள், Fides செய்திக்குத் தெரிவித்துள்ளார்.
நாடு இன்று சந்திக்கும் முக்கியப் பிரச்சனைகளான, இளையோர் மத்தியில் பரவிவரும் போதைப்பொருள், சட்டங்களை மீறி நடத்தப்படும் சுரங்கத் தொழில், சிறைகளில் காணப்படும் பிரச்சனைகள் போன்ற கருத்துக்களை அரசுத் தலைவரின் கவனத்திற்குக் கொணர தாங்கள் முயன்று வருவதாக ஆயர் Jirón அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Fides

7. பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்: பொதுமக்கள் காலில் விழுந்து சத்தியாகிரக பிரச்சாரம்

மார்ச்,13,2014. பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என சத்தியாகிரக இயக்கத்தினர் பொதுமக்கள் காலில் விழுந்து வணங்கும் பிரச்சாரம் ஒன்று, சென்னையில் புதன்கிழமை தொடங்கியது.
யாரிடமும் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொது மக்கள் காலில் விழுந்து வணங்கும் சத்தியாகிரக பிரச்சார தொடக்க நிகழ்ச்சி, மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே புதன்கிழமை நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தை, தமிழக இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சத்தியாகிரக இயக்கத்தின் தலைவர் எம்.ராமகிருஷ்ண சாஸ்திரி அவர்கள் தலைமையில் பல நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள் 50 பேர், மெரினா கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து வணங்கி, பணம் வாங்காமல் வாக்களியுங்கள் எனக்கூறி பிரச்சாரம் செய்தனர்.
100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்களின் காலில் விழுந்து வணங்கி சத்தியாகிரகப் பிரச்சாரம் செய்து வருகிறோம்; எங்கள் இயக்கத்தில் நாடு முழுவதும் 50 லட்சத்துக்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் இருக்கின்றனர் என்று, சத்தியாகிரக இயக்கத்தின் தலைவர் எம்.ராமகிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கூறினார்.
தேர்தலில் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்; வன்முறை, லஞ்சம், சாதி போன்றவற்றிற்கு அப்பாற்பட்ட வேட்பாளரை தேர்வுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன்  இதுவரை 51 லட்சம் பேர் காலில் விழுந்து வணங்கி பிரசாரம் செய்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் சென்று சத்தியாகிரக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம் என்று, எம்.ராமகிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கூறினார்.

ஆதாரம் : தி இந்து

8. இலங்கையில் மனிதப் புதைகுழிகளை காவல்துறை ஆய்வு செய்ய அனுமதி

மார்ச்,13,2014. இலங்கையின் வடக்கே மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளுடன் கிடைத்துள்ள தடயப் பொருட்களின் அடிப்படையில் விரிவான ஆய்வுகளை நடத்துவதற்கான உத்தரவை மன்னார் மாவட்ட நீதிமன்றம் இச்செவ்வாயன்று வழங்கியது.
இது தொடர்பாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஆராய்ந்த நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் அவர்கள், அதற்கான அனுமதியை வழங்கியிருக்கின்றார்.
கடந்த டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து 32 தினங்கள் நடத்தப்பட்ட அகழ்வின்போது 84 மனித எலும்புக்கூடுகளும் வேறு சில தடயங்களும் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளுக்குரியவர்கள் ஆண்களா பெண்களா?, அவர்களுடைய வயதென்ன?, அவர்கள் எப்படி இறந்திருப்பார்கள்? என்பவற்றைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருகின்றன.
இந்த ஆய்வறிக்கைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் தொடர்ந்து அந்தப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு, அது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும் என்று காவல்துறையின் சார்பில் பேசிய அஜித் ரோகண அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...