செய்திகள் - 24.10.13
------------------------------ ----------------------------- ------------------------------ ------------
1. மலர் மேல் நீர்த்துளி போல வாழ்வது உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல - திருத்தந்தை
2. இனம், மதம், மொழி, கலாச்சாரம் என்ற அனைத்து அம்சங்களிலும் நிலவும் சகிப்பற்ற தன்மை முற்றிலும் களையப்பட வேண்டும் - திருத்தந்தை
3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலிய அரசுத் தலைவரை, அவரது அரண்மனைக்குச் சென்று சந்திப்பார்
4. 'சிரியாவில் வாழும் குடும்பங்களுக்கு, உலகில் வாழும் குடும்பங்கள் அணைத்தும்' என்ற கருத்தில், சிரியா நாட்டு மக்களுக்கு நிதி திரட்டும் திட்டம்
5. சிரியாவுக்கு கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகளின் நிதியுதவி
6. உயிரைக் காப்பவர்கள் இன்னும் பலர் இவ்வுலகிற்குத் தேவை - மும்பை துணை ஆயர் பெர்னாண்டஸ்
7. ஐக்கிய நாடுகள் தினத்திற்கான ஐ.நா. பொதுச்செயலரின் செய்தி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. மலர் மேல் நீர்த்துளி போல வாழ்வது உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல - திருத்தந்தை
அக்.24,2013.
ரோஜா மலர் மேல் தெளிக்கப்பட்ட நீர்த்துளி போல அமையும் வாழ்வு உண்மையான
கிறிஸ்தவ வாழ்வு அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலைத் திருப்பலியில் கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தில், திருத்தந்தை ஆற்றிய திருப்பலியில், திருத்தூதர்
பவுல் அடியார் உரோமையருக்கு எழுதியத் திருமுகத்தின் 6ம் பிரிவிலிருந்து
எடுக்கப்பட்ட வாசகத்தை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.
கிறிஸ்துவை அறிவதற்கு முன்னும், அவரை அறிந்த பின்னும் நம்மிடையே உருவாக வேண்டிய மாற்றங்கள் தெளிவான, திட்டவட்டமான மாற்றங்களாக அமையவேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
நான் கிறிஸ்தவர் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டு, கிறிஸ்துவை அறியாதவர்போல வாழ்வது, மலர்மேல் தெளிக்கப்பட்டு, பட்டும் படாமல் இருக்கும் நீர்த்துளி போன்ற வாழ்க்கை என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
உள்ளார்ந்த மனமாற்றம் ஏதுமின்றி, வெளிப்புறத்தில் கிறிஸ்தவம் என்ற சிறிதளவு வண்ணத்தையும், மறைக்கல்வி என்ற சிறிதளவு வண்ணத்தையும் பூசிக்கொண்டு வாழ்வது, “ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்” (பிலிப். 3:8) என்று பவுல் அடியார் கூறுவதற்கு முற்றிலும் முரணான ஒரு வழி என்பதையும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
தீர்மானமாக, திட்டவட்டமாக, கிறிஸ்தவ வாழ்வில் ஈடுபட நமக்கு விருப்பமா என்பதே, இன்று
நம்முன் வைக்கப்பட்டுள்ள முக்கியமான ஒரு சவால் என்ற எண்ணத்துடன்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. இனம், மதம், மொழி, கலாச்சாரம் என்ற அனைத்து அம்சங்களிலும் நிலவும் சகிப்பற்ற தன்மை முற்றிலும் களையப்பட வேண்டும் - திருத்தந்தை
அக்.24,2013. சிறுபான்மையினர் என்ற ஒரே காரணத்திற்காக உலகின் எப்பகுதியிலும் ஒருவர் துன்புறுத்தப்பட்டால், அப்பகுதியில் வாழும் முழு சமுதாயமும் துன்புறும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மனித உரிமைகளைப் பேணும் நோக்கத்தில், செயலாற்றிவரும் Simon Wiesenthal மையம்
என்ற ஒரு பன்னாட்டு யூத நிறுவனத்தின் உறுப்பினர்களை இவ்வியாழன் காலையில்
திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தச்
சந்திப்பை பல மாதங்களுக்கு முன்னரே உறுதி செய்திருந்த முன்னாள்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களையும் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்.
யூதர்களுக்கு
எதிராக வரலாற்றில் இழைக்கப்பட்ட அனைத்து கொடுமைகளையும் கண்டனம் செய்து
அண்மைய நாட்களில் தான் கருத்துக்கள் வெளியிட்டுள்ளதை நினைவுகூர்ந்த
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இனம், மதம், மொழி, கலாச்சாரம் என்ற அனைத்து அம்சங்களிலும் நிலவும் சகிப்பற்ற தன்மை முற்றிலும் களையப்பட வேண்டுமென்ற அழைப்பையும் விடுத்தார்.
தங்களைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும் அனைத்து மனிதர்கள் மீதும் மதிப்பை வளர்ப்பதற்கும், வேறுபாடுகளைப்
புரிந்துகொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்வதற்கும் நமது அடுத்தத்
தலைமுறைக்கு சரியான வழிகளில் கல்வி புகட்டப் படவேண்டுமென்று திருத்தந்தை
இச்சந்திப்பில் தன் ஆவலை வெளியிட்டார்.
இரண்டாம் உலகப் போரின்போது, நாத்சி வதை முகாம்களில் நடைபெற்ற யூதத் தகனக் கொடுமையிலிருந்து தப்பித்த Simon Wiesenthal என்ற யூதரால் நிறுவப்பட்ட இம்மையம், இன்று உலகின் பல நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலிய அரசுத் தலைவரை, அவரது அரண்மனைக்குச் சென்று சந்திப்பார்
அக்.24,2013. நவம்பர் 14, வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலிய அரசுத் தலைவர் மாளிகையான Quirinal அரண்மனைக்குச் சென்று அரசுத் தலைவரைச் சந்திப்பார் என்று திருப்பீட பத்திரிகை மையத்தின் இயக்குனரான இயேசு சபை அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் செய்தியாளர்களிடம் இப்புதனன்று அறிவித்தார்.
இத்தாலிய அரசுத் தலைவர் Giorgio Napolitano அவர்களுக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் இடையே நிகழும் மூன்றாவது சந்திப்பு இது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 19ம் தேதியன்று, திருஅவையின் தலைமைப் பொறுப்பேற்ற திருப்பலியில் இத்தாலிய அரசுத் தலைவர் Napolitano அவர்கள் கலந்துகொண்டு, பின்னர் திருத்தந்தையை ஏனைய அரசுத் தலைவர்களுடன் தனிப்பட்ட வகையில் சந்தித்தார்.
மேலும், கடந்த ஜூன் மாதம் 8ம் தேதியன்று அவர் மீண்டும் வத்திக்கானுக்கு வருகை தந்து, திருத்தந்தை அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.
இத்தாலிய அரசுத் தலைவரின் அரண்மனைக்கு, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1939ம்
ஆண்டு டிசம்பர் 28ம் தேதி முதன்முறையாகச் சென்றார். அவருக்குப் பின்
நான்கு திருத்தந்தையர் இவ்வரண்மனைக்குச் சென்று இத்தாலிய அரசுத்
தலைவர்களைச் சந்தித்துள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Quirinal அரண்மைக்குச் செல்லும் ஆறாவது திருத்தந்தையாக இருப்பார் என்று அருள் பணியாளர் Lombardi அவர்கள் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. 'சிரியாவில் வாழும் குடும்பங்களுக்கு, உலகில் வாழும் குடும்பங்கள் அணைத்தும்' என்ற கருத்தில், சிரியா நாட்டு மக்களுக்கு நிதி திரட்டும் திட்டம்
அக்.24,2013. 'சிரியாவில் வாழும் குடும்பங்களுக்கு, உலகில் வாழும் குடும்பங்கள் அணைத்தும்' என்ற கருத்தில், துன்புறும் சிரியா நாட்டு மக்களுக்கு நிதி திரட்டும் திட்டத்தை, திருப்பீடம் அறிவித்துள்ளது.
வருகிற சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள், நம்பிக்கை ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக, ‘அகில உலக குடும்பத் திருப்பயணம்’ என்ற நிகழ்வை, திருப்பீடத்தின் குடும்பநலப் பணி அவை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நாட்களைச் சிறப்பிக்க வத்திக்கான் வரும் திருப்பயணிகள் வழியாகவும், இணையத்தளம், இன்னும் பிற வழிகளிலும் திரட்டப்படும் நிதி, சிரியாவில் துன்புறும் 5,400 குடும்பங்களுக்கு, உதவித் தொகையாக அனுப்பி வைக்கப்படும் என்று திருப்பீடத்தின் குடும்பநலப் பணி அவையின் தலைவர் பேராயர் Vincenzo Paglia அவர்கள், இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
புனித பேதுரு வளாகத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் கூடிவரும் திருப்பயணிகள், அகில உலகக் கத்தோலிக்கக் குடும்பத்தின் பிரதிநிதிகள் என்று கூறிய பேராயர் Paglia அவர்கள், இக்குடும்பத்தின் ஓர் அங்கமான சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டுவது, பொருத்தமான ஓர் அடையாளம் என்று எடுத்துரைத்தார்.
திருப்பீடத்தின் குடும்பநலப் பணி அவை, இத்தாலியக் காரித்தாஸ், மற்றும் சிரியா நாட்டுக் காரித்தாஸ் ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து இம்முயற்சியை மேற்கொள்கின்றன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. சிரியாவுக்கு கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகளின் நிதியுதவி
அக்.24,2013. அகில உலக கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகள் இணைந்து, 72மில்லியன் டாலர்கள், அதாவது, ஏறத்தாழ 360 கோடி ரூபாயை சிரியாவுக்கு அனுப்பியுள்ளன.
திருத்தந்தையின் பிறரன்பு அவையான 'ஒரே இதயம்' என்று பொருள்படும் ‘Cor Unum’ அவை, இந்த நிதி உதவியை, சிரியாவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
32 கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகளின் இணைந்த பல்வேறு முயற்சிகள், 2011ம் ஆண்டு, சிரியாவில் பிரச்னைகள் துவங்கிய காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ‘Cor Unum’ அவையின் ஒரு செய்திக்குறிப்பு கூறுகிறது.
தன் தலைமைப்பணியை ஏற்ற காலத்திலிருந்து சிரியாவில் நிகழும் வன்முறைகளைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு தருணங்களில் கூறிவருவதுடன், ‘Cor Unum’ அமைப்பினரையும் இதே கருத்துடன் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. உயிரைக் காப்பவர்கள் இன்னும் பலர் இவ்வுலகிற்குத் தேவை - மும்பை துணை ஆயர் பெர்னாண்டஸ்
அக்.24,2013. கழுத்து அறுபட்டு, அனாதையாக விடப்பட்டிருந்த குழந்தையின் உயிரைக் காக்க முயற்சிகள் மேற்கொண்டவர்கள், நமக்கு நம்பிக்கையூட்டும் அடையாளங்களாக உள்ளனர் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
மும்பை மாநகர் கல்யாண் இரயில் நிலையத்தின் தண்டவாளத்திற்கருகே, கழுத்து அறுபட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஒரு பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து, அக்குழந்தையின் உயிரைக் காத்தவர்களைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மும்பை துணை ஆயர், டோமினிக் சாவியோ பெர்னாண்டஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
மும்பை உயர்மறைமாவட்டத்தின் குடும்ப வாழ்வு, மனித உயிர் பாதுகாப்புப் பணிக்குழுவின் தலைவராகப் பணியாற்றும் ஆயர் பெர்னாண்டஸ் அவர்கள், இக்குழந்தையின் உயிரைக் காத்தவர்கள் போல் இன்னும் பலர் இவ்வுலகிற்குத் தேவை என்று எடுத்துரைத்தார்.
Sion மருத்துவமனையில் பணிபுரிவோர், காப்பாற்றப்பட்ட இக்குழந்தையை, 'புதுமைக் குழந்தை' என்று அழைப்பதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஆதாரம் : AsiaNews
7. ஐக்கிய நாடுகள் தினத்திற்கான ஐ.நா. பொதுச்செயலரின் செய்தி
அக்.24,2013. அமைதிக்கும் பொதுநலமுன்னேற்றத்திற்கும் இதுவரை ஆற்றியுள்ள பங்கு குறித்து ஆராயவும், மேலும்
சிறந்த உலகை உருவாக்குவது குறித்து திட்டமிடவும் ஐக்கிய நாடுகள் தினம்
சிறப்பிக்கப்படுகிறது என தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் ஐ.நா.
பொதுச்செயலர் பான் கி மூன்.
இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட ஐ.நா. தினம் குறித்து சிறப்புச் செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலர், சிரியாவில் இடம்பெறும் மோதல்களே இக்காலத்தின் மிகப்பெரும் பாதுகாப்புச் சவாலாக இருப்பதாகவும் தன் கவலையை வெளியிட்டுள்ளார்.
மில்லென்னிய இலக்குகளை அடைவதற்கு குறிக்கப்பட்ட 2015ம் ஆண்டைக் குறித்துப் பேசிய பான் கி மூன் அவர்கள், ஐ.நா.வின் தொடர்முயற்சிகளால் உலகின் வறுமை பாதியளவு குறைந்துள்ளதை மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.
1945ம்
ஆண்டு உலக நாடுகள் இணைந்து வெளியிட்ட ஓர் உறுதிமொழியின் அடிப்படையில்
ஐ.நா. அமைப்பு உருவானது. இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் 1948ம் ஆண்டு
முதல், அக்டோபர் 24ம் தேதி, ஐக்கிய நாடுகள் தினம் என்று சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
ஆதாரம் : UN
No comments:
Post a Comment