Saturday 16 March 2019

உலகில் 80 விழுக்காட்டினர் மத நம்பிக்கையுள்ளவர்கள்

உலகில் 80 விழுக்காட்டினர் மத நம்பிக்கையுள்ளவர்கள் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்

உலக நலம், மனிதர் தாங்கள் உண்ணும் உணவு மற்றும், வாழும் முறையில் மாற்றம் கொண்டுவருவதைச் சார்ந்து உள்ளது
மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்
மார்ச் 07, இவ்வியாழனன்று, ‘மதங்களும், நீடித்த நிலையான வளர்ச்சித் திட்டங்களும்’ என்ற தலைப்பில், வத்திக்கானில் தொடங்கிய பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றிய, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இந்தக் கருத்தரங்கின் நோக்கம் பற்றி விளக்கினார்.
இந்நிகழ்வில் தொடக்க உரையாற்றிய கர்தினால் டர்க்சன் அவர்கள், உலக மக்கள் தொகையில், ஏறக்குறைய எண்பது விழுக்காட்டினர், மத நம்பிக்கை உள்ளவர்கள் என்றும், உலகின் வளர்ச்சியில் மதங்களின் பங்கு இன்றியமையாதது என்றும் கூறினார்.
பூமியின் நலன், மனிதரின் உடல்நலன்
இதற்கிடையே, இந்த பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றியவர்கள், இன்றைய உலகம் எதிர்கொள்ளும் வறுமை, பசி, காலநிலை மாற்றம் ஆகியவை தொடர்பான பிரச்சனைகளைக் களைவது பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இக்கருத்தரங்கில் உரையாற்றிய இந்துமத ஆர்வலரான வந்தனா சிவா அவர்கள், இப்பூமியின் நலனுக்கும், மனிதரின் உடல்நலனுக்கும் உதவுவதற்கு, மனிதர் வாழும் முறையிலும், தேர்ந்தெடுக்கும் உணவுப் பொருள்களிலும் மாற்றம் அவசியம் என்று கூறினார்.
வறுமை, பசி மற்றும் காலநிலை மாற்றப் பிரச்சனைகளுக்கு எதிராய் நடவடிக்கைகள் எடுப்பது பற்றி உரையாற்றிய சிவா அவர்கள், வேதியப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படாத உற்பத்திப் பொருள்களைப் பயன்படுத்துவதன் வழியாக, பூமியையும், மனிதரின் உடல்நலத்தையும் பாதுகாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
பல்பொருள் அங்காடிகளில் தேர்ந்தெடுக்கும் உணவு மற்றும், அவற்றை சமைப்பதில் மாற்றம் கொண்டுவந்தால், பசி, உடல்பருமன் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய உலகளாவிய பிரச்சனைகளைக் களைவதற்கு அது  பெரிதும் உதவும் எனவும் சிவா அவர்கள் கருத்து தெரிவித்தார்.
ஏறக்குறைய நானூறு பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த பன்னாட்டு கருத்தரங்கு, மார்ச் 9, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...