காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 600 கட்டிடங்கள் பாதிப்பு
காஷ்மீரில் இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. சமீபத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவில் அங்கு குடியிருப்பு வீடுகள் உட்பட 600க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக ஜம்மு, காஷ்மீர் அரசு இன்று தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த ஆரம்ப நிவாரண சேத மதிப்பீடு அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்க அரசுத்துறை செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அரசின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் சிரமப்படும் குடும்பங்களுக்கு அரசின் உதவிகள் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தலைமை செயலாளர் முகமது இக்பால் கண்டே தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மின்சாரம், குடிநீர் போன்ற முக்கிய சேவைகளைப் பாதித்து இயல்பு வாழ்க்கையை முடக்கிய நிலைமையை சீராக்கும் வழிமுறைகள் குறித்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. பனிப்பொழிவின் போது பாதிப்படைந்த மின்சார விநியோகம் 60 சதவிகித அளவு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக அரசுத்தரப்பு குறிப்பிட்டுள்ளது. நாளைக்குள் இந்த விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படக்கூடும் என்று தகவல் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
மருத்துவமனை போன்ற அவசரநிலை சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் விரைந்து செயல்படுத்தப்பட்டது. மருத்துவ உதவிக்கு வருபவர்களின் வசதிக்காக அந்தப் பகுதிகளில் படர்ந்திருந்த பனிக்கட்டிகள் விரைவாக அகற்றப்பட்டன. மேலும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பள்ளிகள் போன்ற அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 15ஆம் திகதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது என்ற தகவலையும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment