வன்னி மாணவர்களின் அசாத்திய கலைப் படைப்புக்கள்
Source: Tamil CNNவன்னி பெருநிலப்பரப்பு மீதான சிறீலங்கா அரச படைகளின் நில ஆக்கிரமிப்பு போருக்குப்பின்னரும், அதன் பின்னரான இராணுவ மயப்பட்டுக்கிடக்கும் முற்றுகைச்சூழலிலும் சிறுவர்களை உளவளப்படுத்தல் அல்லது மனவளப்படுத்தல் என்பது மிகப்பெரிய விடையமாக இருக்கிறது.
தொடக்கப்பள்ளி வாழ்க்கை எனும் போது, சுறுசுறுப்பு, தன்னியல்பு, நம்பிக்கை, ஆரம்பிக்கும் ஆற்றல் போன்ற மிக முக்கியமான உணர்வுத்தொகுதிகளைக்கொண்ட வளர் இளம் பள்ளிப்பராயத்தினரது ஆளுமை அடையாளத்தை விருத்தி செய்து “இல்லை-இயலாது-முடியாது” என்பதைத்தவிர்த்து “ஆம்-முடியும்-முயற்சிப்போம்” என்று அவர்களை முன் உந்த வைப்பது மிகவும் சவாலான பணியே!
கவனிப்பு, அக்கறை, பக்குவத்தோடு, விரிந்தெழுகின்ற அவர்களின் தேடல்களுக்கு வடிகால் வெட்டிக்கொடுப்பதுடன், கெட்டவைகள் சூழ்ந்துள்ள சூழலில் நல்லவை காண்பிக்கும் சூழலை தோற்றுவிப்பதிலும், சோம்பிக்கிடக்கும் பொழுதுகளில் நம்பிக்கை வித்துகளை அவர்களுக்குள் விதைப்பதிலும் முன்பள்ளி ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது.
தட்டித்தட்டி பானை செய்வது போலவும், தொட்டுத்தொட்டு சாமி செய்வது போலவும் மகிழ்ச்சிகரமான, பாதுகாப்பான ஒரு கற்றல் சூழலை மழலைகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வன்னி பெருநிலப்பரப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் குறைந்தளவு வேதனத்துடன் கடுமையாக உழைக்கிறார்கள்.
அதன் ஒரு அங்கமாக, திருமதி வசந்தன் நித்திலாதேவியின் வளப்படுத்தலில் முள்ளியவளை கணுக்கேணி கிழக்கு கற்பக விநாயகர் அறநெறிப்பாடசாலை (கலைவாணி முன்பள்ளி) மழலைகளின் மனவளக்கலையை ஒளிப்படங்களில் பாருங்கள்.
01. பென்சில் தீட்டும் போது வெளியேறும் சிதிலங்களை (பென்சில் மரத்துகள்கள்) கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சட்டை,
02. கந்தகம் நீக்கியும், நீக்காமலும் வத்திக்குச்சிகளைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மீன்கள், பூக்கள்,
03. புளியம் பழ வித்து மற்றும் மிளகாய் காம்புகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விச ஜந்து (பூராண்/மட்டைத்தேள்),
04. வாழை நாரை கயிறாக திரித்து (பின்னிப்பிணைந்து) பின்னர் அதைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தொப்பியும், பூக்கூடையும்,
05. வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூடு (உள்ளி) தோல்களைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கோழியும், சேவலும்,
06. பன்னாடையைக்கொண்டு முப்பரிமாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன்,
07. வாழைச்சருகால் உருவாக்கப்பட்டுள்ள யானை,
08. பொலித்தீன் தலைத்துண்டங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சட்டை,
09. தேங்காய்த்தும்பு மற்றும் தூசுகளைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தேங்காய்,
10. சிப்பிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கலைமான்,
11. குளிர்பானம் அருந்தும் “ஸ்ரோ”வை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சுவரில் தொங்கவிடும் வரைபடம்,
என்று முழுக்க முழுக்க கழிவுப்பொருள்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படைப்புகள், குறித்த மழலைகளின் கற்பனை சக்தியை, படைக்கும் திறனை முழம் போட்டு காட்டுகின்றன.
தமிழ் சி.என்.என் செய்தித்தளத்தின் வடபிராந்திய சிறப்பு செய்தியாளர்-
No comments:
Post a Comment