Monday, 3 March 2014

செய்திகள் - 03.03.14

 செய்திகள் - 03.03.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்த்தந்தை : குருக்களும் துறவறத்தாரும் இறைவனுக்கே தங்களை முற்றிலுமாக அர்ப்பணிக்கச் செபிப்போம்

2. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி / திருத்தந்தையுடன் இஸ்பானிய ஆயர்கள் சந்திப்பு.

3. புருண்டி நாட்டிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

4. திருத்தந்தை பிரான்சிஸ் : இவ்வுலகச் செல்வங்களால் நிறைக்கப்பட வேண்டுமென்று விரும்பும் இதயத்தில் கடவுளுக்கு இடமில்லை

5. உக்ரைனில் அமைதி நிலவ திருத்தந்தை அழைப்பு

6. ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்கக் கோவிலைக் கட்டியெழுப்ப புத்தமத பிறரன்பு அமைப்பு நிதியுதவி

7. இலங்கையில், வேதியல் உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால், சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்த்தந்தை : குருக்களும் துறவறத்தாரும் இறைவனுக்கே தங்களை முற்றிலுமாக அர்ப்பணிக்கச் செபிப்போம்

மார்ச்,03,2014. அதிகாரம், பணம் என்ற சிலை வழிபாட்டிலிருந்து விடுதலைப் பெற்றவர்களாக இறைவனுக்கு மட்டுமே தங்கள் இதயங்களை அர்ப்பணிக்கும் அருள் பணியாளர்கள் மற்றும் அருள்சகோதரிகளுக்காக தேவ அழைத்தல்களின் ஆண்டவரை நோக்கி மன்றாடுவோம் என இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலைத் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வந்தரிடம் இயேசு, அனைத்தையும் துறந்துவிட்டு வருமாறு கேட்டபோது, அச்செல்வந்தர் கவலையுடன் சென்றதைக் குறிப்பிட்டு, அவர் நல்லவராக இருந்தாலும், இவ்வுலகச் செலவங்களுக்குள் அவர் சிறைப்பட்டிருந்தார் என்றார்.
பணம் அச்செல்வந்தரைத் தேர்ந்துகொண்டு சிறைப்படுத்தியிருந்ததால், அவரால் வெளியே வரமுடியா நிலையிலிருந்தார், அதுபோல் இன்றும் பல இளைஞர்கள் இறையழைப்பை உணர்ந்தும், உலக சுகங்களை துறந்துவிட்டு வரமுடியா நிலையிலுள்ளனர் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தகைய இளையோர், தங்கள் அழைப்பைக் கண்டுகொண்டு, நல்ல அருள் பணியாளர்களாகவும், நல்ல அருள்சகோதரிகளாகவும் மாற செபிக்குமாறும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி / திருத்தந்தையுடன் இஸ்பானிய ஆயர்கள் சந்திப்பு.

மார்ச்,03,2014. 'திருமணவாழ்வை எவ்வாறு நன்முறையில் மேற்கொள்வது?' நம் அன்பை எப்போதும் புதுப்பித்துநம் அனைத்து இடர்பாடுகளை வெற்றிகொள்ளவேண்டிய பலத்தை வழங்கும் இறைவனுடன் ஒன்றித்திருப்பதன்வழி' என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இத்திங்களன்று 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த இஸ்பெயின் நாட்டு ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய நவீன உலகில், இறைவன் தூரமாக ஒதுக்கிவைக்கப்பட்டு, உலக இன்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை கவனத்தில் கொண்டு செயலாற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இயேசுவின் நற்செய்தியை அறிவித்தல் என்பது நம் எடுத்துக்காட்டுக்கள், போதனை மற்றும் நம் அருகாமை மூலம் மக்களின் மனங்களில் ஊன்றப்பட்டு, வளர்ச்சி காணவேண்டும் என்பதையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் பணிவிடை பெறுவதற்கல்ல, பணிவிடை புரியவே அழைப்புப் பெற்றுள்ளோம் எனவும் கூறினார்.
இஸ்பானிய புனிதர் இயேசுவின் திரேசா அவர்கள் பிறந்ததன் 500ம் ஆண்டு திருஅவையில் விரைவில் சிறப்பிக்கப்படவுள்ளது குறித்தும் இஸ்பானிய ஆயர்களிடம் கலந்துரையாடினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. புருண்டி நாட்டிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

மார்ச்,03,2014. புருண்டி  நாட்டிற்கும்  வத்திக்கானுக்கும்  இடையே  பொது  உடன்பாடுகள்  குறித்த  ஒப்பந்தம்  கெயெழுத்திடப்பட்டுள்ளது.
புருண்டியின்  சார்பில்  அந்நாட்டு  வெளியுறவு  அமைச்சர்  Laurent Kavakure, திருப்பீடத்தின்  சார்பில் பேராயர் Franco Coppola ஆகியோரிடையே இவ்வொப்பந்தம்  கையெழுத்திடப்பட்டுள்ளது. 2012ம்  ஆண்டு  நவம்பர்  மாதம் 6ம்  தேதி Bujumburaவில்  இவ்விரு   நாடுகளுக்கும்   இடையேக்  கையெழுத்திடப்பட்ட  ஒப்பந்தத்தின்  தொடர்ச்சியாக, புரிந்துணர்வு   ஒப்பந்தம்  கடந்த  வெள்ளிக்கிழமையன்று  கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது புருண்டி நாட்டு ஆயர்களும் உடனிருந்தனர் என திருப்பீடத்திலிருந்து வெளியான அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : இவ்வுலகச் செல்வங்களால் நிறைக்கப்பட வேண்டுமென்று விரும்பும் இதயத்தில் கடவுளுக்கு இடமில்லை

மார்ச்,03,2014. இவ்வுலகச் செல்வங்களால் முழுவதும் நிறைக்கப்படவேண்டுமென்று விரும்பும் இதயத்தில் கடவுளுக்கு இடமில்லை என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள், செல்வம் ஆகிய இருதலைவர்களுக்கு எவரும் ஒரே நேரத்தில் பணிவிடை  செய்ய முடியாது என்று கூறினார்.
மனமாற்றத்தின் பயணமாகிய தவக்காலத்தை இவ்வாரத்தில் நாம் தொடங்குகிறோம் என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்துவின் உயிர்ப்பு நோக்கிச் செல்லும் இப்பயணத்தில் செபம், உண்ணாநோன்பு, கருணைச் செயல்கள் ஆகிய ஆயுதங்கள் மூலம் தீமையை எதிர்க்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இக்காலத்தில் அதிகத் தேவையில் இருப்போர் மற்றும் வன்முறை மோதல்களால் சோதிக்கப்படுவோருடன் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு சகோதரத்துவ தோழமையிலும் இறைவழிபாட்டு உணர்விலும் தவக்காலத்தைத் தொடங்குவோம் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பொருள்களால் ஆக்ரமிக்கப்பட வேண்டுமென ஏங்கும் இதயத்தில் கடவுளுக்கும், விசுவாசத்துக்கும் இடமேயில்லை என்று எச்சரித்த திருத்தந்தை, இதற்கு மாறாக, கடவுளுக்குரிய இடத்தைக் கொடுக்கும்போது, அவரது அன்பு, செல்வங்களைப் பிறரன்புப் பணிகளுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் செலவழிக்க நம்மைத் தூண்டும் என்றும் கூறினார்.
தனக்கென செல்வம் சேர்க்க முயற்சிக்கும்வரை அங்கு நீதி ஒருபோதும் இருக்காது என்றும், இறைவனின் பராமரிப்பில் நாம் நம்பிக்கை வைத்து இறையாட்சியை ஒன்றிணைந்து தேடும்பொழுது மாண்புடன் வாழ்வதற்கு எதுவுமே குறைவுபடாது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. உக்ரைனில் அமைதி நிலவ திருத்தந்தை அழைப்பு

மார்ச்,03,2014. உக்ரைனில் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்கள் தங்களுக்கிடையே நிலவும் தவறான புரிந்துகொள்ளுதலை நீக்கி, அனைவரும் ஒன்றிணைந்து வருங்கால நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அமைதியான தீர்வு ஒன்றைக் கண்டடையுமாறு அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் மழையையும் பொருட்படுத்தாது மூவேளை செப உரையைக் கேட்டுக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளிடம் உக்ரைன் நாட்டுக்காகச் செபிக்கக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உக்ரைன் நாட்டில் பதட்டம் நிறைந்த சூழல் அதிகரித்துக்கொண்டுவரும் இவ்வேளையில், அந்நாட்டில் உரையாடலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அனைத்துலக சமுதாயம் ஆதரவு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, ரஷ்யப் படைகள், உக்ரைன் பகுதியில் முற்றுகையிட்டுள்ளன எனவும், மேலும் இரண்டு இரஷ்ய போர்க்கப்பல்கள் உக்ரைன் பகுதிக்கு விரைந்துள்ளன எனவும்,  இதையடுத்து, உக்ரைன் மீது இரஷ்யா போர் தொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் இத்திங்கள் செய்திகள் கூறுகின்றன.
இந்நிலையில், உக்ரைனில், இரஷ்ய படைகளின் அத்துமீறல் குறித்து அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமா, இன்னும், பிரிட்டன், ஜெர்மன் போன்ற நாடுகளின் பிரதமர்கள், போலந்து அரசுத்தலைவர் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்கக் கோவிலைக் கட்டியெழுப்ப புத்தமத பிறரன்பு அமைப்பு நிதியுதவி

மார்ச்,03,2014. கடந்த நவம்பர் மாதம், பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கிய ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட Tacloban நகர் கத்தோலிக்கக் கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப நிதியுதவி வழங்க புத்தமத பிறரன்பு அமைப்பு ஒன்று முன்வந்துள்ளது.
இனம், மதம், நாடு என்ற எவ்வித பாகுபாடுமின்றி உதவிகள் செய்யும் Tzu Chi என்ற புத்தமத அமைப்பு வழங்க முன்வந்துள்ள இவ்வுதவியை, பிலிப்பின்ஸ் தலத்திருஅவையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
அன்பு, கருணை, மற்றும் புரிந்துகொள்ளுதல் எனும் உணர்வுகளால் பிணையப்பட்டிருக்கும் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் ஒன்றாக இணைந்து பணிபுரிவது, வரவேற்கப்பட வேண்டியது என்று, Santo Nino பங்குத் தளத்தைச் சேர்ந்த அருள் பணியாளர் Alex Opiniano அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : UCAN

7. இலங்கையில், வேதியல் உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால், சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மார்ச்,03,2014. இலங்கையில், சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகியுள்ள வேதியல் உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும் என்று அந்நாட்டின் மருத்துவர் கழகம் அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக, இலங்கையில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, வேதியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடே முக்கியக் காரணம் என்று ஆய்வுகள் வழியே தற்போது தெரியவந்துள்ளதாக இலங்கை மருத்துவர் கழகம் கூறியுள்ளது.
1960ம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பாரம்பரிய உரங்களைக் கொண்ட வேளாண் முறையை ஊக்குவிக்க, அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் இலங்கை அரசை, தங்கள் அறிக்கையில் கேட்டுள்ளனர்.

ஆதாரம் : TamilWIn


No comments:

Post a Comment