Monday, 21 October 2013

உலகின் முதல் கலங்கரை விளக்கம்

உலகின் முதல் கலங்கரை விளக்கம்

கடலிலே பயணம் செய்யும் கலங்களுக்குக் கரை இருக்கின்ற இடத்தையோ துறைமுகம் உள்ள பகுதியையோ ஒளி மூலமாக உணர்த்தும் ஏற்பாடுதான் கலங்கரை விளக்கம்.  எகிப்தின் ஃபாரோஸ் தீவின் அலெக்சாண்ட்ரியா நகரில் கட்டப்பட்டிருந்த கலங்கரை விளக்கம்தான் உலகில் முதன்முறையாக அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கமாகும். பிரமிடுகள் மற்றும் பெரியமாடக் கல்லறைகளுக்கு அடுத்தபடியாக, மிக உயரமான கட்டடமாக அக்காலத்தில் இது கருதப்பட்டது. இது ஏறக்குறைய 115 மீட்டரிலிருந்து 136 மீட்டர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கிரேக்க வரலாற்று அறிஞர் ஸ்ட்ராபோவின் குறிப்புகள்படி, கோஸ்ட்ராஸ் என்ற கட்டடக்கலைஞர்தான் அந்த கலங்கரை விளக்கத்தை வடிவமைத்தவர். இந்தக் கலங்கரை விளக்கம் பக்கத்துக்கு 28 அடிகள் வீதம் சதுரமாக கட்டப்பட்ட தளத்தின் மீது அமைக்கப்பட்டிருந்தது. மூன்று அடுக்குகளாக கட்டப்பட்ட அந்த கலங்கரை விளக்கத்தின் அடிப்பகுதி சதுரமாகவும், நடுப்பகுதி எண்கோண வடிவத்திலும், உச்சிப்பகுதி உருண்டை வடிவத்திலும் இருந்தது. கலங்கரை விளக்கத்தின் அடித்தளம் சிவப்பு வர்ண க்ரானைட் கற்களால் அழகுற உருவாக்கப்பட்டிருந்தது. அது கடல் காற்றாலும், அலையின் சீற்றத்தாலும் சிதைவுறா வண்ணம் கிரேக்கத்தின் நுட்பமான கட்டடக்கலை நேர்த்தியுடன் வடிவமைக்கப் பட்டிருந்தது. அடித்தளத்தின் உயரம் மட்டும் 55 அடி. பெருமளவான மக்கள் அதையே சுற்றுலாத் தலமாக கருதி அன்றாடம் வந்து போனதால் அங்கு சில உணவகங்கள் இயங்கி வந்தன. அங்கிருந்து மேலே செல்ல உள்ளுக்குள்ளேயே சுழல் வடிவப் படிகள் இருந்திருக்கின்றன. 18 மீட்டர் உயரத்தில் இருந்த எண்கோண பகுதியில் மக்கள் நின்று கடலைப் பார்க்கும் அளவு அலங்கார வளைவுகளுடன் கூடிய மாடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேல் பகுதியில் மிகப் பிரம்மாண்டமான கண்ணாடிகள் பதிக்கப்படிருந்தன. பகல் நேரத்தில் சூரியனின் ஒளி பட்டு அவை ஒளிரும். அதன் மூலம் கலங்கள் கடற்கரையை அடையாளம் காண முடியும். இரவில் அங்கு அமைக்கப்பட்ட நெருப்பு உலையில் தீப்பந்தங்கள் கொளுத்தப்பட்டு எல்லாதிசைகளிலும் தெரியும்படி வைக்கப்பட்டன. கடலில் 100 மைல்கள் தூரம் வரை வரும் கப்பல் பயணிகள் அதன் மூலம் கரையை அடையாளம் கண்டனர். ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகள் அசைக்க முடியாத உறுதியுடன் கடல் பயணிகளுக்கு உறுதுணையாய் விளங்கிய அலெக்சாண்ட்ரியா கலங்கரை விளக்கத்தின் உச்சிப்பகுதி மட்டும் கி.பி. 796ல் திடீரென இடிந்து விழுந்தது. யுனெஸ்கோவின் தொல்லியல் துறை அலெக்சாண்ட்ரியாவை பழங்கால நகராக அறிவித்து, அதன் கடல் பகுதியையும், கலங்கரை விளக்கம் இருந்த நிலப்பகுதியையும் சேதமடையாமல் கவனமாகக் கையாளும்படி எகிப்து அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

ஆதாரம் : 'தினத்தந்தி'

No comments:

Post a Comment