Thursday, 5 September 2013

செய்திகள் - 05.09.13

 செய்திகள் - 05.09.13

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : பிரிவினைகளை மேற்கொள்ளும் நோக்கில் நம் செப முயற்சிகளை இன்னும் ஆழப்படுத்தவேண்டும்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் ஒரு பணியை வைத்துள்ளார்

3. ஜி20 மாநாட்டையொட்டி இரஷ்ய அரசுத்தலைவருக்கு திருத்தந்தை கடிதம்

4. திருத்தந்தை : இவ்வுலகின் தவறான கொள்கைகள் குறித்து கவனமுடன் செயல்படுங்கள்

5. சிரியாவின் மீது ஆயுதத் தாக்குதல் நடத்துவது நியாயப்படுத்தப்பட முடியாதது, இயேசுசபைத் தலைவர்

6. திருத்தந்தையின் அமைதி செப வழிபாட்டிற்கு முஸ்லிம் த‌லைவ‌ர்க‌ள் ஆத‌ர‌வு

7. கிறிஸ்தவத்தை மறுதலிக்க லாவோசில் 11 குடும்பங்களுக்கு மிரட்டல்
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : பிரிவினைகளை மேற்கொள்ளும் நோக்கில் நம் செப முயற்சிகளை இன்னும் ஆழப்படுத்தவேண்டும்

செப்.,05,2013. மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் கிறிஸ்தவ சபையும், கத்தோலிக்கத் திருஅவையும் ஒரே திருப்பலி மேடையை பகிரும் நாள் வரவில்லை எனினும், கிறிஸ்தவ ஒன்றிப்பு, அது குறித்த கலந்துரையாடல் போன்றவைகளை இணைந்து நடத்த இவ்விருவருக்கும் பொதுவாக இருக்கும் விசுவாசமே உதவுகின்றது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்திருந்த மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் கிறிஸ்தவ சபைத்தலைவர் இரண்டாம் பசிலியோஸ் மார்த்தோமா பவுலோஸ் அவர்களையும், அவருடன் வந்த குழுவையும் இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, 1983 ம் ஆண்டு உரோமையிலும், 1986ம் ஆண்டு இந்தியாவிலும் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலுக்கும் அப்போதைய மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் கிறிஸ்தவ சபைத்தலைவர் முதலாம் மொரான் மார் பசிலியோஸ் மார்த்தோமா மேத்யூஸுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்புகளையும் நினைவூட்டினார்.
கடந்த 30 ஆண்டுகளில் இந்த இரு கிறிஸ்தவ சபைகளுக்குமிடையே இடம்பெற்ற முன்னேற்ற நடவடிக்கைகளையும் தன் உரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், தப்பான முற்சார்பு எண்ணங்களைக் கைவிட்டு, பிரிவினைகளை மேற்கொள்ளும் நோக்கில் நம் செப முயற்சிகளை இன்னும் ஆழப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் ஒரு பணியை வைத்துள்ளார்

செப்.,05,2013. இயேசு தன்னைப் பின்செல்லுமாறு நம்மை அழைப்பது அதற்கென ஒரு நோக்கத்தைக் கொண்டது, அதனாலேயே அவர் நம்மை நோக்கி முன்னேறிச்செல், அஞ்சாதே என்ற உறுதியை வழங்குகிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தில் இவ்வியாழனன்று காலை திருப்பலி நிகழ்த்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், நம் வாழ்வில் நுழையும் இயேசு, நம் இதயத்தைத் தாண்டிச்செல்லும்போது நம்மை அழைப்பது மட்டுமல்ல, நமக்கான பணியையும் தருகிறார், அதுவே நம் மறைப்பணி என்றும் கூறினார்.
இயேசு விரும்பும் இப்பணிக்கென நாம் எதையெல்லாம் துறக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்து அதன்படி நாம் செயல்பட வேண்டியிருக்கும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் பாதையில் செல்வது என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல, மாறாக, அவரைப் பின்பற்றி நமக்குரிய கடமையை, அதாவது மறைப்பணியை ஆற்றுவதாகும் எனவும் தனது மறையுரையில் எடுத்தியம்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்முடைய பணிகளில் வரும் சவால்களையும், தடைகளையும் தாண்டும் பலத்தையும் ஆறுதலையும் இறைவனே தருவார் என்ற உறுதியை இத்திருப்பலியில் வழங்கினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. ஜி20 மாநாட்டையொட்டி இரஷ்ய அரசுத்தலைவருக்கு திருத்தந்தை கடிதம்

செப்.,05,2013. அடிப்படை நலஆதரவுப் பணிகள், அனைவருக்கும் உறைவிடம், வேலை, பசி அகற்றல் போன்றவைகளை உள்ளடக்கிய நீதியான, சகோதரத்துவ உலகைக் கட்டியெழுப்பும் பணிக்குத் தெளிவான அனைத்துலகச் சட்டங்கள் தேவைப்படுகின்றன என எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார வலிமைமிக்க 20 நாடுகளின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் இரஷ்யக் கூட்டமைப்பின் அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ள  திருத்தந்தை பிரான்சிஸ், ஒருவரையொருவர் சார்ந்து வாழவேண்டிய நிலையில் இருக்கும் இன்றைய நவீன உலகு நீதியான பொருளாதாரச் சட்டங்களால் வழிநடத்தப்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய உலகம் எதிர்பார்த்திருப்பது மாண்புநிறைந்த வாழ்வு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டுமென்பதே எனத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இன்றைய உலகம் எதிர்நோக்கிவரும் ஆயுதமோதல்கள் இந்த எதிர்பார்ப்புகளுக்கு எதிராகச் செல்வதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைதியின்றி பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது என்பதையும், வன்முறைமூலம் அமைதியைப் பெற முடியாது என்பதையும் தனது கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, சிரியாவில் இடம்பெறும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளை ஆராயுமாறும் ஜி20 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை : இவ்வுலகின் தவறான கொள்கைகள் குறித்து கவனமுடன் செயல்படுங்கள்

செப்.,05, 2013. தங்களின் துவக்க கால தனிவரத்தைத் தொடர்ந்து பின்பற்ற ஊக்கமளிக்கும் வார்த்தைகளுடன் கார்மல் துறவு சபையினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கார்மல் துறவுசபையின் பொதுப் பேரவைக்கு ஊக்கவார்த்தைகளுடன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை, கிறிஸ்துவைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், அவரை மறுதலித்து வாழும் இன்றைய சமூகத்தில், அவரோடு ஒன்றிணைந்து வாழ நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நவீன உலகில் மறைந்திருக்கும் அபாயங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இவ்வுலகின் தவறான கொள்கைகள் குறித்து கவனமுடன் செயல்படுமாறு விண்ணப்பித்துள்ளார்.
உலக அளவுகோல்களின்படியல்ல, மாறாக, இயேசுவின் போதனைகளின்படி வாழும்போது, ஏராளமான சவால்களை நாம் எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இயேசுவுக்குச் சாட்சியம் பகர நாம் மரணத்தையும் ஏற்கத் தயாராக இருக்கவேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

5. சிரியாவின் மீது ஆயுதத் தாக்குதல் நடத்துவது நியாயப்படுத்தப்பட முடியாதது, இயேசுசபைத் தலைவர்

செப்.,05, 2013. சிரியாவின்மீது ஆயுதத் தாக்குதலை நடத்துவது என்பது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் எனக் கூறியுள்ளார் இயேசுசபைத் தலைவர் அருள்பணி அடோல்ஃபோ நிக்கொலாஸ்.
சிரியா மீதான எந்தவொரு வெளிநாட்டுத் தாக்குதலும், அப்பாவி மக்களின் துன்பங்களை அதிகரிக்கவே உதவும் என்ற இயேசுசபைத் தலைவர் அருள்பணி நிக்கொலாஸ், இத்தகைய தாக்குதலை நடத்த அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கோ பிரான்சிற்கோ எவரும் அதிகாரம் தரவில்லை என்றார்.
பலவீனமான நாடுகளை, வலிமை மிகுந்தோர் தாக்குவது என்பது, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் என்ற அவர், வேதிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டு குறித்து போதிய தகவல்கள், ஆதாரங்கள் கிட்டாத நிலையில், அதற்கான தண்டனை நடவடிக்கை நியாயமற்றதே எனவும் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. திருத்தந்தையின் அமைதி செப வழிபாட்டிற்கு முஸ்லிம் த‌லைவ‌ர்க‌ள் ஆத‌ர‌வு

செப்.,05,2013. சிரியாவில் அமைதிக்கென திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பு, உண்மையானது மற்றும் அனைவராலும் செவிமடுக்கப்படவேண்டியது என அழைப்புவிடுத்துள்ளார் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இஸ்லாம் கல்வித்துறைத் தலைவர் Syed Razi Ahmad Kamal.
சிரியாவின் அமைதிக்கென இச்சனிக்கிழமையன்று செப நாளாக கடைப்பிடிக்கப்படவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் விடுத்துள்ள அழைப்பு குறித்து தன் மகிழ்ச்சியையும் பாராட்டையும் வெளியிட்டுள்ள பேராசிரியர், மனித குலத்திற்கான இல்லமாகப் படைக்கப்பட்ட இவ்வுலகை அழிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்றார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அமைதிக்கான அழைப்பு குறித்து கருத்து வெளியிட்ட பாலஸ்தீன முஸ்லிம் மருத்துவரும் எழுத்தளருமான Izzeldin Abuelaisch, அமைதி குறித்து பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது, ஒவ்வொருவரும் திருத்தந்தையைப்போல் அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார். திருத்தந்தையின் அழைப்புக்கு இயைந்தவகையில், தான் இச்சனிக்கிழமை செபவழிபாட்டில் கலந்துகொள்ள உள்ளதாகவும், மற்றவர்களும் கலந்துகொள்ள இது குறித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அறிவித்தார் இஸ்லாம் மருத்துவர் Abuelaisch.

ஆதாரம் : AsiaNews

7. கிறிஸ்தவத்தை மறுதலிக்க லாவோசில் 11 குடும்பங்களுக்கு மிரட்டல்

செப்.,05,2013. லாவோசின் Nongdaeng கிராமத்தில், கிறிஸ்தவ மதத்திற்கு மனம்மாறிய 11 குடும்பங்களும் கிறிஸ்தவத்தைக் கைவிடவேண்டும் அல்லது கிராமத்தை விட்டு வெளியேறவேண்டும் என அப்பகுதி அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனர்.
இயற்கையை வழிபடுபவர்களாக இருந்த ஏறத்தாழ 50 பேரைக்கொண்ட இந்த 11 குடும்பத்தினரும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். மேற்கத்திய நாடுகளின் மதமான கிறிஸ்தவம், லாவோஸ் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்ற காரணத்தை முன்வைத்து, அம்மதத்தைக் கைவிடுமாறு மிரட்டியுள்ள அப்பகுதி அதிகாரிகள், இல்லையேல் கிராமத்தை விட்டு வெளியேறுமாறு அக்குடும்பங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதாரம் : Fides

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...