கேண்டிடேட்ஸ் செஸ்: முதல் சுற்றில் ஆனந்த்- ஆரோனியன் மோதல்
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் முதல் சுற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், தரவரிசையில் அதிக புள்ளிகளுடன் முன்னணியில் உள்ள லேவன் ஆரோனியனை சந்திக்கிறார்.
ரஷியாவின் கான்ட்டி மாஸிஸ்க் நகரில் வியாழக்கிழமை இப்போட்டியின் முதல் சுற்று நடைபெறவுள்ளது. வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் கார்ல்ùஸனை எதிர்த்து ஆடுபவரைத் தேர்வு செய்வதற்கான இப்போட்டியில் முன்னணி வீரர்கள் எட்டு பேர் பங்கேற்கின்றனர்.
கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வேயின் கார்ல்ஸனிடம் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியாவின் ஆனந்த் தன் முதல் சுற்றில் ஆர்மேனியாவின் ஆரோனியனை எதிர் கொள்கிறார். முதல் சுற்று ஆட்டத்தில் ஆனந்த் வெள்ளை நிறக் காய்களுடன் ஆட உள்ளார். பல்கேரியாவின் வேஸ்லின் டாபலோவ், ஆஸர்பெய்ஜான் நாட்டின் ஷக்ரியார் மேம்டியரோவ் ஆகியோருக்கு எதிரான அடுத்தடுத்த சுற்றுகளில் ஆனந்த் கறுப்பு நிற காய்களுடன் விளையாடவுள்ளார்.
ஆரோனியன் இதற்கு முந்தைய ஆட்டங்களில் கடும் சவால் அளித்திருக்கிறார் என்பதால் ஆனந்த் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கிளாசிக்கல் முறையில் நடைபெறும் இப்போட்டியில் சாதித்தால் மட்டுமே ஆனந்த் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியும். சென்னையில் நடைபெற்ற உலக செஸ் போட்டிக்குப் பின் ஜுரிச் செஸ் மற்றும் லண்டன் கிளாசிக் செஸ் போட்டிகளில் ஆனந்த் பெரிதாக சாதிக்கவில்லை என்பதால் இம்முறை எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
முதல் சுற்றின் மற்ற ஆட்டங்களில் ரஷியாவின் டிமிட்ரி ஆண்ட்ரிகீனும், விளாடிமிர் கிராம்னிக்கும் மோதவுள்ளனர். ரஷியாவின் செர்ஜே கர்ஜகின் தன் முதல் ஆட்டத்தில் சக நாட்டு வீரர் பீட்டர் ஸ்விட்லரை சந்திக்கிறார்.
No comments:
Post a Comment