செய்திகள் - 15.03.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஏழ்மை உணர்வைத் தனதாக்கி வாழ திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு
2. திருத்தந்தையின் திருப்பயணத் தயாரிப்பில் தென் கொரிய அரசும் திருஅவையும் இணைந்து செயல்படுகின்றன
3. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள அனைத்துக் கிறிஸ்தவர்களும் விடுதலை செய்யப்படுமாறு கத்தோலிக்கத் தலைவர்கள் வேண்டுகோள்
4. இந்தியா : கத்தோலிக்க அருள்பணியாளருக்கு தேசிய இலக்கிய விருது
5. அருள்சகோதரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விடயம் குறித்த தீர்ப்பு, அரசுக்கும், இந்துத் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதைக் காட்டுகிறது
6. ஆசிய-பசிபிக் பகுதியில் இயற்கைவளக் காடுகள் அழிந்து வருகின்றன, ஐ.நா. எச்சரிக்கை
7. இந்தியாவில் இன்னும் 35 ஆண்டுகளுக்கு மட்டுமே சுண்ணாம்பு கிடைக்கும்
8. ஏலத்துக்கு வரும் நொபெல் அமைதி விருதுப் பதக்கம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஏழ்மை உணர்வைத் தனதாக்கி வாழ திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு
மார்ச்,15,2014. ஏழ்மை உணர்வைத் தனதாக்கிக் கொள்ள அழைப்புவிடுத்த அதேவேளை, சேரிகளில் ஏழைகள் மத்தியில் வாழ்ந்து அங்குப் பணிசெய்யும் அருள்பணியாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓராண்டு நிறைவை முன்னிட்டு, அர்ஜென்டீனாவின் புவனோஸ் ஐரெஸ் சேரிகளிலிருந்து ஒலிபரப்பாகும் பண்பலை வானொலிக்குப் பேட்டியளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகள்
மற்றும் ஓரங்கட்டப்பட்டோர் மத்தியில் திருஅவையின் இருப்பு குறித்த 12
கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது ஏழ்மை உணர்வைத் தனதாக்கி வாழ
அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
இளையோருக்குக் கல்வி வழங்கி அவர்களுடன் வாழ்வதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, சேரிகளில் வாழ்ந்து அங்குப் பணிசெய்யும் அருள்பணியாளர்களின் பணி ஏதோ கருத்தியல்கோட்பாடு அல்ல, மாறாக அது ஓர் அப்போஸ்தலிக்கப் பணி என்றும் கூறினார்.
இறுதியில், கைதிகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தையின் திருப்பயணத் தயாரிப்பில் தென் கொரிய அரசும் திருஅவையும் இணைந்து செயல்படுகின்றன
மார்ச்,15,2014.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரியாவுக்குத் திருப்பயணம்
மேற்கொள்ள தீர்மானித்திருப்பதை வரவேற்றுள்ள அந்நாட்டுத் திருஅவை, இத்திருப்பயணத் தயாரிப்புக்காக ஆயர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியுள்ளது.
திருத்தந்தையின் இத்திருப்பயணம் தென் கொரிய நாடு முழுவதையும் ஈடுபடுத்துவதால் திருஅவை, அரசிடமிருந்து முழு ஆதரவைப் பெறுகின்றது என்றும், இத்திருப்பயணத் தயாரிப்புக்களில் திருஅவையோடு சேர்ந்து பல வழிகளில் அரசு செயல்படுகின்றது என்றும் தலத்திருஅவை கூறியுள்ளது.
தென் கொரியாவின் Dajeon
மறைமாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 10 முதல் 17 வரை நடைபெறவிருக்கும் ஆசிய
இளையோர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
அந்நாடு செல்கிறார்.
இவ்விளையோர் மாநாட்டில் ஆசியாவின் 29 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1984 மற்றும் 1989ம் ஆண்டுகளில் தென் கொரியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆதாரம் : Fides
3. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள அனைத்துக் கிறிஸ்தவர்களும் விடுதலை செய்யப்படுமாறு கத்தோலிக்கத் தலைவர்கள் வேண்டுகோள்
மார்ச்,15,2014.
சிரியாவில் போரின்போது கடத்தப்பட்ட அனைத்துக் கிறிஸ்தவர்களும் விடுதலை
செய்யப்படுமாறு அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
உரோமன் கத்தோலிக்க, அர்மேனிய கத்தோலிக்க, மாரனைட், மெல்கித்தே
மற்றும் சிரியாக் வழிபாட்டுமுறைகளின் கத்தோலிக்கத் தலைவர்கள் இணைந்து
லெபனனில் நடத்திய கூட்டத்திற்குப் பின்னர் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
Maloulaவிலிருந்து கடத்தப்பட்ட அருள்சகோதரிகள் விடுதலை செய்யப்பட்ட பின்னர் Aid to the Church in Need கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மெல்கித்தே வழிபாட்டுமுறையின் தலைவர் முதுபெரும் தந்தை 3ம் கிரகோரியோஸ் அவர்கள், அருள்சகோதரிகளின் விடுதலை, அனைத்துக் கிறிஸ்தவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
2013ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி கடத்தப்பட்ட சிரியன் ஆர்த்தடாக்ஸ் ஆயர் Aleppo Yohanna Ibrahim,
ஒரு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆயர் உட்பட அனைத்துக் கிறிஸ்தவர்களும் விடுதலை
செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பையும் சிரியா கத்தோலிக்கத் தலைவர்கள்
தெரிவித்துள்ளனர்.
ஆதாரம் : Zenit
4. இந்தியா : கத்தோலிக்க அருள்பணியாளருக்கு தேசிய இலக்கிய விருது
மார்ச்,15,2014. இந்தியாவில், கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவருக்கு இவ்வாண்டின் தேசிய இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான 71 வயது நிரம்பிய அருள்பணி பிரான்சிஸ் டி பிரிட்டோ அவர்களுக்கு, இந்தியாவின் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான தேசிய இலக்கிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவிலியத்தின் மராத்தி மொழி பெயர்ப்பான ‘Subodh Bible – Nava Karar’ என்ற நூலுக்காக அருள்பணி டி பிரிட்டோ அவர்களுக்கு, இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்குழு தேர்ந்தெடுத்த 23 நூல்களில் Subodh Bible என்ற நூல் சிறந்த படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அருள்பணி டி பிரிட்டோ, தனது
இந்த மராத்திய விவிலிய மொழி பெயர்ப்புப் படைப்புக்கென 2014ம் ஆண்டு
ஆகஸ்டில் இடம்பெறவிருக்கும் இவ்விருது விழாவில் இவ்விருதைப் பெறவுள்ளார்.
இவ்விருது, 50 ஆயிரம் ரூபாயையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் உள்ளடக்கியது.
ஆதாரம் : mattersindia
5. அருள்சகோதரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விடயம் குறித்த தீர்ப்பு, அரசுக்கும், இந்துத் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதைக் காட்டுகிறது
மார்ச்,15,2014. இந்தியாவின்
ஒடிசா மாநிலத்தில் 2008ம் ஆண்டில் கத்தோலிக்க அருள்சகோதரி ஒருவர் பாலியல்
வன்கொடுமைக்கு ஆளான விவகாரம் தொடர்பாக மூன்று பேர் குற்றவாளிகள் என
தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது, உண்மையாகவே நீதியைக் கேலி செய்வதாக உள்ளது எனக் கூறினார் Sajan George.
கட்டாக் நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்புப் பற்றி கருத்து தெரிவித்த, இந்தியக் கிறிஸ்தவர்களின் உலக அவையின் தலைவர் Sajan George, இவ்வழக்கில் விசாரிக்கப்பட்ட 9 பேரில் மூன்று பேர் மட்டுமே குற்றவாளிகள் எனவும், ஆறு பேர் குற்றமற்றவர்கள் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது கேட்டுத் தாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்துத் தீவிரவாதிகளால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட இவ்வன்முறைக்கு, அரசு அதிகாரிகளின் ஆதரவு இருப்பதை இத்தீர்ப்பு வெளிப்படையாகக் காட்டுகிறது எனவும் குற்ற அறிக்கை தயாரித்தல், புலன்விசாரணைகள் என, பல்வேறு மட்டங்களில் இந்தப் பாலியல் வன்செயல் தீர்ப்பு குறித்த விடயத்தில் தவறுகள் நடந்துள்ளன எனவும் Sajan George குறை கூறினார்.
2008ம்
ஆண்டில் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கு எதிராக இடம்பெற்ற
வன்முறையில் அருள்சகோதரி மீனா பார்வா இந்துத் தீவிரவாதக் கும்பல் ஒன்றால்
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் 10 பேர் குற்றவாளிகள் என
முன்னர் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மற்றொருவர் காணாமற்போய்விட்டார்.
இக்குற்றம் தொடர்பாக 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
ஆதாரம் : AsiaNews
6. ஆசிய-பசிபிக் பகுதியில் இயற்கைவளக் காடுகள் அழிந்து வருகின்றன, ஐ.நா. எச்சரிக்கை
மார்ச்,15,2014. ஆசிய-பசிபிக் பகுதியில் இயற்கைவளக் காடுகள் வேகமாக அழிந்து வருகின்றன என்றும், அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்கு காடுகளைச் சுரண்டுகின்றனர் என்றும் ஐ.நா. வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
வெப்பநிலை மாற்றமும், தரிசு நிலங்களும் இப்பிரச்சனைக்கு மேலும் காரணங்களாக அமைந்துள்ளன என்று கூறும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் வல்லுனர்கள், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 20 இலட்சம் ஹெக்டேர் அளவு காடுகளும், புல்வெளிகளும் இழக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தனர்.
குறைந்தது 40 கோடி ஹெக்டேர் காடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன எனவும், தென்கிழக்கு ஆசியாவில் சட்டத்துக்குப் புறம்பே மரம் வெட்டுதல் அதிகமாக இடம்பெறுகின்றது எனவும் அவ்வல்லுனர்கள் கூறினர்.
ஆசிய-பசிபிக் பகுதியின் நிலப்பரப்பில் காடுகள் மற்றும் பசும்புல் வெளிகள் ஏறக்குறைய 58 விழுக்காடாக உள்ளது எனக் கூறிய FAO நிறுவன மூத்த அலுவலகர் Patrick Durst, ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 20 இலட்சம் ஹெக்டேர் பகுதி பயனற்றதாக மாறி வருகின்றது என்று எச்சரித்தார்.
இதற்கிடையே, இந்தியா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அண்மை ஆண்டுகளில் காடுகளை மீண்டும் உருவாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் FAO நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆதாரம் : AsiaNews
7. இந்தியாவில் இன்னும் 35 ஆண்டுகளுக்கு மட்டுமே சுண்ணாம்பு கிடைக்கும்
மார்ச்,15,2014. இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் முக்கியமான பிரச்சனையாக இருக்கும்வேளை, நாட்டில், இன்னும் 35 ஆண்டுகளுக்குத்தான், 'சுண்ணாம்பு' என்ற கனிம வளம் கிடைக்கும் என டில்லியில் நிருபர்களிடம் கூறப்பட்டது.
இது குறித்து டில்லியிலுள்ள உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர், எம்.சி.மேத்தா, சுற்றுச்சூழல் ஆர்வலர் புருஷோத்தம் ரெட்டி ஆகியோர் இவ்வியாழனன்று டில்லியில், நிருபர்களிடம் பேசியபோது இவ்வாறு எச்சரித்தனர்.
இயற்கை வளங்களைக் கட்டிக்காக்க வேண்டுமென்ற எண்ணம் நாளுக்கு நாள் மழுங்கடிக்கப்படுகிறது எனவும், அரசும், ஒப்பந்தங்களைப் போடுகிறதே தவிர, சுற்றுச்சூழல் குறித்த, எந்த ஒரு சட்டத்தையும், அமல்படுத்துவதில்லை எனவும் கூறிய அந்த ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, தேசிய அளவில் வெளிப்படையாக, விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்; அப்போதுதான், பிரச்சனைகள் வெளிவரும் என்று கருத்து தெரிவித்தனர்.
நல்ல காற்று, நல்ல குடிநீர் என, எல்லாமே கனவாகப்போகும் நிலை வருவதற்கு முன், அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் அறிக்கையில், இந்த பிரச்னைக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளோம் எனவும் அவர்கள் கூறினர்.
தேசிய அளவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார ஆணையத்தை அமைத்திட வேண்டும். அணுமின் சக்தியை கைவிட்டுவிட்டு, சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவை மூலமாக, மின்சாரம் தயாரிக்க வேண்டும். வீடுகளின் மாடியில் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
ஆதாரம் : தினமலர்
8. ஏலத்துக்கு வரும் நொபெல் அமைதி விருதுப் பதக்கம்
மார்ச்,15,2014.
தென் அமெரிக்க நகைக் கடை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட 1936ம் ஆண்டின்
நொபெல் அமைதி விருதுப் பதக்கம் ஒன்று நியூயார்க்கில் ஏலத்துக்கு வரவுள்ளது.
பரகுவே
மற்றும் பொலிவியா நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான
ஒப்புரவு நடவடிக்கைகளை மேற்கொண்ட அர்ஜென்டீனாவின் வெளியுறவு அமைச்சரான
கார்லொஸ் சாவேந்திரா லமாஸ் அவர்களுக்கு இந்தப் பதக்கம்
வழங்கப்பட்டிருந்தது.
பல ஆண்டுகள் காணாமல் போயிருந்த இந்தப் பதக்கம், பின்னர் அமெரிக்க அரும்பொருட் சேகரிப்பாளர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது.
23 காரட் தங்கத்தினாலான இந்தப் பதக்கம் ஒரு இலட்சம் டாலர்களுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆதாரம் : பிபிசி
No comments:
Post a Comment