பிருந்தாவனத்தில் கிருஷ்ணருக்கு 70 மாடி உயரக் கோவில்
இந்துக்கடவுள்களில் ஒருவரான கிருஷ்ணர் தனது இளமைக்காலத்தை மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில் கழித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
அந்த பிருந்தாவனத்திற்கு உலகளாவிய பெருமை சேர்க்கும் விதமாக அங்கு கிருஷ்ணருக்கென்று 213 மீ உயரம் கொண்ட ஒரு கோவிலை நிர்மாணிக்க கிருஷ்ண பக்தர்களுக்கான சர்வதேச சமூகம் தீர்மானித்துள்ளது.
62 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள இந்தக் கோவிலுக்கென தனி ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும். இங்கு தங்கி இறைசேவையில் ஈடுபடும் பக்தர்களுக்கான வீடு வசதிகளும் இங்கு ஏற்படுத்தித் தரப்படும்.
நவீன கட்டிடக்கலையுடன் இணைந்த நகரத்தார் பாணியில் இந்தக் கோவில் அமைக்கப்படும் என்றும் ஆண்டு முழுவதும் அங்கு கலாச்சாரத் திருவிழாக்களும், ஆன்மீகத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றும் இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது.
இங்கு கோவில்களுக்குப் பஞ்சம் இல்லையென்றாலும் இப்படியொரு முன்மாதிரியான கோவிலை உருவாக்குவதன்மூலம் உலக வரைபடத்தில் இக்கோவிலுக்கென தனித்துவம் கிடைக்கச் செய்வதே எங்களின் நோக்கமாகும் என்று இஸ்கான் அமைப்பின் தகவல் மற்றும் பொதுத் தொடர்பின் தலைவர் பாரத் தாசா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள இஸ்கான் அமைப்பின் கருவில் உருவான இந்தத் திட்டத்தில் கிருஷ்ணர் பொழுது போக்கிய பிரஜ் காடுகளை ஒத்த வனப்பகுதியும் கோவிலைச் சுற்றி 30 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது.
இத்துடன் ரத யாத்திரை, பல்லக்குத் திருவிழா,ஊஞ்சலாட்டம், படகுத் திருவிழாக்கள் போன்ற கிருஷ்ணருக்கு விருப்பமான பல நிகழ்வுகள் இங்கு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிருந்தாவனத்தின் சந்திரோதயா கோவில் என்று அழைக்கப்படவுள்ள இந்தக் கோவிலின் அடிக்கல் நாட்டுவிழா ஹோலிப்பண்டிகையான நாளை நடைபெற உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment