Monday, 3 March 2014

செய்திகள் - 01.03.14

செய்திகள் - 01.03.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ், ருமேனியப் பிரதமர் சந்திப்பு

2. கற்றுக்கொடுப்பது அன்பின் கலை, திருத்தந்தை பிரான்சிஸ்

3. மறைசாட்சிகளின் இரத்தம் இலத்தீன் அமெரிக்காவையும், மத்திய கிழக்கையும் இரத்தக் கயிற்றால் இணைக்கின்றது, கர்தினால் சாந்திரி

4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஸ்பெயினுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள அழைப்பு

5. உக்ரைனின் கிரீமியா பகுதியில் அமைதிக்கு அழைப்பு, ஆயர்கள்

6. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமய சுதந்திரம் காக்கப்பட அரசுத்தலைவர் ஒபாமாவுக்கு வேண்டுகோள்

7. சிறார் கருணைக்கொலை குறித்த பெல்ஜிய அரசின் தீர்மானம் கவலை தருகின்றது, வத்திக்கான் வாழ்வுக் கழக உறுப்பினர்கள்

8. காது கேளாமை பிரச்சனையைக் களைய அரசுகளுக்கு WHO அழைப்பு

9. 2020ல் சூரியனுக்கு ஆதித்யா செயற்கைக்கோள், இந்தியா

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ், ருமேனியப் பிரதமர் சந்திப்பு

மார்ச்,01,2014. ருமேனியப் பிரதமர் Victor Viorel Ponta அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் இருபது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தார் ருமேனியப் பிரதமர் Viorel Ponta.
இச்சந்திப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீட பத்திரிகை அலுவலகம்,  குடும்பம், கல்வி, சமய சுதந்திரம், பொதுச்சொத்துக்களைப் பராமரிப்பதில் திருப்பீடத்துக்கும் ருமேனிய நாட்டுக்கும் இடையே ஒத்துழைப்பு போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புகளில் இடம்பெற்றதாக அறிவித்தது.
ருமேனியாவில் கத்தோலிக்கத் திருஅவையின் நிலைமை குறித்துப் பேசப்பட்டதாகவும்,  உலகை அச்சுறுத்திவரும் பல்வேறு மோதல்கள் உரையாடல் மூலமாக முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு கூறப்பட்டதாகவும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
ருமேனியப் பிரதமர் Victor Viorel Ponta அவர்கள், அந்நாட்டு ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Daniele அவர்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, பரிசுப்பொருளையும் திருத்தந்தைக்கு வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கற்றுக்கொடுப்பது அன்பின் கலை, திருத்தந்தை பிரான்சிஸ்

மார்ச்,01,2014.  கத்தோலிக்கப் பள்ளிகளில் கற்றுக்கொடுப்பவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி சொல்வோம். கற்றுக்கொடுப்பது அன்பின் கலை; அது வாழ்வை வழங்குவது போன்றது என்று, தனது டுவிட்டர் செய்தியில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வருகிற மே 24 முதல் 26 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதபூமிக்கு மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்துக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் இஸ்ரேலில் கிறிஸ்தவர்களின் நிலைமை குறித்த விபரங்கள் புள்ளி விபரங்களுடன் வழங்கப்பட்டுள்ளன.
திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் 1964ம் ஆண்டு சனவரி 4 முதல் 6 வரை புனிதபூமிக்கு மேற்கொண்ட திருப்பயணத்தின் 50ம் ஆண்டு நினைவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகிற மே மாத புனித பூமி திருப்பயணம் அமைகின்றது.
திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் புனித பூமி திருப்பயணம், நவீன காலத்தில் உரோமைக்கு வெளியே திருத்தந்தை ஒருவர் மேற்கொண்ட முதல் திருப்பயணமாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/Zenit

3. மறைசாட்சிகளின் இரத்தம் இலத்தீன் அமெரிக்காவையும், மத்திய கிழக்கையும் இரத்தக் கயிற்றால் இணைக்கின்றது, கர்தினால் சாந்திரி

மார்ச்,01,2014. கிறிஸ்தவ வரலாற்றில் தொடர்ந்து இடம்பெற்று வரும் அடக்குமுறைகளும் சிலுவைத் துன்பங்களும் நாம் வாழும் இக்காலத்தில் திருஅவையின் எண்ணற்ற பிள்ளைகளையும் விட்டுவைக்கவில்லை என திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவையின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்குத் திருப்பலி நிறைவேற்றிய, கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்திரி இவ்வாறு கூறினார்.
பாக்தாத்தின் கத்தோலிக்கப் பேராலயத்தில் கொல்லப்பட்ட 52 கத்தோலிக்க மறைசாட்சிகளையும், இலத்தீன் அமெரிக்காவில் கொல்லப்பட்டுள்ள ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவிகளையும் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் சாந்திரி, மறைசாட்சிகளின் இரத்தம் இலத்தீன் அமெரிக்காவையும், மத்திய கிழக்கையும் இரத்தக் கயிற்றால் இணைக்கின்றது என்று கூறினார்.
மறைசாட்சிகளின் இரத்தம், வரலாற்றின் இருபது நூற்றாண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் உரைத்தார் கர்தினால் சாந்திரி.

ஆதாரம் : Fides

4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஸ்பெயினுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள அழைப்பு

மார்ச்,01,2014. புனித இயேசுவின் தெரேசா பிறந்ததன் 500ம் ஆண்டையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஸ்பெயினுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது அந்நாட்டு அரசு அதிகாரிகள் குழு ஒன்று.
புனித இயேசுவின் தெரேசா பிறந்த நகரமான அவிலாவின் மேயர் Miguel Ángel Nieto தலைமையிலான குழு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்து, 2015ம் ஆண்டில் சிறப்பிக்கப்படவிருக்கும் இந்த 500ம் ஆண்டு விழாவுக்கு வருகை தருமாறு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தது.
இஸ்பெயின் அரசுத்தலைவர் Castilla y León அரசின் அழைப்புக் கடிதத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்த இக்குழு, இஸ்பெயின் நாட்டின் அனைத்து மக்கள் சார்பாக இவ்வழைப்பை முன்வைப்பதாகத் திருத்தந்தையிடம் கூறியது.
புனித இயேசுவின் தெரேசா எனப்படும் புனித அவிலா தெரேசா, 1515ம் ஆண்டில் அவிலா நகரில் பிறந்தார். இவர், புனித சிலுவை யோவானுடன் சேர்ந்து கார்மேல் சபையை சீர்படுத்தி 17 கார்மேல் சபை இல்லங்களை நிறுவினார். புனித அவிலா தெரேசாவின் இயற்பெயர் Teresa de Cepeda y Ahumada.

ஆதாரம் : Rome Reports                        

5. உக்ரைனின் கிரீமியா பகுதியில் அமைதிக்கு அழைப்பு, ஆயர்கள்

மார்ச்,01,2014. உக்ரைனின் கிரீமியா தன்னாட்சிப் பகுதியில், இரஷிய ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் ஆக்ரமிப்பு செய்துள்ளதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளவேளை, அப்பகுதியில் அமைதிக்காக அழைப்புவிடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
நூற்றுக்கணக்கான இரஷிய ஆதரவாளர்கள், இராணுவம் போன்று ஆயுதங்களுடன் கிரீமியா தன்னாட்சிப் பகுதியில் நுழைந்து அப்பகுதியின் விமான நிலையத்தை ஆக்ரமித்துள்ளதோடு அப்பகுதியிலுள்ள நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகக் கட்டடங்களை இவ்வியாழக்கிழமை கைப்பற்றியுள்ளனர். கிரீமியா தன்னாட்சிப் பகுதியையும் ஆக்ரமித்துள்ளனர்.
இந்தப் பதட்டநிலைகளையடுத்து உக்ரைன் கத்தோலிக்க இதழில் அமைதிக்கு அழைப்புவிடுத்துள்ள ஆயர்கள், இந்நெருக்கடிநிலை குறித்து ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அவை விவாதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஐரோப்பிய சமுதாய அவையுடன் உக்ரைனை இணைக்க மறுத்து இரஷியாவுடன் இணக்கமாகச் சென்ற முன்னாள் அரசுத்தலைவர் விக்டர் யானுகோவிச் பதவி விலக வேண்டும் எனக்கோரிய எதிர்ப்பாளர்களின் நெருக்கடி முற்றியதால் தலைநகர் கீவை விட்டு யானுகோவிச் கடந்த சனிக்கிழமை வெளியேறினார். இந்த நிலையில், புதிய சீர்திருத்தத் தலைவர்கள் மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிச் செல்வதால், இரஷியா எரிச்சலடைந்து உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : CNS

6. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமய சுதந்திரம் காக்கப்பட அரசுத்தலைவர் ஒபாமாவுக்கு வேண்டுகோள்

மார்ச்,01,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பாரக் ஒபாமா, மற்ற நாடுகளில் சமய சுதந்திரம் காக்கப்பட முயற்சிப்பது போன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் சமய சுதந்திரம் காக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறு ஒபாமாவை வலியுறுத்தியுள்ளனர் அந்நாட்டு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.
இரு கத்தோலிக்கரும், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையின் எட்டு தலைவர்களும் இணைந்து அரசுத்தலைவர் ஒபாமாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வெளிநாடுகளில் சமய சுதந்திரத்தை ஊக்குவிக்க முயற்சிப்பதுபோன்று, உள்நாட்டில் அனைத்து அமெரிக்கரும் சமய சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு கவனம் செலுத்துமாறு கேட்டுள்ளனர்.
அமெரிக்க அரசின் உள்நாட்டுக் கொள்கைகள், அனைத்துக் குடிமக்களின் மத நம்பிக்கையை முழுவதும் பாதுகாப்பதுபோல் இல்லை எனவும், வெளிநாடுகளில் சமய சுதந்திரம் காக்கப்படுவதற்கு ஒபாமா அரசு மிகவும் வலிமையானதாகச் செயல்படுவதாகவும் கூறியுள்ளனர் அமெரிக்க கிறிஸ்தவத் தலைவர்கள்.

ஆதாரம் : CNS

7. சிறார் கருணைக்கொலை குறித்த பெல்ஜிய அரசின் தீர்மானம் கவலை தருகின்றது, வத்திக்கான் வாழ்வுக் கழக உறுப்பினர்கள்

மார்ச்,01,2014. சிறார்க் கருணைக்கொலையைச் சட்டமாக்குவதற்கு அண்மையில் பெல்ஜிய அரசு எடுத்துள்ள தீர்மானம் கவலை தருகின்றது என திருப்பீட வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கூறியுள்ளனர். 
இது குறித்து கருத்து தெரிவித்த, இந்த வாழ்வுக் கழக நிர்வாக உறுப்பினரும், பிலடெல்பியாவிலுள்ள தேசிய கத்தோலிக்க நன்னெறி மையத் தலைவருமான ஜான் ஹாஸ், பெல்ஜிய அரசின் இத்தீர்மானம் பயங்கரமானதாக உள்ளது எனச் சொல்லியுள்ளார்.
இத்தகைய தீர்மானங்களைச் சுயமாக எடுப்பதற்குச் சிறாரால் இயலாது என்று சொல்லி சிறாரின் உரிமைகளுக்காக அழைப்பு விடுத்துள்ளார் ஜான் ஹாஸ்.
மேலும், பெல்ஜிய அரசின் இத்தீர்மானம் வியப்புக்குரியதாக உள்ளது எனத் தெரிவித்துள்ள ஜெர்மனியின் மருத்துவர் Manfred Lutz, இத்தீர்மானத்தின்படி மாற்றுத்திறனாளிச் சிறாரும் சமூகத்திற்குச் சுமை என்று சொல்லி அவர்களையும் அழித்துவிடுவதற்கு வழி அமைப்பதாய் உள்ளது என குறை கூறியுள்ளார். 
பெல்ஜிய நாடாளுமன்றத்தின் இத்தீர்மானம், அந்நாட்டு அரசர் பிலிப்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA                            

8. காது கேளாமை பிரச்சனையைக் களைய அரசுகளுக்கு WHO அழைப்பு

மார்ச்,01,2014.உலகில் 36 கோடிப் பேர் காது கேளாமை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவேளை, இப்பிரச்சனையில் கவனம் செலுத்துமாறு அரசுகளுக்கு விண்ணப்பித்துள்ளது WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம்.
ஆசிய பசிபிக், தெற்கு ஆசியா, ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதி ஆகியவற்றில் காது கேளாமை பிரச்சனை அதிகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள WHO நிறுவனம்,  காது கேளாமை பிரச்சனையை எதிர்கொள்ளும் மக்களில் பாதிப்பேருக்கு, இக்குறையை
நிவர்த்தி செய்ய முடியும் எனக் கூறியுள்ளது.
மார்ச் 3ம் தேதி காது பராமரிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள WHO நிறுவனம், காதுப் பிரச்சனை தொடர்பாக 72 நாடுகளுக்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின்படி 32 நாடுகளே செயல்பட்டுள்ளன எனவும் கூறியது.

ஆதாரம் : UN
9. 2020ல் சூரியனுக்கு ஆதித்யா செயற்கைக்கோள், இந்தியா

மார்ச்,01,2014. 2020ம் ஆண்டில் சூரியனுக்கு செயற்கைக்கோள் அனுப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னையில் தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் இராதாகிருஷ்ணன்,  வரும் 2017 முதல் 2020ம் ஆண்டிற்குள் ஆதித்யா என்ற பெயரில் சூரியனுக்கு செயற்கைக்கோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதற்கு முன்னதாக இரண்டாம் கட்டமாக சந்திராயன்-2 செயற்கை கோள் தயாரிக்கப்பட்டு அதனை நிலவில் தரையிறங்க வைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது எனவும் இராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
தொடர்ந்து 2020ம் ஆண்டிற்குள் மேலும் ஆறு முதல் பத்து டன் அளவு திறனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் தடுப்பது குறித்து கையாள்வதற்காக அனுப்பப்பட்ட கல்பனா, இன்சாட் 3-டி செயற்கைக்கோள் மிகவும் உதவிக்கரமாக செயல்பட்டு வருகிறது. அவை அனுப்பிய 400க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவும் இராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள், திட்டமிட்டபடி சரியான பாதையி்ல செல்வதாகவும், அதன் மொத்த பயணத் தூரமான 680 மில்லியன் கி.மீ தூரத்தில் தற்போது மூன்றில் ஒருபங்கு தூரத்தைக் கடந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆதாரம் : தினமலர்
 

No comments:

Post a Comment