Tuesday, 18 March 2014

செய்திகள் - 18.03.14

செய்திகள் - 18.03.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : தவக்காலம் வாழ்வைச் சீர்செய்து ஆண்டவரிடம் நெருக்கமாகச் செல்லும் காலம்

2. கிறிஸ்தவ அன்பு என்பது பலனைக் கணக்கிடாத ஓர் அன்பு, திருத்தந்தை பிரான்சிஸ்

3. மனித வணிகத்தைத் தடைசெய்யும் உடன்பாட்டில் வத்திக்கான், ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை, முஸ்லிம்கள் கையெழுத்து

4. குவாத்தமாலாவில் 19 வீடற்ற குடும்பங்கள் திருத்தந்தைக்கு நன்றி 

5. உக்ரைன் திருஅவையின் தற்போதைய நிலைமையை திருத்தந்தை உன்னிப்பாய் கவனித்து வருகிறார்

6. இவ்வுலகில் பயன்பாட்டுக்கு உள்ள நிலப்பகுதி குறித்த விபரங்களை முதல்முறையாகச் சேகரிக்கத் தொடங்கியுள்ளது FAO நிறுவனம்

7. சிறுமிகளுக்கு கல்வி வழங்க நாடுகளுக்கு ஐ.நா. கோரிக்கை

8. உலகில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம்

9. காசநோயை ஒழிக்க இந்தியாவின் 16 மாநிலங்களில் புதிய திட்டம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : தவக்காலம் வாழ்வைச் சீர்செய்து ஆண்டவரிடம் நெருக்கமாகச் செல்லும் காலம்

மார்ச்,18,2014. நாம் நம் வாழ்வைச் சீர்படுத்தி, செம்மைப்படுத்தி, நம் வாழ்வை மாற்றி நாம் ஆண்டவரிடம் நெருக்கமாகச் செல்வதற்கு உதவும் காலம் தவக்காலம், ஆனால் நல்லவர்கள்போல் முகமூடி அணிந்துள்ள வெளிவேடக்காரர்கள் போல் அல்லாமல், நேர்மையான வழியில் நாம் ஆண்டவரிடம் செல்ல வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாய் காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில், மனமாற்றம் என்ற தலைப்பில் ஆற்றிய மறையுரையில் இவ்வாறு உரைத்தார். சோதோம் கொமோரா ஆகிய பாவம் நிறைந்த நகரங்களை மனமாற்றத்துக்கு ஆண்டவர் அழைத்தது போல நம்மையும் அழைக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் ஆண்டவரிடம் நெருங்கி வரவேண்டுமென்று அவர் விரும்புகிறார், நம்மை மன்னிப்பதற்கு நமக்காகக் காத்திருக்கிறார் என்பதை அவர் உறுதி செய்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, நமது அணுகுமுறை உண்மையானதாக, நேர்மையானதாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
நான் மற்றவர்களைவிட நன்றாக இருக்கிறேன் என்ற எண்ணத்தையும், தங்களை நல்லவர்கள் என ஏமாற்றிக்கொள்ளும் வெளிவேடக்காரர்களின் போக்கையும் எச்சரித்த திருத்தந்தை பிரான்சிஸ், மக்களை வெளிவேடக்காரர்களாக ஆக்குவது எது என்பது குறித்தும் விளக்கினார்.
நீதியை நமது நோக்கமாகக் கொண்டு, தவறுகளைத் திருத்தி, திக்கற்றோரின் விண்ணப்பங்களைக் கேட்டு, கைம்பெண்களுக்கு ஆதரவாகச் செயல்படும்போதும், நோயாளிகள், ஏழைகள், தேவையில் இருப்போர், அறியாமையில் இருப்போர் ஆகியோர்மீது அக்கறை காட்டும்போதும் நாம் சரியான பாதையில் செல்கிறோம் எனக் கூற முடியும் எனவும் திருத்தந்தை கூறினார்.
நம் சகோதர சகோதரிகளையும், ஏழைகளையும், நோயாளிகளையும் நன்றாக நடத்தும்போது நாம் இயேசு கிறிஸ்துவோடு இருக்கிறோம் என்பதன் அடையாளங்கள் என்றும், நமக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து, மனம் வருந்தி ஆண்டவரிடம் நெருங்கிவர துணிச்சலையும் ஒளியையும் அவரிடம் கேட்போம் என்றும் இத்திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கிறிஸ்தவ அன்பு என்பது பலனைக் கணக்கிடாத ஓர் அன்பு, திருத்தந்தை பிரான்சிஸ்

மார்ச்,18,2014. கிறிஸ்தவ அன்பு என்பது பலனைக் கணக்கிடாத ஓர் அன்பு; இதுவே நல்ல சமாரியர் சொல்லித்தரும் பாடம்; இதுவே இயேசு கற்றுத்தரும் பாடம் என்று தனது இச்செவ்வாய் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இவ்வாண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உகாண்டா நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளாததால், அந்நாட்டு மறைசாட்சிகள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டதன் பொன்விழாக் கொண்டாட்டங்களின் தேதிகளைத் தள்ளி வைத்துள்ளனர் உகாண்டா ஆயர்கள்.
வருகிற அக்டோபரில் சிறப்பிக்கப்படவிருந்த இப்பொன்விழாக் கொண்டாட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, உகாண்டா ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஜான் பாப்டிஸ்ட் ஒடாமா, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த அழைப்பிதழுக்கு நன்றி தெரிவித்திருப்பதாகவும், ஏற்கனவே  ஒப்புக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் இருப்பதால், இந்த 2014ம் ஆண்டில் உகாண்டாவுக்குத் தான் வர இயலாது எனக் கூறியிருப்பதாகவும் அறிவித்தார்.
உகாண்டா மறைசாட்சிகள், 1920ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி திருத்தந்தை 15ம் பெனடிக்ட்  அவர்களால் முத்திப்பேறுபெற்றவர்களாகவும், 1964ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் புனிதர்களாகவும் உயர்த்தப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. மனித வணிகத்தைத் தடைசெய்யும் உடன்பாட்டில் வத்திக்கான், ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை, முஸ்லிம்கள் கையெழுத்து

மார்ச்,18,2014. உலக அளவில் மனித வணிகத்தை 2020ம் ஆண்டுக்குள் நிறுத்திவிடுவதற்கு ஒன்றிணைந்து உழைப்பதற்கு உறுதி எடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் உடன்பாட்டில் வத்திக்கான், ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை, முக்கியமான ஒரு முஸ்லிம் நிறுவனம் ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.
இத்திங்களன்று வத்திக்கான் பத்திரிகையாளர் கூட்டத்தில் கையெழுத்திடப்பட்ட இந்த உடன்பாட்டில், உலகின் பிற பெரிய மதங்களும் இணையும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிமைத்தனத்தின் நவீன வடிவங்களைத் தடுத்தல், இதற்குப் பலியானவர்களைப் பாதுகாத்து மறுவாழ்வு அளித்தல், மனித வணிகத்தைக் கண்டனம் செய்யும் நடவடிக்கைகளைத் தூண்டுதல் போன்றவைகளுக்கு உலக அளவில் முயற்சிகள் எடுப்பதற்கு இவ்வுடன்படிக்கை வழி செய்கிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில், திருப்பீட அறிவியல் கழகத் தலைவர் ஆயர் Marcelo Sanchez Sorondo, கெய்ரோவின் முக்கிய சுன்னி முஸ்லிம் பிரிவு நிறுவனமான Al-Azhar பல்கலைக்கழகத் தலைவர் Ahmad el-Tayeb, கான்டர்பரி பேராயரின் உரோம் பிரதிநிதி பேராயர் David Moxon, Walk Free அமைப்பின் நிறுவனர் Andrew Forrest ஆகியோர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. குவாத்தமாலாவில் 19 வீடற்ற குடும்பங்கள் திருத்தந்தைக்கு நன்றி 

மார்ச்,18,2014. “Cor Unum” என்ற திருப்பீட பிறரன்பு நிறுவனத் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள் இச்செவ்வாயன்று குவாத்தமாலா நாட்டுக்குச் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
வருகிற வெள்ளிக்கிழமைவரை கர்தினால் சாரா அவர்கள் மேற்கொள்ளும் இச்சுற்றுப்பயணத்தில், குவாத்தமாலா நாட்டின் Santa Rosa de Lima மறைமாவட்டத்தில் ஓர் ஆலயத்தைத் திருநிலைப்படுத்துவதுடன், 19 புதிய வீடுகளையும் ஆசீர்வதிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாத்தமாலா நாட்டில் 2011ம் ஆண்டில் இடம்பெற்ற இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, அவரின் உதவியால் ஒரு சிற்றாலயமும், 19 வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
திருத்தந்தையின் இவ்வுதவிக்கு குவாத்தமாலாவின் வீடற்ற குடும்பங்கள் தங்களின் நன்றியையும் தெரிவித்துள்ளன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. உக்ரைன் திருஅவையின் தற்போதைய நிலைமையை திருத்தந்தை உன்னிப்பாய் கவனித்து வருகிறார்

மார்ச்,18,2014. உக்ரைன் குடியரசு, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பதட்டநிலைகளை எதிர்நோக்கிவரும்வேளை, அந்நாட்டின் கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவையின் நிலைமை குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகவும் கருத்தாய்க் கவனித்து வருகிறார் என, உக்ரைன் தலத்திருஅவைத் தலைவர் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறையின் தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களாக உக்ரைனில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் குறித்து  திருத்தந்தையிடம் தான் விளக்கியதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் உக்ரைன் திருஅவைமீது மிகுந்த அக்கறையுடன் உள்ளார் எனவும் கூறினார்  பேராயர் Shevchuk.
மேலும், உக்ரைனின் கிரிமியா தன்னாட்சிப் பகுதி இரஷ்யாவுடன் இணைவதற்கு முன்வைத்த விண்ணப்பத்தை இரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. இவ்வுலகில் பயன்பாட்டுக்கு உள்ள நிலப்பகுதி குறித்த விபரங்களை முதல்முறையாகச் சேகரிக்கத் தொடங்கியுள்ளது FAO நிறுவனம்

மார்ச்,18,2014. விவசாய நிலங்கள், மரங்கள், காடுகள், தரிசு நிலங்கள் ஆகிய இவை ஒவ்வொன்றும் இந்த உலகில் எவ்வளவு நிலப்பரப்பைக் கொண்டுள்ளன என்பது குறித்த புள்ளி விபரங்களை, FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், முதல்முறையாகச் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இப்பூமியில் பயன்படுத்தப்படும் நிலப்பரப்பு குறித்த விபரங்களை அறிந்து கொள்வதற்கும், வேளாண்மை உற்பத்தி உட்பட உலகின் நிலையான வளர்ச்சியையும், வளங்கள் பாதுகாக்கப்படுவதையும் ஊக்குவிப்பதற்கும் இந்தப் புள்ளி விபரங்கள் உதவும் என, இத்திட்டத்தை முன்னின்று நடத்தும் FAO நிறுவன அலுவலகர் ஜான் லதாம் கூறினார்.
இதுவரை பல்வேறு நாடுகளும். பல்வேறு நிறுவனங்களும் இம்மாதிரியான விபரங்களைச் சேகரித்துள்ளன என்றும், உலக அளவில் இவ்வாறு எடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் லதாம் கூறினார்.
மரங்களால் சூழப்பட்ட பகுதி 27.7 விழுக்காடு, தரிசு நிலங்கள் 15.2 விழுக்காடு, புல்வெளிகள் 13.0 விழுக்காடு, விளைச்சல் நிலங்கள் 12.6 விழுக்காடு, பனிப்பகுதி 9.7  விழுக்காடு எனச் சொல்லப்பட்டுள்ளது.
   
