செய்திகள் - 10.10.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இறையருள் என்ற பரிசு சுற்றப்பட்டிருக்கும் தாளைப்போல நமது செபங்கள் உள்ளன - திருத்தந்தை பிரான்சிஸ்
2. குரோவேசியா நாட்டின் அரசுத் தலைவர், திருத்தந்தையுடன் சந்திப்பு
3. கொலம்பஸ் தளபதிகள் உரோமைய ஆயருக்கு உறுதுணையாக விளங்குகின்றனர் - திருத்தந்தை பிரான்சிஸ்
4. சிலுவை என்ற மறைபொருளை செபத்தின் வழியாக மட்டுமே புரிந்துகொள்ள முடியும் - திருத்தந்தையின் Twitter செய்தி
5. ஆசிய செய்தி நிறுவனத்திற்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி
6. Lampedusa விபத்தில் இறந்தொருக்கென புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி
7. பெரு நாட்டில் பெருகிவரும் கொலைக் குற்றங்களைத் தடுக்க, சிறைக் கைதிகள் முயற்சி
8. வட, தென் கொரிய நாடுகளின் இணைப்பை வலியுறுத்தும் கருத்துடன் இரயில் பயணம்
9. அக்டோபர் 10 - உலக மனநல நாள், மரண தண்டனைக்கு எதிரான 11வது உலக நாள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இறையருள் என்ற பரிசு சுற்றப்பட்டிருக்கும் தாளைப்போல நமது செபங்கள் உள்ளன - திருத்தந்தை பிரான்சிஸ்
அக்.10,2013. இறையருள் என்ற பரிசு சுற்றப்பட்டிருக்கும் தாளைப்போல நமது செபங்கள் உள்ளன என்றும்,
இறையருள் என்ற பரிசை வேண்டி நாம் எழுப்பும் செபங்களின் பயனாக நமக்குக்
கிடைக்கும் பரிசு இறைவனே என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழனன்று காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியாற்றியபோது, நள்ளிரவில் உதவி கேட்டுச்சென்ற நண்பரைக் குறித்த உவமையை தன் மறையுரையின் மையமாக்கினார்.
இறையருளை வேண்டி நாம் செபங்களை எழுப்பும்போது, இறைவன் தன் அருளை மட்டுமல்ல, தன்னையே நமக்கு வழங்குகிறார் என்று கூறியத் திருத்தந்தை, இறைவன் வழங்கும் அருள், மின்னஞ்சல் வழியாக ஒருபோதும் நம்மை வந்து சேர்வது கிடையாது, மாறாக, அவரே நம்மைத் தேடி வந்து தன் அருளை வழங்குகிறார் என்பதை வலியுறுத்திக் கூறினார்.
நற்செய்தியில் நாம் காணும் பத்து தொழுநோயாளர்களைப் போல, நம்மில் பலர் நமக்குச் சேரவேண்டிய அருள் கிடைத்ததும், சென்று விடுகிறோம். நம்மில் வெகு சிலரே திரும்பிவந்து இறைவனுக்கு நன்றி சொல்கிறோம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
நாம் எழுப்பும் செபங்களின் பயனாக, நம்மை வந்தடையும் அருள் என்னவென்று அறிந்துகொள்ள நமக்கு துணிவு வேண்டும், ஏனெனில், நாம் வேண்டும் அருளைக் காட்டிலும், நம்மை வந்தடைவது இறைவனே என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. குரோவேசியா நாட்டின் அரசுத் தலைவர், திருத்தந்தையுடன் சந்திப்பு
அக்.10,2013. குரோவேசியா நாட்டின் அரசுத் தலைவர் Ivo Josipović அவர்கள், இவ்வியாழன் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்தார்.
கத்தோலிக்கப் பாரம்பரியத்தில் ஊறியுள்ள குரோவேசியா நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவு குறித்து இச்சந்திப்பின்போது பேசப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் குரோவேசியா இணைவது குறித்து மகிழ்வு வெளியிட்டுள்ள வேளை, இந்த இணைப்பினால் அந்நாடு சந்திக்கவிருக்கும் சவால்கள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.
உலகின் பல நாடுகள் சந்தித்துவரும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்தும், குரோவேசியா விலிருந்து பிற நாடுகளில் குடியேறியுள்ளவர்கள் குறித்தும் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
குரோவேசியா நாட்டின் அரசுத் தலைவர் Ivo Josipović அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அவர்களையும், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் அவையின் தலைவர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. கொலம்பஸ் தளபதிகள் உரோமைய ஆயருக்கு உறுதுணையாக விளங்குகின்றனர் - திருத்தந்தை பிரான்சிஸ்
அக்.10,2013. கொலம்பஸ் தளபதிகள், தங்கள் நிதி உதவியால் மட்டுமல்ல, மாறாக, தங்கள் செபங்களாலும், பணிகளாலும்
புனித பேதுருவின் வழித் தோன்றலான உரோமைய ஆயருக்கு உறுதுணையாக
விளங்குகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மகிழ்வை
வெளியிட்டார்.
அக்டோபர் 10, இவ்வியாழன் மதியம், கொலம்பஸ் தளபதிகள் என்று அழைக்கப்படும் ஒரு கத்தோலிக்கப் பணி அமைப்பைச் சார்ந்த 80 பேரை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்கள் ஆற்றும் பணிகளைப் பாராட்டி, செய்தியொன்றை வழங்கினார்.
தொலைநோக்குப் பார்வையுடன், வணக்கத்திற்குரிய அருள் பணியாளர் Michael McGivney அவர்கள் உருவாக்கிய கொலம்பஸ் தளபதிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து புளிப்பு மாவாக இவ்வுலகில் செயலாற்ற திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
நம்பிக்கை ஆண்டின் இறுதியை நெருங்கிவரும் இவ்வேளையில், இவ்வமைப்பில் உள்ள அனைவரையும், அவர்கள் குடும்பங்களையும், திருக்குடும்பத்தின் பாதுகாவலராகிய புனித யோசேப்புவின் கண்காணிப்பில் ஒப்படைத்து, அவர்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதாகத் திருத்தந்தை கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. சிலுவை என்ற மறைபொருளை செபத்தின் வழியாக மட்டுமே புரிந்துகொள்ள முடியும் - திருத்தந்தையின் Twitter செய்தி
அக்.10,2013. அன்பின் பேருண்மையாக விளங்கும் சிலுவை என்ற மறைபொருளை நாம் செபத்தின் வழியாக மட்டுமே புரிந்துகொள்ள முடியும். எனவே, சிலுவைக்கு முன், முழந்தாள்படியிட்டு, கண்ணீருடன் செபிப்போம் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வழங்கிய Twitter செய்தியாக அமைந்தது.
ஆங்கிலம், இத்தாலியம், பிரெஞ்ச், அரேபியம் ஆகிய மொழிகள் உட்பட, வழக்கமான ஒன்பது மொழிகளில் இச்செய்தி வெளியானது.
இதற்கிடையே, அரசியல் பிரச்சனைகளுக்குத் தகுந்த முறையில் தீர்வு காணாமல், மனிதாபிமான தீர்வுகள் பயன்தராது என்ற Twitter செய்தியை பேராயர் சில்வானோ தொமாசி அவர்களின் சார்பில், திருப்பீடம் இவ்வியாழனன்று வெளியிட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. ஆசிய செய்தி நிறுவனத்திற்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி
அக்.10,2013. கிறிஸ்துவின் மீட்புச்செய்தி அனைவரையும் சென்றடைவது, தொடர்புத் துறையில் பணியாற்றும் உங்கள் அனைவர் முன்னிலையில் உள்ள ஒரு சவால் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
PIME என்றழைக்கப்படும் பாப்பிறை மறைபரப்புக் கழகத்தின் ஒரு முயற்சியாக துவக்கப்பட்ட கத்தோலிக்க செய்தி நிறுவனமான ஆசிய செய்தி நிறுவனம், தன் பத்தாண்டு பணி நிறைவை இப்புதனன்று உரோம் நகரில் கொண்டாடியபோது, அவர்களுக்குத் திருத்தந்தை வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பினார்.
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அவர்கள் அனுப்பியிருந்த இச்செய்தியில், ஆசிய
செய்தி நிறுவனம் விரைவில் இஸ்பானிய மொழியிலும் தன் முயற்சிகளைத்
துவங்கவிருப்பதற்கு திருத்தந்தை தன் தனிப்பட்ட வாழ்த்துக்களைத்
தெரிவித்தார்.
உரோம் நகர் உர்பானியா பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் "பத்தாண்டுகள் ஆசியாவில், பத்தாண்டுகள் எமது வரலாறு" என்ற தலைப்பில் ஆசிய செய்தி நிறுவனம் இப்புதனன்று ஒரு கருத்தரங்கை நடத்தியது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. Lampedusa விபத்தில் இறந்தொருக்கென புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி
அக்.10,2013. மனதில் பல கனவுகளைச் சுமந்து Lampedusa தீவை நோக்கி வந்த நமது சகோதர சகோதரிகளின் எண்ணங்கள் முழுமை அடையவில்லையெனினும், அவர்களை இறைவனின் அணைப்பில் நாம் ஒப்படைப்போம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அக்டோபர் 3, கடந்த வியாழனன்று இத்தாலியின் தென் முனையில் அமைந்துள்ள Lampedusa தீவை நோக்கிவந்த படகு விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் இறந்தொருக்கென அக்டோபர் 9, இப்புதனன்று
புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலியாற்றிய கீழை வழிபாட்டு
முறை திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி
அவர்கள் தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
இச்சிறப்புத் திருப்பலியில், ஆப்ரிக்காவைச் சேர்ந்த எத்தியோப்பியா, எரித்ரியா, மற்றும் மார்கே ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த 22 ஆயர்களும், நாற்பது அருள் பணியாளர்களும், நூற்றுக்கணக்கான மக்களும் கலந்துகொண்டனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று வழங்கிய மறைபோதகத்திற்குப் பின்னர், ஆப்ரிக்க ஆயர்களை புனித பேதுரு வளாகத்தில் சந்தித்து, தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. பெரு நாட்டில் பெருகிவரும் கொலைக் குற்றங்களைத் தடுக்க, சிறைக் கைதிகள் முயற்சி
அக்.10,2013. பெரு நாட்டின் Chimbote பகுதியில் பெருகிவரும் கொலைக் குற்றங்களைத் தடுக்க, சிறையில் இருக்கும் கைதிகள் முயற்சிகள் மேற்கொள்வது வரவேற்கத் தக்க ஒரு பணி என்று பெரு நாட்டின் ஆயர் ஒருவர் கூறினார்.
பெரு நாட்டின் தலைநகரான Limaவுக்கு வடக்கே அமைந்துள்ள Chimbote என்ற நகரில் நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாதம் முடிய 60க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளன.
கவலை தரும் இந்தப் போக்கை நிறுத்த, அந்நகரில் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் அக்டோபர் 17, வருகிற வியாழனன்று தங்கள் சிறை வளாகத்தில் ஒரு அமைதி ஊர்வலத்தையும், திருப்பலியையும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இத்திருப்பலியை ஆற்ற Chimbote ஆயர் Simon Piorno அவர்களைச் சிறை கைதிகள் அழைத்ததையடுத்து, ஆயர் அவர்கள் இத்திட்டத்தைப் பாராட்டி, Fides செய்திக்கு அளித்த பேட்டியில் தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
எப்பாவமும் அறியாதவர்கள் கொல்லப்படுவதை நிறுத்தி, Chimbote நகரை அமைதியுள்ள நகராக மாற்றுவது அனைவரின் கடமை என்பதை சிறைக் கைதிகள் வலியுறுத்தி இந்த முயற்சியை மேற்கொள்கின்றனர் என்று ஆயர் Piorno அவர்கள் கூறினார்.
ஆதாரம் : Fides
8. வட, தென் கொரிய நாடுகளின் இணைப்பை வலியுறுத்தும் கருத்துடன் இரயில் பயணம்
அக்.10,2013. உலக அமைதியையும், குறிப்பாக, வட, தென்
கொரிய நாடுகளின் இணைப்பையும் வலியுறுத்தும் கருத்துடன் இரயில் பயணம் ஒன்று
அண்மையில் ஜெர்மனியின் பெர்லின் நகரிலிருந்து ஆரம்பமானது.
கத்தோலிக்கத் திருஅவை உட்பட பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பான World Council of Churches, அதாவது, திருஅவைகளின் உலகச் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த பல பயணிகளைத் தாங்கிச் செல்லும் இந்த இரயில், Moscow, Irkutsk, Beijing ஆகிய நகரங்களைத் தாண்டி, வடகொரியாவின் Pyongyang வழியாக தென்கொரியாவின் Busan நகரை அக்டோபர் 28ம் தேதி சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரயில் வடகொரியாவில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டால், இப்பயணிகள் தங்கள் பயணத்தை கப்பல் வழி மேற்கொள்வர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
World Council of Churches அமைப்பைச் சார்ந்த இப்பயணிகள் தங்கள் பயணத்தின்போது, செபங்களைச் சொல்லியபடி செல்வர் என்றும், அமைதியை வலியுறுத்தும் செய்திகள் அடங்கிய துண்டுத் தாள்களையும், பலூன்களையும் போகும் வழியில் மக்களுடன் பகிர்ந்துகொள்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : AsiaNews
9. அக்டோபர் 10 - உலக மனநல நாள், மரண தண்டனைக்கு எதிரான 11வது உலக நாள்
அக்.10,2013. அக்டோபர் 10, இவ்வியாழனன்று, உலகெங்கும் உலக மனநல நாள் சிறப்பிக்கப்படுகிறது. மனநல உலக ஒன்றியம் என்ற அமைப்பினரின் இந்த முயற்சிக்கு WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் தன் முழு ஆதரவை அளித்து வருகிறது.
"மனநலமும், வயது முதிர்ந்தோரும்" என்பது, இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் உலக மனநல நாளுக்கென வழங்கப்பட்டுள்ள மையக் கருத்தாகும்.
"பிளவுபட்ட மனநிலையுடன் வாழ்தல்" என்பது வருகிற ஆண்டில் இந்த நாளுக்கென குறிக்கப்பட்டுள்ள மையக் கருத்தென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 10, இவ்வியாழனன்று, மரண தண்டனைக்கு எதிரான 11வது உலக நாளும் சிறப்பிக்கப்படுகிறது.
"குற்றங்களை நிறுத்து, வாழ்வை அல்ல" என்பது, இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் இந்நாளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையக் கருத்து.
Amnesty International என்ற உலக அமைப்பின் கணக்குப்படி, உலகில் இன்று 140 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன. 2011ம் ஆண்டில், 63 நாடுகளில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டன என்றும், 21 நாடுகளில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்றும் Amnesty International கூறியுள்ளது.
No comments:
Post a Comment