Monday, 21 October 2013

செய்திகள் - 16.10.13

செய்திகள் - 16.10.13
 ------------------------------------------------------------------------------------------------------

1. 'உலக உணவு நாள்' மனித சமுதாயத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கடினமான ஒரு சவால் - திருத்தந்தை

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்கள் மீது கொண்டுள்ள அன்பு  தெளிவாகிறது - பேராயர் Vincenzo Paglia

3. 'பக்ரீத் விழா'வைக் கொண்டாடிய இஸ்லாம் மதத்தினருக்கு நைஜர் நாட்டின் ஆயர்கள் அனுப்பிய வாழ்த்துக்கள்

4. வியட்நாம் ஆயர்கள் மக்களுக்கு விடுத்துள்ள அழைப்பு

5. ஏழைகளிடம் திருடுவதே ஊழலாக உருவெடுக்கிறது - தென் ஆப்ரிக்க ஆயர்கள் பேரவை

6. திருப்பயணங்கள் அமைதியை வளர்க்கும் பாலங்களாக அமைவதையே இஸ்ரேல் அரசு விரும்புகிறது - இஸ்ரேல் நாட்டு அமைச்சர்

7. இத்தாலியில் வாழும் வயதான பெண்ணுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்த பண உதவி

8. 'குப்பை' இல்லாத தேர்தல் பிரச்சாரம்: 'இமேஜ் இந்தியா' நிறுவனத்தின் வேண்டுகோள்

------------------------------------------------------------------------------------------------------

1. 'உலக உணவு நாள்' மனித சமுதாயத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கடினமான ஒரு சவால் - திருத்தந்தை

அக்.16,2013. 'உலக உணவு நாள்' மனித சமுதாயத்திற்கு கடினமான ஒரு சவாலை விடுக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அக்டோபர் 16, இப்புதனன்று உலகெங்கும் சிறப்பிக்கப்படும் உலக உணவு நாளையொட்டி, உரோம் நகரில் அமைந்துள்ள ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனமான FAOவின் தலைமை இயக்குனர் José Graziano da Silva அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
உலகம் பல்வேறு துறைகளில் வியப்பிற்குரிய முன்னேற்றங்களைக் கண்டுவரும் இக்காலத்தில், இன்னும் கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி வாடுவது, இச்சவாலை நம்மனங்களில் இன்னும் ஆழமாகப் பதிக்கிறது என்று திருத்தந்தை கூறினார்.
உலக உணவு நாளுக்கென இவ்வாண்டு FAO தெரிவு செய்துள்ள "உணவு பாதுகாப்பு, சத்துணவு, தகுதியான உணவு முறைகள்" (Sustainable Food Systems for Food Security and Nutrition) என்ற மையக்கருத்து மிகவும் பொருத்தமானது என்று திருத்தந்தை தன் செய்தியில் பாராட்டியுள்ளார்.
இவ்வாண்டின் மையக்கருத்து, நாம் இயற்கைச் செல்வங்களை எவ்வளவு தூரம் உறுஞ்சி, வீணாக்குகிறோம் என்பதை ஆழமாகச் சிந்திக்க விடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
வறியோரின் பசியைத் தீர்ப்பதற்கு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டும் தீர்வுகளைக் காணமுடியாது, மாறாக, ஆன்மீக, நன்னெறி வழிகள் மூலமே நிரந்தரத் தீர்வுகளைக் காணவேண்டும் என்று திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
இன்று சிறப்பிக்கப்படும் உலக உணவு நாள் வெறும் சடங்காக மாறாமல்உணவுப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பாக நாம் கருதவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பிரச்சனையைத் தீர்க்கும் அனைத்து முயற்சிகளிலும் கத்தோலிக்கத் திருஅவை முழு ஈடுபாடு கொள்ளும் என்ற உறுதியையும் வழங்கியுள்ளார்.
இப்புதன் காலை, உரோம் நகில் FAO நிறுவனத்தின் மைய அரங்கத்தில் நடைபெற்ற நிகழவில், திருத்தந்தையின் செய்தியை, திருப்பீட உயர் அதிகாரி, ஆயர் Luigi Travaglino அவர்கள் வாசித்தார்.
1945ம் ஆண்டு, அக்டோபர் 16ம் தேதி, உலக உணவு வேளாண் நிறுவனமான FAO அமைக்கப்பட்டதன் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி, உலக உணவு நாள் சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்கள் மீது கொண்டுள்ள அன்பு  தெளிவாகிறது - பேராயர் Vincenzo Paglia

அக்.16,2013. அடுத்த ஆண்டு கூடவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கு, குடும்பங்களை  மையக்கருத்தாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்துள்ளது, குடும்பங்கள் மீது அவர் கொண்டுள்ள அன்பைத் தெளிவாக்குகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் 19ம் தேதி முடிய உரோம் நகரில் கூடவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கு, "நற்செய்தி அறிவிப்புச் சூழலில், குடும்பங்கள் சந்திக்கும் மேய்ப்புப்பணி தொடர்பான சவால்கள்" என்ற மையக்கருத்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தந்தை தெரிவு செய்துள்ள இக்கருத்தையொட்டி, CNA கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியொன்றில், குடும்பப் பணிகள் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Vincenzo Paglia அவர்கள் இவ்வாறு கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் சங்கமும், 1980ம் ஆண்டு திருத்தந்தை, முத்திப்பேறு பெற்ற 2ம் ஜான் பால் அவர்களால் கூட்டப்பட்ட சிறப்பு ஆயர் மாமன்றமும் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளன என்று கூறிய பேராயர் Paglia அவர்கள், தெளிந்த அறிவுடனும், துணிவுடனும் திருஅவை பயணிக்க வேண்டிய வழியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நம்மை வழிநடத்துகிறார் என்றும் கூறினார்.

ஆதாரம் : CNA

3. 'பக்ரீத் விழா'வைக் கொண்டாடிய இஸ்லாம் மதத்தினருக்கு நைஜர் நாட்டின் ஆயர்கள் அனுப்பிய வாழ்த்துக்கள்

அக்.16,2013. நம்பிக்கை கொள்வோர் அனைவரின் தந்தையான ஆபிரகாம் செலுத்திய பலியை நினைவுகூரும் இஸ்லாம் சகோதரர்களை தாங்கள் வாழ்த்துவதாக ஆப்ரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
அக்டோபர் 15, இச்செவ்வாயன்று ஆபிரகாம் செலுத்திய பலியை நினைவுகூரும் வகையில், 'பலி விழா' என்று பொருள்படும் பக்ரீத் (Aid El Adha) விழாவைக் கொண்டாடிய இஸ்லாம் மதத்தினர் அனைவருக்கும் நைஜர் நாட்டின் ஆயர்கள் தங்கள் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர்.
இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட இவ்விழா, மலைபோல் குவிந்துள்ள பிரச்சனைகளின் மத்தியில் கொண்டாடப்பட்டது என்பதைக் கூறும் ஆயர்களின் செய்தி, நம்மைச் சூழ்ந்துள்ள துயரங்கள், நம்மை ஒருங்கிணைக்கும் கருவியாக அமையவேண்டும் என்ற தங்கள் ஆவலையும் வெளியிட்டுள்ளது.
கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் வன்முறைகளைக் கையாளும்போது மனித குலத்திற்கும், இறைவனுக்கும் எதிராகச் செயலாற்றுகின்றனர் என்பதையும் நைஜர் ஆயர்களின் செய்தி எடுத்துரைக்கிறது.

ஆதாரம் : Fides

4. வியட்நாம் ஆயர்கள் மக்களுக்கு விடுத்துள்ள அழைப்பு

அக்.16,2013. புதிய வழிகளில் நற்செய்தியை எடுத்துரைத்தல், வாழ்வை ஆதரித்தல், குடும்பங்களைப் பேணுதல் ஆகிய மூன்று அழைப்புக்களை அண்மையில் வியட்நாம் ஆயர்கள் மக்களுக்கு விடுத்துள்ளனர்.
வியட்நாமில் உள்ள 26 மறைமாவட்டங்களின் ஆயர்கள் அண்மையில் Ho Chi Minh நகரில் மேற்கொண்ட ஆண்டு கூட்டத்தின் இறுதியில் வெளியிட்ட ஒரு பொது மடலில் இம்மூன்று அழைப்புக்களையும் விடுத்துள்ளனர்.
திருமணம், வாழ்வைப் பேணும் கலாச்சாரம், குறிப்பாக, கருக்கலைத்தலுக்கு எதிரான ஒரு நிலைப்பாடு ஆகியவற்றை கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளும்போது, அவை, குடும்ப வாழ்வை ஆழப்படுத்தும் முயற்சிகளாக மாறும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
அருள் பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் பொது நிலையினர் ஆகியோரை தகுந்த வழிகளில் உருவாக்கும் திட்டங்கள் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் ஆயர்களின் பொது மடல் எடுத்துரைத்துள்ளது.

ஆதாரம் : AsiaNews

5. ஏழைகளிடம் திருடுவதே ஊழலாக உருவெடுக்கிறது - தென் ஆப்ரிக்க ஆயர்கள் பேரவை

அக்.16,2013. "ஏழைகளிடம் திருடுவதே ஊழலாக உருவெடுக்கிறது" என்ற கருத்துடன் தென் ஆப்ரிக்காவில் நிலவும் ஊழலைக் கண்டனம் செய்து தென் ஆப்ரிக்க ஆயர்கள் பேரவை ஒரு மேய்ப்புப்பணி சுற்று மடலை வெளியிட்டுள்ளது.
போட்ஸ்வானா, சுவாசிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் ஆயர்கள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த மடலில், தனிப்பட்டவர்களுக்கு ஊழலாக அளிக்கப்படும் தொகை, ஏழைகளைச் சென்றடைய வேண்டிய பணம் என்று கூறியுள்ளனர்.
வறியோரின் குடியிருப்புக்கள், அவர்களது நல வாழ்வுப் பணிகள் ஆகியவற்றிற்குத் தேவையான பணம் ஊழல் தொகையாக ஒரு சில மனிதர்களை அடைவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி என்றும் ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள், மதப் பணியாளர்கள் என்று பல நிலைகளிலும் உள்ளவர்கள் ஊழலை தங்கள் வாழ்வு முறையாக மாற்றி வருகின்றனர் என்பதைக் குறித்து ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
தென் ஆப்ரிக்க ஆயர்கள் பேரவையின் நீதி, அமைதிப் பணிக்குழுவின் வழியாக, ஊழல்கள் நிகழும் அலுவலகங்கள், கையூட்டு பெறும் தனி நபர்கள் ஆகியோரை அம்பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக ஆயர்களின் சுற்று மடல் கூறியுள்ளது.

ஆதாரம் : Fides

6. திருப்பயணங்கள் அமைதியை வளர்க்கும் பாலங்களாக அமைவதையே இஸ்ரேல் அரசு விரும்புகிறது - இஸ்ரேல் நாட்டு அமைச்சர்

அக்.16,2013. புனித பூமியில் திருப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு நல்ல சேவையை வழங்குவதால், அவர்கள், தங்கள் நாடுகளில், புனித பூமியைப் பற்றி எடுத்துரைக்கும் நல்லெண்ணத் தூதர்களாக மாறுவதையே நாங்கள் விரும்புகிறோம் என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் கூறியுள்ளார்.
அக்டோபர் 14, இத்திங்களன்று முதுபெரும் தந்தை Twal அவர்களும், இஸ்ரேல் நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் Uzi Landau அவர்களும் மேற்கொண்ட வரலாறு காணாத ஒரு சந்திப்பின் இறுதியில், முதுபெரும் தந்தை Twal அவர்கள் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
இச்சந்திப்பு, கத்தோலிக்கத் திருஅவைக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே புதியதொரு சகாப்தத்தைத் துவக்கியுள்ளது என்றும், திருப்பயணங்கள் அமைதியை வளர்க்கும் பாலங்களாக அமைவதையே இஸ்ரேல் அரசு விரும்புகிறது என்றும் அமைச்சர் Landau அவர்கள் தெரிவித்தார்.
2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி முதல், இவ்வாண்டு நவம்பர் 24ம் தேதி முடிய நடைபெற்றுவரும் நம்பிக்கை ஆண்டின் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக, நவம்பர் 17, ஞாயிறன்று, நாசரேத்தில் உள்ள Precipice என்ற மலையில், முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் ஆற்றும் ஒரு சிறப்புத் திருப்பலியில், இத்தாலி, ஸ்பெயின், பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் திருப்பயணிகள் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : ICN

7. இத்தாலியில் வாழும் வயதான பெண்ணுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்த பண உதவி

அக்.16,2013. இத்தாலியின் வெனிஸ் நகரில் வாழும் ஒரு வயதான பெண்ணுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் பண உதவி செய்தது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெனிஸ் நகரில் வாழும் 80 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண், நோயுற்று மருத்துவமனையில் இருந்த தன் கணவனைக் காணச் செல்லும் வழியில், பேருந்தில் அவரது 'பர்ஸ்' பறிக்கப்பட்டதையும், அதன் விளைவாக தான் 54 யுரோக்களை இழந்ததையும் ஒரு மடலில் திருத்தந்தைக்கு எழுதியிருந்தார்.
அந்தப் பெண் வாழும் பகுதியில் உள்ள ஒரு பங்குக் கோவிலின் தந்தை Giovanni Antoniazzi அவர்களுக்கு, திருத்தந்தையின் தர்மப் பணிகளை ஏற்று நடத்தும் பேராயர் Konrad Krajewski அவர்கள் மடல் ஒன்றை அனுப்பி, அதில் 200 யூரோக்கள் மதிப்புள்ள காசோலையையும் அனுப்பி, அந்தத் தொகையை அந்தப் பெண்ணுக்குத் தரும்படி சொல்லியிருந்தார்.
திருத்தந்தையின் இந்தப் பரிவைக் கண்ட பங்குத்தந்தையும், அந்தப் பெண்ணும் ஆனந்த அதிர்ச்சியுற்றதாக செய்திகள் கூறுகின்றன.
அண்மையில் லாம்பதூசா தீவுக்கருகே நீரில் மூழ்கி, காப்பாற்றப்பட்ட ஒவ்வொருவருக்கும் திருத்தந்தையின் பெயரால் 300 யூரோக்கள் அனுப்பப்பட்டன என்றும், அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நாட்டையோ அல்லது வேறு உறவுகளையோ தொலைபேசியில் தொடர்பு கொள்ள அவர்கள் ஒவ்வொருவருக்கும் தொலைபேசி 'கார்ட்'களையும் திருத்தந்தை அனுப்பியிருந்தார் என்றும் Mail Online என்ற ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.
ஜூன் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட Harley Davidson இருசக்கர வாகனத்தை அவர் ஏலத்தில் விட்டு, அந்தத் தொகையைக் கொண்டு, வீடற்றோருக்கு விடுதி ஒன்றை கட்டும் நிதியைத் துவக்கவிருப்பதாகவும் திருத்தந்தை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Mail Online

8. 'குப்பை' இல்லாத தேர்தல் பிரச்சாரம்: 'இமேஜ் இந்தியா' நிறுவனத்தின் வேண்டுகோள்

அக்.16,2013. இந்தியாவில் வரவிருக்கும் தேர்தலையொட்டி, கூட்டங்கள் துவங்கியுள்ள வேளையில், பிரச்சாரம், பேரணிகளுக்கு மக்கள் கூட்டத்தை கருத்தில் கொள்ளும் அரசியல் தலைவர்கள் சுற்றுப்புறச் சூழல் குறித்து கவலை கொள்வதாக தெரியவில்லை என்பதை, 'இமேஜ் இந்தியா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.
ஒரு பெரிய திடலில், லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சாரமோ, பேரணியோ முடிந்த பிறகு, அங்கு நிறைந்திருப்பது அக்கூட்டம் விட்டுச்சென்ற குப்பை குவியல்களாகவே இருக்கும் என்று கூறும் 'இமேஜ் இந்தியா' நிறுவனம், குப்பைகள் இல்லாமல் தேர்தல் பிரசாரம் நடந்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வியை எழுப்பி வருகிறது.
இந்தியாவில் போதிய அளவில் கழிப்பிடங்கள் அமைக்கப்பட வேண்டும், நலமானச் சுற்றுச்சூழல், தூய்மையான நதிகள் ஆகியவற்றை அமைக்க அரசியல் தலைவர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் ஆகியன இந்நிறுவனத்தின் கோரிக்கைகளாக இருக்கின்றன.
சுற்றுப்புறத் தூய்மையைக் கடைபிடிப்பதையும், தேர்தல் அறிக்கையில் ஒரு கொள்கையாக அரசியல் கட்சிகள் பட்டியிலிட வேண்டும் என்றும், தேர்தல் பிரச்சாரங்களின் போது சுற்றுப்புறத் தூய்மைக்கு முன்னுரிமை அளித்து, தொண்டர்களுக்கும் இதனை வலியுறுத்த வேண்டும் எனவும் 'இமேஜ் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : தி இந்து

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...