செய்திகள் - 11.10.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கிறிஸ்தவர்கள் சாத்தானின் தந்திரங்களினின்று தங்களைக் காத்துக்கொள்ளுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு, வருகை தருமாறு அழைப்பு
3. திருத்தந்தை பிரான்சிஸ் : யூதமத விரோதப்போக்கு ஒழிக்கப்பட வேண்டும்
4. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி : எம் அன்னையாகிய மரியே, சிலுவையை ஏற்று வாழ எமக்கு சக்தியைத் தாரும்
5. இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வுமுறைகளுக்குத் திருத்தந்தை அங்கீகரிப்பு
6. போரைப் புறக்கணிக்கும் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்கு ஜப்பானிய ஆயர் எதிர்ப்பு
7. OPCW குழுவுக்கு 2013ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது
8. பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க ஐ.நா. வலியுறுத்தல்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கிறிஸ்தவர்கள் சாத்தானின் தந்திரங்களினின்று தங்களைக் காத்துக்கொள்ளுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு
அக்.11,2013. கிறிஸ்தவர்கள் தங்களை, சாத்தானின் தந்திரங்களினின்று காத்துக்கொள்வதில் எப்பொழுதும் கவனமாய் இருக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இவ்வெள்ளிக்கிழமை
காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய
திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவர்கள், தீயவன்மீதான இயேசுவின் வெற்றியை அரைமனதுடன் பின்பற்றக் கூடாது என்றும், தீயவனுக்கு எதிரான இயேசுவின் போர் குறித்து குழப்பமடையக் கூடாதும் என்றும் கூறினார்.
இயேசு பேய்களை ஓட்டியதை வைத்து எழுந்த வாக்குவாதங்கள் பற்றிய இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, இயேசு குணமாக்குபவர் மட்டுமே என்பது போன்ற சிந்தனை எழும்பி, அவரைக் குறைத்து மதிப்பிடுவதற்கான சோதனை எப்பொழுதும் எழுகின்றது, இத்தகைய எண்ணம் இக்காலத்திலும் காணப்படுகின்றது என்றும் கூறினார்.
சாத்தானின் இருப்பு விவிலியத்தின் முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, கடவுள் சாத்தானை வெற்றி கொள்வதோடு விவிலியம் நிறைவடைகின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், சாத்தானின் இருப்பைத் தேர்ந்துதெளியவும், சோதனைகள் ஏற்படும்போது கிறிஸ்தவ வழியில் செல்லவும் நம் ஆண்டவர் சில கூறுகளை நமக்குக் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
சாத்தானை அழித்து, அதன் பிடியினின்று நமக்கு விடுதலை அளிப்பதற்காக இயேசு இவ்வுலகுக்கு வந்தார், நாம்
எப்பொழுதும் விழிப்புடன் இருந்து சாத்தானின் தந்திரங்களினின்று நம்மைக்
காத்துக்கொள்ள வேண்டும் என்று மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு, வருகை தருமாறு அழைப்பு
அக்.11,2013. பிரான்ஸ் நாட்டின் Strasburg நகரிலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகை தருமாறு அதிகாரப்பூர்வமாக அழைப்புவிடுத்துள்ளார் ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் Martin Schulz.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்துப் பேசிய Schulz அவர்கள், இச்சந்திப்பின் இறுதியில் இவ்வழைப்பை முன்வைத்தார்.
30 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பில், உலகின்
ஏழ்மை மற்றும் குடியேற்றதாரர் விவகாரம் குறித்துப் பேசப்பட்டதாகத்
தெரிவித்தார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ
லொம்பார்தி.
மேலும், முத்திப்பேறுபெற்ற
திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இதே அக்டோபர்
11ம் தேதி ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்த Schulz, 766 உறுப்பினர்களைக் கொண்ட இப்பாராளுமன்றம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தொலைநோக்கு, தோழமையுணர்வு மற்றும் நம்பிக்கை நிறைந்த செய்தியைக் கேட்பதில் மகிழ்ச்சியடையும் என்று கூறியதாக அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
மேலும், ஐரோப்பிய சமுதாய அவையின் பாராளுமன்றத் தலைவர் Jean-Claude Mignon அவர்களையும் இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : யூதமத விரோதப்போக்கு ஒழிக்கப்பட வேண்டும்
அக்.11,2013. ஒவ்வொரு மனிதரின் இதயம் மற்றும் வாழ்விலிருந்து யூதமத விரோதப்போக்கு களையப்பட வேண்டும் என்று இவ்வெள்ளியன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரண்டாம் உலகப் போரின்போது யூதர்கள் உரோமையைவிட்டு வெளியேற்றப்பட்டதன் 70ம் ஆண்டையொட்டி, உரோம் யூத சமுதாயப் பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ், இன்னும் சில நாள்களில், உரோம் நகர் யூதர்கள் வெளியேற்றப்பட்டதன் 70ம் ஆண்டை நினைவுகூரவுள்ளோம், மனிதக் கொடூரங்களுக்குப் பலியான பல அப்பாவி மக்களையும், அவர்களின் குடும்பங்களையும் நினைவுகூர்ந்து செபிப்போம் என்று கூறினார்.
எந்த ஒரு சூழ்நிலையிலும், உரோம் நகரிலும் உலகிலும் யூதமத விரோதப்போக்கு இடம்பெறக் கூடாது என்றுரைத்த திருத்தந்தை, எந்த
வடிவிலும் சகிப்பற்றதன்மை இடம்பெறாமலிருக்க எப்போதும் விழிப்பாயிருக்க
இந்நினைவுநாள் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கின்றது கூறினார்.
இரண்டாம் உலகப் போரின்போது கிறிஸ்தவ சமுதாயம் யூதர்களுக்குச் செய்த சிறிய, பெரிய உதவிகளை நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் யூதமதத் தலைமை ராபி Rabbi Riccardo Di Segni அவர்களின் தலைமையில் இப்பிரதிநிதிகள் குழு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்தது.
1943ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியன்று உரோமையில் வாழ்ந்த ஆயிரத்துக்கு அதிகமான யூதர்கள் கைதுசெய்யப்பட்டு, நாத்சி Auschwitz வதைப்போர் முகாமுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர், மேலும் 800 உரோம் யூதர்களும் வெளியேற்றப்பட்டனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி : எம் அன்னையாகிய மரியே, சிலுவையை ஏற்று வாழ எமக்கு சக்தியைத் தாரும்
அக்.11,2013. நாம் சிலுவையைச் சந்திக்கும்போது, அன்னைமரி பக்கம் திரும்பி, எம் அன்னையாகிய மரியே, சிலுவையை ஏற்று வாழ எமக்கு சக்தியைத் தாரும் எனக் கேட்போம் என்று, @Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், அக்டோபர் 13, வருகிற ஞாயிறன்று, பாத்திமா அன்னையின் திருவுருவத்துக்கு முன்பாக, இவ்வுலகை மரியின் மாசற்ற திருஇதயத்துக்கு அர்ப்பணிக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் நம்பிக்கை ஆண்டின் ஒரு நிகழ்வாக இச்சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் (அக்.12, 13) மரியின் நாள்களாகச் சிறப்பிக்கப்படுகின்றன.
இந்த
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளுக்கென போர்த்துக்கல் நாட்டு
பாத்திமாவிலிருந்து பாத்திமா அன்னையின் திருவுருவம் வத்திக்கானுக்குக்
கொண்டுவரப்பட்டு இவ்விரு நாள்களின் திருவழிபாடுகளின்போது வத்திக்கான் புனித
பேதுரு வளாகத்தில் வைக்கப்படும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வுமுறைகளுக்குத் திருத்தந்தை அங்கீகரிப்பு
அக்.11,2013. முத்திப்பேறுபெற்ற Foligno Angela அவர்களை, கத்தோலிக்கத்
திருஅவையின் புனிதர் பட்டியலில் இணைத்து அவர் பெயரிலான திருவழிபாட்டை
உலகளாவிய திருஅவையும் கொண்டாடுவதற்கு அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
இத்தாலியின் Folignoல் 1309ம் ஆண்டில் இறந்த முத்திப்பேறுபெற்ற Angela, புனித பிரான்சிஸ் மூன்றாம் சபையைச் சேர்ந்தவர்.
மேலும், வணக்கத்துக்குரிய மரிய அசுந்தா கத்ரீனா மார்க்கெத்தியின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமை ஒன்றையும் ஏற்றுள்ளார் திருத்தந்தை.
இன்னும், வணக்கத்துக்குரிய இத்தாலியின் அமாத்தோ ரொன்கோனி, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் ஹரிகூரில் 1840ம் ஆண்டில் பிறந்து லிஸ்பனில் இறந்த இறையடியார் மேரி ஜெய்ன் வில்சன், இன்னும், இறையடியார்கள் இத்தாலியின் பேராயர் ஆல்பெர்த்தோ தெல் கொரோனா, மரிய எலெயோனோரா ஜோர்ஜி, அத்தில்யோ லூச்சானோ ஜொர்தானி, கானடாவின் மரியா எலிசபெத் ஆகியோரின் வீரத்துவமான வாழ்வு முறைகள் குறித்த விபரங்களையும் அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. போரைப் புறக்கணிக்கும் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்கு ஜப்பானிய ஆயர் எதிர்ப்பு
அக்.11,2013.
ஜப்பானில் இராணுவத்தின் செயல்பாட்டை அதிகரிப்பதற்கு அனுமதிக்கும்
நோக்கத்தில் அந்நாட்டின் 1947ம் ஆண்டின் அரசியல் அமைப்பில் மாற்றம்
கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிக்கு எதிர்ப்பு
தெரிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Peter Takeo Okada.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு எண் 9ல், நீதி மற்றும் ஒழுங்குமுறையை அடிப்படையாகக்கொண்ட அனைத்துலக அமைதியை உண்மையாகவே ஆதரிக்கும் ஜப்பானிய மக்கள், போர், அந்நாட்டின் இறையாண்மை உரிமை என்பதையும்,
அனைத்துலகப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு இராணுவத்தைப்
பயன்படுத்துவதையும் என்றென்றும் புறக்கணிக்கின்றனர் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு
விலைமதிப்பில்லாத சொத்தாக இருக்கும் அரசியல் அமைப்பின் இந்த எண் குறித்து
ஜப்பானியர்கள் பெருமைப்படுகின்றனர் என்றுரைத்த பேராயர் Okada, இதில் மாற்றம் கொண்டுவருவதற்கு பிரதமர் Shinzo Abe எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
12 கோடியே 70 இலட்சம் மக்களைக் கொண்ட ஜப்பானில் 2 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.
ஆதாரம் : Fides
7. OPCW குழுவுக்கு 2013ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது
அக்.11,2013. சிரியாவில் வேதிய ஆயுதங்களை அழிக்கும் பணியை மேற்பார்வையிடும் OPCW என்ற வேதிய ஆயுதங்கள் தடை நிறுவனத்துக்கு இவ்வாண்டின் நொபெல் அமைதி விருதை வழங்குவதாக, அவ்விருது வழங்கும் குழு இவ்வெள்ளிக்கிழமையன்று அறிவித்துள்ளது.
வேதிய ஆயுதங்களை அழிப்பதில் OPCW நிறுவனம் செய்துவரும் பெரியஅளவிலான பணியைப் பாராட்டும் விதமாக, இந்நிறுவனத்துக்கு 2013ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்படுவதாக நொபெல் குழு மேலும் தெரிவித்துள்ளது.
1993ம் ஆண்டின் வேதிய ஆயுதங்கள் ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கென, 1997ம் ஆண்டில் OPCW நிறுவனம், நெதர்லாண்ட்ஸின் ஹேக்குவை(The Hague) மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
சிரியாவில்
சேமித்து வைக்கப்பட்டுள்ள வேதிய ஆயுதங்கள் ஒழிக்கப்படுவதை
மேற்பார்வையிடுவதற்கென இந்நிறுவனம் அண்மையில் தனது கண்காணிப்பாளர்களை
அனுப்பியுள்ளது. வேதிய ஆயுதங்கள் ஒப்பந்தத்தில் 190வது நாடாக சிரியா
கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1993ம்
ஆண்டின் வேதிய ஆயுதங்கள் தடை ஒப்பந்தத்துக்குப் பின்னர் உலகில்
சேமிப்பிலிருந்த வேதிய ஆயுதங்களில் ஏறக்குறைய 80 விழுக்காடு
அழிக்கப்பட்டுவிட்டது.
நொபெல் அமைதி விருது, ஒரு தங்கப் பதக்கத்தையும், ஒரு கோடியே 25 இலட்சம் டாலர் காசோலையையும் கொண்டது.
OPCW நிறுவன இயக்குனர் Ahmet Üzümcü அவர்கள், கடந்த செப்டம்பர் 27ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : BBC
8. பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க ஐ.நா. வலியுறுத்தல்
அக்.11,2013. சிறுமிகளின் மனித உரிமைகள் மதிக்கப்பட்டு, அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளும் வன்முறைகளும் களையப்பட்டு அவர்களின் திறமைகளை ஊக்குவிப்பது, இவ்வுலகின் மனிதக் குடும்பம் முன்னேறுவதற்கு இன்றியமையாதவை என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
சிறுமிகளுக்குக் கல்வி வழங்குவதே இவற்றை அடைவதற்குச் சிறந்தவழி என்றும், பல
நாடுகளில் பாலியல் பாகுபாட்டின் அடிப்படையில் பல சிறுமிகளுக்கு கல்வி
வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்றும் பான் கி மூன் மேலும் கூறியுள்ளார்.
அக்டோபர் 11, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக பெண் குழந்தைகள் தினச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பான் கி மூன், பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளிலும் பலர் பாகுபாட்டையும் வன்முறையையும் எதிர்கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
"பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்' என்பது இவ்வாண்டின் இத்தினத்தின் மையக்கருத்தாகும்.
சிறுமிகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011ம்
ஆண்டு டிசம்பர் 19ம் தேதியன்று ஐ.நா. பொது அவை நிறைவேற்றிய
தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 11ம் தேதியன்று அனைத்துலக
சிறுமிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment