Friday, 25 October 2013

செய்திகள் - 22.10.13

செய்திகள் - 22.10.13
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இறைவனின் மறையுண்மைகளைப் புரிந்துகொள்ள அறிவு மட்டும் போதாது

2. பாவத்தை வெற்றிகொள்ளும் அன்பை வெளிப்படுத்துகிறது சிலுவை - திருத்தந்தை

3. திருப்பீடத்திற்கும் ஹங்கேரி நாட்டிற்கும் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது

4. பேராயர் சுள்ளிக்காட் : வாழ்வதற்கான உரிமை என்பது பிறப்பதற்கான உரிமையையும் உள்ளடக்கியது

5. கர்தினால் கிரேசியஸ் சோனியா காந்தியிடம் : அனைத்து இந்தியரையும் பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம்

6. கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள் சிரியாவிலும் மத்திய கிழக்கிலும் அமைதி நிலவ அழைப்பு

7. நவீன அடிமைத்தனத்துக்குப் பல முகங்கள், மனித உரிமைகள் வல்லுனர்

8. உணவுப்பொருள்கள் வீணாவதைக் குறைப்பது பசிக்கெதிரான நடவடிக்கைக்கு முக்கியம், ஐ.நா. அதிகாரி வலியுறுத்தல்

9. இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இறைவனின் மறையுண்மைகளைப் புரிந்துகொள்ள அறிவு மட்டும் போதாது

அக்.22,2013. நம் மீட்பு குறித்த மறையுண்மையைப் புரிந்துகொள்வதற்கு நம் அறிவு, இதயம், முழங்கால், செபம் என அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியமாகிறது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவனின் மறையுண்மைகளைப் புரிந்துகொள்ள வெறும் அறிவை மட்டும் பயன்படுத்துவது, எப்போதும் குழப்பத்திலேயே கொண்டுபோய் நிறுத்தும் என இச்செவ்வாய்க் காலை புனித மார்த்தா சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் மீட்பளிக்கும் அல்லது குணப்படுத்தும் பணியை, மருத்துமனை தாதியின் பணியோடு ஒப்புமைப்படுத்தி விளக்கினார்.
பாவங்களால் நிறைந்த இதயங்களைக் கொண்டிருந்த மக்களை மீட்க, அன்பையும் அருளையும் பெருமளவில் கொணர்ந்த இறைவன், நமக்கு குணமளித்து வெற்றி கண்டார் என்றார் திருத்தந்தை.
இறைவனின் மறையுண்மைகளைப் புரிந்துகொள்ள அறிவு மட்டும் போதாது, மாறாக, இதயம், முழங்கால்படியிடுதல் மற்றும் செபம் தேவை என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டாவதாக, இறைவனுடன் நாம் கொள்ளும் நெருக்கமும் அவசியம் என்றார்.
கடவுளில் நம்பிக்கையிழப்பதே மிகப்பெரும் இழிச்செயல் என சில புனிதர்கள் சொல்லிச்சென்றுள்ளதையும் தன் மறையுரையின்போது சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. பாவத்தை வெற்றிகொள்ளும் அன்பை வெளிப்படுத்துகிறது சிலுவை - திருத்தந்தை

அக்.22,2013. 'தோற்கடிக்கப்பட்டதையோ, தோல்வியையோ குறித்து நிற்பதல்ல சிலுவை, மாறாக, பாவத்தையும் தீமையையும் வெற்றிகொள்ளும் அன்பை அது வெளிப்படுத்தி நிற்கிறது' என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொருநாளும் தன் டுவிட்டர் பக்கத்தில் தன் குறுஞ்செய்திகளை மக்களோடு பகிர்ந்துவரும் திருத்தந்தை, இச்செவ்வாயன்று, சிலுவை நமக்கு வெளிப்படுத்தும் செய்தி குறித்து எழுதியுள்ளார்.
ஆங்கிலம், இலத்தீன், இத்தாலியம், ஸ்பானியம், அரேபியம் ஆகிய மொழிகள் உட்பட, ஒன்பது மொழிகளில் @pontifex என்ற இணைய முகவரி வழியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருப்பீடத்திற்கும் ஹங்கேரி நாட்டிற்கும் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது

அக்.22,2013. திருப்பீடத்திற்கும் ஹங்கேரி நாட்டிற்கும் இடையே 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தில் திருத்தங்களைக் கொணர்ந்து, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் இத்திங்களன்று ஹங்கேரி தலைநகர் Budapestல் கையெழுத்திட்டன.
2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹங்கேரியில் கொணரப்பட்ட, அடிப்படை சட்ட மாற்றங்களுக்கு இயைந்த வகையில் ஹங்கேரி அரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவிய பழைய ஒப்பந்தத்திலும் மாற்றங்கள் கொணரப்பட்டுள்ளன.
இப்புதிய மாற்றங்களின்படி, பள்ளிகளில் மதவகுப்புகளுக்கு நிதி உதவி, உயர்கல்விகளில் கத்தோலிக்கத் திருஅவையின் பங்களிப்பு, திருஅவையின் வரலாற்றுச்சிறப்புமிக்க கட்டிடங்களைப் புதுப்பித்தல், திருஅவையின் கலைப்பொருட்களுக்குப் பாதுகாப்பளித்தல் போன்றவை புதிய ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
திருப்பீடத்திற்கும் ஹங்கேரி நாட்டிற்கும் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட இந்நிகழ்ச்சியில், ஹங்கேரி நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் Alberto Bottari de Castello தலைமையிலான குழுவும், ஹங்கேரி துணைப்பிரதமர் Zsolt Semjén தலைமையிலான குழுவும் கலந்துகொண்டன.       

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. பேராயர் சுள்ளிக்காட் : வாழ்வதற்கான உரிமை என்பது பிறப்பதற்கான உரிமையையும் உள்ளடக்கியது

அக்.22,2013. குழந்தைகள், உலகில் வாழ்வதற்கும், வளர்வதற்கும் தேவையான உரிமைகள் மதிக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து ஐ.நா.வின் 68வது பொதுஅவைக்கூட்டத்தில் உரையாற்றினார் ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்.
வாழ்வதற்கான உரிமையின்றி மற்ற அனைத்து உரிமைகளும் அர்த்தமற்றவை என்பதை வலியுறுத்தி உரைவழங்கிய பேராயர் சுள்ளிக்காட் அவர்கள், குழந்தைகளின் நலன் காப்பாற்றப்படவேண்டுமெனில், கருவுற்றிருக்கும் தாயின் நலன் காப்பாற்றப்பட வேண்டும் என்றும், தாயின் நலன் என்று சொல்லும்போது அது கருவிலிருக்கும் குழந்தையின் நலனையும் உள்ளடக்கியது என்றும் கூறினார்.
வாழ்வதற்கான உரிமை என்பது பிறப்பதற்கான உரிமையையும் உள்ளடக்கியது என்பதால், கருவிலிருந்தே குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதை ஒவ்வோர் அரசும் உறுதிச்செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் பேராயர் சுள்ளிக்காட்.
குழந்தைகளின் நலன் மற்றும் கல்விக்கான உரிமை குறித்தும் வலியுறுத்திய பேராயர் சுள்ளிக்காட் அவர்கள், உடலளவில், மனதளவில், ஒழுக்கரீதியில், சமூக அளவில் மற்றும் ஆன்மீக அளவில் வளர்வதற்கானச் சூழல்களை உருவாக்கித்தரவேண்டியதன் அவசியத்தையும் எடுத்தியம்பினார்.
குழந்தை விற்பனை, பாலியல் தொழிலில் அவர்கள் தள்ளப்படுவது, கீழ்த்தர பாலியல் இலக்கியங்களில் பயன்படுத்தப்படுவது போன்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் சுட்டிக்காட்டிய திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர், இவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை அரசுகள் எடுப்பதுடன், குடும்பங்களைப் பலப்படுத்தி ஊக்கமளிக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. கர்தினால் கிரேசியஸ் சோனியா காந்தியிடம் : அனைத்து இந்தியரையும் பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம்

அக்.22,2013. இந்திய அரசியல் அமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாப்பு, நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று சோனியா காந்தி அவர்களிடம் தான் தெரிவித்ததாகக் கூறினார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ். 
இந்தியாவின் முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்களைத் தான் அண்மையில் சந்தித்தது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இச்சந்திப்பு, சிறப்பு சலுகைகளைப் பெறுவதற்காக இடம்பெற்றது அல்ல எனக் கூறினார். 
இந்தியாவின் அனைத்துச் சிறுபான்மையினருக்கும் சமயச்சுதந்திரம், தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்குச் சம உரிமைகள், சர்ச்சைக்குரிய உணவு பாதுகாப்பு மசோதா போன்ற சில தலைப்புகள்  இச்சந்திப்பில் பேசப்பட்டதாகவும் கூறினார் கர்தினால் கிரேசியஸ். 
இச்சந்திப்பின்போது சோனியா காந்தி அவர்கள், இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகளுக்குப் பாராட்டும் நன்றியும் கூறியதாகவும் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறினார். 
நாட்டின் அனைத்துக் கட்சிகளையும் தான் சந்தித்து, திருஅவையின் நிலையை எடுத்துச்சொல்ல விரும்புவதாகத் தெரிவித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், திருஅவை சலுகைகளைத் தேடவில்லை, ஆனால் இந்திய அரசியல் அமைப்பின்கீழ் உரிமைகளைச் செயல்படுத்த விரும்புகின்றது என்பதை உறுதிப்படுத்த விரும்புவதாக ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஆதாரம் : AsiaNews

6. கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள் சிரியாவிலும் மத்திய கிழக்கிலும் அமைதி நிலவ அழைப்பு

அக்.22,2013. ஐரோப்பாவின் வளமையான மரபுகள் ஒரு நினைவுச்சின்னமாக வியந்து நினைவுகூர்வதற்கல்ல, ஆனால் உலகாயுதப்போக்கிலும், கிறிஸ்தவமல்லாத உணர்விலும் சென்றுகொண்டிருக்கும் ஐரோப்பிய கலாச்சாரத்தைக் குணப்படுத்துவதற்கான வாழ்வின் ஊற்று அது என்று ஐரோப்பாவின் கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர். 
ஸ்லாவிய இன மக்கள் மத்தியில் நற்செய்தி அறிவிக்க வந்த புனிதர்கள் சிரில், மெத்தோடியஸ், சுலோவாக்கிய குடியரசின் Kosice நகருக்கு வந்ததன் 1150ம் ஆண்டையொட்டி அந்நகரில் கூட்டம் நடத்திய கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள், அத்திருஅவைகளின் அனைத்துக் கத்தோலிக்கருக்கும் நன்மனம்கொண்ட எல்லாருக்குமென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ளனர். 
கலாச்சாரத்தின் ஐரோப்பியத் தலைநகர் என்று 2013ம் ஆண்டில் அழைக்கப்படும் Kosice நகரிலிருந்து வெளியிட்டுள்ள செய்தியில், ஐரோப்பாவின் ஆழமான கிறிஸ்தவ மரபுகளை நினைவுபடுத்தியுள்ளனர் ஆயர்கள். 
மத்தியக் கிழக்கிலும், குறிப்பாக சிரியாவில் நம் சகோதர சகோதரிகள் எதிர்கொள்ளும் துன்பமானச் சூழலை நினைவுகூர்ந்துள்ள ஆயர்கள், திருத்தந்தையோடு இணைந்து அப்பகுதியில் அமைதி நிலவ வேண்டுகோள் விடுப்பதாக அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. நவீன அடிமைத்தனத்துக்குப் பல முகங்கள், மனித உரிமைகள் வல்லுனர்

அக்.22,2013. உலகெங்கும் நவீன அடிமைத்தனம் பல்வேறு பெயர்களில் இடம்பெற்றாலும், இந்த அடிமைத்தனம் எங்கும் மேலோங்கிக் காணப்படுகின்றது என்று மனித உரிமைகள் வல்லுனர் ஒருவர் கூறியுள்ளார். 
பல்வேறு விதமான பாலியல் வன்கொடுமைகள், கட்டாயத் தொழில்முறைகள், அடிமைத்தனத்துக்கு ஒத்த செயல்பாடுகள், உறுப்புக்களை எடுத்துவிடுதல் போன்றவை, ஐ.நா.வின் 2013ம் ஆண்டின் அடிமைநிலை குறித்த அறிக்கையின்படி நவீன அடிமைத்தனங்கள் என்று விளக்கியுள்ளார் மனித உரிமைகள் வல்லுனர் Ana Steele. 
அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் பிரிட்டனில் செயல்படும் தலித் சுதந்திர வலையமைப்பின் தலைவரான Ana Steele அவர்கள், நவீன அடிமைத்தனங்கள் எங்கெங்கு காணப்படுகின்றனவோ அவற்றைக் களைவது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தியுள்ளார். 
நவீன அடிமைத்தனங்கள் பல முகங்களை எடுத்துள்ளன என்பதையும், இன்று உலகில் 2 கோடியே 98 இலட்சம் பேர் நவீன அடிமைத்தனங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என ஐ.நா. அறிக்கை குறிப்பிடுவதையும் Steele அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : CNA

8. உணவுப்பொருள்கள் வீணாவதைக் குறைப்பது பசிக்கெதிரான நடவடிக்கைக்கு முக்கியம், ஐ.நா. அதிகாரி வலியுறுத்தல்

அக்.22,2013. உலக அளவில் உணவுப்பொருள்கள் இழக்கப்படுவதையும், வீணாவதையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்குப் புதிய சிந்தனை அவசியம் என்று FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத் தலைவர் கூறினார். 
உலக அளவில் உணவுப்பொருள்கள் இழக்கப்படுவதையும், வீணாவதையும் குறைப்பதுவே, பசியை ஒழிப்பதற்கான முயற்சியில்  முன்னேறிச் செல்வதற்கு இன்றியமையாதவை என, FAO இயக்குனர் José Graziano da Silva அவர்கள், Copenhagen நகரில் நடைபெறும் கூட்டத்தில் தெரிவித்தார். 
மனிதப் பயன்பாட்டுக்காகத் தயாரிக்கப்படும் உணவில் மூன்றில் ஒரு பகுதி, அதாவது ஏறக்குறைய 130 கோடி டன்கள் வீணாக்கப்படுகின்றன எனவும், இது ஆண்டுக்கு ஏறக்குறைய 750 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்துகின்றது எனவும் கூறினார் Graziano da Silva. 
உணவுப்பொருள்கள் வீணாவதைக் குறைத்தால், மேலும் 200 கோடிப் பேருக்கு உணவளிக்க முடியும் என்றும் கூறினார் Graziano da Silva. உலக வளங்கள் நிறுவனம்(WRI), உலக உணவு உற்பத்தி குறித்த கூட்டத்தில், உணவுப்பொருள்கள் வீணாவதைக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து உணவுப்பொருள்கள் இழக்கப்படுவதையும், வீணாவதையும் குறைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது FAO நிறுவனம்.

ஆதாரம் : UN

9. இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள்

அக்.22,2013. இந்தியாவின் பீஹார், ஜார்கண்ட் மாநிலங்களின் கிராமப் பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருவதாக அரசு-சாரா அமைப்புகள் கூறுகின்றன.  
மேலும், தமிழகத்தின் கோவை மாவட்டத்திலும், கடந்த மூன்று ஆண்டுகளாக குழந்தைகள் திருமணம் அதிகரித்து வருவதால், இது குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த  மாவட்ட சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.  
உலகளவில், இந்தியாவில்தான், அதிகப்படியான குழந்தைத் திருமணம் நடப்பதாக ஐக்கிய நாடுகள் குழந்தை நல அமைப்பான, "யுனிசெப்' தெரிவித்துள்ளது.  
18 வயது நிறைவடையாத ஒரு பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஓர் ஆணுக்கும் திருமணம் செய்து வைக்கப்படுவது, குழந்தைத் திருமணம் எனப்படுகிறது. இந்தியாவில், 48 விழுக்காட்டுப் பெண்களுக்கு 18 வயது நிறைவடைவதற்கு முன்பே திருமணம் செயப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  
இது, "குழந்தைத் திருமணம் தடுப்பு சட்டம்- 2006'ன் படி குற்றம். 18 வயது நிறைவடையாதப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் ஆண்மகன் மட்டுமின்றி, இத்திருமணத்தை நடத்திய அனைவரும் குற்றவாளிகளாகக் கருதப்படுவர்.  
வறுமை, சமூகச்சூழல், பாலியல் தொல்லை போன்ற பல்வேறு காரணங்களால் போதிய விழிப்புணர்வு இன்றி குழந்தைத் திருமணங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால், பெண்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், சிறுவயதில் கருவுறுதல், கருச்சிதைவு போன்றவற்றால் நலவாழ்வும் பாதிக்கப்படுகிறது. 
மேலும், 15 முதல் 19 வயதுள்ள பெண்கள் கர்ப்பம் தரித்தல் மற்றும் பிரசவத்தின்போது ஏற்படும் பிரச்னைகளால் இறப்புகளின் விகிதம் அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆதாரம் :  IANS/தினமலர்

No comments:

Post a Comment