மலேசிய விமானம் மாயம்: பைலட் வீட்டில் போலீசார் விசாரணை
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போய் ஒரு வாரம் ஆகியும், அதன் இருப்பிடம் பற்றிய உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
உலக நாடுகளின் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், விமானத்தில் இருந்த யாரோ ஒருவர், தகவல் தொடர்பு சாதனங்களை திட்டமிட்டு செயலிழக்கச் செய்திருப்பதாக கூறினார்.
கடைசியாக காலை 8.11 மணிக்கு செயற்கைக்கோள் தகவல் தொடர்பு பதிவானதை குறிப்பிட்ட பிரதமர், விமானத்தின் தகவல் துண்டிக்கப்பட்ட பின்னர் ஏழரை மணி நேரம் விமானம் பறந்திருக்கலாம் என்ற கருத்தை தெரிவித்தார். மேலும் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் மீது விசாரணைக்குழுவினர் கவனம் செலுத்துவார்கள் என்றும் அறிவித்தார்.
அவர் அறிவித்த சில நிமிடங்களில், விமான கேப்டன் ஜகாரி அகமது ஷா வீட்டிற்கு மலேசிய போலீஸ் அதிகாரிகள் சென்று விசாரணையைத் தொடங்கினர். ஷா ஆலமில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்று வரும் இந்த விசாரணையின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
18365 மணி நேரம் விமானத்தை இயக்கி அனுபவம் பெற்ற ஜகாரி (வயது 53), விமான பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். எம்.எச்.370 விமானம் மர்மமான முறையில் காணாமல் போனதையடுத்து அவரைப்பற்றி செய்தி வெளியானது. அத்துடன், அந்த விமானத்தின் மாதிரி வடிவம் அவரது வீட்டில் இருந்தது பற்றி பல்வேறு கேள்விகளும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment