Monday, 21 October 2013

செய்திகள் - 14.10.13

செய்திகள் - 14.10.13
------------------------------------------------------------------------------------------------------

1. நாம் ஆற்றும் செயல்களே நம்மை மீட்கும் என்ற கருத்து, 'யோனாவின் குறைபாடு' - திருத்தந்தை பிரான்சிஸ்

2. வரும் ஆண்டு நடைபெறும் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், செயலர் - திருத்தந்தையால் நியமனம்

3. புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிக்கும் பணி திருப்பீட அவையின் உறுப்பினர்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்து

4. நாம் ஒவ்வொருவரும் முழு நேர கிறிஸ்தவர்களாக வாழ்கிறோமா?  - திருத்தந்தையின் கேள்வி

5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னை மரியாவுக்கு மனுக்குலத்தை அர்ப்பணிப்பு

6. பாத்திமா அன்னை திரு உருவத்தின் முன்னிலையில் திருத்தந்தையுடன் மாலை செப வழிபாடு

7. ஸ்பெயின் மறைசாட்சியர் முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிக்கப்படும் நிகழ்வுக்கு, திருத்தந்தை அனுப்பியிருந்த ஒளிச் செய்தி

8. மக்கள் உரிமைகளுக்கே முன்னுரிமை, தனியான பதவிப் பிரமாணம் வேண்டாம் - மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்

------------------------------------------------------------------------------------------------------

1. நாம் ஆற்றும் செயல்களே நம்மை மீட்கும் என்ற கருத்து, 'யோனாவின் குறைபாடு' - திருத்தந்தை பிரான்சிஸ்

அக்.14,2013. வறியோர் மீது பரிவுகாட்டும் மனதை வளர்ப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தலைசிறந்த பக்தியில் வளர்வதற்கு முயற்சி செய்வது ஆபத்தானது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.
இத்திங்கள் காலை, புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றியத் திருத்தந்தை, 'யோனாவின் அடையாளம்' குறித்து இயேசு விடுத்த எச்சரிக்கையை மையப்படுத்தி (லூக்கா நற்செய்தி 11: 29-32) தன் மறையுரையை வழங்கினார்.
'தீயத் தலைமுறையினர்' என்று இயேசு பயன்படுத்தும் கடினமான சொற்கள், எளிய மக்களை மனதில் வைத்து சொல்லப்பட்டவை அல்ல, மாறாக, இயேசுவிடம் அடையாளம் காட்டுமாறு கேட்ட மறைநூல் அறிஞர்களை மனதில் வைத்து சொல்லப்பட்ட வார்த்தைகள் என்று திருத்தந்தை தெளிவுபடுத்தினார்.
நாம் ஆற்றும் செயல்களே நம்மை மீட்கும் என்ற கருத்தை, 'யோனாவின் குறைபாடு' (Syndrome of Jonah) என்று குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, இத்தகைய மன நிலையினின்று விடுதலைபெற்று, இறைவன் தரும் ஏனைய அடையாளங்களைப் பின்பற்றுவதே நம்மை மீட்கும் என்று தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. வரும் ஆண்டு நடைபெறும் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், செயலர் - திருத்தந்தையால் நியமனம்

அக்.14,2013. 2014ம் ஆண்டு, அக்டோபர் 5ம் தேதி முதல் 19ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரையும், மன்றத்தின் செயலரையும் இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமனம் செய்துள்ளார்.
ஹங்கேரி நாட்டின் Esztergom-Budapest உயர் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Péter Erdő அவர்களை, தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், Chieti-Vasto உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Bruno Forte அவர்களை, செயலராகவும் திருத்தந்தை நியமித்துள்ளார்.
"நற்செய்தி அறிவிப்புச் சூழலில், குடும்பம் சந்திக்கும் சவால்கள்" என்ற மையக்கருத்துடன், ஆயர்களின் சிறப்பு மாமன்றம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, "இளையோரே, உங்கள் வாழ்வில் திட்டவட்டமான முடிவுகளை எடுக்க அஞ்சாதீர்கள். நம்பிக்கை கொள்ளுங்கள்; இறைவன் உங்களைக் கைவிடமாட்டார்" என்ற அழைப்பை தன் Twitter செய்தியாக இத்திங்கள் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.
மேலும், "கருணை காட்டுவதில் உருவாகும் சலிப்பினால், புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில் நாடுகள் ஆர்வம் குன்றக்கூடாது" என்ற Twitter செய்தியை, பேராயர் சில்வானோ தொமாசி அவர்களின் பெயரால் திருப்பீடம் இத்திங்கள் வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிக்கும் பணி திருப்பீட அவையின் உறுப்பினர்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்து

அக்.14,2013. இந்த நம்பிக்கை ஆண்டில் சிறப்புறப் பணியாற்றிவரும் உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிக்கும் பணி திருப்பீட அவையின் உறுப்பினர்களை வாழ்த்தினார்.
முன்னாள் திருத்தந்தை பெனெடிக்ட் அவர்களால், 2010ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் புதியத் திருப்பீட அவையின் ஆண்டு நிறைவுக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களை, இத்திங்கள் மதியம் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
சான்று பகர்வதன் முக்கியத்துவம், சந்தித்து உரையாடுவதன் அவசியம், அடிப்படைகளை மையப்படுத்தும் மேய்ப்புப்பணித் திட்டங்கள் என்ற மூன்று கருத்துக்களை புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிக்கும் பணி திருப்பீட அவையின் உறுப்பினர்களிடம் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.
உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும், குறிப்பாக, மனிதர்கள் அனைவருக்கும் இறைவனின் கருணையை வெளிப்படுத்தும் சாட்சிகளாக வாழ்வது ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் அளிக்கப்பட்டுள்ள அழைப்பு என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிப்பதன் அடிப்படைத் தளமாக மனிதர்களைச் சந்திப்பது அமையவேண்டும் என்றும், இந்த உரையாடல் முயற்சியில் யாரும் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும் திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
மனித வாழ்வுக்குத் தேவையான அடிப்படை உண்மைகளை எடுத்துரைக்க தூய ஆவியாரின் படைப்பாற்றல் மிகுந்த அருளை, புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிக்கும் பணி திருப்பீட அவையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்ற ஆசீரோடு திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. நாம் ஒவ்வொருவரும் முழு நேர கிறிஸ்தவர்களாக வாழ்கிறோமா?  - திருத்தந்தையின் கேள்வி

அக்.14,2013. மாறிவரும் உலகை மட்டும் முன்னிறுத்தி, நிலையானவை, நிரந்தரமானவை ஆகிய உண்மைகளைப் புறந்தள்ளும் இவ்வுலகத்தில், நாம் ஒவ்வொருவரும் முழு நேர கிறிஸ்தவர்களாக வாழ்கிறோமா என்ற கேள்வியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுப்பினார்.
அக்டோபர் 13, இஞ்ஞாயிறன்று காலை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில், 1,50,000க்கும் அதிகமாகக் கூடியிருந்த மரியன்னை பக்தர்களுக்குத் திருப்பலியாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் இக்கேள்வியை எழுப்பினார்.
இறைவன் நம்மை வியப்பில் ஆழ்த்துதல், இறைவன் மட்டில் பற்றுறுதியுடன் வாழ்தல், இறைவனே நமது சக்தியென வாழ்தல் என்ற மூன்று உண்மைகளை மரியன்னையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் என்று தன் மறையுரையில் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
ஏழ்மை, சக்தியற்ற நிலை, தாழ்மை என்ற வழிகளில் தன்னை வெளிப்படுத்தும் இறைவன், நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். இந்த இறைவனை தன் வாழ்வில் முழுமையாக உணர்ந்தவர் மரியா என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
பாதுகாப்பு என்ற வளையத்திற்குள் நாம் வாழ்வைத் தொடர விரும்புகிறோமா அல்லது, நம்மை வியப்பில் ஆழ்த்தி, புதிய சவால்களைத் தரும் இறைவனிடம், மரியன்னையைப் போல சரணடைய விரும்புகிறோமா என்ற கேள்வியை திருத்தந்தை முன்வைத்தார்.
மரியா இறைவனுக்குச் சொன்ன 'ஆம்' என்ற பதில்மொழி, அவர் வாழ்ந்த அமைதியான கிராம வாழ்வை மாற்றியது மட்டுமல்லாமல், தொடர்ந்து பல சவால்களைக் கொணர்ந்தது என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, அந்தச் சவால்கள், சிலுவையடியில் அவர் கூறிய இறுதி 'ஆம்' என்ற பதிலுரை மட்டும் அவரை அழைத்துச் சென்றது என்று கூறினார்.
தொழுநோயுற்ற பத்து பேரை இயேசு குணமாக்கியதைக் கூறும் இந்த ஞாயிறு நற்செய்தியைக் குறித்துப் பேசிய திருத்தந்தை, இறைவனிடம் வேண்டுதல் எழுப்பியது பத்து பேர் என்றாலும், ஒருவர் மட்டுமே தான் பெற்ற நன்மைக்கு நன்றி சொல்லத் திரும்பினார் என்பதைச் சுட்டிக்காட்டி, நமது நன்றி உணர்வு குறித்து கேள்விகளையும் முன்வைத்தார்.
நன்றி என்று சொல்வது எளிதாகவும், கடினமாகவும் உள்ள ஒரு செயல் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் பெறும் அனைத்து நன்மைகளும் நமது உரிமை என்ற எண்ணம் கொண்டிருப்பதால், நாம் பிறருக்கும், இறைவனுக்கும் நன்றி கூறும் கடமையை நிறைவேற்ற மறக்கிறோம் என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னை மரியாவுக்கு மனுக்குலத்தை அர்ப்பணிப்பு

அக்.14,2013. அன்னை மரியே, உங்கள் பார்வையில் நாங்கள் ஒவ்வொருவரும் விலையேறப் பெற்றவர்கள், உமது உள்ளத்தில் யாருக்கும் இடமின்றி போகாது என்ற வார்த்தைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னை மரியாவுக்கு மனுக்குலத்தை அர்ப்பணித்தார்.
அக்டோபர் 13, இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றியத் திருப்பலிக்குப் பின்னர், கூடியிருந்த இலட்சக்கணக்கான பக்தர்களையும், இன்னும் உலகின் பல நாடுகளிலும் வாழும் அனைத்து மக்களையும் மரியன்னையின் பாதுகாவலில் அர்ப்பணித்தார்.
நடைபெறும் நம்பிக்கை ஆண்டின் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக, அன்னை மரியாவின் நாள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடப்பட்டது. இச்சிறப்பு நிகழ்ச்சிக்கென பாத்திமா அன்னை மரியாவின் திருத்தலத்தில் வணங்கப்படும் திரு உருவம் வத்திக்கானுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.
அன்னையின் இத்திரு உருவத்திற்கு முன்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனுக்குலத்தை மீண்டும் ஒருமுறை அன்னை மரியாவின் பாதுகாவலில் ஒப்படைத்தார்.
1981ம் ஆண்டு மேமாதம் 13ம் தேதி பாத்திமா அன்னை விழாவைக் கொண்டாட போர்த்துகல் நாட்டின் பாத்திமா அன்னை திருத்தலத்திற்குச் சென்றிருந்த முன்னாள் திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான்பால் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் எழுதிய அர்ப்பண செபம், அதே ஆண்டு ஜூன் 7ம் தேதியன்று, உரோம் நகர் புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தில் வாசிக்கப்பட்டது.
மீண்டும், 1982ம் ஆண்டு மேமாதம் 13ம் தேதி பாத்திமாவுக்குச் சென்றிருந்த திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் அன்னை மரியாவுக்கு மீண்டும் ஒருமுறை இவ்வுலகை அர்ப்பணித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. பாத்திமா அன்னை திரு உருவத்தின் முன்னிலையில் திருத்தந்தையுடன் மாலை செப வழிபாடு

அக்.14,2013. அக்டோபர் 12, சனிக்கிழமை மாலை 5 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாத்திமா திருத்தலத்திலிருந்து விமானம் வழியே வத்திக்கான் வந்தடைந்த பாத்திமா அன்னை மரியாவின் திருஉருவத்தை புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் வணக்கத்துடன் வரவேற்றார்.
நடைபெறும் நம்பிக்கை ஆண்டின் ஓர் உச்சக் கட்டமாக அமைந்த மரியன்னை நாள் கொண்டாட்டங்களுக்கென தருவிக்கப்பட்டிருந்த பாத்திமா அன்னை திரு உருவத்தின் முன்னிலையில் சனிக்கிழமை மாலை செப வழிபாட்டை, திருத்தந்தை முன்னின்று நடத்தினார்.
இந்த மாலை செபவழிபாட்டின் இறுதியில், திருத்தந்தை வழங்கிய உரையில், மரியன்னையின் நம்பிக்கையை மூன்று கோணங்களில் விவரித்தார்.
பாவத்தால் விழுந்த முடிச்சை அவிழ்ப்பது மரியன்னையின் நம்பிக்கை, இயேசுவை உடலளவில் உலகிற்குக் கொணர்ந்தது மரியாவின் நம்பிக்கை, மற்றும் தொடர்ந்து பயணம் செய்வது மரியாவின் நம்பிக்கை என்ற மூன்று அம்சங்களில் திருத்தந்தை தன் உரையை வழங்கினார்.
சனிக்கிழமை மாலை நான்கு மணியளவில் புனித பேதுரு வளாகத்தில் நுழைந்த அன்னை மரியாவின் திரு உருவம், வளாகமெங்கும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இறுதியில் 5 மணியளவில் திருத்தந்தையால் வணக்கம் செய்யப்பட்ட பின்னர், தனிப்பட்ட ஒரு பீடத்தில் வைக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. ஸ்பெயின் மறைசாட்சியர் முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிக்கப்படும் நிகழ்வுக்கு, திருத்தந்தை அனுப்பியிருந்த ஒளிச் செய்தி

அக்.14,2013. கிறிஸ்துவின் மீது நாம் கொள்ளும் அன்பு, தவணை  முறையில் வெளிப்படும் அன்பு அல்ல, அது மரணம் முடிய நம்மை முற்றிலும் ஈர்க்கும் அன்பு என்பதை உலகறியச் செய்பவர்கள் மறைச்சாட்சிகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அக்டோபர் 13, இஞ்ஞாயிறன்று ஸ்பெயின் நாட்டின் Tarragona எனும் இடத்தில், அந்நாட்டைச் சேர்ந்த 522 மறைசாட்சியர் முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிக்கப்படும் நிகழ்வுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த ஒளிச் செய்தியில் இவ்வாறு கூறியிருந்தார்.
புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் மரியன்னை நாள் திருப்பலியாற்றிய பின், திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையின் துவக்கத்தில் அவர் வழங்கிய இந்த 3 நிமிடச் செய்தி, Tarragona வளாகத்தில் நேரடியாக ஒளிபரப்பானதை அங்கு கூடியிருந்த 30,000க்கும் அதிகமானோர் கண்டனர்.
இச்செய்திக்குப் பின்னர், ஸ்பெயின் நாட்டில் 1930களில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட அருள் பணியாளர்கள், இருபால் துறவியர், பொது நிலையினர் என்ற 522 பேர் முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிக்கும் திருப்பலி, கர்தினால் Angelo Amato அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. மக்கள் உரிமைகளுக்கே முன்னுரிமை, தனியான பதவிப் பிரமாணம் வேண்டாம் - மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்

அக்.14,2013. வட மாநிலத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஏனையக் கட்சிகள் மக்களின் உரிமைகளை விட வேறு பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த வெள்ளியன்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளாத உறுப்பினர்கள் 9 பேரும், தனியாக முல்லைத்தீவில் பதவிப் பிரமாணம் செய்துகொள்வதற்கு எடுத்துள்ள முடிவை மாற்றிக்கொள்ளுமாறும் மன்னார் ஆயர் கட்சித் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வருகிற 25ம் தேதி கூடவிருக்கும் வட மாநில அவையின் முதலாவது அமர்வின்போது, முதலமைச்சர் முன்பாகவே அவர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் ஆயர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என்றும் சுட்டிக்காட்டிய ஆயர் இராயப்பு ஜோசப், மக்களின் உரிமைகளைவிட தமிழ்க் கட்சிகளுக்கு வேறு முன்னுரிமையான பிரச்சனைகள் இருக்க முடியாது என்றும் பிபிசி ஊடகத்திடம் கூறினார்.
தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாக ஒரே கொள்கைத் திரட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டணியாக பதிவு செய்யப்படுவதற்கு காலம் கனிந்துவிட்டதாகக் கூறிய மன்னார் ஆயர், அடுத்த கட்டமாக அதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...