ஆதாரம் : FAO

7. சிறுமிகளுக்கு கல்வி வழங்க நாடுகளுக்கு ஐ.நா. கோரிக்கை

மார்ச்,18,2014. சிறுமிகளுக்கு கல்வி வழங்குவது அனைத்து சமுதாயத்துக்கும் பலனளிக்கும் என்பதால், இவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு உலக அளவில் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படுமாறு யுனெஸ்கோ நிறுவனம் கேட்டுள்ளது.
உலகளாவியக் கல்வி குறித்து துபாயில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய யுனெஸ்கோ நிறுவன இயக்குனர் இரினா போக்கோவா, 2011ம் ஆண்டில் 3 கோடியே 10 இலட்சம் சிறுமிகள் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தனர், இவர்களில் 55 விழுக்காட்டினர் பள்ளிக்கு ஒருபோதும் சென்றதே கிடையாது எனத் தெரிவித்தார்.
உலகில் எழுத்தறிவற்ற 77 கோடியே 40 இலட்சம் வயதுவந்தோரில் மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்கள் என்றும் கூறிய போக்கோவா, இந்நிலை, திறமையையும், மனித அறிவையும் வீணாக்குவதாக உள்ளது எனக் கூறினார்.
சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் சிறுமிகளுக்கு கல்வி வழங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படாவிட்டால், ஒரு தலைமுறை இளம்பெண்கள் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள் எனவும் எச்சரித்தார் யுனெஸ்கோ இயக்குனர் போக்கோவா.

ஆதாரம் : UN

8. உலகில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம்
மார்ச்,18,2014. உலகில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ஆயுத இறக்குமதி 111 விழுக்காடு அதிகரித்துள்ளது எனவும், உலகில் இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்களில் 14 விழுக்காடு இந்தியாவில் இடம்பெறுகின்றது எனவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இந்தியா இறக்குமதி செய்யும் ஆயுதங்களில் 75  விழுக்காடு இரஷ்யாவிலிருந்து இடம்பெறுகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 80 கோடிப்பேர் கடும் வறுமையில் வாடும்நிலையில், ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்நாடு முதலிடத்தில் உள்ளது என Stockholm அனைத்துலக அமைதி ஆய்வு நிறுவனம்(SIPRI) கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Aljazeera

9. காசநோயை ஒழிக்க இந்தியாவின் 16 மாநிலங்களில் புதிய திட்டம்

மார்ச்,18,2014. தமிழகம் உட்பட, இந்தியாவின் 16 மாநிலங்களில், காசநோயைக் கட்டுப்படுத்த, அரசு மற்றும் தனியார் கூட்டுமுயற்சியில், புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
காசநோயை கட்டுப்படுத்த, அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், கூட்டாக இணைந்து செயல்படுவது குறித்து ஊட்டியில் நடந்த  இரு நாள் கருத்தரங்கில், உலகில், ஆண்டுக்கு, 90 இலட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 30 இலட்சம் பேர், உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. மொத்த காசநோயாளிகளுள் ஐந்தில் ஒருவர், இந்தியாவில் உள்ளார் எனக் கூறப்பட்டது.
இக்கருத்தரங்கில் பங்கேற்ற, இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியம், செயலர் டாக்டர் ராஜா ஆகியோர் நிருபர்களிடம் கூறியபோது, தொடர் சிகிச்சை எடுத்து கொண்டால் காசநோயைக் குணப்படுத்த முடியும் என்று தெரிவித்தனர்.
அரசுத் துறையுடன், தனியார் மருத்துவர்களையும் ஒருங்கிணைத்து, காசநோய் சிகிச்சை வழங்குவதன் மூலம், நோயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரும் திட்டம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட, 16 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், அரசு காசநோய் பிரிவினர் மூலம் இலவசமாகவே வழங்கப்படும் என்றும் இவர்கள் கூறினர்.

ஆதாரம் : தினமலர்
 

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...