செய்திகள் - 23.10.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. பெரும் குற்றங்கள் புரிவோர் தண்டனை பெறாமல் செல்லும்போது, சிறு தவறுகளில் பிடிபடுவோர் சிறைகளில் அடைக்கப்படுவது கவலை தருகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்
2. 20ம் நூற்றாண்டில் தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாக, 21ம் நூற்றாண்டிலும் தொடர்வது, பாலஸ்தீன - இஸ்ரேல் ஒப்புரவு : பேராயர் சுள்ளிக்காட்
3. மனித குலம் சந்தித்துவரும் துயரங்களை நீக்கும் ஒரே வழி, அனைத்து ஆயுதங்களையும் முற்றிலும் தடை செய்வதே - பேராயர் சுள்ளிக்காட்
4. சிரியாவில் கடத்தப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதில் கத்தார் அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை - கர்தினால் Boutros Raï
5. திருப்பீடத்தின் நலப்பணியாளர் அவையைச் சேர்ந்த 80 பேர், இத்திங்கள் முதல், புனித பூமியில் திருப்பயணம்
6. இந்தியாவின் அன்பியங்கள் இணைந்துவரும் தேசிய மாநாடு நவம்பர் மாதம் கோவாவில் நடைபெறும்
7. மலேசியாவில் கிறிஸ்தவர்கள், இறைவனைக் குறிப்பிட, 'அல்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் - அந்நாட்டுப் பிரதமர்
8. நவ.5-ல் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புகிறது இந்தியா
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. பெரும் குற்றங்கள் புரிவோர் தண்டனை பெறாமல் செல்லும்போது, சிறு தவறுகளில் பிடிபடுவோர் சிறைகளில் அடைக்கப்படுவது கவலை தருகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்
அக்.23,2013. சிறையில் இருப்போர் இந்தக் கடினமான காலத்தை வெற்றியுடன் கடந்து வெளியேறுவதற்கு, அன்னை மரியாவும், ஆண்டவரும் உதவ வேண்டுமென்று நான் மன்றாடிவருகிறேன் என்பதை, சிறையில் இருப்போருக்கு என் சார்பில் கூறுங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்தாலியில்
உள்ள அனைத்துச் சிறைகளிலும் மேய்ப்புப்பணி ஆற்றிவரும் அருள் பணியாளர்களை
இப்புதன் காலையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், சிறையில் இருப்போருக்கு தன் தொடர்ந்த செபங்களை அவர்கள் வழியாக அனுப்புவதாகக் கூறினார்.
பெரும் குற்றங்கள் புரியும் பலர் எவ்விதத் தண்டனையும் பெறாமல் செல்லும்போது, சிறு
தவறுகளில் பிடிபடுவோர் சிறைகளில் அடைக்கப்படும் இவ்வுலகப் போக்கைக்
குறித்து திருத்தந்தை இந்தச் சந்திப்பின்போது தன் கவலையை வெளியிட்டார்.
தன்னலம், பேராசை, அநீதி என்ற தீமைகளால் இறைவன் இவ்வுலகில் சிறைப்பட்டுள்ளார் என்று கூறிய திருத்தந்தை, சிறையில் இருப்போருடன் இறைவன் என்றும் துணையாய் இருக்கிறார் என்பதை, அங்கு பணியாற்றும் அருள் பணியாளர்கள், தங்கள் சொற்களாலும், செயல்களாலும் அவர்களுக்கு உணர்த்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சிறையில் பணியாற்றுவது கடினமான ஒரு பணி என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் Buenos Aires பேராயராகப் பணியாற்றியபோது, சிறையில் சந்தித்த ஒரு சிலர் இன்னும் தன்னுடன் தொடர்பு கொண்டுள்ளதாக அருள் பணியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. 20ம் நூற்றாண்டில் தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாக, 21ம் நூற்றாண்டிலும் தொடர்வது, பாலஸ்தீன - இஸ்ரேல் ஒப்புரவு : பேராயர் சுள்ளிக்காட்
அக்.23,2013. இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளிடையிலும் ஒப்புரவு பேச்சுவார்த்தைகள் நிகழ்வதை, திருப்பீடம் என்றும் ஆதரித்து வந்துள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்கள், இச்செவ்வாயன்று நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு அவை கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.
மனித வரலாற்றில், இரத்தத்தில் அதிக அளவு தோய்ந்ததென்று கருதப்படும் 20ம் நூற்றாண்டில் தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாக, 21ம் நூற்றாண்டிலும் தொடர்வது, பாலஸ்தீன - இஸ்ரேல் ஒப்புரவு என்பதை, பேராயர் சுள்ளிக்காட் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.
கிறிஸ்தவ மறையின் தொட்டில் என்று கருதப்படும் மத்தியக் கிழக்குப் பகுதியில் நிரந்தரமான அமைதியை உறுதி செய்வதற்கு, இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகளில் அமைதி உறுதி செய்யப்படவேண்டுமென்று பேராயர் சுள்ளிக்காட் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
சிரியாவில் அமைதி நிலவ அனைத்துலக கிறிஸ்தவர்களையும், செபத்திலும், உண்ணா நோன்பிலும் ஈடுபட செப்டம்பர் முதல் தேதி, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பில், வன்முறை வழியாக ஒருபோதும் இவ்வுலகில் அமைதியைக் கொணரமுடியாது என்று கூறியதை, பேராயர் சுள்ளிக்காட் அவர்கள், சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. மனித குலம் சந்தித்துவரும் துயரங்களை நீக்கும் ஒரே வழி, அனைத்து ஆயுதங்களையும் முற்றிலும் தடை செய்வதே - பேராயர் சுள்ளிக்காட்
அக்.23,2013. அணு ஆயுதங்களால் மனித குலம் சந்தித்துள்ள பெருமளவு துயரங்களை நீக்கும் ஒரே வழி, அனைத்து ஆயுதங்களையும் முற்றிலும் தடை செய்வதே என்று திருப்பீட உயர் அதிகாரியான பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்கள் கூறினார்.
ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சுள்ளிக்காட் அவர்கள், நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. அவையின் 68வது அமர்வில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
சிரியாவில் வேதிய ஆயுதங்கள் தொடர்பாக ஆய்வுப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. அதிகாரிகள், எவ்வகை ஆயுதங்களானாலும், அவை அனைத்தையும் தடைசெய்ய உலக அரசுகள் முன்வரவேண்டும் என்று விடுத்துள்ள அழைப்பை, பேராயர் சுள்ளிக்காட் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
வேதிய ஆயுதங்கள் பற்றி வலிமையாகக் குரல் எழுப்பும் பல உலக அரசுகள், அணு ஆயுதங்கள் பற்றி அமைதி காப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு முரண்பாடு என்பதையும் பேராயர் தன் உரையில் வலியுறுத்தினார்.
ஆயுதங்களுக்கும், இராணுவத்திற்கும் ஒவ்வோர் அரசும் செலவிடும் மிக அதிகத் தொகையில், மிகக் குறைந்த அளவு தொகையினை மக்கள் முன்னேற்றத்திற்குச் செலவழித்தால், ஆயுதங்களே இவ்வுலகில் தேவையில்லாமல் போகும் என்ற கருத்தையும் பேராயர் சுள்ளிக்காட் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. சிரியாவில் கடத்தப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதில் கத்தார் அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை - கர்தினால் Boutros Raï
அக்.23,2013. கத்தார் அரசின் முயற்சிகளால், சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரு ஆயர்களும், மூன்று அருள் பணியாளர்களும் விடுவிக்கப்படுவர் என்று தான் நம்புவதாக, மாரனைட் வழிபாட்டு முறை, முதுபெரும் தந்தை, கர்தினால் Béchara Boutros Raï அவர்கள் கூறியுள்ளார்.
கத்தார் நாட்டின் அரசுத் தலைவராக இவ்வாண்டு பொறுப்பேற்ற Sheikh Tamim bin Hamad al-Thani அவர்கள் விடுத்த அழைப்பின் பேரில், அந்நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் Boutros Raï அவர்கள், கடத்தப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதில் கத்தார் அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து இவ்வாண்டு ஏப்ரல் 22ம் தேதியன்று, சிரிய ஆர்த்தடாக்ஸ் ஆயர் Youhanna Ibrahim அவர்களும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆயர் Boulos Yazigi அவர்களும் கடத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், இவ்வாண்டு ஜூலை 29ம் தேதியன்று, இயேசுசபை அருள் பணியாளர் Paolo dall'Oglio அவர்களும், அதற்கு முன்னதாக, இரு வேறு அருள் பணியாளர்களும் கடத்தப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்டுள்ள இந்த ஐந்து பேரைக் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஆதாரம் : AsiaNews
5. திருப்பீடத்தின் நலப்பணியாளர் அவையைச் சேர்ந்த 80 பேர், இத்திங்கள் முதல், புனித பூமியில் திருப்பயணம்
அக்.23,2013. திருப்பீடத்தின் நலப்பணியாளர் அவையைச் சேர்ந்த 80 பேர், இத்திங்கள் முதல், புனித பூமியில் திருப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கார்மேல் மலை, மலைப்பொழிவு நிகழ்ந்த குன்று, கப்பர்நாகும், நாசரேத் ஆகிய இடங்களைத் தரிசித்து வந்துள்ள இக்குழுவினருடன், அக்டோபர் 25, வருகிற வெள்ளிக்கிழமையன்று, இத்திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Zygmunt Zimowski அவர்கள் இணைத்து திருப்பயணம் மேற்கொள்கிறார்.
2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அகில உலக நோயுற்றோர் நாள், நாசரேத்தில் நிகழவிருப்பதையொட்டி இத்திருப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பீட நலப்பணியாளர் அவையின் இத்திருப்பயணம், அக்டோபர் 27, வருகிற ஞாயிறன்று நிறைவு பெறுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. இந்தியாவின் அன்பியங்கள் இணைந்துவரும் தேசிய மாநாடு நவம்பர் மாதம் கோவாவில் நடைபெறும்
அக்.23,2013. இந்தியாவில், கத்தோலிக்கத் திருஅவையின் ஓர் அங்கமாக இயங்கிவரும் அன்பியங்கள் அனைத்தும் இணைந்துவரும் தேசிய மாநாடு ஒன்று, நவம்பர் மாதம் 19 முதல், 21ம் தேதி முடிய கோவாவின் Bom Jesus பசிலிக்கா வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும், இன்னும் உலகின் ஒரு சில நாடுகளிலிருந்தும் வருகை தரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, ஏறத்தாழ 8000ஆக இருக்கும் என்று, இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் அருள் பணியாளர், Anthony Fernandes அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
நவம்பர் 19, செவ்வாயன்று, மாநாட்டின் துவக்கத் திருப்பலியை, இந்தியாவுக்கான திருப்பீடத் தூதர், பேராயர் Salvatore Pennacchio அவர்கள் நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 21, வியாழனன்று நடைபெறும் நிறைவுத் திருப்பலியை, இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Oswald Gracias அவர்கள் தலைமையேற்று நடத்துவார் என்றும், அத்தருணத்தில், நம்பிக்கை ஆண்டின் நிறைவு விழா கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : TimesofIndia
7. மலேசியாவில் கிறிஸ்தவர்கள், இறைவனைக் குறிப்பிட, 'அல்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் - அந்நாட்டுப் பிரதமர்
அக்.23,2013. மலேசியாவில் Borneo பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள், இறைவனைக் குறிப்பிட, 'அல்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று அந்நாட்டுப் பிரதமர், Najib Razak அவர்கள் கூறியுள்ளார்.
மலேசியாவின் Sabah மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் Razak அவர்கள், 'அல்லா' என்ற சொல்லை பயன்படுத்துவதை, ஓர் அரசியல் பிரச்சனையாக்குவது, நெருப்புடன் விளையாடுவதைப் போன்ற ஒரு நிலை என்று எச்சரித்துள்ளார்.
'அல்லா' என்ற பெயரை, கிறிஸ்தவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சரியான, உண்மையான விவரங்களின் அடிப்படையில் தங்கள் தீர்ப்பை வழங்கவில்லை என்று கோலாலம்பூர் பேராயர் மர்பி பாக்கியம் அவர்கள், ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஒரே இறைவன்' என்ற கருத்தைக் கூறுவதற்கு, மலேசிய மொழியில் 'அல்லா' என்ற ஒரே வார்த்தைதான் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியப் பேராயர் பாக்கியம் அவர்கள், இச்சொல்லைப் பயன்படுத்துவதால், கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் வணங்கும் இறைவனைப் பின்பற்றுகின்றனர் என்று கூறுவது தவறு என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆதாரம் : Fides
8. நவ.5-ல் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புகிறது இந்தியா
அக்.23,2013. செவ்வாய் கோளத்திற்கு நவம்பர் 5-ம் தேதி 'மங்கள்யான்' விண்கலம் அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் இச்செவ்வாயன்று தெரிவித்தார்.
சென்னை
அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து வரும்
நவம்பர் 5-ம் தேதி மதியம் 2.36 மணியளவில் விண்கலத்தை ஏவ முடிவு
செய்யப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 இராக்கெட் சுமந்து
செல்லும்.
1,350 கிலோ எடையுள்ள இந்த விண்கலத்தில் அறிவியல் ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் செவ்வாயின் சுற்றுச்சூழல், கனிமவளம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படும்.
பூமியிலிருந்து
ஏவப்பட்ட பின் 10 மாதங்கள் விண்வெளியில் பயணம் செய்து 2014 செப்டம்பர்
மாதம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை மங்கள்யான் விண்கலம் அடையும் என்று
அச்செய்திக் குறிப்பில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த விண்கலம் செவ்வாய் கோளத்தைச் சுற்றி வந்து, அங்கு
மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளனவா என்பது குறித்து
ஆராயும். செவ்வாய் கோளத்தின் பல்வேறு பகுதிகளை படம் எடுத்து இஸ்ரோவுக்கு
அனுப்பிவைக்கும்.
உயிர்கள் உருவாவதற்கு ஆதாரமாக உள்ள மீத்தேன், செவ்வாய்
கிரகத்தில் இருக்கிறதா என்பதை ஆராய்வதே இத்திட்டத்தின் முக்கிய
நோக்கமாகும். இந்த மங்கள்யான் திட்டத்துக்கு ரூ.450 கோடி
செலவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மங்கள்யான் விண்கலத்தை ஏவுவது குறித்து அக்டோபர் 19-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment