செய்திகள் - 19.10.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : கலைகள், திருஅவை விசுவாசத்தின் அழகை வெளிப்படுத்துகின்
2. புனித தாமஸ் மூர் அவர்களின் புனித இடங்களைத் தரிசித்துவரும் இத்தாலிய மக்களவை குழுவினருக்குத் திருத்தந்தை வாழ்த்து
3. மறைசாட்சிகள், இருளான வானில் சுடர்விடும் விண்மீன்கள், கர்தினால் அமாத்தோ
4. உலகில் அனைவருக்கும் முழு மத சுதந்திரம் வழங்கப்படுமாறு கத்தோலிக்கரும் யூதர்களும் அழைப்பு
5. விசுவாசம் மக்களை ஒன்றிணைக்கும் கூறு,Sambalpur ஆயர்
6. உலக அளவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரிப்பு, புதிய ஆய்வு
7. வறுமையை ஒழிக்க நைஜீரியத் திருஅவைக்கு அழைப்பு
8. விசுவாசத்தில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம்
9. சிஸ்டீன் சிற்றாலயத்தில் மாசுக் கட்டுபாட்டு அமைப்புகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : கலைகள், திருஅவை விசுவாசத்தின் அழகை வெளிப்படுத்துகின்றன
அக்.19,2013. வத்திக்கான் அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் எண்ணற்ற கிடைத்தற்கரிய கலைகளையும், பொருள்களையும் பேணிப் பாதுகாத்து வருவதில், அந்த அருங்காட்சிய கலைகளின் காப்பாளர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக, ஆற்றிவரும் சிறப்பான சேவைக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் அருங்காட்சியகத்தில் “கலைகளின் பாதுகாவலர்கள்”(Patrons of the Arts) என்ற அமைப்பினரை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலைகள், திருஅவை விசுவாசத்தின் அழகை வெளிப்படுத்துகின்றன என்று கூறினார்.
விசுவாசத்தின் அழகையும், கடவுளின் படைப்பின் மாபெரும் நற்செய்தியையும், கடவுள் சாயலில் படைக்கப்பட்ட மனிதரின் மாண்பையும், கிறிஸ்துவின்
மரணம் மற்றும் உயிர்ப்பினால் கிடைத்த மீட்பையும் அறிவிக்கவும் ஒவ்வொரு
காலத்திலும் திருஅவை கலைகளைப் பயன்படுத்தி வருகின்றது என்றும் திருத்தந்தை
கூறினார்.
எண்ணற்ற
திருப்பயணிகள் உரோமைக்கு வந்து இச்செய்தியை கலைகளின் வழியாகப் பெறுவதற்கு
இவ்வமைப்பினர் உதவுவதற்குத் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான்
அருங்காட்சியத்திலுள்ள கலைகளின் பாதுகாவலர்கள் என்ற தொண்டு நிறுவனம்
உருவாக்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டைச் சிறப்பிக்கும் விதமாக இவ்வமைப்பினர்
தற்சமயம் உரோமில் உள்ளனர்.
வத்திக்கான் அருங்காட்சியத்தை தினமும் ஏறக்குறைய இருபதாயிரம் பேர் பார்வையிடுகின்றனர்.
வத்திக்கான் அருங்காட்சியத்திலுள்ள கலைகளின் Illinois பாதுகாவலர்கள் என்பது ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். வத்திக்கான் அருங்காட்சியத்திலுள்ள கலைகள் பாதுகாக்கப்பட்டு, பழுதுபார்க்கப்பட்டு அவற்றைப் பார்வையாளர்களுக்கு வழங்குவதற்காக நிதி சேகரித்து வருகிறது. இந்நிறுவனம், 1993ம் ஆண்டில் நிறுவப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடு, கானடா மற்றும் ஐரோப்பாவில் அமைந்திருக்கும் 17 அருங்காட்சியக் கலைப் பாதுகாவலர் அமைப்புக்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. புனித தாமஸ் மூர் அவர்களின் புனித இடங்களைத் தரிசித்துவரும் இத்தாலிய மக்களவை குழுவினருக்குத் திருத்தந்தை வாழ்த்து
அக்.19,2013
புனித தாமஸ் மூர் அவர்களின் புனித இடங்களைத் தரிசித்துவரும் இத்தாலிய
மக்களவையின் ஒரு குழுவினருக்குத் தனது வாழ்த்துச் செய்தியை வழங்கியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
அரசை
ஆள்கிறவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பாதுகாவலராகிய புனித தாமஸ் மூர்
அவர்களின் புனித இடங்களைத் தரிசிப்பதற்கு இவர்கள் எடுத்துள்ள முயற்சியை
வரவேற்பதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை, அரசியல்வாதிகளின் பொதுநலப் பணியில் பிறரன்பு முதன்மை இடம் வகிக்கவேண்டுமென்று இப்புனிதரிடம் செபிக்குமாறும் கேட்டுள்ளார்.
இச்செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் திருப்பீடச் செயலகத்தின் நேரடிப்பொதுச்செயலர் பேராயர் ஆஞ்சலோ பெச்சு அனுப்பியுள்ளார்.
2000மாம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், அரசை ஆள்கிறவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பாதுகாவலராக புனித தாமஸ் மூர் அவர்களை அறிவித்தார்.
இத்தாலிய மக்களவையின் இந்தக் குழு, இஞ்ஞாயிறன்று தங்களது மூன்று நாள் பயணத்தை நிறைவு செய்கின்றது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. மறைசாட்சிகள், இருளான வானில் சுடர்விடும் விண்மீன்கள், கர்தினால் அமாத்தோ
அக்.19,2013. மனித சமுதாயத்தில் அன்பு, புரிந்துணர்வு, ஒருவரையொருவர் மதித்தல் ஆகியவற்றின் பாதைகளை ஒளிர்விப்பதற்கு, மறைசாட்சிகள், மனிதர்களின் தீமைகளின் இருளான வானில் சுடர்விடும் விண்மீன்களாகத் திகழ்கிறார்கள் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் இச்சனிக்கிழமையன்று இறையடியார் Stefano Sandor அவர்களை, முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்திய திருப்பலிக்குப் பின்னர் செய்தி வழங்கிய, புனிதர்நிலைக்கு உயர்த்தும் பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ, மறைசாட்சி Stefano Sandor, ஹங்கேரி நாட்டுக்கு ஒரு கொடையாக இருக்கிறார் என்று கூறினார்.
தங்கள் குருதியைச் சிந்தும் மறைசாட்சி வாழ்வு என்பது கிறிஸ்தவர்களுக்கு விசுவாசம், அன்பு மற்றும் பிறரன்பின் மிக உன்னதச் சான்றாக அமைகின்றது என்றும் கூறிய கர்தினால் அமாத்தோ, அர்ப்பண வாழ்வு என்பது, ஒவ்வொரு நாளும் நற்செய்திக்கும், தங்கள் சபையின் தனிவரத்துக்கும் விசுவாசமாய் இருப்பதாகும் என்று இந்த இளம் முத்திப்பேறுபெற்ற Sandor எடுத்துரைக்கிறார் என்று தெரிவித்தார்.
1914ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி ஹங்கேரியின் Szolnokலஸ் பிறந்த Sandor, 1953ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி கிறிஸ்தவ விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்டார். இவர் சலேசிய சபையைச் சேர்ந்த பொதுநிலை விசுவாசியாவார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. உலகில் அனைவருக்கும் முழு மத சுதந்திரம் வழங்கப்படுமாறு கத்தோலிக்கரும் யூதர்களும் அழைப்பு
அக்.19,2013. உலகில் அனைவருக்கும் முழு மத சுதந்திரம், அதன் முழுத்தன்மையோடு வழங்கப்பட வேண்டும் என்று உலகின் அனைத்து அரசுகள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமயத் தலைவர்களைக் கேட்டுள்ளது அனைத்துலக கத்தோலிக்க-யூதமத உரையாடல் பணிக்குழு.
கத்தோலிக்கருக்கும்
யூதருக்கும் இடையே உரையாடலையும் புரிந்துணர்வையும் ஊக்குவிக்கும்
நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அனைத்துலக கத்தோலிக்க-யூதமத உரையாடல் பணிக்குழு, மத்ரித்தில் நடத்திய 22வது கூட்டத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில், உலகில் அதிகரித்துவரும் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரான அடக்குமுறைகள், பாவம் என்று சொல்லி அவற்றை வன்மையாகக் கண்டித்துள்ளது.
கத்தோலிக்க
அருள்பணியாளர்களுக்கும் யூதமத ராபிகளுக்கும் வழங்கப்படும் பயிற்சியில்
யூதமதம் குறித்த வத்திக்கான் ஏடுகள் சேர்க்கப்பட வேண்டுமெனப் பரிந்துரை
செய்துள்ள அக்குழு, இவ்விரு மதத்தவர்க்கிடையே புரிந்துகொள்ளுதல் மேலும் வளரவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
திருப்பீட யூதமத உறவு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch, அனைத்துலக யூதமத பல்சமய ஆலோசனைக்குழுவின் தலைவர் Betty Ehrenberg ஆகிய இருவர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. விசுவாசம் மக்களை ஒன்றிணைக்கும் கூறு,Sambalpur ஆயர்
அக்.19,2013. விசுவாசம் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு கூறு, ஆயினும் இது பிற மதத்தவருடன் உரையாடல் வழியாகப் பகிரப்படும்போது ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருகிறது என்று ஒடிசாவின் Sambalpur ஆயர் Sual Niranjan Singh கூறியுள்ளார்.
இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக மறைபரப்பு ஞாயிறையொட்டி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட ஆயர் Niranjan Singh, விசுவாசம் அன்பினால் உறுதிப்படுத்தப்படுகின்றது, அது பிறரோடு பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளும், அவரது எடுத்துக்காட்டான வாழ்வும் தனது ஆயர் பணிக்கு மிகவும் உதவுகின்றன என்றுரைத்துள்ள Sambalpur ஆயர், விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது அது உலகத்தை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோள், உலக மறைபரப்பு ஞாயிறைச் சிறப்பிக்க ஊக்கமளிக்கின்றது என்றும் கூறினார்.
2011ம் ஆண்டின் அறிக்கையின்படி இவ்வுலகில் 1,213,591,000 கத்தோலிக்கர் உள்ளனர்
ஆதாரம் : AsiaNews
6. உலக அளவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரிப்பு, புதிய ஆய்வு
அக்.19,2013.
உலக அளவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கடந்த இரண்டரை
ஆண்டுகளில் அதிகமாகியிருக்கின்றன என்று மத சுதந்திரம் குறித்த புதிய ஆய்வு
ஒன்று கூறுகிறது.
Church in Need
என்ற கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்தின் பிரித்தானிய கிளை முப்பது
நாடுகளில் மத சுதந்திரம் குறித்து ஆய்வு நடத்தி இவ்வாரத்தில் வெளியிட்டுள்ள
192 பக்க அறிக்கையில், கிறிஸ்தவர்கள்
சிறுபான்மையினராக இருக்கும் சில நாடுகளில் தேசியவாத சமயக் குழுக்களால்
மிகவும் துன்புறுத்தப்படுகின்றனர் என்று கூறுகிறது.
மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவிலுள்ள கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் துன்புறுவது தவிர, கம்யூனிச, மார்க்சீய
அல்லது முன்னாள் கம்யூனிச நாடுகளிலும் கிறிஸ்தவர்கள் கடும்
அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
இந்தியா, இலங்கை, மியான்மார் ஆகிய நாடுகளிலும் கிறிஸ்தவர்கள், பெரும்பான்மை இந்து அல்லது புத்தமதத்தினரால் அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.
ஆதாரம் : CNS
7. வறுமையை ஒழிக்க நைஜீரியத் திருஅவைக்கு அழைப்பு
அக்.19,2013. அனைத்து மக்களுக்கும், குறிப்பாக இளையோர்க்கு வேலைவாய்ப்பை வழங்கும் பொருளாதார வளர்ச்சியே, ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்று நைஜீரிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
நைஜீரிய அரசு சமர்ப்பித்துள்ள பொருளாதரம் குறித்த புள்ளி விபர அறிக்கையில், தேசிய வளமை அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், பெருமளவான நைஜீரியர்களின் வாழ்க்கைத் தரங்கள் முன்னேறியுள்ளன என்று, இதை வைத்து பொருள்கொள்ள முடியாது என்று அந்நாட்டு ஆயர்களின் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்பணி Evaristus Bassey கூறினார்.
நைஜீரியாவின் பொருளாதார அறிக்கை குறித்து அபுஜா நகரின் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அருள்பணி Bassey, வேலைவாய்ப்புக்களை
ஊக்கப்படுத்தும் கொள்கைகளை அரசு அதிகாரிகள் பின்பற்றினால் திருஅவையும்
தனது பங்குக்குச் செய்யவேண்டியதைச் செய்யும் என்றும் கூறினார்.
ஒவ்வொரு
வாரமும் பல ஆலயங்களில் எடுக்கப்படும் உண்டியலில் ஒரு பகுதி அந்நாட்டில்
வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படுமாறும் அருள்பணி Bassey பரிந்துரைத்தார்.
ஆதாரம் : Fides
8. விசுவாசத்தில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம்
அக்.19,2013. விளையாட்டில் வெளிப்படும் கல்வி, கலாச்சார மற்றும் ஆன்மீக விழுமியங்களை ஊக்குவிக்கும் விதமாக, இஞ்ஞாயிறன்று வத்திக்கானில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் விளையாட்டை நடத்தவுள்ளது திருப்பீட கலாச்சார அவை.
கத்தோலிக்கத் திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நம்பிக்கை ஆண்டின் ஒரு நிகழ்வாக நடத்தப்படவுள்ள இந்த விளையாட்டில் ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் கலந்து கொள்வார்கள்.
காலை 8.30 மணிக்குத் தொடங்கும் இந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், வத்திக்கான் பசிலிக்காவுக்கு எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள via della Conciliazione என்ற பெரிய சாலையில் தொடங்கி வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் முடிவடையும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செபத்தோடு நிறைவடையும் இந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தய விளையாட்டு நிகழ்வில், உலகில் பல்வேறு விளையாட்டுக்களில் தேர்ந்தவர்களின் பகிர்வுகளும் இடம்பெறும்.
மேலும், திருப்பீட கலாச்சார அவை, ஆங்கிலம் பேசும் நாடுகளிலிருந்து வத்திக்கானுக்கென கிரிக்கெட் குழு ஒன்றை உருவாக்கவும் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
9. சிஸ்டீன் சிற்றாலயத்தில் மாசுக் கட்டுபாட்டு அமைப்புகள்
அக்.19,2013.
வத்திக்கான் அருங்காட்சியத்திலுள்ள சிஸ்டீன் சிற்றாலயத்தில்
அமைக்கப்பட்டுள்ள புதிய குளிர்சாதன மற்றும் காற்று சுத்திகரிப்பு
அமைப்புகள், காற்று
மாசுக்கேடு அளவை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கவில்லையெனில்
அவ்வாலயத்தைத் தரிசிப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த
வேண்டியிருக்கும் என்று வத்திக்கான் அருங்காட்சியத் தலைவர்
அறிவித்துள்ளார்.
வத்திக்கான் அருங்காட்சியத் தலைவர் Antonio Paolucci இவ்வாரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது இதனை அறிவித்தார்.
2014ம் ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும் இந்தப் புதிய மாசுக் கட்டுபாட்டு அமைப்புகள், சிஸ்டீன் சிற்றாலயத்திலுள்ள புகழ்பெற்ற ஓவியங்களை ஏற்கனவே மங்கச்செய்துவரும் தூசி, ஈரப்பசை, கார்பன்டை ஆக்ஸைடு ஆகியவற்றைக் அகற்றும் என்பதில் நம்பிக்கை இருப்பதாக Paolucci தெரிவித்தார்.
இந்தப்
புதிய மாசுக் கட்டுபாட்டு அமைப்புகள் நன்றாக வேலை செய்யவில்லையெனில்
பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுபடுத்தும் வேதனையான நடவடிக்கையை
எடுக்கவேண்டியிருக்கும் என்றும் Paolucci கூறினார்.
2013ம் ஆண்டில் ஏறக்குறைய 55 இலட்சம் பேர் வத்திக்கான் அருங்காட்சியத்தைப் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment