செய்திகள் - 17.03.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - இரக்கமுடையவர்களாக இருப்பதன் இரு கூறுகள்
2. திருத்தந்தை பிரான்சிஸ் - கிழக்கு திமோர் நாட்டின் ஆயர்களுக்கு வழங்கிய 'அத் லிமினா' உரை
3. திருத்தந்தை பிரான்சிஸ், அர்ஜென்டினா அரசுத்தலைவர் சந்திப்பு
4. திருத்தந்தை பிரான்சிஸ் - தினமும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு
5. திருத்தந்தையின் பங்குதள சந்திப்பு
6. அமெரிக்க ஐக்கிய நாட்டின் காங்கிரஸ் அவையில் உரையாற்ற திருத்தந்தைக்கு அழைப்பு
7. மறைந்துவாழும் சீனத் திருஅவையின் ஆயர் 96ம் வயதில் இறைபதம்
8. கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழாவில், இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள்
9. அருட்தந்தை உட்பட இரு மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையில் கைது
10. இந்தியாவில் சாலைவிபத்துக்களில் தினமும் 166 பேர் பலி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - இரக்கமுடையவர்களாக இருப்பதன் இரு கூறுகள்
மார்ச்,17,2014.
மன்னிப்பதன் வழியாக இரக்கத்தைப் பெறுவதே நம் இதயங்களிலும் உலகிலும்
அமைதியை நிலைநாட்டச் சிறந்த வழி என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கமுடையவர்களாக இருப்பது என்பது இரு கூறுகளை எதிர்பார்க்கின்றது, ஒன்று நாம் பாவிகள் என்பதை ஏற்பது, மற்றொன்று நம் இதயத்தை மேலும் விரிவாக்குவது என்று கூறினார்.
நாம் பாவிகள் என்பதை ஏற்கும்போதுதான், மற்றவர்களின் பாவங்களையும் புரிந்துகொண்டு, மன்னிக்கும் மனநிலை உருவாகும் என்று கூறியத் திருத்தந்தை, நம் இதயங்களை விரிவாக்கும்போதுதான் இரக்கத்தை ஏற்கும் அளவு இடத்தையும் கொண்டிருக்க முடியும் என்று கூறினார்.
நம் இதயங்களைத் திறப்போம், மற்றவர்களைத் தீர்ப்பிடுவதைத் தவிர்ப்போம், மன்னிக்கும் இதயம் மன்னிப்பைப் பெறுகிறது, இரக்கமே நம்மை அமைதிக்கு இட்டுச் செல்கிறது என்று மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இதற்கிடையே, இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தன் முதலாம் ஆண்டு பணிநிறைவையொட்டி வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தொடர்ந்து தனக்காகச் செபிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் - கிழக்கு திமோர் நாட்டின் ஆயர்களுக்கு வழங்கிய 'அத் லிமினா' உரை
மார்ச்,17,2014. கிழக்கு திமோர் நாட்டில் மனச்சான்றின் குரலைக் கட்டிக்காக்கவும், சமூகப்
பொதுநலனை பொறுப்புணர்வுடன் கட்டியெழுப்பிச் செயல்படவும் தலத்திரு அவைத்
தலைவர்கள் மக்களுக்கு உதவவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் 'அத் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த கிழக்கு திமோர் நாட்டின் ஆயர்களை, இத்திங்களன்று காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, நற்செய்தியை, அதன் கூறுபடாதத் தன்மையுடன் போதிக்கும் சுதந்திரம் திருஅவைக்கு வழங்கப்படவேண்டும் என்பதை திருஅவை வலியுறுத்துகின்றது என்று கூறினார்.
மக்களின் பொருளாதார மற்றும் ஆன்மீகத் தேவைகளை உணர்ந்து, அவற்றிற்கு
ஏற்றதுபோல் மக்களுக்குப் பணிபுரிய வேண்டிய தலத்திருஅவைத் தலைவர்களின்
கடமைகளையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறையன்பையும், மகிழ்வையும் பெற்று, வாழ்வின்
பொருளை கண்டுகொண்ட ஒவ்வொருவரும் அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கக்
கடமைபட்டுள்ளனர் என்பதை வலியுறுத்தவேண்டும் என்றும் கிழக்கு திமோர்
ஆயர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ், அர்ஜென்டினா அரசுத்தலைவர் சந்திப்பு
மார்ச்,17,2014. அர்ஜென்டினா அரசுத்தலைவர் Cristina Fernández de Kirchner அவர்களை இத்திங்கள்கிழமையன்று திருப்பீடத்தில் இருபது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீட பத்திரிகை அலுவலகம், திருத்தந்தையின் ஓராண்டு பணி நிறைவையொட்டி வாழ்த்துத் தெரிவிக்க அர்ஜெண்டினா நாட்டு குழுவுடன் அரசுத்தலைவர் வந்ததாகவும், அக்குழுவையும் அரசுத்தலைவரையும் தனித்தனியே சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவருடன் மதிய உணவருந்தியதாகவும் தெரிவித்தது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டினா நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை பிரான்சிஸ் - தினமும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு
மார்ச்,17,2014. தினமும் நற்செய்தியிலிருந்து ஒரு சிறு பகுதியை வாசித்து, அந்நாளில் நாம் சந்திக்கும் மற்றவர்களுடன் அச்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு
உருமாறிய நிகழ்வு குறித்து இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தையொட்டி நண்பகல்
மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இவருக்குச் செவிசாயுங்கள்' என்று தந்தையாம் இறைவன் இயேசுவைக் குறித்து கூறிய வார்த்தைகளை உணர்ந்து, நாம் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நான்கு நற்செய்திகளுள் ஒன்றையேனும் கைப்பிரதியாக வைத்துக்கொண்டு, அவ்வப்போது வாசித்துவருவது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று கூறியத் திருத்தந்தை, நற்செய்தியை வாசிப்பது, மலைமேல் ஏறிச் செல்வதற்கு ஒத்ததென்றால், நாம் கீழிறங்கி வருவது, அந்த நற்செய்தியிலிருந்து நாம் பெற்றுக்கொண்டதை மற்றவருக்கும் அறிவிக்க வேண்டிய கடமையைச் சுட்டிக்காட்டுகிறது என்று கூறினார்.
அநீதிகளால், அறியாமையால், எழமையால், சோர்வு
நிலைகளால் பாதிக்கபப்ட்டிருக்கும் மக்களுடன் நாம் கடவுளிடமிருந்து
பெற்றுக்கொண்ட அருள்கொடைகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும்
அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தையின் பங்குதள சந்திப்பு
மார்ச்,17,2014. உரோம் ஆயர் என்ற முறையில் அம்மறைமாவட்டத்தின் Guidoniaவின் Setteville என்ற மரியன்னை பங்குதளத்திற்கு சனிக்கிழமை மாலை சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்குள்ள குழந்தைகளையும் இளையோர் சமுதாயத்தையும் சந்தித்து உரையாடினார்.
விசுவாசம் குறித்து ஒருநாளும் வெட்கமடையாதீர்கள், கோவிலுக்கு வருவதற்கும் வெட்கப்படாதீர்கள் என்பதே நான் உங்களுக்கு வழங்கும் முதல்செய்தி என இளையோரிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களாக இருப்பதில் நாம் வெட்கப்படக்கூடாது என்ற அருளை தூய ஆவி நமக்கு வழங்குகிறார் என்றார்.
தூய ஆவியின் அருளை என்றும் நாடுவோம் என்ற திருத்தந்தை, குழந்தைகள் மற்றும் இளையோரோடு இணைந்து தூய ஆவி நோக்கி செபிக்கவும் செய்தார்.
Guidonia அன்னைமரி பங்குதள மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு திருப்பலி வாசகமான, இயேசுவின் உருமாற்ற நிகழ்ச்சி குறித்து மறையுரை ஒன்றும் வழங்கினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. அமெரிக்க ஐக்கிய நாட்டின் காங்கிரஸ் அவையில் உரையாற்ற திருத்தந்தைக்கு அழைப்பு
மார்ச்,17,2014. அமெரிக்க
ஐக்கிய நாட்டின் செனட் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஒன்றிணைந்த அவையில்
உரையாற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இருஅவைகளின் ஒன்றிணைந்த அவையில் உரையாற்ற திருத்தந்தை ஒருவருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பதவியை ஏற்று ஓராண்டு
நிறைவுற்றுள்ளதையொட்டி அமெரிக்க ஐக்கிய நாட்டின் மக்கள் பிரதிநிதிகள்
அவைத்தலைவர் John Boehner, அவ்வழைப்பை திருத்தந்தைக்கு அதிகாரப்பூர்வமாக விடுத்துள்ளார்.
தன்னுடைய
எடுத்துக்காட்டான வாழ்வு மூலம் அனைத்துக் கண்டங்களின் மக்களின் இதயங்களைத்
தட்டியெழுப்பிவருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் என பாராட்டியுள்ளார் Boehner.
