Friday, 25 October 2013

செய்திகள் - 21.10.13

செய்திகள் - 21.10.13
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: பணத்தின் மீதான பேராசை, உறவுகளையும் குடும்பங்களையும் அழித்துவிடும்

2. கிறிஸ்தவ சபைகள் ஒரே குடும்பமாக ஒத்திணங்கிவருவது நிச்சயமன ஒன்று, திருத்தந்தை

3. கடவுளை அறிந்துகொள்ள, அவரிடமேச் செல்ல வேண்டும், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

4. நன்மையால் தீமையை வெல்வதற்கு செபம் உதவுகின்றது, திருத்தந்தை பிரான்சிஸ்

5. கிறிஸ்தவ மறைப்பணி மதமாற்றும் பணியல்ல, ஆனால், விசுவாசச் சுடரைப் பரப்பும் பணியாகும், திருத்தந்தை பிரான்சிஸ்

6. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு திருத்தந்தையின் ஆறுதல் செய்தி

7. குழந்தைகளை அடமானம் வைக்கும் பரிதாபம்

8. ஆப்பிரிக்க யானைகள் 10 ஆண்டுகளில் அழிந்துவிடலாம் - எச்சரிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: பணத்தின் மீதான பேராசை, உறவுகளையும் குடும்பங்களையும் அழித்துவிடும்

அக்.,21,2013. பல நல்ல விடயங்களையும் மனிதகுல முன்னேற்ற நடவடிக்கைகளையும் ஆற்றவல்ல பணத்தின்மீது மனிதனின் பேராசை அதிகரித்தால், அது நம்மை அழிப்பதோடு, குடும்பங்களையும் அழித்துவிடும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில், இத்திங்களன்று காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணத்தால் குடும்பங்கள் சிதறுவதும், உறவுகள் பிரிவதும் தினமும் இடம்பெறும் பிரச்னையாக உள்ளது என்றார்.
பணத்தின்மீது பற்றுவைத்து அதனை வழிபடத் துவங்கும்போது, பிறருடன் நாம் கொள்ளும் உறவுகளை அழிவுக்குள்ளாக்குகிறோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணமல்ல, மாறாக பணத்தின்மீது நாம் கொள்ளும் பேராசையே அழிவுக்குக் காரணமாகிறது என்றார்.
எல்லாமிருந்தும் அனைத்தையும் துறந்து நமக்காக எழையாக பிறந்த இறைவன், மனித குல முன்னேற்றத்திற்காகவே நமக்கு அனைத்தையும் கொடுத்துள்ளார், ஆகவே மற்றவர்களுக்கு உதவவேண்டியது நமது கடமையாகிறது என்றார் திருத்தந்தை.
தன் சகோதரருடன் சொத்துத் தகறாரைத் தீர்த்துவைக்க உதவும் என இயேசுவிடம் ஒருவர் கேட்டது மற்றும் அதற்கு இயேசு அளித்த பதில் ஆகிய கருத்துக்கள் அடங்கிய இன்றைய திருப்பலி வாசகம் குறித்து மறையுரையில் விளக்கமளித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒருவர் என்ன வைத்திருக்கிறார் என்பதைச்சார்ந்து அவர் வாழ்வு அமைவதில்லை, ஆகவே  பேராசைகளிலிருந்து விலகி கவனமாயிருங்கள் என மேலும் தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கிறிஸ்தவ சபைகள் ஒரே குடும்பமாக ஒத்திணங்கிவருவது நிச்சயமன ஒன்று, திருத்தந்தை

அக்.,21,2013. இறையியல் பேச்சுவார்த்தைகள் மூலமாக மட்டுமல்ல, பல்வேறு மேய்ப்புப்பணி நடவடிக்கைகளின் ஒத்துழைப்பு வழியாகவும், ஆன்மீக ஒன்றிப்பை வளர்க்கும் அர்ப்பணம் வழியாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இடம்பெற்றுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலக லூத்தரன் கூட்டமைப்பின் அங்கத்தினர்களையும், லூத்தரன்-கத்தோலிக்க ஒன்றிப்பு அவையின் அங்கத்தினர்களையும் இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விருகிறிஸ்தவ சபைகளும் ஒரே குடும்பமாக ஒத்திணங்கிவருவது நிச்சயமாக நிகழும் என்றும்,  அதற்கு இறைவனே நம் வழிகாட்டியாக இருப்பார் என்றும் கூறினார்.
லூத்தரன் சீர்திருத்தச் சபையின் 500ம் ஆண்டுக்கொண்டாட்டங்கள் 2017ம் ஆண்டு இடம்பெறவுள்ளதைப்பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த வரலாற்று உண்மைநிலைகளை ஆராய்வதோடு, கத்தோலிக்கர்களும் லூத்தரன் கிறிஸ்தவசபையினரும் ஒருவருக்கு எதிராக மற்றவர் இதுவரை ஆற்றியுள்ள தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்போம் எனவும் அழைப்புவிடுத்தார்.
ஒன்றிப்பை நோக்கி நாம் மேற்கொள்ளும் பயணத்தில், பொறுமை, பேச்சுவார்த்தை, புரிந்துகொள்ளுதல் ஆகியவை இன்றியமையாதவை என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. கடவுளை அறிந்துகொள்ள, அவரிடமேச் செல்ல வேண்டும், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

அக்.,21,2013. 'நாம் கடவுளை அறிந்துகொள்ள விரும்பினால் நாம் அவரிடம் செல்லவேண்டும். நற்கருணைப் பேழையின்முன் அமைதியில் அவருக்குச் செவிமடுப்பதுடன், திருவருள் சாதனங்களில் அவரை அணுகுவோம்', என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
இதே திங்கள்கிழமையன்று காலை திருப்பீடத்தில், வத்திக்கானுக்கான அமெரிக்க ஐக்கியநாட்டின் புதியத் தூதுவர் Kenneth Francis Hackett டமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. நன்மையால் தீமையை வெல்வதற்கு செபம் உதவுகின்றது, திருத்தந்தை பிரான்சிஸ்

அக்.21,2013. தீமைக்கு எதிரான போராட்டத்தில் செபம் ஆயுதமாக இருக்கின்றது என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய  திருத்தந்தை பிரான்சிஸ், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரமும் நன்மையால் தீமையை வெல்வதற்குத் தம்மோடு சேர்ந்து போராட அழைக்கும் இறைவனில் கொண்டுள்ள விசுவாசத்தின் வெளிப்பாடே இடைவிடாத செபம் என்று கூறினார்.
நமது தேவை என்னவென்று இறைவன் அறியவில்லை என்பதற்காகவோ அல்லது நமது செபத்தை அவர் கேட்கவில்லை என்பதற்காகவோ நாம் இடைவிடாது தொடர்ந்து செபிக்க வேண்டுமென்று இறைவன் வலியுறுத்தவில்லை, மாறாக, அவர் நமது செபத்தை எப்பொழுதும் அன்புடன் கேட்கிறார், நம்மைப் பற்றி எல்லாம் அறிந்திருக்கிறார், குறிப்பாக, நம் வாழ்வுப் பயணத்தில் உள்ளும் புறமும் நாம் தீமையோடு எதிர்கொள்ளும் போராட்டத்தில் அவர் நம்மோடு இருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
நாம் இறைவனோடு சேர்ந்து அவரை அருகில் வைத்துக்கொண்டு போராடுகிறோம், அதற்கு அவரது அன்பையும் கருணையையும், அவரது உதவியையும் உணரச்செய்யும் ஆயுதம் செபம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இப்போராட்டம் கடினமானது மற்றும் நீண்டது, இதற்குப் பொறுமையும் விடா உறுதியும் தேவை என்றும் எடுத்துரைத்தார்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், விசுவாசமும் செபமும் இல்லையென்றால், நாம் இருளில் நடப்பவர்களாக இருப்போம், நம் வாழ்வுப் பயணத்தில் நம்மை இழந்துவிடுவோம் என்றும் கூறினார்.
பல பெண்கள் தங்களின் குடும்பங்களுக்காகப் போராடுகிறார்கள், இவர்கள் சோர்வுறாமல் செபிக்கின்றார்கள், இப்பெண்களை இந்று நினைவுகூருவோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியபோது கூட்டத்தினர் பலமாக கைதட்டி அதனை வரவேற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. கிறிஸ்தவ மறைப்பணி மதமாற்றும் பணியல்ல, ஆனால், விசுவாசச் சுடரைப் பரப்பும் பணியாகும், திருத்தந்தை பிரான்சிஸ்

அக்.21,2013. மேலும், இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக மறைபரப்பு ஞாயிறு குறித்தும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவ மறைப்பணி மதமாற்றும் பணியல்ல, ஆனால், விசுவாசச் சுடரைப் பரப்பும் பணியாகும் என்று கூறினார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் ஒரு திருட்டுச் சம்பவத்தில் சில நாள்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட இத்தாலிய அருள்சகோதரி Afra Martinelli பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், நைஜீரியாவில் பல ஆண்டுகள் மறைப்பணியாற்றிய இந்த அருள்சகோதரி தனது வாழ்வாலும், இச்சகோதரி உருவாக்கிய கல்வி மையத்தின் பணி வழியாகவும் நற்செய்தி அறிவித்தார் என்றும் கூறினார்.
இந்த அருள்சகோதரியின் இறப்புக்கு ஒவ்வொருவரும், கிறிஸ்தவரும் முஸ்லீம்களும் வருந்தினர் எனவும் திருத்தந்தை கூறினார்.
மேலும், பிலிப்பீன்சில் இம்மாதம் 15ம் த்தி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும்  திருத்தந்தை நினைவுகூர்ந்து இதில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகச் செபிக்குமாறும் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
அர்ஜென்டினாவில் இஞ்ஞாயிறன்று அனைனையர் தினம்   சிறப்பிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து அனைத்து அனைனையர்க்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு திருத்தந்தையின் ஆறுதல் செய்தி

அக்.,21,2013. ஆஸ்திரேலியாவின் New South Wales பகுதியில் இடம்பெற்ற காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் இரங்கல்தந்தி ஒன்றை திருத்தந்தையின் பெயரால் ஆஸ்திரேலிய ஆயர்பேரவைக்கு அனுப்பியுள்ளார் புதியத் திருப்பீடச் செயலர் பேராயர் Pietro Parolin.
இந்தக் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களுக்கும், இதனால் உறைவிடங்களை இழந்தவர்களுக்கும் தன் செபத்தையும் ஆறுதலையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்குவதாகக் கூறும் இத்தந்திச்செய்தி, தீயை அணைப்பதில் தொடர்ந்து உழைத்துவரும் பணியாளர்களுக்கு தன் ஊக்கத்தை வழங்குவதாகவும் கூறுகிறது. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீவிபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் ஒருமைப்பாட்டை அறிவிப்பதோடு தன் ஆசீரையும் திருத்தந்தை வழங்குவதாக திருப்பீடச்செயலர் பேராயர் பரோலினின் அவர்கள் அனுப்பியுள்ள தந்திச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. குழந்தைகளை அடமானம் வைக்கும் பரிதாபம்

அக்.,21,2013. சேலம் மாவட்டத்தில் இருந்து, பிழைப்பு தேடி, ஆந்திரா மற்றும் கேரளாவுக்குச் செல்லும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை, பாதுகாப்புக்காகவும், பணத்துக்காகவும் மளிகைக் கடை, உணவு விடுதி உள்ளிட்ட இடங்களில், அடமானம் வைப்பதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளன செய்தி நிறுவனங்கள்.
சேலம் மாவட்டம், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, ஆத்தூர் உட்பட, பல இடங்களில் இருந்து, பிழைப்பு தேடி, வெளியூர் செல்லும் பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகளை, பாதுகாப்பு கருதியும், பணத்துக்காகவும், மளிகைக் கடை, உணவு விடுதி, ஜவுளிக்கடை உட்பட, பல இடங்களில், குறைந்த அளவு பணத்தை பெற்றுக்கொண்டு, ஆறு மாதம் முதல் ஓர் ஆண்டுவரை அடமானம் வைத்துவிட்டு, வெளிமாநிலத்துக்குச் செல்வதாகவும், ஊர் திரும்பிய பின், குழந்தையை மீட்டு, சில மாதம் வரை, குழந்தைகளை தங்களுடன் வைத்துக்கொண்டு, மீண்டும், குழந்தைகளை அடகு வைத்துவிட்டு, வெளிமாநிலத்துக்கு சென்று விடுவதால், அடமானம் வைக்கப்படும் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது என்றும் கூறுகின்ற‌ன‌ பிற‌ர்ந‌ல‌ அமைப்புக‌ள்.

ஆதாரம் : Dinamalar

8. ஆப்பிரிக்க யானைகள் 10 ஆண்டுகளில் அழிந்துவிடலாம் - எச்சரிக்கை

அக்.,21,2013. சட்டவிரோத தந்த வேட்டையால் ஆப்பிரிக்க யானைகள் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் 30 நாடுகளில் அழிந்துபோய்விடும் என்று விலங்கு பாதுகாப்புக் குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ள‌ன‌.
தந்தத்துக்காக பல்லாயிரக்கணக்கான யானைகள் ஆண்டுதோறும் அழிக்கப்படுவதாகவும், கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது அதிகம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக சீனாவில் யானைத்தந்தத்துக்கான தேவை அதிகமாகக் காணப்படுகிறது

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment