Wednesday, 12 March 2014

செய்திகள் - 12.03.14

செய்திகள் - 12.03.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியத் திருஅவையின் பணிகளுக்குப் பெரும் பக்கபலமாக விளங்குகிறார் - கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ்

2. திருத்தந்தை நோயுற்றோரைச் சந்தித்த பரிவு, உலக சமுதாயத்தின் உள்ளத்தில் அழியாது பதிந்துள்ளது - அருள் பணியாளர் லொம்பார்தி

3. மாதுளம் பழத்தைப் போன்று, ஒவ்வொரு மனிதரும் பல சாத்தியக் கூறுகளைத் தங்களுக்குள் தாங்கியுள்ளனர் - அருள்பணியாளர் தொனாத்திஸ் அவர்களின் தியான உரை

4. வறியோர் மட்டில் திருத்தந்தை காட்டும் அக்கறை வாய்வார்த்தைகளாக இல்லாமல், வாழ்விலும் வெளிப்படுகிறது - உரோம் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர்

5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப்பணியின் முதல் ஆண்டு நிறைவையொட்டி, இளையோர் மேற்கொள்ளும் 24 மணி நேர செப வழிபாடு

6. லெபனானில் சிரியாவின் கத்தோலிக்க ஆயர்கள் நடத்தும் கூட்டம்,

7. தென்கொரியாவில் "ஒரு உணவுக்கு 100 Won" பிறரன்பு முயற்சி

8. மின்னல்கள் நிலநடுக்கத்தை குறிப்புணர்த்துமா?

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியத் திருஅவையின் பணிகளுக்குப் பெரும் பக்கபலமாக விளங்குகிறார் - கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ்

மார்ச்,12,2014. வறியோரை, தன் தலைமைப் பணியின் விருப்பத் தேர்வாகக் குறிப்பிட்டு பேசிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியத் திருஅவையின் பணிகளுக்குப் பெரும் பக்கபலமாக விளங்குகிறார் என்று மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பணியேற்ற முதல் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்து பேசிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், திருத்தந்தை விடுக்கும் ஒவ்வொரு செய்தியும் உலகின் மனசாட்சியைத் தட்டியெழுப்புகிறது என்று கூறினார்.
திருப்பீடத் துறைகளில் மாற்றங்களைக் கொணரும் ஒரு முயற்சியாக திருத்தந்தை அவர்கள் உருவாகியுள்ள கர்தினால்கள் அவையில் தனக்கு ஒரு பங்கு அளித்துள்ளதை நினைவுகூர்ந்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், திருஅவையில் உருவாகவேண்டிய மாற்றங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வில் ஆரம்பமாகவேண்டும் என்பதை தன் சொல்லாலும் செயலாலும் திருத்தந்தை வெளிப்படுத்துகிறார் என்று சுட்டிக்காட்டினார்.
மார்ச் 13, இவ்வியாழனன்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள், நன்றித் திருப்பலி நிறைவேற்றுகிறார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பணியேற்ற மார்ச் 19ம் தேதியன்று, கர்தினால் கிரேசியஸ் அவர்களின் தலைமையில் இயேசுவின் புனிதப் பெயர் பேராலயத்தில் கூட்டுத் திருப்பலி நடைபெறும் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

ஆதாரம் : AsiaNews

2. திருத்தந்தை நோயுற்றோரைச் சந்தித்த பரிவு, உலக சமுதாயத்தின் உள்ளத்தில் அழியாது பதிந்துள்ளது - அருள் பணியாளர் லொம்பார்தி

மார்ச்,12,2014. கத்தோலிக்க உலகத்தையும் தாண்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் கருத்துக்கள் உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்வண்ணம் அமைந்துள்ளன என்பது திருத்தந்தையின் முதல் ஆண்டு நிறைவில் நம் கவனத்தைக் கவர்கிறது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள் பணியாளர் பெதேரிகோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
மார்ச் 13, இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்று ஓராண்டு நிறைவுறுவதையொட்டி, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இயேசு சபை அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.
கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் மேல்மாடத்தில் முதன்முறையாக தோன்றியது, அதைத் தொடர்ந்து வந்த புனித வாரத்தில், அவர் இளம் கைதிகளின் காலடிகளைக் கழுவியது ஆகிய நினைவுகள் தன்னில் அதிகம் பதிந்தவை என்று அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள் கூறினார்.
இத்தாலியின் லாம்பதுசா தீவுக்கும், பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனெய்ரோ நகருக்கும் திருத்தந்தை அவர்கள் மேற்கொண்ட பயணங்கள் உலகினரின் கவனத்தைப் பெருமளவில் கவர்ந்துள்ளன என்பதும் அவரது முதலாண்டின் முக்கிய நினைவுகள் என்று அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள் எடுத்துரைத்தார்.
கடந்த ஓராண்டளவாய் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள புதன் மறையுரைகளும், அத்தருணங்களில் அவர் மக்களைச் சந்தித்த விதமும், குறிப்பாக, நோயுற்றோரைச் சந்தித்த பரிவும் உலக சமுதாயத்தின் உள்ளத்தில் அழியாத நினைவுகளாகப் பதிந்துள்ளன என்றும் அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மக்களின் மனங்களை நேரடியாகத் தொடுமாறு பேசுவதால், திருப்பீடத்தின் செய்தித் தொடர்பாளர் என்ற தன் பணி எளிதாக்கப்பட்டுள்ளது என்றும் அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள் தன் பேட்டியில் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. மாதுளம் பழத்தைப் போன்று, ஒவ்வொரு மனிதரும் பல சாத்தியக் கூறுகளைத் தங்களுக்குள் தாங்கியுள்ளனர் - அருள்பணியாளர் தொனாத்திஸ் அவர்களின் தியான உரை

மார்ச்,12,2014. உயிர்தரும் பல விதைகளைத் தன்னுள் கொண்டுள்ள மாதுளம் பழத்தைப் போன்று, ஒவ்வொரு மனிதரும் பல சாத்தியக் கூறுகளைத் தங்களுக்குள் தாங்கியுள்ளனர் என்று திருப்பீட உயர் அதிகாரிகளுக்கு தியானம் வழங்கிவரும் அருள்பணியாளர் ஆஞ்செலொ தே தொனாத்திஸ் அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் திருப்பீட உயர் அதிகாரிகள் இணைந்து, தெய்வீக ஆசிரியர் இல்லத்தில் மேற்கொண்டு வரும் ஆண்டு தியானத்தின் மூன்றாம் நாள், இச்செவ்வாயன்று, படைப்பின் சிகரம் மனிதர்கள் என்றும், அவர்களுக்குள் பாவத்தின் ஈர்ப்புக்களும் உள்ளன என்றும் அருள்பணியாளர் தொனாத்திஸ் அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்தார்.
மாற்கு நற்செய்தி 5ம் பிரிவில், தீய ஆவி பிடித்த ஒருவரை இயேசு குணமாக்கும் நிகழ்வை மையப்படுத்தி, தன் கருத்துக்களை வழங்கிய அருள் பணியாளர் தொனாத்திஸ் அவர்கள், அந்த மனிதரைக் காப்பதற்கு இயேசு 2000 பன்றிகளை கடலில் ஆழ்த்தியதை ஊர்மக்கள் விரும்பவில்லை என்பதையும் எடுத்துரைத்து, இவ்வுலகின் கணக்கில் பன்றிகள் மனிதர்களை விட மதிப்புப் பெறுவதையும் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார அடிப்படையில் இறைவனை மறந்து வாழும் இவ்வுலகின் மையத்திற்கு மீண்டும் இறைவனைக் கொணரும் மத நம்பிக்கையை ஊட்டுவது நம் முக்கியப் பணி என்றும் அருள் பணியாளர் தொனாத்திஸ் அவர்கள் வலியுறுத்தினார்.
திருத்தந்தையுடன் திருப்பீட அதிகாரிகள் 83 பேர் மேற்கொண்டுவரும் இந்த ஆண்டு தியானம் இவ்வெள்ளி மாலை நிறைவுபெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. வறியோர் மட்டில் திருத்தந்தை காட்டும் அக்கறை வாய்வார்த்தைகளாக இல்லாமல், வாழ்விலும் வெளிப்படுகிறது - உரோம் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர்

மார்ச்,12,2014. 'வறியோருக்காகப் பணியாற்றும் வறியத் திருஅவை' என்ற கருத்தை கத்தோலிக்கத் திருஅவையில் ஆழமாகப் பதித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் என்று உரோம் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள் பணியாளர் Fierce Henry அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப்பணி துவக்கப்பட்ட முதல் ஆண்டையொட்டி, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், அருள் பணியாளர் Henry அவர்கள், காரித்தாஸ் அமைப்பிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றியுள்ள உதவிகளை நினைவுகூர்ந்தார்.
திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கப்பட்ட Harley Davidson என்ற புகழ்பெற்ற இரு சக்கர வாகனம், ஏலத்தில் விற்கப்பட்டு, அதன் தொகை, வறியோரைப் பராமரிக்கும் ஓர் இல்லத்திற்கு அளிக்கப்பட்டதை சிறப்பாக நினைவுக் கூர்ந்த அருள் பணியாளர் Henry அவர்கள், கிறிஸ்துவை மையமாகக் கொண்டிராத பிறரன்புப் பணிகள், திருஅவையை ஓர் அரசுசாரா அமைப்பாக மாற்றும் என்று திருத்தந்தை கூறியதையும் நினைவுகூர்ந்தார்.
வறியோர் மட்டில் திருத்தந்தை காட்டும் அக்கறை வெறும் வாய்வார்த்தைகளாக இல்லாமல், அவர் வாழ்விலும் வெளிப்படுவதை கடந்த ஓராண்டு இவ்வுலகம் கண்டு வருகிறது என்றும் அருள் பணியாளர் Henry அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப்பணியின் முதல் ஆண்டு நிறைவையொட்டி, இளையோர் மேற்கொள்ளும் 24 மணி நேர செப வழிபாடு

மார்ச்,12,2014. மார்ச் 13, இவ்வியாழன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் முதல் ஆண்டு தலைமைப் பணியை நிறைவு செய்யும் தருணத்தையொட்டி, உரோம் நகரில், இளையோர் கூடி, 24 மணி நேர செப வழிபாட்டில் ஈடுபடுகின்றனர்.
உரோம் நகரில் அமைந்துள்ள புனித இலாரன்ஸ் இளையோர் மையத்தில், மார்ச் 12, இப்புதன் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் செப வழிபாடு, மார்ச் 13, இவ்வியாழன் மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலியுடன் நிறைவுபெறுகிறது.
1983ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களால் துவக்கப்பட்ட புனித இலாரன்ஸ் இளையோர் மையம், தன் 31வது ஆண்டு நிறைவையும் இவ்வியாழன் கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்துவ இளையோருக்கு பயிற்சிப் பாசறை என்றும், நம்பிக்கைக்கு ஓர் ஆய்வுக்கூடம் என்றும் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களால் அழைக்கப்பட்ட புனித இலாரன்ஸ் இளையோர் மையம், கடந்த ஆண்டு மார்ச் 12ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தெரிவு செய்ய கர்தினால்கள் சிஸ்டீன் சிற்றாலயத்தில் கூடிய நேரத்தில், தங்கள் தொடர் செபங்களை இம்மையத்தில் மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. லெபனானில் சிரியாவின் கத்தோலிக்க ஆயர்கள் நடத்தும் கூட்டம்,

மார்ச்,12,2014. சிரியாவில் பணியாற்றும் கத்தோலிக்க ஆயர்களின் கூட்டம், லெபனான் நாட்டின் Raboueh என்ற ஊரில், மார்ச் 12, இப்புதனன்று துவங்கியுள்ளது.
கிரேக்க மெல்கத்திய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, மூன்றாம் கிரகோரியோஸ் லஹாம் அவர்களின் தலைமையில் கூடியுள்ள ஆயர்களின் கூட்டத்தில், காரித்தாஸ் அமைப்பினர், சிரியாவில் மேற்கொண்டு வரும் பணிகளும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் பேசப்படுகின்றன.
Maalula என்ற இடத்திலிருந்து கடத்தப்பட்ட கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பெண் துறவியர் மூன்று நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெறும் இக்கூட்டத்தில், பெண் துறவியரின் விடுதலைக்குப் பயன்படுத்தப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி, சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரு ஆயர்களையும், அருள் பணியாளர்களையும் விடுவிக்கும் முயற்சிகள் இக்கூட்டத்தில் பேசப்படும் என்று அலெப்போவில் பணியாற்றும் ஆர்மீனிய கத்தோலிக்கப் பேராயர் Boutros Marayati அவர்கள், Fides செய்திக்கு குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.
சிரியாவில் இரு ஆயர்கள், ஒரு இயேசு சபை அருள் பணியாளர், ஆர்மீனிய கத்தோலிக்க அருள் பணியாளர் ஒருவர், மற்றும் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் அருள் பணியாளர் ஒருவர் என்று ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : Fides

7. தென்கொரியாவில் "ஒரு உணவுக்கு 100 Won" பிறரன்பு முயற்சி

மார்ச்,12,2014. மங்கோலியாவில் உள்ள வறியோருக்கு உணவு கொடுக்கவும், தென்கொரியாவில் உள்ள ஏழை மாணவருக்கு கல்வி உதவிகள் செய்யவும் தென்கொரியாவின் Daejeon மறைமாவட்டம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
2007ம் ஆண்டு தென் கொரிய ஆயர்கள் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை 'அத்லிமினா' கூட்டத்தில் சந்தித்ததையும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 'இறைவன் அன்பாக இருக்கிறார்' (Deus Caritas Est) என்ற சுற்று மடலை வெளியிட்டதையும் தொடர்ந்து, Daejeon மறைமாவட்டம், "ஒரு உணவுக்கு 100 Won" என்ற பெயரில் பிறரன்பு முயற்சி ஒன்றைத் துவங்கியது.
தென்கொரிய கத்தோலிக்க இல்லங்களில் ஒருவர் உண்ணும்போது, வறியோர் உணவுக்கென 100 Won, அதாவது, 5 ரூபாய் மதிப்புள்ள தொகையை ஒதுக்கி வைத்து, அந்தத் தொகையை பங்கு அருள் பணியாளரிடம் அளிப்பது என்பதே இந்தத் திட்டம்.
கடந்த 6 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த முயற்சியால், தென் கொரியா, மங்கோலியா ஆகிய நாடுகளில் உள்ள வறியோர் உண்பதற்கும், ஏழை மாணவர்களின் கல்வி செலவுகளுக்கும் உதவித் தொகைகளை Daejeon மறைமாவட்டம் அளித்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. மின்னல்கள் நிலநடுக்கத்தை குறிப்புணர்த்துமா?

மார்ச்,12,2014. நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் தோன்றும் வெளிச்சக் கீற்றுகள், பூமியில் ஏற்படும் அசைவுகளால் இருக்கலாம் என அமெரிக்க அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
பூமியில் இருக்கும் மண் படிமங்கள் நகர்வதால் மாபெரும் மின்சக்தி உருவாகி அதனால் இந்த வெளிச்சப் பொறிகள் உருவாகலாம் என்று கூறும் அறிவியலாளர்கள், சீனா மற்றும் இத்தாலியில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கங்களுக்கு முன்பு வானில் வெளிச்சம் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தானிய மாவுகள் அடங்கிய பெட்டிகளை முன்னும் பின்னுமாக தொடர்ந்து தள்ளியபோது, மாவில் பிளவு ஏற்பட்டு 200 வோல்ட் மின்சார சக்தி உருவாகியுள்ளதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதே செயல்பாடு, மண் படிமங்களில் ஏற்படும் போது லட்சக்கணக்கான வோல்ட் திறன் கொண்ட மின்சக்தி உருவாகும். இதுவே வானில் வெளிச்சமாக உருவாகி, நிலநடுக்கம் வரப் போவதற்கான அறிகுறியாக காண்பிக்கிறது என கூறலாம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
ரட்கர்ஸ் (Rutgers) பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் செய்த ஆய்வுகளின் முடிவுகள், டென்வரில் (Denver) நடைபெற்ற அமெரிக்க இயற்பியல் கழகக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டன.
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் வெளிச்சம் ஏற்படுகிறது என 300 ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக யூ டியூப் போன்ற இணையத்தளங்கள் வந்த பின்னர், வானில் ஏற்பட்ட வெளிச்சங்கள் தெளிவாக படம்பிடிக்கப்பட்டு அவற்றை உலகத்தில் இருக்கும் ஆய்வாளர்கள் பார்ப்பதற்கான வசதிகள் ஏற்பட்டுவிட்டன.
ஜப்பானின் புகுஷிமா (Fukushima) மற்றும் இத்தாலியின் லாகிலாவில் (L’Aquila) நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் ஏற்பட்ட வெளிச்சங்கள் தெளிவாக படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் ஏற்றப்பட்டன.
நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள பகுதிகளில் ஏற்படும் மின்சக்தியை அளவிடுவதற்காக துருக்கி ஆய்வாளர்கள் கோபுரங்களை நிறுவியுள்ளனர். இதில் ரிக்டர் அளவுகோலில் 5க்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கைகள் இருப்பதை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இத்தகைய ஒளி உருவாவதன் காரணங்களை இன்னும் தீர ஆய்வு செய்யவேண்டும் என்றும், தற்போது காணப்படும் தரவுகள் இந்த ஆய்வின் முதல் படிகளே என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...