Sunday, 10 March 2013

திருத்தந்தையர் - சில தகவல்கள்

திருத்தந்தையர் - சில தகவல்கள்

கத்தோலிக்கத் திருஅவையின் முதல் திருத்தந்தையான இயேசுவின் திருத்தூதர் தூய பேதுருவுக்குப் பின்னர், திருஅவையை நீண்ட காலம் வழிநடத்தியவர் திருத்தந்தை 9ம் பத்திநாதர். இவர் 1846 முதல் 1878 வரை 32 ஆண்டுகள்வரை பதவியில் இருந்துள்ளார். அதற்கடுத்தபடியாக, முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பர் 26 ஆண்டுகள் 168 நாள்கள் பதவியில் இருந்து 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி காலமானார்.
குறுகிய காலம் வழிநடத்தியவர்கள் என்ற வரிசையில், திருத்தந்தையர் 7ம் உர்பான் 12 நாள்களும், 6ம் பொனிபாஸ் 15 நாள்களும், 4ம் செல்ஸ்தீன் 16 நாள்களும், 3ம் பத்திநாதர் 17 நாள்களும், முதலாம் அருள் சின்னப்பர் 33 நாள்களும் பதவியில் இருந்துள்ளனர்.
திருத்தந்தை ஒன்பதாம் பெனடிக்ட், தனது 12 முதல் 20 வயதுக்குள் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். திருத்தந்தை 12ம் அருளப்பர், 18ம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திருத்தந்தையர்களின் பெயர்களைப் பார்த்தோமானால் அருளப்பர் என்ற பெயர்தான் 23 தடவைகளும், கிரகரி, பெனடிக்ட் ஆகிய பெயர்கள் ஒவ்வொன்றும் 16 தடவைகளும் வந்துள்ளன. ஆனால் 20ம் அருளப்பர் என்ற பெயரை எவரும் எடுத்ததாகத் தெரியவில்லை. 43 பெயர்கள் ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தப்படவில்லை.
திருத்தந்தை 9ம் பெனடிக்ட்(1032-1044), மூன்று தடவைகள் தேர்வு செய்யப்பட்ட ஒரே திருத்தந்தையாவார்.
திருத்தந்தையர் 3ம் ஸ்டீபனும், முதலாம் பவுலும் சகோதரர்கள். அதேபோல் 19ம் அருளப்பரும், 8ம் பெனடிக்டும் சகோதரர்கள்.

No comments:

Post a Comment