2 அமெரிக்கர்கள்- ஒரு ஜெர்மானியருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
அறிவியல், இலக்கியம் மற்றும் சமூக அமைதிக்கு பாடுபட்டவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதில், மருத்துவத்துக்கான நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ராத்மேன், ராண்டி ஷேக்மேன் மற்றும் ஜெர்மனியின் தாமஸ் சுடாப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மனித உடலில் உள்ள செல்களின் இயக்கம் குறித்த ஆராய்ச்சிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. மனித உடலில் உள்ள குறிப்பிட்ட செல்கள், மனித உடலுக்குத் தேவையான திரவங்களை உற்பத்தி செய்கின்றன. இந்த திரவம், உடலின் எந்த பாகத்திற்கு தேவைப்படும் என்ற தகவல் அந்த செல்லுக்கு கிடைக்கும். தகவல் கிடைத்ததும் அந்த பகுதிக்கு சரியான இடத்திற்கு, சரியான நேரத்திற்கு அந்த திரவம் அனுப்பப்படுகிறது.
இந்த துல்லியமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பினை பேராசிரியர்கள் ஜேம்ஸ் ராத்மேன், ராண்டி ஷேக்மேன் மற்றும் தாமஸ் சுடாப் ஆகியோர் தங்கள் ஆராய்ச்சியின்மூலம் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர். நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜேம்ஸ் ராத்மேன், யாலே பல்கலைக்கழகத்திலும், ஷேக்மேன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும், சுடோப், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுகள் இந்த வாரத்திலும், அடுத்த வாரத்திலும் அறிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பரிசும் 8 மில்லியன் ஸ்வீடன் கரோ
னா (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.7 கோடி) மதிப்புடையதாகும்.
No comments:
Post a Comment