செய்திகள் - 02.09.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : சிரியாவில் அமைதி திரும்ப உலக அளவில் செப்டம்பர் 07ல் செபம்
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிரியாவின் அமைதிக்காக விடுத்த அழைப்புக்குச் சீனா நன்றி
3. மூன்றாம் கிரகரி : சிரியாவும் மத்திய கிழக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் அமைதிக்கானச் செபத்தில் ஒன்றிப்பு
4. டுவிட்டரில் திருத்தந்தை : போர் ஒருபோதும் வேண்டாம்
5. 'பணிபுரிவதற்கெனவே கீழிறங்கி வந்த இயேசுவின் அருகாமையில் இருப்பதே நமக்குரிய சிறப்பான இடம்' : முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
6. திருத்தந்தையை இவ்வாரத்தில் சந்திக்கவுள்ளார் ஆர்த்தடாக்ஸ் சீரோ-மலங்கரா முதுபெரும் தந்தை
7. நவநீதம்பிள்ளையின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவேண்டும் : ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்
8. வரதட்சணை கொடுமை, மணிக்கு ஒரு பெண் பலி
9. மகப்பேறு கால இறப்புகள் அதிகரிப்பைத் தடுக்க திட்டம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : சிரியாவில் அமைதி திரும்ப உலக அளவில் செப்டம்பர் 07ல் செபம்
செப்.02,2013. உலகெங்கும் அமைதி நிலவ, குறிப்பாக, மோதல்கள்
நிறைந்துள்ள சிரியாவில் அமைதி திரும்ப உலக மக்கள் அனைவரும் செபிக்குமாறு
இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை உரையில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
வழக்கமாக அந்தந்த ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து நண்பகல் மூவேளை உரை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், இஞ்ஞாயிறு மூவேளை உரை முழுவதும் உலகின் அமைதிக்காகக் குரல் கொடுத்தார்.
வத்திக்கான்
தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம்
சிரியாவில் அமைதி திரும்ப அனைவரும் செபிக்குமாறு வலியுறுத்திய திருத்தந்தை, எனது இதயத்தின் ஆழத்திலிருந்து மிகவும் உறுதியுடன் அமைதிக்காக அழைப்புவிடுக்கிறேன் என்று கூறினார்.
இன்றைய உலகில் இடம்பெறும் பல சண்டைகள், எனது துன்பத்துக்கும் கவலைக்கும் பெருமளவில் காரணமாகின்றன, இந்நாள்களில் சிரியாவில் இடம்பெறுவது எனது இதயத்தை ஆழமாகக் காயப்படுத்தியுள்ளது, அங்கிருந்து வெளிவரும் வேதனைதரும் செய்திகள் எனது இதயத்தை அதிகமாக வேதனைப்படுத்துகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எனவே சகோதர சகோதரிகளே, அமைதிக்காகச் செபிப்பதற்கு அகிலத் திருஅவையையும் விண்ணப்பிக்கத் தீர்மானித்தேன் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், சிரியாவிலும், மத்திய கிழக்கிலும், உலகெங்கும்
அமைதி நிலவுவதற்காக அர்ப்பணிக்கும் செபம் மற்றும் நோன்பு நாளாக அந்த நாள்
முழுவதும் செலவழிக்கப்படுமாறு கேட்கிறேன் என்றும் கூறினார்.
அந்தச் செப மற்றும் நோன்பு நாள், அமைதியின் அரசியாம் அன்னைமரியா பிறந்த விழாவுக்குத் திருவிழிப்பு நாளான செப்டம்பர் 7ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும் என்றும், அந்நாளன்று இரவு 7 மணியிலிருந்து நள்ளிரவுவரை வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் செபம் நடைபெறும் என்றும், மற்ற
தலத்திருஅவைகளும் இதே நாளில் செப மற்றும் நோன்பைக் கடைப்பிடித்து இதே
கருத்துக்காகச் செபிக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
பிற கிறிஸ்தவ சபைகளும், அனைத்து மதத்தவரும், மதநம்பிக்கையற்றவரும், நன்மனம்கொண்ட அனைவரும், எம்முறையில் பங்குகொள்ள இயலுமோ அம்முறையில் பங்குகொள்ளுமாறு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், மனித சமுதாயம் அமைதியின் இவ்வடையாளங்களைப் பார்க்கவும், நம்பிக்கை மற்றும் அமைதியின் வார்த்தைகளைக் கேட்கவும் வேண்டுமென்றும் கூறினார்.
ஒன்றிணைந்த வாழ்வு, நீதி, அன்பு ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதற்கான பணியை அனைவரும் கொண்டுள்ளனர், அமைதிக்கானத் தொடர் அர்ப்பணம் நன்மனம்கொண்ட அனைவரையும் ஒன்றிணைக்கின்றது என்றும், அமைதி எல்லாருக்கும் உரியது என்பதால் இது எல்லாத் தடைகளிலிருந்தும் மீளவேண்டும், அமைதி நன்மையானது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏற்கனவே இரத்தம் சிந்தப்பட்டுள்ள சிரியாவில் அண்மையில் இடம்பெற்ற ஆயுதத் தாக்குதல்கள் ஆயுதம் ஏந்தாத அப்பாவி மக்கள்மீதும், சிறார்மீதும் ஏற்படுத்தியுள்ள எதிர்மறை விளைவுகள் குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், சிரியாவில்
அமைதி நிலவ அனைத்துலக சமுதாயம் காலதாமதமின்றி அமைதிக்கானத் தெளிவானப்
பரிந்துரைகளை முன்வைத்து அவற்றை ஊக்குவிப்பதற்கு எல்லா வகையிலும்
முயற்சிகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
மனிதாபிமானப் பணிகள் தடையின்றிச் செயல்பட உதவிகள் செய்யப்படுமாறும், சண்டைக் கலாச்சாரமோ முரண்பாட்டுக் கலாச்சாரமோ மக்களுக்கிடையே, மக்களுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது, மாறாக, உரையாடல் கலாச்சாரமே அமைதிக்கான ஒரேவழி என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், வன்முறை, போர், மோதல் ஆகியவற்றை உரையாடல், ஒப்புரவு, அன்பு ஆகிய சக்திகளால் வெல்வதற்கு அமைதியின் அரசியாம் அன்னைமரியிடம் செபிப்போம் என்று கூறினார்.
கடந்த
சில ஞாயிறுகளில் செய்ததுபோல இஞ்ஞாயிறன்றும் தன்னோடு சேர்ந்து அனைத்து
மக்களும் அமைதிக்கானச் செபத்தைச் சொல்லுமாறு கூறிச் செபித்தார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிரியாவின் அமைதிக்காக விடுத்த அழைப்புக்குச் சீனா நன்றி
செப்.,02,2013. சிரியாவில் அமைதி திரும்ப திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த விண்ணப்பம் ஞானமிக்கது மற்றும் உண்மையானது, சீனர்களாகிய தாங்கள் அவரோடு இருக்கின்றோம், மத்திய கிழக்கில் இனி ஒருபோதும் சண்டைகளைப் பார்ப்பதற்குத் தாங்கள் விரும்பவில்லை என்று சீன அரசின் இரு மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிரியாவில் அமைதி திரும்ப இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் உலகினர் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பை வரவேற்று அவருக்கு நன்றி தெரிவித்துள்ள இவ்விரு சீன அரசு அதிகாரிகள், தமாஸ்கு அரசுக்கு எதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டின் எந்தத் தாக்குதலையும் தாங்கள் எதிர்ப்பதாகக் கூறியுள்ளனர்.
தங்களை யார் என்று அறிமுகம் செய்ய விரும்பாத இவ்விரு சீன அதிகாரிகள், அந்நாட்டில் கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு இடையேயான உறவுகள் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறித்து சீன அரசு அறிந்திராதபோதிலும், அவர் நல்ல தந்தையாக இருக்கின்றார் என்று கூறியுள்ளதோடு, அவரின் எளிமை, அவர் கிறிஸ்தவ உலகுக்கு ஆற்றும் உரைகள் என அவரின் பல காரியங்களைச் சீன அரசு பாராட்டுகின்றது எனவும் ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
ஆதாரம் : AsiaNews
3. மூன்றாம் கிரகரி : சிரியாவும் மத்திய கிழக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் அமைதிக்கானச் செபத்தில் ஒன்றிப்பு
செப்.,02,2013. சிரியாவில் அமைதி திரும்ப திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள செப நாள் அமைதியின் அசாதாரண அடையாளம் எனவும், இது துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பகுதி மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருக்கும் மாபெரும் அன்பைக் காட்டுகின்றது எனவும் அந்தியோக்கியாவின் மெல்கிதே கிரேக்க கத்தோலிக்க முதுபெரும் தந்தை மூன்றாம் கிரகரி லகாம் கூறினார்.
செப்டம்பர் 07, வருகிற சனிக்கிழமையன்று இரவு 7 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் தொடங்கும் அமைதிக்கான செப வழிபாட்டு நேரத்தில் மத்திய கிழக்கிலும், உலகெங்கும் இருக்கின்ற மெல்கிதே கிரேக்க வழிபாட்டுமுறையின் அனைத்துப் பங்குத்தளங்களும் கலந்து கொள்வதற்கானத் தயாரிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் முதுபெரும் தந்தை மூன்றாம் கிரகரி.
அமைதிக்காகச் செபிக்க விரும்பும் அனைவருக்கும் வசதியாக தங்கள் ஆலயங்களை நள்ளிரவு வரை திறந்து வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆதாரம் : AsiaNews
4. டுவிட்டரில் திருத்தந்தை : போர் ஒருபோதும் வேண்டாம்
செப்.,02,2013. 'மீண்டும் போர் என்பது ஒருபோதும் வேண்டாம்! ஒருபோதும் மீண்டும் போர் வேண்டாம்' என் தன் திங்கள் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
ஆங்கிலம் உட்பட ஒன்பது மொழிகளில் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் தன் டுவிட்டர் பக்கத்தில் தன் குறுஞ்செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை, அண்மைக் காலங்களில் எகிப்து மற்றும் சிரியாவில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இதே நாளில் பிறிதொரு டுவிட்டர் செய்தியையும் வெளியிட்டுள்ள திருத்தந்தை, அதில், 'நமக்கு அமைதியான ஓர் உலகு வேண்டும், நாம் அமைதியின் மனிதர்களாகச் செயல்படவேண்டும்' எனவும் எழுதியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. 'பணிபுரிவதற்கெனவே கீழிறங்கி வந்த இயேசுவின் அருகாமையில் இருப்பதே நமக்குரிய சிறப்பான இடம்' : முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
செப்.,02,2013. 'பணிபுரிவதற்கெனவே கீழிறங்கி வந்த இயேசுவின் அருகில் இருப்பதே நமக்குரிய சிறப்பான இடம்' என்றார் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பல ஆண்டுகள் தொடர்ந்து இறையியல் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள முன்னாள் திருத்தந்தை அவர்களின் மாணவர்கள், அவர் திருத்தந்தையானதற்கும் முன்னரே ஒவ்வோர் ஆண்டும் அவருடன் கூடி கருத்தரங்கு ஒன்றை நடத்தி, கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தின்படி, இவ்வாண்டும்
உரோமைக்கு அருகிலுள்ள காஸ்தல் கந்தோல்ஃபோ நகரில் கூடி கருத்தரங்கை
நடத்தினர். அக்கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியாத முன்னாள் திருத்தந்தை, இஞ்ஞாயிறன்று
வத்திக்கான் நாட்டிற்குள் உள்ள ஒரு கோவிலிலில் அம்மாணவர்களுக்கென
திருப்பலி நிறைவேற்றினார். இத்திருப்பலியில் தன் முன்னாள் மாணவர்களுக்கு
மறையுரை வழங்கிய முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், முதலானோர் கடைசியாவர் என்ற இயேசுவின் வார்த்தைகளையும் எடுத்துரைத்து, மாடடைக்குடிலில் பிறந்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசுவின் அருகாமையே கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும் உகந்த இடம் என மேலும் கூறினார்.
38 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் இடம்பெறும் இக்கருத்தரங்கில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. திருத்தந்தையை இவ்வாரத்தில் சந்திக்கவுள்ளார் ஆர்த்தடாக்ஸ் சீரோ-மலங்கரா முதுபெரும் தந்தை
செப்.,02,2013. இவ்வாரம்
புதன் முதல் வெள்ளிவரை வத்திக்கான் வரும் ஆர்த்தடாக்ஸ் சீரோ-மலங்கரா
கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவர் இரண்டாம் மொரான் பசிலியோஸ் மார்த்தோமா
பவுலோஸ், இந்நாட்களில் திருத்தந்தையையும், திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவிலுள்ள
ஆர்த்தடாக்ஸ் சீரோ-மலங்கரா கிறிஸ்தவ சபை விசுவாசிகளை சந்திக்கும்பொருட்டு
இப்பயணத்தை மேற்கொண்டுள்ள முதுபெரும் தந்தை இரண்டாம் பவுலோஸ் வத்திக்கான்
அதிகாரிகளையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 1983ம் ஆண்டு உரோம் நகரிலும், 1986ம்
ஆண்டு திருத்தந்தையின் திருப்பயணத்தின்போது இந்தியாவின் கோட்டயத்திலும்
இக்கிறிஸ்தவ சபையின் தலைவர் முதலாம் மோரன் மார் பசிலியோஸ் மார்த்தோமா
மேத்யூஸுக்கும் இடையே சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
மலங்கரா
ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டுமுறை கிறிஸ்தவ சபையின் இரு பிரிவுகளுள் ஒன்றே இந்த
ஆர்த்தடாக்ஸ் சீரோ-மலங்கரா கிறிஸ்தவ சபையாகும். தனித்து இயங்கும்
இக்கிறிஸ்தவ சபையில் 25 இலட்சம் அங்கத்தினர்கள் உள்ளனர். 30
மறைமாவட்டங்களையும் 33 ஆயர்களையும் 1700க்கும் மேற்பட்ட குருக்களையும்
கொண்டு இயங்குகிறது இக்கிறிஸ்தவ சபை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. நவநீதம்பிள்ளையின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவேண்டும் : ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்
செப்.,02,2013. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அவைத் தலைவர் நவநீதம்பிள்ளை இறுதியாக எழுப்பியுள்ள இலங்கைத் தொடர்பான கருத்துக்களை, ஐக்கிய நாடுகள் நிறுவனமும், காமன்வெல்த் அமைப்பும் கவனம் செலுத்த வேண்டும் என்று Amnesty International என்ற பன்னாட்டு மனித உரிமைகள் கழகம் அழைப்புவிடுத்துள்ளது.
இந்நிலையில்
பொதுமக்கள் அமைதியான முறையில் துன்பத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று
அவர் கூறிய கருத்து கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று என்று அக்கழகத்தின்
ஆசிய-பசிபிக் உதவி பணியாளர் பொலி ட்ரஸ்கோட் தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளூர் விசாரணைகள் உரியமுறையில் நடத்தப்படவேண்டும், இல்லையேல் பன்னாட்டு அளவில் விசாரணைகள் தேவைப்படும் என்று அவர் கூறியிருப்பதை ஐக்கிய நாடுகள் நிறுவனமும், காமன்வெல்த் அமைப்பும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் ட்ரஸ்கோட் வலியுறுத்தியுள்ளார்.
ஆதாரம் : TamilWin
8. வரதட்சணை கொடுமை, மணிக்கு ஒரு பெண் பலி
செப்.,02,2013. இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் மணிக்கு ஒரு பெண் பலியாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம்(என்.சி.பி.) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், கடந்த 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டுவரை வரதட்சணைக் கொடுமைகளால் பெண்களின் இறப்பு அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
இதில் 2007ம் ஆண்டு 8,093, 2008ம் ஆண்டு 8,172, 2009ம் ஆண்டு 8,383, 2010ம் ஆண்டு 8,391, 2011ம் ஆண்டு 8,618 பேர், என
நாடு முழுவதும் சராசரியாக மணிக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை தொடர்பான
வன்முறைக் குற்றங்களால் பலியாகின்றனர் என்றும் அந்தப் புள்ளிவிவரம்
தெரிவிக்கின்றது.
ஆதாரம் : தினமலர்
9. மகப்பேறு கால இறப்புகள் அதிகரிப்பைத் தடுக்க திட்டம்
செப்.,01,2013 தமிழகத்தில் மகப்பேறு கால இறப்புகள் அதிகரிப்பதைத் தடுக்க, நலப்பணிகள் இயக்குனரகமும், நலவாழ்வுத்துறையும் தீவிரம் காட்டத் திட்டமிட்டுள்ளன.
மகப்பேறு கால இறப்பு என்பது, 2007ல்
ஒரு இலட்சத்திற்கு 200 என்று இருந்தது. அதை 2015ல் 107 ஆக குறைக்கத்
திட்டமிடப்பட்டது என நலவாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உலக அளவில், கடந்த
2000ல் 5கோடியே 29 இலட்சம் பெண்கள் மகப்பேற்றின் போது இறந்துள்ளனர். இதில்
95 விழுக்காட்டினர் ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் நடந்துள்ளன.
இந்தியாவில், ஆண்டிற்கு ஒரு இலட்சம் பெண்கள் மகப்பேறு காலத்தில் இறக்கின்றனர். இது உலகளவில் இடம்பெறுவதில் 20 விழுக்காடாகும்.
மகப்பேறு காலத்தில், தமிழகத்தில் ஆண்டுக்கு 1,100 பெண்கள் இறக்கின்றனர். இது இந்திய அளவில் 1 விழுக்காடாகும்.
கடந்த ஆண்டு ஆய்வின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16.2 விழுக்காடு, தேனியில் 11.8 விழுக்காடு மகப்பேறு கால மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
35 வயதிற்கும்மேற்பட்ட பெண்களின் மகப்பேறு இறப்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் 15.7 விழுக்காடு, தஞ்சையில் 13.5 விழுக்காடு, மற்றும் சென்னையில் 11.5 விழுக்காடாக உள்ளது.
பெண்களின் வயது அதிகமானால், மகப்பேறு கால இறப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. 35 வயதிற்குமேற்பட்டோருக்கு, இளம் வயதினரைக் காட்டிலும் இறப்பு விகிதம் 3 மடங்கு அதிகமாக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment