Sunday, 13 October 2013

செய்திகள் - 12.10.13

செய்திகள் - 12.10.13
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் திருஅவை பெண்களின் பங்கை மதிக்கிறது

2. லாம்பெதுசா தீவில் இறந்தவர்களை, டுவிட்டரில் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

3. பாத்திமா அன்னைமரி திருவுருவத்தின் முன்பாக பன்னாட்டு அளவில் செபமாலை

4. அக்டோபர் 26, 27 குடும்பங்களின் திருப்பயணத்தில் 1,50,000 பேர் பங்கேற்கவுள்ளனர்

5. 522 இஸ்பெயின் மறைசாட்சிகளுக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம்

6. எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து நியாயமான தேர்தல்களை நடத்த Honduras ஆயர்கள் பரிந்துரை

7. இயற்கைப் பேரிடர்கள் குறித்த திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளும் இணைக்கப்படவேண்டும், ஐ.நா.பொதுச்செயலர்

8. இவ்வாண்டு முடிவதற்குள் உலகின் 40 விழுக்காட்டு மக்கள் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள், ஐ.நா

9. இவ்வுலகில் 350 கோடிப் பேருக்கு கழிவுப்பொருள்களை நிர்வகிக்கும் வசதிகள் இல்லை, UNEP

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் திருஅவை பெண்களின் பங்கை மதிக்கிறது

அக்.12,2013. பொதுவாழ்விலும் திருஅவை வாழ்விலும் பெண்களின் பங்கு மேம்படுத்தப்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் எழுதிய Mulieris dignitatem அதாவது பெண்களின் மாண்பு குறித்த திருமடல் வெளியிடப்பட்டதன் 25ம் ஆண்டையொட்டி வத்திக்கானில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட 150 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், தாய்மையின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.
Mulieris dignitatem திருமடல், முழுவதும் பெண்கள் குறித்தே எழுதப்பட்டுள்ள திருத்தந்தையரின் முதல் ஆசிரிய வெளியீடு என்று அதனைப் பாராட்டிப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ், கடவுள் மனிதரை, சிறப்பான விதத்தில் பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார், அது தெளிவாக தாய்மையில் வெளிப்படுகின்றது என்று கூறினார்.
கலாச்சார மற்றும் சமுதாய வாழ்வில் பல விடயங்கள் மாற முடியும், ஏன் பல விடயங்கள் மாற்றம் அடைந்துள்ளன, ஆனால் ஒரு பெண் தனது வயிற்றில் கருத்தாங்கி குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மை  மட்டும் அப்படியே இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
ஆயினும், பெண்மையையும், அவரது அழைப்பையும் அழிக்கும் இரு ஆபத்துக்கள் உள்ளன, ஒரு சமூகப் பணிக்குள் தாய்மையை முடக்கிவிடுவது அவற்றுள் ஒன்று என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், பொதுவாழ்விலும் திருஅவை வாழ்விலும் பெண்களின் பங்கு மேம்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. லாம்பெதுசா தீவில் இறந்தவர்களை, டுவிட்டரில் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
அக்.12,2013. ஆண்டவரே, இரக்கமாயிரும்! நாங்கள் அடிக்கடி எங்களது வசதியான வாழ்வால் கண்களை மூடிக்கொள்கின்றோம் மற்றும் எம் கதவுகளுக்கு அருகில் இறப்பவர்களைப் பார்ப்பதற்கு மறுக்கின்றோம் என்று இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், தென் இத்தாலியின் லாம்பெதுசா தீவில் இவ்வெள்ளியன்று படகு கவிழ்ந்ததில் இறந்த குடியேற்றதாரரை தனது டுவிட்டரில் நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், 2014ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி நடைபெறவுள்ள  முத்திப்பேறுபெற்ற திருத்தந்தையர்கள் 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகிய இருவரின் புனிதர்பட்ட விழாத் திருப்பலிக்கு நுழைவுச் சீட்டு எதுவும் தேவையில்லையெனவும், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்துக்கு முதலில் வருபவர்கள் முதல் இடங்களில் அமரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. பாத்திமா அன்னைமரி திருவுருவத்தின் முன்பாக பன்னாட்டு அளவில் செபமாலை

அக்.12,2013. இச்சனிக்கிழமை மாலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அன்னைமரியா நாள் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்குப் பின்னர், பாத்திமா அன்னைமரி திருஉருவம், உரோம் திவினோ அமோரே-இறையன்பு அன்னைமரியா திருத்தலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஏறக்குறைய இந்திய நேரம் இரவு 10.30 மணியளவில் உரோம் திவினோ அமோரே அன்னைமரியா திருத்தலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பாத்திமா அன்னைமரி திருவுருவத்தின் முன்பாக துவங்கிய செபமாலை பக்திமுயற்சி, தமிழகத்தின் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலம் உட்பட ஐந்து கண்டங்களின் பத்து அன்னைமரியா திருத்தலங்களோடு விண்கோள் ஒளிபரப்புமூலம் இணைக்கப்பட்டது. அதன்பின்னர் திருநற்கருணை ஆராதனையும் தொடர்ந்து இரவு முழுவதும் நடந்தது.
நற்செய்திப்பணியை புதிய வழியில் அறிவிக்கும் திருப்பீட அவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மரியா நாள் கொண்டாட்டங்களின் நிறைவாக, இஞ்ஞாயிறு காலை 10.30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிகழ்த்தி பாத்திமா அன்னைமரியின் மாசற்ற திருஇதயத்திடம் இவ்வுலகை அர்ப்பணிப்பார்.
பாத்திமா அன்னையின் திருஉருவம் மீண்டும் இஞ்ஞாயிறு மாலை பாத்திமாவுக்கு எடுத்துச்செல்லப்படும்.
போர்த்துக்கல் நாட்டு பாத்திமா திருத்தலத்தில் உள்ள இவ்வன்னைமரியா திருவுருவம் மிக முக்கிய நிகழ்வுகளுக்காக மட்டுமே அங்கிருந்து எடுக்கப்படுகிறது. இரண்டாயிரமாம் ஜூபிலி ஆண்டில் இத்திருவுருவம் வத்திக்கானுக்குக் கொண்டு வரப்பட்டது. நம்பிக்கை ஆண்டையொட்டி இடம்பெறும் மரியா நாள் கொண்டாட்டங்களுக்காக, தற்போது மீண்டும் இத்திருவுருவம் வத்திக்கானுக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. அக்டோபர் 26, 27 குடும்பங்களின் திருப்பயணத்தில் 1,50,000 பேர் பங்கேற்கவுள்ளனர்

அக்.12,2013. இம்மாதம் 26, 27 தேதிகளில் திருப்பீட குடும்ப அவை நடத்தவிருக்கும் குடும்பங்களின் திருப்பயணத்தில் 75க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஏறக்குறைய ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கை ஆண்டின் ஒரு பகுதியாக, திருப்பீட குடும்ப அவை இம்மாதம் 26, 27 தேதிகளில் நடத்தவிருக்கும் 12வது ஆண்டுக் கூட்டம் பற்றி நிருபர் கூட்டத்தில் விளக்கிய இத்திருப்பீட அவையின் தலைவர்  பேராயர் Vincenzo Paglia அவர்கள், நாம் அனைவரும் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டி வருகிறார் என்று கூறினார்.
26ம் தேதி சனிக்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இடம்பெறும் விசுவாசத் திருப்பயணத்தின்போதும், 27ம் தேதி ஞாயிறு திருப்பலியின்போதும் இப்பயணிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து அவரின் அறிவுரைகளைக் கேட்பதற்கு வாயப்புப் பெறுவார்கள் என்றும் பேராயர் Paglia கூறினார்.
26ம் தேதி சனிக்கிழமை நிகழ்வில் சிறார் மற்றும் முதியோரின் பங்கு பெரிய அளவில் இருக்கும் என்றும், இக்காலத்திய நுகர்வுக் கலாச்சாரத்தில் இவர்களே பெரிதும் துன்புறுகின்றனர் என்றும் பேராயர் Paglia கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. 522 இஸ்பெயின் மறைசாட்சிகளுக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம்

அக்.12,2013. இஸ்பெயினில் 1936ம் ஆண்டுக்கும் 1939ம் ஆண்டுக்கும் இடைப்பட காலத்தில் இடம்பெற்ற மிகக் கொடூரமான சமய அடக்குமுறைகளின்போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மறைசாட்சிகளில் 522 பேர் இஞ்ஞாயிறன்று முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படவுள்ளனர்.
இந்நவீன கால வரலாற்றில் இடம்பெற்ற மிகக் கொடிய சமய அடக்குமுறைகளில் ஒன்றான இஸ்பானிய சமய அடக்குமுறைகளில் 13 ஆயர்கள், 6536 அருள்பணியாளர்கள், 283 அருள்சகோதரிகள் உட்பட எண்ணற்றவர்கள் கொல்லப்பட்டனர். 
இவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் ஏற்கனவே முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இஞ்ஞாயிறன்று முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிக்கப்படவுள்ள 522 மறைசாட்சிகளில் 18 வயது Ángel Sánchez Rodríguezம் ஒருவர். இவர் மத்ரித்தில் தனது கார்மேல் சபை துறவிகளுடன் சேர்த்துக் கொல்லப்பட்டவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து நியாயமான தேர்தல்களை நடத்த Honduras ஆயர்கள் பரிந்துரை

அக்.12,2013. மத்திய அமெரிக்க நாடான Hondurasல் பொதுத் தேர்தல்கள் வரும் நவம்பரில் நடைபெறவுள்ளவேளை, குடிமக்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் வாக்குச்சாவடிகளுக்குச் செல்லுமாறு கேட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
வருகிற நவம்பர் 24ம் தேதியன்று நடைபெறவுள்ள தேர்தல் சுதந்திரமாகவும், கடமையுணர்வோடும் இடம்பெற வேண்டுமெனக் கேட்டுள்ள ஆயர்கள், இத்தேர்தல் நியாயமான நல்லிணக்க வாழ்வுக்கு உறுதியளிக்கும் என்பதை அறிந்தவர்களாய், வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை விற்காமல் இருக்குமாறும் கூறியுள்ளனர்.
வாக்காளர்கள் விழிப்புடன் இருந்து, தேர்தல் சமயத்தில் இடம்பெறும் ஏமாற்று அல்லது சட்டத்துக்குப் புறம்பேயான செயல்கள் குறித்து அறிவிக்கவும், அச்செயல்களைக் குறைக்கவும் துணிச்சலைக் கொண்டிருக்குமாறும் ஆயர்கள் கேட்டுள்ளனர். 
மேலும், திருப்பீடத்துக்கான Honduras நாட்டுப் புதிய தூதர் Carlos ÁVILA MOLINA அவர்கள், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் நம்பிக்கைச் சான்றிதழைச் சமர்ப்பித்தார்.  

ஆதாரம் : Fides                         

7. இயற்கைப் பேரிடர்கள் குறித்த திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளும் இணைக்கப்படவேண்டும், ஐ.நா.பொதுச்செயலர்

அக்.12,2013. இயற்கைப் பேரிடர்கள் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகள், அவை தொடர்பான பொதுவான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவை மாற்றுத்திறனாளிகளைப் போதுமான அளவு சென்றடையாததால், இயற்கைப் பேரிடர்கள் குறித்த திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளும் இணைக்கப்படவேண்டுமென்று கேட்டுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
அனைத்துலக இயற்கைப் பேரிடர்கள் குறைப்பு நாள், அக்டோபர் 13, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுவதையொட்டி பான் கி மூன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.
இவ்வுலகில் நூறு கோடிக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என்றும், இவ்வாண்டு இயற்கைப் பேரிடர்கள் குறைப்பு நாள், இயற்கைப் பேரிடர்கள் குறைப்பு குறித்த விழிப்புணர்வு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளின் பங்கை உணருவதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.
இதற்கிடையே, தென் இத்தாலியின் லாம்பெதுசா தீவுப் பகுதியில் ஏறக்குறைய 250 குடியேற்றதாரரை ஏற்றிவந்த படகு, இவ்வெள்ளியன்று கவிழ்ந்ததில் குறைந்தது 27 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கடந்த வாரத்தில் இதே பகுதியில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 300 குடியேற்றதாரர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

ஆதாரம் : UN

8. இவ்வாண்டு முடிவதற்குள் உலகின் 40 விழுக்காட்டு மக்கள் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள், ஐ.நா.

அக்.12,2013. இவ்வாண்டு முடிவதற்குள் உலகின் 40 விழுக்காட்டு மக்கள், அதாவது 270 கோடிப் பேர் இணையதளத்தைப் பயன்படுத்துகிறவர்களாக இருப்பார்கள் என்றும், உலகளாவிய தகவல் தொழில்நுட்பத்திலும், தொடர்புத் தொழில்நுட்பச்(ICT)  சந்தையிலும் கைபேசி இணையதள வசதிகள் அதிவேகமாக வளரும் கூறுகளாக இருக்கும் என்றும் ஐ.நா. நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
அனைத்துலக தொலைத்தொடர்பு கழகம்(ITU) வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், இவ்வுலகில் 2013ம் ஆண்டு முடிவதற்குள் ஏறக்குறைய 680 கோடிப் பேர் கைபேசிகளை வைத்திருப்பர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
160க்கும் மேற்பட்ட நாடுகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் இணையதள வசதிகளைக் கொண்ட கைபேசிகளின் விலை 82 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறும் இவ்வறிக்கை, கைபேசி இணையதளங்கள் பிரபலமாகி வருவதாகவும் தெரிவிக்கின்றது.
இணையதளங்களைப் பயன்படுத்துவோர் மற்றும் அவற்றில் திறமையுடையோர் குறித்து 157 நாடுகளில் எடுத்த ஆய்வில் கொரியக் குடியரசு மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் இருப்பதாகவும், அதையடுத்து சூவீடன், ஐஸ்லாந்து, டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் இருப்பதாகவும் தொலைத்தொடர்பு கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

ஆதாரம் : UN

9. இவ்வுலகில் 350 கோடிப் பேருக்கு கழிவுப்பொருள்களை நிர்வகிக்கும் வசதிகள் இல்லை, UNEP

அக்.12,2013. இவ்வுலகில் ஏறக்குறைய 350 கோடிப் பேருக்கு கழிவுப்பொருள்களை நிர்வகிக்கும் வசதிகள் இல்லாததால், அவர்கள் சுற்றுச்சூழலுக்கும், நலவாழ்வுக்கும், பொருளாதாரங்களுக்கும் குறிப்பிடத்தக்க வகையில் சேதத்தை உண்டுபண்ணுகின்றனர் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட நிறுவனம்(UNEP) கூறியுள்ளது.
பல நாடுகளில் கழிவுப்பொருள்கள், பொதுவான இடங்களில் கொட்டப்படுவதால், அக்குப்பைமேடுகளுக்கு அருகில் வாழ்வோர், குறிப்பாக, நகரப்புற ஏழைகள் கடும் நலவாழ்வுப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்றும் ஐ.நா. சுற்றுச்சூழல் நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஒரு டன் அலுமினியத்தை மறுசுழற்சி செய்வதால், 1.3 டன் பாக்ஸைட்டு துணுக்குகளிலிருந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்ற முடியும் எனக்கூறும் அந்நிறுவனம், மறுசுழற்சி செய்யும் பணியினால் 2000மாம் ஆண்டில் 2,29,200க்கு அதிகமானோருக்கு ஐரோப்பிய சமுதாய அவை வேலை  கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...