அனைத்து அமெரிக்க அரச நிறுவனங்களையும் மூட வெள்ளை மாளிகை உத்தரவு:பட்ஜெட் நிராகரிப்பால் 8 இலட்சம் பேர் வேலையிழப்பு
அமெரிக்காவில் அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அரசின் பட்ஜெட்டை பிரதிநிதிகள் சபை கடைசி நேரத்தில் நிராகரித்துள்ளதை அடுத்து அங்கு அனைத்து அரசு அலுவலகங்கள் முடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மருத்துவ நலத்திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்காக அவசர மசோதாவை பிரதிநிதிகள் சபை நிராகரித்துவிட்டது. அதிபர் ஒபாமா மசோதாவை நிறைவேற்றி தருமாறு விடுத்த கோரிக்கையை ஏற்காமல் பிரதிநிதிகள் சபை, 228க்கு 201 வாக்கு வித்தியாசத்தில் அதனை தோற்கடித்தது.
பிரதிநிதிகள் சபையின் எதிர்கட்சியான குடியரசு கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டது. ஒபாமாவின் மருத்துவ நலத்திட்டங்களை பட்ஜெட்டிலிருந்து நீக்கி விடுமாறு பிரதிநிதிகள் சபை அவசர நிதி மசோதாவை செனட் சபைக்கு திருப்பி அனுப்ப உள்ளது. அமெரிக்க நிதியாண்டின் துவக்க நாளான இன்று, கடைசி நேரத்தில் மசோதா நிராகரிக்கப்பட்டதால் அரசு அலுவலகங்கள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அரசு அலுவலகங்களை தற்காலிகமாக மூட அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, அரசு அலுவலகங்கள் இயங்காமல் முடங்கியுள்ளன. இன்று மீண்டும் செனட் சபையில் மசோதாவை விவாதித்து சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே இந்த நெருக்கடி நிலையின் போது அமெரிக்க ராணுவம் இயல்பான தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையால் 7.83 லட்சம் அரசு ஊழியர்கள் வேலையை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஊதியம் இல்லாமல் 6 மாதம் விடுமுறையில் செல்லுமாறு அரசு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிரடியிலிருந்து மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் அரசு நிறுவனங்களை மூடும் நடவடிக்கையில், அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment