Thursday, 10 October 2013

செய்திகள் - 09.10.13

 செய்திகள் - 09.10.13
 ------------------------------------------------------------------------------------------------------

1. அர்ஜென்டீனா அரசுத்தலைவர் விரைவில் குணமடைய திருத்தந்தை செபம்

2. வத்திக்கானுக்கு வரும் பாத்திமா அன்னையின் திருஉருவத்தை திருத்தந்தை வரவேற்கிறார்

3. அமெரிக்காவில் சிறப்பிக்கப்படும் 'வாழ்வுக்கு மதிப்பு' மாதத்திற்கு கர்தினால் Séan O’Malley செய்தி

4. பெண்களை மதிக்கும் பாடங்களை சொல்லித் தரவேண்டிய முதல் கடமை பெற்றோரைச் சாரும் - மும்பை ஆயர் Savio Fernandes

5. எருசலேமில் கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட ஊர்வலம்

6. "பெர்கோலியோவின் பட்டியல்" - திருத்தந்தையைப் பற்றிய புதிய நூல்

7. தஞ்சம் தேடிவரும் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பும், வசதிகளும் செய்து தருவது இத்தாலிய அரசின் கடமை - ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர்

8. நீரைப் பகிரும் முயற்சிகளைத் தீவிரமாக்காவிடில் நாடுகளிடையே மோதல்கள் உருவாகும் - ஐ.நா. பொதுச்செயலர்

------------------------------------------------------------------------------------------------------
1. அர்ஜென்டீனா அரசுத்தலைவர் விரைவில் குணமடைய திருத்தந்தை செபம்

அக்.09,2013. தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்துவரும் அர்ஜென்டீனா அரசுத்தலைவர் Cristina Fernandez de Kirchner  அவர்கள், விரைவில் முழுகுணமடைய, தான் செபிப்பதாக தந்திச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உள்புற மண்டை ஓட்டுக்கும் மூளைக்கும் இடையே இரத்தம் கட்டியிருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் அக்கட்டி எடுக்கப்பட்டு குணமடைந்து வருகிறார் அர்ஜென்டீனா அரசுத்தலைவர் Cristina Kirchner.
அரசுத்தலைவர் Cristina Kirchner அவர்களுக்காக, Luján அன்னைமரியிடம் தான் செபிப்பதாக அத்தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவரின் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் செபத்தையும் தெரிவித்துள்ளார்.
அரசுத்தலைவர் Cristina Kirchner அவர்களின் கணவரான முன்னாள் அரசுத்தலைவர் Nestor Kirchner, 2010ம் ஆண்டில் மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. வத்திக்கானுக்கு வரும் பாத்திமா அன்னையின் திருஉருவத்தை திருத்தந்தை வரவேற்கிறார்

அக்.09,2013. வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பிக்கப்படும் அன்னை மரியா நாள் கொண்டாட்டங்களையொட்டி, பாத்திமா திருத்தலத்திலிருந்து வத்திக்கானுக்குக் கொண்டுவரப்படும் பாத்திமா அன்னையின் திருஉருவச் சிலையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் வரவேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று பேராலய வளாகத்தில் திருத்தந்தை அவர்கள் முன்னின்று நடத்தும் மாலை செப வழிபாட்டின்போதும், ஞாயிறன்று அவர் நடத்தும் திருப்பலியின்போதும் பாத்திமா அன்னையின் திரு உருவம் சிறப்பு இடம் பெறும்.
1981ம் ஆண்டு மேமாதம் 13ம் தேதியன்று, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களைக் கொல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, அவர் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு, பாத்திமா அன்னை திரு உருவத்தின் மகுடத்தில் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப் பணியின் முதலாம் ஆண்டு நினைவாக, அக்டோபர் 8, இச்செவ்வாயன்று ஒரு சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது.
இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முகமும், மறு பக்கத்தில், அவரது இறையழைத்தலை நினைவுறுத்தும் வண்ணம், இயேசுவால் புனித மத்தேயு அழைக்கப்பட்ட காட்சியும் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : VIS / CNA/EWTN

3. அமெரிக்காவில் சிறப்பிக்கப்படும் 'வாழ்வுக்கு மதிப்பு' மாதத்திற்கு கர்தினால் Séan O’Malley செய்தி

அக்.09,2013. கிறிஸ்துவைப் போல் நாமும் ஒருவர் ஒருவரை மதிக்கவும், அன்புகூரவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று அமெரிக்காவின் பாஸ்டன் உயர் மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் Séan O’Malley அவர்கள் கூறினார்.
அக்டோபர் 6, கடந்த ஞாயிறு முதல் ஒரு மாத அளவில் அமெரிக்க கத்தோலிக்கத் தலத்திருஅவை 'வாழ்வுக்கு மதிப்பு' மாதத்தைச் சிறப்பிக்கின்றது. இந்த மாதத்தையொட்டி, அமெரிக்க ஆயர் பேரவையின் வாழ்வை வலியுறுத்தும் பணிக்குழுவின் தலைவர், கர்தினால் O’Malley அவர்கள் விடுத்த ஒரு செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
"உங்கள்  இதயங்களை வாழ்வுக்குத் திறந்துவிடுங்கள்" என்ற மையக்கருத்துடன், 2013 அக்டோபர் முதல், 2014 அக்டோபர் வரை வாழ்வை வலியுறுத்தும் ஆண்டு கொண்டாடப்படும் என்று அமெரிக்க ஆயர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருவில் உருவாவது முதல், கல்லறை வரை ஒவ்வொரு மனித உயிரும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்த இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் பங்குத் தளங்களில் மேற்கொள்ளப்படும் என்று கர்தினால் O’Malley அவர்கள் கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN

4. பெண்களை மதிக்கும் பாடங்களை சொல்லித் தரவேண்டிய முதல் கடமை பெற்றோரைச் சாரும் - மும்பை ஆயர் Savio Fernandes

அக்.09,2013. மனிதர்களை, குறிப்பாக, பெண்களை மதிக்கும் பாடங்களை குழந்தைப் பருவம் முதல் சொல்லித் தரவேண்டிய முதல் கடமை பெற்றோரைச் சாரும் என்று மும்பை நகர துணை ஆயர் Savio Fernandes அவர்கள் கூறினார்.
அக்டோபர் 11, வருகிற வெள்ளியன்று சிறப்பிக்கப்படும் பெண் குழந்தை அகில உலக நாளையொட்டி, மும்பை உயர் மறைமாவட்டம் விடுத்துள்ள ஓர் விண்ணப்பத்தில் ஆயர் Fernandes அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்பட்ட மரியன்னையின் பிறந்த நாளையொட்டி, மும்பை உயர் மறைமாவட்டம், பெண் குழந்தை நாளையும் இணைத்துக் கொண்டாடியது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர் Fernandes அவர்கள், பெண்கள் மட்டில் காட்டப்பட வேண்டிய மாண்பு, குடும்பங்களில் துவங்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
மும்பை உயர் மறைமாவட்டத்தைப் பொருத்தவரை, பள்ளிகள், பங்குத்தளங்கள், ஞாயிறு திருப்பலிகள் ஆகிய அனைத்து வழிகளிலும் பெண்கள் மாண்பை வலியுறுத்தும் கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன என்றும் ஆயர் Fernandes அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பெட்டியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews

5. எருசலேமில் கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட ஊர்வலம்

அக்.09,2013. மக்கள் ஒற்றுமையாக, அமைதியாக வாழ்வதைக் குலைக்கும்வண்ணம் ஒரு சில அடிப்படைவாதக் குழுக்களைச் சார்ந்த சிறுபான்மையினர் மேற்கொள்ளும் வன்முறைகளுக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்துள்ளனர் என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் William Shomali அவர்கள் கூறினார்.
எருசலேமில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள், கல்லறைகள், ஆகியவற்றின் மரியாதையைக் குலைக்கும்வண்ணம், யூத இனத்தைச் சார்ந்த ஒரு சிறுபான்மை குழுவினர் மேற்கொண்டுள்ள தாக்குதல்களை எதிர்த்து, அக்டோபர் 7, இத்திங்களன்று கிறிஸ்தவர்கள் ஓர் ஊர்வலத்தை மேற்கொண்டனர்.
இந்த ஊர்வலம் எவ்வித முன்னறிவிப்பும், ஏற்பாடும் செய்யப்படாமல், மக்கள் தாங்களாகவே மேற்கொண்ட ஒரு முயற்சி என்று ஆயர் Shomali அவர்கள் கூறினார்.
திருக்கல்லறை பேராலயத்தில் கூடிவந்த கிறிஸ்தவர்கள், பின்னர், இலத்தீன் கத்தோலிக்க கல்லறைக்கும், ஆங்கிலிக்கன் கல்லறைக்கும் ஊர்வலமாகச் சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், கிறிஸ்தவ துறவுமடங்கள், கோவில்கள், கல்லறைகள் ஆகிய இடங்களின் மதிப்பைக் குறைக்கும் முயற்சியில் அடிப்படைவாதக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides

6. "பெர்கோலியோவின் பட்டியல்" - திருத்தந்தையைப் பற்றிய புதிய நூல்

அக்.09,2013. அர்ஜென்டீனா நாட்டில், இராணுவத் தளபதி Jorge Rafael Videlaன் சர்வாதிகார ஆட்சி நடந்தபோது அங்கு இயேசு சபை மாநிலத் தலைவராகப் பணியாற்றிய அருள் பணியாளர் Jorge Mario Bergoglio அவர்கள், இந்த ஆட்சியின் கொடுமைகளிலிருந்து 100க்கும் அதிகமானோரைக் காப்பாற்றினார் என்பதை எடுத்துரைக்கும் நூல் ஒன்று அண்மையில் வெளியானது.
"Bergoglio's List" அதாவது, "பெர்கோலியோவின் பட்டியல்" என்ற பெயரில் இத்தாலிய எழுத்தாளர் Nello Scavo என்பவர் வெளியிட்டுள்ள இந்நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ஜென்டீனா இயேசு சபை மாநிலத் தலைவராக பணியாற்றியபோது, பலரைக் காப்பாற்றினார் என்பதை இந்நூலில் கூறியுள்ளார்.
இயேசு சபை மாநிலத் தலைவர் என்ற அளவில் பெர்கோலியோ அவர்கள் செய்த இந்த உதவியைப் பெற்றுக்கொண்டவர்கள் பகிர்ந்துள்ள தங்கள் சொந்த அனுபவத்தைத் தொகுத்து, Scavo அவர்கள் இந்நூலை வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மன் நாட்டு வர்த்தகர் Oscar Schindler என்பவர், நாத்சி அடக்கு முறையின் கொடுமைகளிலிருந்து யூதர்களைக் காப்பாற்றிய வரலாறு "Schindler's List" என்ற நூலாக வெளியானதைப்போல, "Bergoglio's List" என்ற இந்நூலில் அருள் பணியாளர் பெர்கோலியோ அவர்களால் காப்பாற்றப்பட்டவர்களின் அனுபவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
"பெர்கோலியோ பட்டியல்" என்று எதுவும் வரலாற்றுக் குறிப்பாக இல்லை என்பதைத் தெளிவாக்கும் இந்நூலின் ஆசிரியர் Scavo அவர்கள், தான் ஆற்றிய இப்பணியைக் குறித்து திருத்தந்தை அவர்கள் எப்போதும் பேசியதில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆதாரம் : CNA/EWTN

7. தஞ்சம் தேடிவரும் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பும், வசதிகளும் செய்து தருவது இத்தாலிய அரசின் கடமை - ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர்

அக்.09,2013. இத்தாலியின் Lampedusa தீவில் தஞ்சம் தேடிவரும் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பும், வசதிகளும் செய்து தருவது இத்தாலிய அரசின் கடமை என்று, இத்தாலியில் செயலாற்றும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் Laurens Jolles அவர்கள் இத்தாலிய அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.
இம்மாதம் 3ம் தேதி ஆப்ரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த மக்களைத் தாங்கி வந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகி மூழ்கிய நிகழ்வையடுத்து, ஐ.நா. அதிகாரி இந்த விண்ணப்பத்தை விடுத்துள்ளார்.
Lampedusaவுக்கு வரும் அகதிகள் தங்குமிடம் துவக்கத்தில் 850பேர் தங்கும் அளவு இருந்ததென்றும், 2011ம் ஆண்டு அங்கு நிகழ்ந்த ஒரு தீவிபத்தைத் தொடர்ந்து, அங்கு தற்போது 250 பேர் மட்டுமே தங்கும் வசதிகள் உள்ளனவென்றும் கூறும் ஐ.நா. அதிகாரி, இச்சூழலில் அங்கு வரும் பல குடும்பங்கள் மழையிலும் வெளியில் நிற்கவேண்டிய பரிதாப நிலையை எடுத்துரைத்துள்ளார்.
புலம் பெயர்ந்தோரை வரவேற்கும் முயற்சிகளிலும், கடலில் விபத்துக்கள் நிகழும்போது காப்பாற்றும் முயற்சிகளிலும் இத்தாலிய அரசு இன்னும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று ஐ.நா. அதிகாரி Jolles தன் விண்ணப்பத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. நீரைப் பகிரும் முயற்சிகளைத் தீவிரமாக்காவிடில் நாடுகளிடையே மோதல்கள் உருவாகும் - ஐ.நா. பொதுச்செயலர்

அக்.09,2013. மனித சமுதாயத்தின் நலன், உணவு பாதுகாப்பு, மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகிய அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது தண்ணீர் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.
அக்டோபர் 8ம் தேதி, இச்செவ்வாய் முதல் 11ம் தேதி வருகிற வெள்ளிக்கிழமை முடிய Hungary நாட்டின் தலைநகரான Budapestல் நடைபெறும் தண்ணீர் உச்சி மாநாட்டினைத் துவக்கிவைத்து உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலர், வாழ்வின் ஆதாரமான நீர் ஒவ்வொரு ஆண்டும் புதிய சவால்களை மனிதர்களுக்கு அளிக்கிறது என்று கூறினார்.
உலகெங்கும் வேளாண்மைக்கென நல்ல நீர் பெருமளவில் பயன்படுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய பான் கி மூன் அவர்கள், இல்லங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் நீரின் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
நீரின் தற்போதைய பயன்பாட்டில் கவனம் செலுத்தத் தவறினால், 2030ம் ஆண்டு, உலகின் பாதி மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டில் துன்புறும் நிலை உருவாகும் என்றும் ஐ.நா. பொதுச் செயலர் எச்சரிக்கை விடுத்தார்.
நீரைப் பகிர்வதில் இன்னும் பெரும் முயற்சிகள் தேவை என்பதை வலியுறுத்திய பான் கி மூன் அவர்கள், இந்த முயற்சிகளைத் தீவிரமாகச் சிந்திக்கத் தவறினால் நாடுகளிடையே பகைமையும், மோதல்களும் உருவாகும் என்றும் எச்சரித்தார்.

ஆதாரம் : UN


No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...