செய்திகள் - 18.10.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ்:தூய ஆவி, ஆசியக் கண்டத்தில் நீதியையும் அமைதியையும் கொண்டுவருவாராக
2. திருத்தந்தை பிரான்சிஸ், காமரூன் அரசுத்தலைவர் சந்திப்பு
3. வயதான அருள்பணியாளர்களையும், அருள்சகோதரிகளையும் சந்தியுங்கள், திருத்தந்தை பிரான்சிஸ்
4. ICEL அனைத்துலகப் பணிக்குழுவுக்குத் திருத்தந்தை பாராட்டு
5. வத்திக்கான் தொலைக்காட்சி மையம் திருஅவையை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்
6. தீமையின் முன்னர் நாம் பின்வாங்கக் கூடாது, திருத்தந்தை பிரான்சிஸ்
7. உலகில் மூன்று கோடிப் பேர் அடிமை வாழ்க்கை, புதிய அறிக்கை
8. வெளிமண்டலத்தில் காற்று மாசடைவது, சுற்றுச்சூழல் தொடர்பான புற்றுநோய் இறப்புக்களுக்கு முக்கிய காரணம், ஐ.நா.வல்லுனர்கள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ்:தூய ஆவி, ஆசியக் கண்டத்தில் நீதியையும் அமைதியையும் கொண்டுவருவாராக
அக்.18,2013. எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் மாபெரும் ஆசியக் கண்டத்திலும், பிலிப்பின்ஸ்
நாட்டிலும் தூய ஆவி படைப்பைப் புதுப்பித்து நீதியையும் அமைதியையும்
கொண்டுவருவாராக என்று வாழ்த்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில், புதியவழியில் நற்செய்தி அறிவிப்புப் பணியை மையப்படுத்தி நடைபெற்ற மூன்று நாள் ஆசியக் கருத்தரங்கில் ஒலி-ஒளிச்(காணொளி) செய்தியில் இவ்வெள்ளியன்று பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
பிலிப்பின்சிலிருந்தும்
ஆசியாவின் பிற நாடுகளிலிருந்தும் கலந்து கொண்ட ஏறக்குறைய ஆறாயிரம்
பிரதிநிதிகளிடம் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகின் அரசியல், வணிகம், கலைகள், அறிவியல், தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் இயேசு அறியப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
இக்கருத்தரங்கு
மூலம் இப்பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் இயேசுவின் அன்புப் பிரசன்னத்தை
மீண்டும் அனுபவித்திருப்பார்கள் என்று தான் நம்புவதாக உரைத்த திருத்தந்தை, இப்பிரதிநிதிகள் திருஅவையை இன்னும் அதிகமாக அன்புகூர்ந்து, மனத்தாழ்மையோடும் மகிழ்வோடும் அனைத்து மக்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
ஏழைகள், நோயாளிகள், கைவிடப்பட்டவர்கள், இளையோர் மற்றும் குடும்பங்களுக்கு இறைவனின் கருணையை எடுத்துச் செல்வதில் களைப்படைய வேண்டாம் எனவும் வலியுறுத்திய திருத்தந்தை, தான் அனைவருக்காகவும் செபிப்பதாகவும் உறுதி கூறினார்.
இறுதியில், பிலிப்பின்ஸ் நாட்டின் தகாலோ மொழியில், ஆசியாவும், பிலிப்பின்ஸும் வாழ்க என வாழ்த்தினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று ஆங்கிலத்தில் வழங்கிய இந்த ஒலி-ஒளிச்(காணொளி) செய்தி, அவர் திருத்தந்தையாகத் தலைமைப்பணியை ஏற்றபின் ஆங்கிலத்தில் வழங்கியுள்ள முதல் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புதனன்று
மனிலாவில் தொடங்கிய புதியவழியில் நற்செய்தி அறிவிப்புப் பணி குறித்த இந்த
முதல் ஆசியக் கருத்தரங்கு இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ், காமரூன் அரசுத்தலைவர் சந்திப்பு
அக்.18,2013. காமரூன் நாட்டு அரசுத்தலைவர் Paul Biya அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து ஏறக்குறைய 15 நிமிடங்கள் உரையாடினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி அவர்களையும் சந்தித்தார் காமரூன் அரசுத்தலைவர் Biya.
ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதி தொடர்புடைய பல்வேறு சவால்கள் குறித்தும், அப்பகுதியில்
அமைதியும் பாதுகாப்பும் நிலவ காமரூன் நாடு தன்னை அர்ப்பணிக்க
வேண்டுமென்பது குறித்தும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
காமரூன் நாட்டுக்கும், தலத்திருஅவைக்கும் இடையே நிலவும் உறவு திருப்தியாக இருப்பதாகவும்,
அந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவையின் சட்டரீதியான நிலைமை குறித்த
ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் இச்சந்திப்புக்களில்
பேசப்பட்டதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் மேலும் அறிவித்தது.
காமரூன் அரசுத்தலைவர் Paul Biya அவர்கள், 13 பேர் கொண்ட குழுவுடன் திருப்பீடத்துக்குச் சென்றிருந்தார்.
காமரூன், ஆப்ரிக்காவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள அமைதியான நாடாகும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. வயதான அருள்பணியாளர்களையும், அருள்சகோதரிகளையும் சந்தியுங்கள், திருத்தந்தை பிரான்சிஸ்
அக்.18,2013. இறைவனுக்குத் தங்களை அர்ப்பணித்துள்ள வயதான அருள்பணியாளர்களையும், அருள்சகோதரிகளையும் சந்தியுங்கள், இது உண்மையான திருப்பயணமாக அமையும் என்று, இவ்வெள்ளி காலை, புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்தியத் திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித பவுல் முதன்முறை வழக்காடியபோது எவரும் அவர்பக்கம் இருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும், அவர் திமொத்தேயுவுக்கு எழுதிய 2வது திருமடல், 4ம் பிரிவிலுள்ள பகுதியை(2திமொ.4:10-17) மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூப்பினால் தனிமையை அனுபவிக்கும் நல்ல அருள்பணியாளர்களையும், அருள்சகோதரிகளையும் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இயேசுவின் திருத்தூதர்கள் இளமையாகவும், உடல்வலிமையோடும் இருந்தனர், அவர்களின் போதனையால் பேய்கள் ஓடின என்றுரைத்த திருத்தந்தை, புனித பவுலும் இளமையில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார், அவரும் தனது வயதான காலத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவில்லை என்றும் கூறினார்.
திருத்தூதரின் முதுமை காலம் பற்றிச் சிந்திக்கும்போது, மோசோ, திருமுழுக்கு யோவான், பவுல் ஆகிய மூவரும் நினைவுக்கு வருகின்றனர் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் மக்களை, எதிரிகளிடமிருந்து துணிச்சலுடன் அழைத்துவந்த மோசேயால் வாக்குறுதி செய்யப்பட்ட நாட்டுக்குள் நுழைய முடியவில்லை, அதேபோல் திருமுழுக்கு யோவானும் கடைசி காலத்தில் வேதனையை அனுபவித்தார் என்று உரைத்தார்.
எல்லாரும் கைவிட்டனர் என்றுரைத்த புனித பவுல், ஆண்டவர் தன் பக்கம் நின்று தனக்கு வலுவூட்டினார், அதன்மூலம் நற்செய்தியை தொடர்ந்து அறிவிக்க தன்னால் முடிந்தது என்றும் கூறியதாகத் தெரிவித்தார் திருத்தந்தை.
திருத்தூதர்களின்
இறுதிக்காலம் பற்றி நினைக்கும்போது வயதான குருக்களும் கன்னியரும்
வாழ்கின்ற அப்போஸ்தலிக்க மற்றும் புனித இடங்கள் நினைவுக்கு வருகின்றன
எனவும், இறைவனின் வருகைக்காகக் காத்திருக்கும் இவர்களை நாம் மறக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இவ்விடங்கள் பற்றி ஆழமாகச் சிந்தித்தால் இவை அழகான இடங்கள் எனவும், கிறிஸ்தவர்கள் இவ்விடங்களுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள வேண்டுமெனவும் தனது மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. ICEL அனைத்துலகப் பணிக்குழுவுக்குத் திருத்தந்தை பாராட்டு
அக்.18,2013. ICEL என்ற அனைத்துலக ஆங்கிலத் திருவழிபாட்டுப் பணிக்குழுவின் கடந்த ஐம்பது ஆண்டு உழைப்பின் பலன்கள், எண்ணற்ற கத்தோலிக்கரின் செபத்துக்கு மட்டுமல்லாமல், விசுவாசத்தைப் புரிந்து கொள்வதற்கும் உதவியுள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறினார்.
ICEL
அனைத்துலகப் பணிக்குழு உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டைக்
கொண்டாடுவதற்காக உரோமையில் கூட்டம் நடத்திய இக்குழுவின் 25 பிரதிநிதிகளை
இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, பொதுவான குருத்துவத்தைச் செயல்படுத்தவும், திருஅவையின் மறைபரப்புப் பண்பை விரிவாக்கவும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கப் போதனைகளின் அனைத்துத் தலைப்புக்களுக்கும் இப்பணிக்குழு உதவியுள்ளது எனவும் தெரிவித்தார்.
திருவழிபாட்டில்
ஏற்பட்ட மறுமலர்ச்சியை வைத்தே இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கப் போதனைகள்
பலரைச் சென்றடைந்துள்ளன என்று முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான்
பால் அவர்கள் கூறியதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், இப்பணிக்குழுவின் உழைப்பை ஊக்கப்படுத்தினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் திருவழிபாடு குறித்த கொள்கைத்திரட்டு விடுத்த அழைப்பின்படி, திருவழிபாட்டில் மாபெரும் புதுப்பித்தலை அமல்படுத்துவதற்கு உதவும் நோக்கத்தில் ICEL அனைத்துலகப் பணிக்குழு உருவாக்கப்பட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. வத்திக்கான் தொலைக்காட்சி மையம் திருஅவையை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்
அக்.18,2013. CTV என்ற வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் பணி, நற்செய்திக்கும் திருஅவைக்குமான சேவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட, வத்திக்கான் தொலைக்காட்சி மையம் நிறுவப்பட்டதன் முப்பதாவது ஆண்டு நிறைவுவிழாவுக்கென செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த பத்தாண்டுகளில் தொழில்நுட்பம் மிக வேகமாகப் பயணம் செய்துள்ளது என்றும், இதற்கேற்ப உலகளாவிய சமூகத் தொடர்பில் நற்செய்தியின் கூறுகளும் அறிவிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
உப்பும் ஒளியும் உலகை வளப்படுத்தி ஒளிர்விப்பதுபோன்று ஊடகத்துறையும், இயேசு கிறிஸ்துவின் ஒளியைத் தாங்கிச் சென்று மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுமெனவும் கூறினார் திருத்தந்தை.
வத்திக்கான் தொலைக்காட்சி மையம், இன்றைய
உலகில் திருஅவையின் வாழ்வு மற்றும் போதனைகளை உடனுக்குடன் அறிவித்து
வருகின்றது என்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியதை
நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மையத்தின் பணி திருஅவையின் பணி, திருஅவைக்குள் நற்செய்தி அறிவிக்கும் பணி என்பதை மறவாமல் இருக்கவும் கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தை, முத்திப்பேறு பெற்ற 2ம் ஜான் பால் அவர்களின் ஆர்வத்தால், 1983ம் ஆண்டில் வத்திக்கான் தொலைக்காட்சி மையம் உருவாக்கப்பட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. தீமையின் முன்னர் நாம் பின்வாங்கக் கூடாது, திருத்தந்தை பிரான்சிஸ்
அக்.18,2013. தீமையின் முன்னர் நாம் பின்வாங்கக் கூடாது, கடவுள் அன்பானவர், கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்ப்பு வழியாக அவர் தீமையைத் தோற்கடித்தார் என, தனது டுவிட்டரில் இவ்வெள்ளியன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், Ghana நாட்டுக்குத் திருப்பீடத் தூதராக கடந்த ஆகஸ்ட் 17ம் தேதியன்று நியமனம் செய்யப்பட்டுள்ள பேரருள்திரு JEAN-MARIE SPEICH அவர்களையும், திருப்பீடத் தூதர் மற்றும் பாப்பிறை திருஆட்சி நிறுவனத்தின் தலைவராக, கடந்த செப்டம்பர் 21ம் தேதியன்று நியமனம் செய்யப்பட்டுள்ள பேரருள்திரு GIAMPIERO GLODER அவர்களையும் இம்மாதம் 24ம் தேதி பேராயர்களாக திருப்பொழிவு செய்யவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உள்ளிட்ட திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றும் கர்தினால்களின் 2014ம் ஆண்டின் தியானம், உரோமுக்கு வெளியே அல்பானோ நகரில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உரோமுக்கு
தென்கிழக்கே ஏறக்குறைய 15 மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள அல்பானோவின்
விண்ணகப் போதகர் இல்லத்தில் 2014ம் ஆண்டு மார்ச் 9ம் தேதியிலிருந்து 14ம்
தேதிவரை இத்தியானம் நடைபெறும்.
இந்த ஆண்டு தியானம் வழக்கமாக வத்திக்கானில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. உலகில் மூன்று கோடிப் பேர் அடிமை வாழ்க்கை, புதிய அறிக்கை
அக்.18,2013. உலக அளவில், இன்றும், ஏறக்குறைய மூன்று கோடிப் பேர் அடிமை போன்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், இவர்களில் பெரும்பகுதியினர் ஆசியாவில் உள்ளனர் என்று, புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஆஸ்திரேலியாவை மையமாகக் கொண்ட Walk Free Foundation என்ற அமைப்பு, நவீன அடிமைத்தனம் குறித்து 162 நாடுகளில் எடுத்த ஆய்வில், இந்தியாவில் மட்டும் ஒரு கோடியே 40 இலட்சம் பேர் அடிமைநிலைகளிலும், கடனை அடைப்பதற்காகக் கொத்தடிமைகளாகவும், கட்டாயமாக வேலை செய்யும் நிலையில் சிக்குண்டும் இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் மௌரித்தானியாவில் மட்டும் இந்தப் பிரச்சனை மிகவும் கடுமையாக நிலவுவதாகக் கூறும் இந்த அறிக்கை, அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நான்கு விழுக்காட்டினர் அடிமைகளாகவே வாழ்கின்றனர் என்று கூறுகிறது.
மேலும், இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டின் வடகிழக்கில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினப் பெண்கள் கடுமையாக விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், மோசமான பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்கின்றனர் என்று, மனித உரிமைகள் அமைப்பான Mgr International எனப்படும், சிறுபான்மையின உரிமைகளுக்கான பன்னாட்டு அமைப்பு கூறியுள்ளது.
ஆதாரம் : TIME
8. வெளிமண்டலத்தில் காற்று மாசடைவது, சுற்றுச்சூழல் தொடர்பான புற்றுநோய் இறப்புக்களுக்கு முக்கிய காரணம், ஐ.நா.வல்லுனர்கள்
அக்.18,2013. வெளிமண்டலத்தில் காற்று மாசடைவது, சுற்றுச்சூழல் தொடர்பான புற்றுநோய் இறப்புக்களுக்கு முக்கிய காரணம் என, உலக நலவாழ்வு நிறுவனத்தின் புற்றுநோய்ப் பிரிவு எச்சரித்துள்ளது.
சுற்றுச்சூழலில் நிலவும் தூய்மையற்ற காற்றால், சுவாச நோய்கள், இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களின் தாக்கம் ஏற்கனவே அதிகரித்துவரும்வேளை, உலகின் சில பகுதிகளில், குறிப்பாக,
மக்கள்தொகை அதிகமாவுள்ள தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளில் அண்மை ஆண்டுகளில்
தூய்மையற்ற காற்றால் சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, IARC என்ற புற்றுநோய்ப் பிரிவு நடத்திய ஆய்வின் முடிவு கூறுகிறது.
தூய்மையற்ற காற்றால் ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோயால் 2010ம் ஆண்டில் 2 இலட்சத்து 23 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என, அண்மை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment