Wednesday, 5 March 2014

செய்திகள் - 04.03.14

செய்திகள் - 04.03.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : விவிலியத்தை வைத்திருப்பதற்காக கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்

2. நம் தவறுகளை ஏற்று அவற்றுக்காக மன்னிப்பும் கேட்போம், திருத்தந்தை பிரான்சிஸ்

3. புதிய பொருளாதாரச் செயலகத்தின் பொதுச் செயலர் பேரருள்திரு Alfred Xuereb

4. சமய சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறு கர்தினால் டர்க்சன் வலியுறுத்தல்

5. பசுமைஇல்ல உண்ணாநோன்பில் பங்குகொள்ளுமாறு மும்பை கத்தோலிக்கருக்கு கர்தினால் ஆஸ்வால்டு அழைப்பு

6. உக்ரைன் மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்குத் தலத்திருஅவை உறுதி 

7. இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு பன்னாட்டு விசாரணை குழு அவசியம், ஐ.நா.வில் தமிழ் அருள்பணியாளர்கள்

8. குண்டு வெடிப்பு நடக்கும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம்

9. எவரெஸ்ட்டில் ஏறுவோர் 8 கிலோ குப்பைகளை அள்ளிவர வேண்டும்

10. 30 ஆயிரம் ஆண்டு தொற்றுநோய்க் கிருமி கண்டுபிடிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : விவிலியத்தை வைத்திருப்பதற்காக கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்

மார்ச்,04,2014. திருஅவையின் தொடக்க காலங்களைவிட இக்காலத்தில் அதிகக் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்துக்காகக் கொலைசெய்யப்படுகின்றனர் என்று சொல்லி, கிறிஸ்தவர்களின் பாதையில் எப்பொழுதும் சிலுவை இருக்கின்றது என இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, நாம் வாழும் இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.
இயேசுவைப் பின்பற்றுவதால் அவரது சீடர்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு என்ன என்பது குறித்து பேதுரு இயேசுவிடம் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்தபோது, தம்மைப் பின்செல்பவர்களுக்கு இன்னல்களும் எப்போதும் சேர்ந்தே வரும் என்று இயேசு உரைத்த பதிலைச் சுட்டிக்காட்டி மறையுறையாற்றிய திருத்தந்தை, இந்த உலகம் கிறிஸ்துவின் இறைத்தன்மையைச் சகித்துக்கொள்ளாததே கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதற்கு காரணம் எனவும் கூறினார்.
இன்று இயேசுவுக்குச் சாட்சி சொல்லும் பல சகோதர சகோதரிகள் அடக்குமுறைக்கு உள்ளாகின்றனர், சிலரால் விவிலியத்தைக் கொண்டுசெல்ல முடியாது எனவும், இவர்களால் ஒன்றுசேர்ந்து செபிக்க முடியாது எனவும் திருத்தந்தை கூறினார்.
திருப்பலிக்குச் செல்வது தடைசெய்யப்பட்டிருப்பதால் அதற்குச் செல்ல இயலாமல் இருக்கும் சகோதரர்களை நினைத்துப் பார்ப்போம், சிலுவையைச் சுமந்து சென்று இயேசு போல் துன்பம் அனுபவிக்க நாம் தயாரா என்ற கேள்வியையும் இச்செவ்வாய் மறையுரையில் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. நம் தவறுகளை ஏற்று அவற்றுக்காக மன்னிப்பும் கேட்போம், திருத்தந்தை பிரான்சிஸ்

மார்ச்,04,2014. வாழ்வில் நாம் அனைவரும் பல தவறுகளைச் செய்கிறோம். நம் தவறுகளை ஏற்பதற்குக் கற்றுக்கொள்வோம் மற்றும் அத்தவறுகளுக்காக மன்னிப்பும் கேட்போம் என, இச்செவ்வாய் தனது டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், மார்ச் 5, திருநீற்றுப் புதனன்று மாலை 4.30 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித ஆன்சல்ம் பசிலிக்காவில் பாவ மன்னிப்பு வழிபாட்டை நிறைவேற்றிய பின், அங்கிருந்து ஊர்வலமாக புனித சபினா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலியை நிகழ்த்துவார்.
மார்ச் 9 ஞாயிறு முதல் வெள்ளி முடிய வத்திக்கானில் வாழும் கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் அனைவரோடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இவ்வாண்டுக்கான தியானம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. புதிய பொருளாதாரச் செயலகத்தின் பொதுச் செயலர் பேரருள்திரு Alfred Xuereb

மார்ச்,04,2014. திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நாட்டின் அனைத்துப் பொருளாதார மற்றும் நிதி நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதற்கென உருவாக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரச் செயலகத்தின் பொதுச் செயலராக, பேரருள்திரு Alfred Xuereb அவர்களை இத்திங்களன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மால்ட்டா நாட்டவரான பேரருள்திரு Alfred Xuereb அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயலராவார். 55 வயதாகும் இவர், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு உதவிச் செயலராகவும் பணியாற்றியுள்ளார். வத்திக்கான் வங்கி எனப்படும் திருஅவையின் சமயப் பணிகள் நிறுவனத்தின் நடவடிக்கைகள் மற்றும் அதன் பணிகளை மறுபரிசீலனை செய்யும் குழுக்களுக்குத் தனது பிரதிநிதியாக, கடந்த நவம்பரில் பேரருள்திரு Alfred Xuereb அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருப்பீடம் மற்றும் திருஅவையின் நிர்வாகச் சீர்திருத்தப்பணியில் தனக்கு ஆலோசனை அளிக்கும் எட்டு கர்தினால்கள் கொண்ட குழுவுடன் கூட்டம் நடத்திய பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த பிப்ரவரி 24ம் தேதி, புதிய பொருளாதாரச் செயலகத்தை உருவாக்கி, அதன் தலைவராக ஆஸ்திரேலியாவின் சிட்னி கர்தினால் ஜார்ஜ் பெல் அவர்களை நியமித்தார்.
நம்பிக்கைக்கு உரியவரும், அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர்(Fidelis dispensator et prudens லூக்.12,42) என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று வெளியிட்ட தனது சொந்த முயற்சியினால்(Motu proprio) என்ற அறிக்கையில் இந்தப் புதிய பொருளாதாரச் செயலகம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. சமய சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறு கர்தினால் டர்க்சன் வலியுறுத்தல்

மார்ச்,04,2014. ஒவ்வொரு மனிதரும் உண்மையைப் பற்றிய தனது புரிந்துகொள்ளுதலுக்கு ஏற்ப தனது வாழ்வை அமைப்பதற்கு உதவும் சமய சுதந்திரத்தைப் பேணி பாதுகாப்பது இன்றியமையாதது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
சுலோவாக்கிய நாட்டின் பிராட்டிஸ்லாவாவில், திருஅவையும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டத்தில், அந்நாட்டு ஆயர்களின் அழைப்பின்பேரில் பங்குகொள்ளும் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், சமய சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார்.
கருத்துச் சுதந்திரம், மனச்சான்றின் சுதந்திரம் ஆகிய இரண்டிலுமிருந்து சமய சுதந்திரத்தைப் பிரிக்க முடியாது என்று இச்செவ்வாயன்று உரையாற்றிய கர்தினால் டர்க்சன், சமய சுதந்திரம் என்பது, ஒவ்வொருவரும் தனியாகவோ அல்லது சமூகமாகவோ தங்களின் மத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகும் என்றும் கூறினார். 
சமய சுதந்திரம் எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்படுவதில்லை என்றும், இக்காலத்தில் அதிகமான நாடுகளில் தங்கள் விசுவாசத்துக்காகத் துன்புறுவோர் கிறிஸ்தவர்களே என்றும், இது மனித உரிமைகளை மிகப்பெரிய அளவில் மீறுவதாக உள்ளது என்றும் கூறினார் கர்தினால் டர்க்சன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. பசுமைஇல்ல உண்ணாநோன்பில் பங்குகொள்ளுமாறு மும்பை கத்தோலிக்கருக்கு கர்தினால் ஆஸ்வால்டு அழைப்பு

மார்ச்,04,2014. இப்புதனன்று தொடங்கும் தவக்காலத்தில் விசுவாசிகள் மத்தியில் கார்பன் உண்ணாநோன்பு என்ற நடவடிக்கையை ஊக்குவித்துள்ளார் மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
சுற்றுச்சூழல் மாசுக்கேட்டைக் குறைக்கும் கார்பன் உண்ணாநோன்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும், அதன்மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக உலகை மாற்றவும் வேண்டுமென மும்பை கத்தோலிக்கரிடம் கேட்டுள்ளார் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
மார்ச் 5, இப்புதனன்று தொடங்கும் தவக்காலம் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், கடவுளோடும், படைப்போடும், ஒருவர் ஒருவரோடும் கொண்டுள்ள உறவுகளை மீண்டும் கண்டுணருவதற்கு இத்தவக்காலம் விசுவாசிகளுக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
படைப்பைப் பாதுகாக்க வேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்புக்குப் பதிலளிக்கும் விதமாக, தவக்காலத்தில் விசுவாசிகள் கார்பன் உண்ணாநோன்பு என்ற நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஊக்குவித்துள்ளார் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
ஆதாரம் : AsiaNews                 

6. உக்ரைன் மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்குத் தலத்திருஅவை உறுதி 

மார்ச்,04,2014. உக்ரைன் நாட்டின் Crimean தன்னாட்சிப் பகுதியை இரஷ்யா ஆக்ரமித்திருப்பதற்கு மத்தியில் உக்ரைனைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படைவீரர்களுக்கு மேய்ப்புப்பணி முறையில் தனது தொடர்ந்த ஆதரவை வழங்கத் தயாரித்து வருகிறது உக்ரைன் கிரேக்க வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவை.
Crimean தன்னாட்சித் தீபகற்பத்தில் இரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதில் அளிப்பதற்கு அனைத்துலக சமுதாயம் தயாரித்து வரும்வேளை, மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள உக்ரைன் கிரேக்க கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk, தங்களின் முன்னாள் சோவியத் யூனியனின் இராணுவத் தலையீடு குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இராணுவத்தில் 10 இலட்சம் படைவீரர்கள்வரை பணிசெய்வதற்கு அழைக்கப்பட்டுள்ள இவ்வேளையில் கத்தோலிக்கத் திருஅவை படைவீரர்களுடன் போர்க்களத்தில் ஒன்றிணைந்து ஆதரவு வளங்கும் எனவும் பேராயரின் அறிக்கை கூறுகிறது.
மேலும், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு மாஸ்கோ முதுபெரும் தந்தையின் உதவியைக் கேட்டுள்ளார் உக்ரைன் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர்.
ஏறக்குறைய 1,50,000 இரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் Crimean தன்னாட்சிப் பகுதியை ஆக்ரமித்திருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு பன்னாட்டு விசாரணை குழு அவசியம், ஐ.நா.வில் தமிழ் அருள்பணியாளர்கள்

மார்ச்,04,2014. இலங்கையின் உள்நாட்டுப்போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு அளவில் விசாரணை நடத்தப்படுமாறு 200க்கும் மேற்பட்ட தமிழ் அருள்பணியாளர்கள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அவைக்கு இத்திங்களன்று கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
ஜெனீவாவில் இத்திங்களன்று தொடங்கியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 25வது கூட்டத்தில் 204 தமிழ் அருள்பணியாளர்களின் கையெழுத்துக்களைக் கொண்ட  கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2009ம் ஆண்டின் இறுதிக்கட்டப் போரில் ஏறக்குறைய 40 ஆயிரம் அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டனர் என ஐ.நா. கணக்கிட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கையில் நடந்த இனப் படுகொலை குறித்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் அமெரிக்கா இச்செவ்வாயன்று தாக்கல் செய்துள்ளது.
ஜெனிவாவில் இத்திங்களன்று துவங்கிய ஐ.நா. மனித உரிமைக் குழுவிடம், அமெரிக்க தலைமையிலான 4 நாடுகள் கொண்ட குழு, இலங்கையில் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், இனப்படுகொலை நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அந்த தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது.
மேலும், இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா மூன்றாவது முறையாக இந்தத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

ஆதாரம் : UCAN                         

8. குண்டு வெடிப்பு நடக்கும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம்

மார்ச்,04,2014. உலக அளவில், குண்டு வெடிப்பு அதிகம் நிகழும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தைப் பிடித்துள்ளதாக, தேசிய குண்டு வெடிப்பு புள்ளி விவர மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், முதல் இடத்தில் ஈராக்கும், இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. இந்தியா உட்பட இந்த மூன்று நாடுகளிலுமே ஒட்டு மொத்த குண்டு வெடிப்புகளில் 75 விழுக்காட்டு குண்டு வெடிப்புகள் நிகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டில் இந்தியாவில் 212 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், இது ஆப்கானிஸ்தானோடு ஒப்பிடுகையில் (108 குண்டு வெடிப்புகள்) இரு மடங்கு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
241 குண்டு வெடிப்புகள் நடந்த 2012ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2013ம் ஆண்டு குண்டு வெடிப்பு குறைந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 2004ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை சராசரியாக 298 குண்டு வெடிப்புகளும், 1,337 உயிரிழப்புகளும் நடந்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ஆதாரம் : NBDC

9. எவரெஸ்ட்டில் ஏறுவோர் 8 கிலோ குப்பைகளை அள்ளிவர வேண்டும்

மார்ச்,04,2014. மலைச்சிகரங்களில் கழிவுப் பொருட்கள் குவிந்துவருவது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளவேளை, எவரெஸ்ட் மலைச்சிகரத்துக்கு இம்முறை வசந்த காலத்தில் செல்லும் மலையேறிகளும் அவர்களின் ஆதரவு அணியினரும் திரும்பிவரும்போது, ஒவ்வொருவரும் குறைந்தது எட்டு கிலோகிராம் குப்பைகளை அள்ளிவர வேண்டுமென்று நேபாள அரசு கூறியுள்ளது.
மௌன்ட் எவரெஸ்ட் பேஸ் கேம்ப்- என்ற 5,300 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள தளத்துக்கு மேல் செல்லும் எல்லோருக்கும் இந்தப் புதிய சட்டவிதி பொருந்தும் என்று நேபாள அரசின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இவ்வாறு கொண்டுவரவில்லையெனில், அவர்கள் தங்களின் 4,000 டாலர் முன்பணத்தை இழக்க வேண்டியிருக்கும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.
அதிகளவான வெளிநாட்டு மலையேறிகளை ஈர்ப்பதற்காக எவரெஸ்ட் மற்றும் ஏனைய இமயமலைச் சிகரங்களுக்குச் செல்லும் தனிப்பட்ட மலையேறிகளுக்கான கட்டணத்தை கடந்த மாதம் நேபாள அரசு இரத்துசெய்தது.

ஆதாரம் : பிபிசி

10. 30 ஆயிரம் ஆண்டு தொற்றுநோய்க் கிருமி கண்டுபிடிப்பு

மார்ச்,04,2014. 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான மிகப் பழமையான தொற்றுநோய்க் கிருமியை சைபீரியப் பகுதியில் பிரெஞ்சு நாட்டு அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
"பித்தோ வைரஸ் சைபீரிக்கும்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொற்றுநோய்க் கிருமி, 98 அடி ஆழத்தில், கிழக்கு சைபீரியக் கடலுக்கு அருகில் உறைந்த தரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உறைபனியில் வெகு ஆழத்தில் இருந்த தொண்மைகாலக் கிருமிகள், தற்போதைய வெப்பநிலை மாற்றத்தால் வெளியே வரத் துவங்கியுள்ளன என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
"பித்தோ வைரஸ் சைபீரிக்கும்" என்ற இக்கிருமி, தற்போதும் சக்தியோடு இருப்பதாகவும், இது அமீபா போன்ற உயிரிகளைத் தாக்கும் சக்தி கொண்டது எனவும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
இந்தத் தொற்றுநோய்க் கிருமி மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : IBTimes 

No comments:

Post a Comment