ஆதாரம் : UCAN
7. மறைந்துவாழும் சீனத் திருஅவையின் ஆயர் 96ம் வயதில் இறைபதம்
மார்ச்,17,2014. சீன அரசு சார்புடைய கத்தோலிக்க அவையில் இணைய மறுத்ததால் ஏறத்தாழ 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த சீனத் திருஅவை ஆயர் Joseph Fan Zhongliang அவர்கள், தன் 96ம் வயதில் இறைபதம் சேர்ந்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக உடல்நலமற்றிருந்த ஆயர் Fan Zhongliang அவர்களின்
அடக்கச் சடங்கு குறித்து இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
திருத்தந்தைக்கு விசுவாசமாக இருந்ததற்காக 30 ஆண்டுகள் சிறையிலும், கட்டாயப்
பணிமுகாமிலும் வைக்கப்பட்டிருந்த ஆயரின் அடக்கச் சடங்கை ஆடம்பரமின்றி
நடத்தும்படி தல அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள்
தெரிவிக்கின்றன.
இயேசு சபையைச் சேர்ந்த ஆயர் Fan Zhongliang அவர்களின் மரணத்திற்குப்பின் தற்போது சீனாவின் Shangai பகுதியில் ஒரே ஓர் ஆயரே உள்ளார். Thaddeus Ma Daqin என்ற அந்த ஆயரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : AsiaNews
8. கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழாவில், இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள்
மார்ச்,17,2014. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் கோவில் திருவிழாவை, இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றிணைந்து இஞ்ஞாயிறன்று சிறப்பித்தனர்.
இராமேஸ்வரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கச்சத்தீவை நோக்கி, 92 விசைப்படகுகளில் இந்தியப் பக்தர்கள் கூட்டம் சென்றடைய, இலங்கையின் நெடுந்தீவு, மன்னார், பேசாளை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்த பக்தர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்ள, இருநாடுகளிலும் இருந்து சென்றிருந்த அருள் பணியாளர்கள் தலைமையில் இவ்விழா சிறப்பிக்கப்பட்டது.
தவக்காலத்தில் இவ்விழா இடம்பெறுவதால், சனிக்கிழமை இரவு சிலுவைப்பாதையும், அதைத் தொடர்ந்து, திருப்பலியும் நிறைவேற்றப்பட்டன.
ஞாயிறு காலை, இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த அருள் பணியாளர்கள் இணைந்து நிறைவேற்றியத் திருப்பலியில், இலங்கையின் இராணுவ மற்றும் கடற்படை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
ஆதாரம் : Dinamalar
9. அருட்தந்தை உட்பட இரு மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையில் கைது
மார்ச்,17,2014.
கடந்த சனிக்கிழமையன்று இலங்கை இராணுவ அதிகாரிகளால் கடத்திச்செல்லப்பட்ட
மனித உரிமை பெண் நடவடிக்கையாளர் மற்றும் அவரின் 13 வயது மகள் குறித்து
விசாரிக்கச் சென்ற கத்தோலிக்க அருட்தந்தை உட்பட இரு மனித உரிமை
நடவடிக்கைளர்களை இலங்கை பாதுகாப்புப்படை கைதுசெய்துள்ளது.
யாழ்ப்பாணத்தின்
அமைதி மற்றும் ஒப்புரவு மையத்தின் இயக்குனர் அமலமரி தியாகிகள் சபை
அருட்தந்தை பிரவீன் மற்றும் மனித உரிமைகள் புள்ளிவிவர மையத்தின் சிறப்பு
ஆலோசகர் ருக்கி ஃபெர்னாண்டோ ஆகியோர் கைது குறித்து, அமலமரி துறவுசபை குருக்கள் உறுதிசெய்துள்ளபோதிலும், இராணுவம் இதனை மறுத்துள்ளது.
கிளிநொச்சிப்பகுதியின்
மனித உரிமை பெண் நடவடிக்கையாளரும் அவரது 13 வயது மகளும்
கைதுச்செய்யப்பட்டு காணாமல் போயுள்ளது குறித்து தர்மபுரம் என்ற பகுதியில்
விசாரிக்கச் சென்றபோது, அருட்தந்தை பிரவீனையும் மனித உரிமை நடவடிக்கையாளர் ருக்கி ஃபெர்னன்டோவையும் பாதுகாப்புப்படையினர் கைதுசெய்து இரகசியமாக வைத்துள்ளனர்.
ஆதாரம் : AsiaNews
10. இந்தியாவில் சாலைவிபத்துக்களில் தினமும் 166 பேர் பலி
மார்ச்,17,2014. இந்தியாவில் சாலைவிபத்தால் தினமும் 166 பேர் பலியாவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் வேகமாக செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
மேலும், மது அருந்திவிட்டு வேகமாகச் செல்வதும் மற்றொரு காரணம் என்கிறது புள்ளிவிபரம்.
ஆதாரம் : Dinamalar
No comments:
Post a Comment