செய்திகள் - 15.10.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இன்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் வெளிவேடக்காரரும், தற்புகழ்ச்சியாளரும் உள்ளனர், திருத்தந்தை பிரான்சிஸ்
2. கர்தினால் பெர்த்தோனே அவர்களின் திருப்பீடச் செயலர் பணி நிறைவு
3. கர்தினால் பெர்த்தோனே அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நன்றிச் செய்தி
4. திருப்பீடச் செயலகம், கர்தினால் பெர்த்தோனே அவர்களுக்கு நன்றி
5. கருக்கலைப்பு விவகாரம் தொடர்பாக ஈக்குவதோர் அரசுத்தலைவர் எடுத்துள்ள முடிவுக்கு தலத்திருஅவை பாராட்டு
6. 'அல்லா' என்ற வார்த்தை திருவழிபாடுகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படும், கோலாலம்பூர் பேராயர்
7. திருத்தந்தை பிரான்சிஸ், IOM நிறுவன இயக்குனர் சந்திப்பு
8. உலகில் பசியால் வாடுவோரில் 25 விழுக்காட்டினர் இந்தியாவில் உள்ளனர், GHI அறிக்கை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இன்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் வெளிவேடக்காரரும், தற்புகழ்ச்சியாளரும் உள்ளனர், திருத்தந்தை பிரான்சிஸ்
அக்.15,2013. தாங்கள் நினைப்பதே சரியானது, தங்களின் எண்ணங்கள் எல்லா வல்லமையும் கொண்டவை எனக் கருதும் தங்களையேப் போற்றுகிறவர்களும், பகட்டான, வீணான, தனது
முன்னேற்றத்தில் ஆர்வமுடைய வெளிவேடக்காரர்களும் இன்றும் கிறிஸ்தவர்கள்
மத்தியில் உள்ளனர் என்று இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவையெல்லாம் கீழ்த்தரமானவை என்றும், இவற்றை விலக்கி நடப்பதற்கு கடவுளன்பு மற்றும் பிறரன்பு கட்டளையை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இச்செவ்வாய் காலை, புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பறப்பன, நடப்பன, ஊர்வன, ஆகியவற்றைப் போல உள்ள உருவங்களை வழிபட்ட மக்களுக்கு எதிராக புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில் கூறியதை (உரோ.1:16-25) வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை, சிலைவழிபாட்டுப் பாவம் பற்றிப் பேசினார்.
கடவுளை அறிவதையும், அவரை மகிமைப்படுத்துவதையும், அவருக்கு நன்றி கூறுவதையும் விட்டு படைப்புக்களை வணங்கும் மக்கள் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தப் போக்கு, உண்மையான விசுவாசத்தை ஒதுக்கும் சிலைவழிபாட்டுத்தன்மை என்று கூறினார்.
இன்று நாம் சிலைகளை வணங்காவிட்டாலும், வேறுவிதமான சிலைவழிபாடுகள் நம் மத்தியில் இருக்கின்றன என்றும், என்னுள் மறைந்திருக்கும் சிலை என்ன?, நம் ஆண்டவரின் இடத்தை எடுத்துக்கொள்வது எது? என்று நாம் ஒவ்வொருவரும் கடவுள் முன்பாக கேட்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை அன்பு செய்வதும், அவரை வழிபடுவதும் என்பது நமது அயலாரை அன்பு செய்வதாகும், இது எளிதானது, ஆனால் கடினமானது, இதனை இறையருளின் உதவியினால் மட்டுமே செய்ய முடியும், இந்த வரத்தை நாம் கேட்போம் என்று மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. கர்தினால் பெர்த்தோனே அவர்களின் திருப்பீடச் செயலர் பணி நிறைவு
அக்.15,2013. இச்செவ்வாயன்று திருப்பீடச் செயலகப் பணியை நிறைவு செய்த கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அவர்கள், திருப்பீட நிர்வாகத்தில் ஆற்றிய பணிகளுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானிலுள்ள திருப்பீடச் செயலகத்தின் நூலகத்தில் நடைபெற்ற சிறிய நிகழ்வில் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின் அவர்கள், அறுவைச் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வருவதால், இன்னும் சில வாரங்களில் அவர் இந்தப் பணியைத் தொடங்குவார் என அறிவித்தார்.
தற்போது பேராயர் பரோலின் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லையெனினும், அவர், திருப்பீடச் செயலகத்தில் மிகுந்த ஆற்றலுடனும், ஆர்வத்துடனும், மனித நேயம் கலந்த உரையாடல் திறமையுடனும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி புதிய திருப்பீடச் செயலராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமனம் செய்யப்பட்ட பேராயர் பியத்ரோ பரோலின் அவர்கள், தற்போது வெனெசுவேலா நாட்டுத் திருப்பீடத் தூதராக உள்ளார்.
பேராயர் பரோலின், 2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை திருப்பீடச் செயலகத்தில் பணியாற்றியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. கர்தினால் பெர்த்தோனே அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நன்றிச் செய்தி
அக்.15,2013.
இச்செவ்வாயன்று திருப்பீடச் செயலகப் பணியை நிறைவு செய்த கர்தினால்
தர்ச்சீசியோ பெர்த்தோனே அவர்களுக்கு நன்றி தெரிவித்து செய்தி ஒன்றையும்
அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2006ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதியன்று திருப்பீடச் செயலராகப் பணியைத் தொடங்கிய கர்தினால் பெர்த்தோனே அவர்கள், தாராள உள்ளத்தோடும், சேவை உணர்வோடும் பணியாற்றியுள்ளார் எனப் பாராட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பணியை நிறைவுசெய்யும் கடைசி நாள்வரை தன்னோடு மிகுந்த ஒத்துழைப்புடன் அவர் செயலாற்றியதையும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புமிக்க
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் சார்பாகவும் நன்றி
தெரிவிப்பதாகவும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளைக்
கொண்டிருப்பவர்களுக்கு எதுவுமே குறைவுபடாது என்பதை இன்று நாம் விழாக்
காணும் புனித அவிலா தெரேசாள் கூறுகிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ள
திருத்தந்தை பிரான்சிஸ், புனித தொன்போஸ்கோ மற்றும் சலேசிய உணர்வுகளோடு கர்தினால் பெர்த்தோனே அவர்கள் வாழ்வதையும் பாராட்டியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருப்பீடச் செயலகம், கர்தினால் பெர்த்தோனே அவர்களுக்கு நன்றி
அக்.15,2013. "திருப்பீடச் செயலகம், கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அவர்கள் ஆற்றிய பணிகளுக்கு நன்றிகூறும் அதேவேளை, புதிய திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின் அவர்களை வரவேற்கிறது" என்ற செய்தியை தனது Twitter பக்கத்தில் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது அச்செயலகம்.
மேலும், பேராயர் பரோலின் அவர்கள், திருப்பீடச் செயலராக நியமனம் செய்யப்பட்டிருப்பது நல்லதொரு தேர்வு என்றும், இவர் தனது புதிய பணியை மிக, மிக நன்றாகச் செய்வார் என்றும், திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறியுள்ளார்.
பேராயர் பரோலின் அவர்கள் மேய்ப்புப்பணி கண்ணோட்டம் உள்ளவர், நன்றாக பேச்சுவார்த்தை நடத்துபவர், சமநிலையில் இருப்பவர் மற்றும் எதார்த்தமானவர் என்று பாராட்டிப் பேசியுள்ளார் கர்தினால் Tauran.
பேராயர் பரோலின் பற்றி வத்திக்கான் வானொலியில் பேசியபோது இவ்வாறு பாராட்டியுள்ளார் கர்தினால் Tauran. இவர், திருப்பீடச் செயலகத்தில் பேராயர் பரோலின் அவர்களுடன் சேர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றியிருப்பவர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. கருக்கலைப்பு விவகாரம் தொடர்பாக ஈக்குவதோர் அரசுத்தலைவர் எடுத்துள்ள முடிவுக்கு தலத்திருஅவை பாராட்டு
அக்.15,2013. ஈக்குவதோர் நாட்டில் கருக்கலைப்பை சட்டப்படி அங்கீகரிப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து அந்நாட்டு அரசுத்தலைவர் Rafael Correa அவர்கள் எடுத்துள்ள முடிவு பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார் தலத்திருஅவைத் தலைவர் ஒருவர்.
ஈக்குவதோர் அரசுத்தலைவரின் துணிச்சலைத் தான் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ள, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Antonio Arregui, மனித வாழ்வு புனிதமானது, இது எந்நிலையிலும் அழிக்கப்படக் கூடாது எனக் கூறியுள்ளார்.
மேலும், ஈக்குவதோர் சட்டசபை கருக்கலைப்பை சட்டப்படி அங்கீகரித்தால் தான் பதவியிலிருந்து விலகப்போவதாக எச்சரித்துள்ளார் அரசுத்தலைவர் Correa.
தான் ஒரு கத்தோலிக்கர், மனிதநேயமிக்கவர் மற்றும் இடதுசாரி என்று தன்னை அடையாளம் காட்டியுள்ள அரசுத்தலைவர் Correa, கருக்கலைப்பைக் குற்றமற்றதாக்கும் முயற்சியை, தான் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.
ஆதாரம் : Fides
6. 'அல்லா' என்ற வார்த்தை திருவழிபாடுகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படும், கோலாலம்பூர் பேராயர்
அக்.15,2013. மலேசியாவில் கிறிஸ்தவ வெளியீடுகளில் 'அல்லா' என்ற
வார்த்தை பயன்படுத்தப்படுவது குறித்து மலேசிய நீதிமன்றம் ஒன்று
வழங்கியுள்ள தீர்ப்பு அதிகமாக அரசியலாக்கப்பட்டுள்ளது என்று கோலாலம்பூர்
பேராயர் மர்ஃபி பாக்யம் அவர்கள் குறை கூறியுள்ளார்.
'அல்லா' என்ற வார்த்தையை முஸ்லீம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, "Herald Malaysia" என்ற கத்தோலிக்க வார இதழில், அவ்வார்த்தை பயன்படுத்தப்படுவதைத் தடை செய்யும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்றும், இத்தீர்ப்பு, தாங்கள் எதிர்பார்த்ததே என்றும் Fides செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் பேராயர் பாக்யம்.
இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்த பேராயர் பாக்யம், 17ம் நூற்றாண்டிலிருந்தே, மலேசியாவில் கத்தோலிக்கர் கடவுளைக் குறிப்பதற்கு 'அல்லா' என்ற வார்த்தையையே பயன்படுத்தி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும், 'அல்லா' என்ற வார்த்தை திருவழிபாடுகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் கோலாலம்பூர் பேராயர் கூறியுள்ளார்.
2 கோடியே 90 இலட்சம் மக்களைக் கொண்ட மலேசியாவில் 60 விழுக்காட்டினர் முஸ்லீம்கள், 19 விழுக்காட்டினர் புத்தமதத்தினர், 6 விழுக்காட்டினர் இந்துக்கள், 6 விழுக்காட்டினர் பிரிந்த கிறிஸ்தவ சபையினர் மற்றும் 3 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.
ஆதாரம் : Fides
7. திருத்தந்தை பிரான்சிஸ், IOM நிறுவன இயக்குனர் சந்திப்பு
அக்.15,2013. குடியேற்றதாரர் மற்றும் சமூகத்தில் நலிந்த மக்களுக்கு ஆதரவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து விடுத்துவரும் உறுதியான அழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார், IOM என்ற அனைத்துலக குடியேற்றதாரர் நிறுவனப் பொது இயக்குனர் William Lacy Swing.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த பின்னர் வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த IOM இயக்குனர் Swing அவர்கள், லாம்பெதுசா தீவுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட முதல் திருத்தந்தையாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உள்ளார் எனவும், அவர் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே இத்தீவுக்குச் சென்றுள்ளார் எனவும் பாராட்டிப் பேசினார்.
கடந்த
இரு வாரங்களில் லாம்பெதுசா தீவுக் கடல் பகுதியில் படகுகள் கவிழ்ந்ததில்
நூற்றுக்கணக்கான குடியேற்றதாரர் இறந்துள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசிய Swing அவர்கள், தானும் இத்தீவுக்கு நேரிடையாகச் சென்று நிலைமையை அறிந்துவர இருப்பதாகத் தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. உலகில் பசியால் வாடுவோரில் 25 விழுக்காட்டினர் இந்தியாவில் உள்ளனர், GHI அறிக்கை
அக்.15,2013. உலகில் தானிய உற்பத்தி அதிகரித்திருந்தாலும், உலகில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 84 கோடியே 20 இலட்சமாக உள்ளது என்றும், இவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் அதாவது 21 கோடிப் பேர் இந்தியாவில் உள்ளனர் என்றும் இத்திங்களன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை கூறுகிறது.
2011ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை உலகில் பசியால் வாடுபவர்கள் குறித்து GHI என்ற உலக உணவு உற்பத்தி கழகம் நடத்திய ஆய்வில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தானிய உற்பத்தி 2,489 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்திருப்பதாக அண்மையில் அறிக்கை ஒன்று வெளியானது, ஆயினும், உலகம் முழுவதும் 84 கோடியே 20 இலட்சம் மக்கள் பசியால் வாடிவருவது தெரிய வந்துள்ளதாக GHI கழகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
இருப்பினும், 2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரையிலான நிலைமையோடு ஒப்பிடும்போது, உலகில் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை 87 கோடியிலிருந்து, தற்போது 84 கோடியே 20 இலட்சமாகக் குறைந்துள்ளதாக ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆதாரம் : TNN
No comments:
Post a Comment