Tuesday, 15 December 2020

மண்வள உலகநாள், டிசம்பர் 05

 மண் வளத்தை ஆராயும் விவசாயி


உலகிலுள்ள பல்லுயிரின வகைகளில், 25 விழுக்காட்டுக்கும் மேலாக, பூமியில் வாழ்கின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உணவு உற்பத்தி மற்றும், ஊட்டச்சத்து உணவுகளை அதிகரித்தல், மனிதரின் நலத்தைப் பாதுகாத்தல், காலநிலை மாற்றத்தைத் தடுத்தல் போன்றவற்றிற்கு, பூமியில் வாழ்கின்ற பல்லுயிர்கள் உதவுகின்றவேளையில், அவை பெரும்பாலும் குறைத்தே மதிப்பிடப்படுகின்றன என்று, FAO எனப்படும், ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை நிறுவனம், டிசம்பர் 04, இவ்வெள்ளியன்று கூறியது.

டிசம்பர் 05, இச்சனிக்கிழமையன்று, மண்வள உலகநாள் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, முதன்முறையாக, "மண்ணில் வாழும் பல்லுயிர்கள்" என்ற தலைப்பில், மண்வளம் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்ட FAO நிறுவனம், மண்ணில் வாழும் பல்லுயிர்களும், மண்வள மேலாண்மையும், ஐ.நா.வின் நீடித்த நிலையான வளர்ச்சித்திட்ட இலக்குகளில் பலவற்றை எட்ட உதவுகின்றன என்று கூறியுள்ளது.

பல்லுயிர்கள் அழிந்துவருவது உலக அளவில் மிகுந்த கவலையை உருவாக்கியுள்ளது என்றுரைத்த, FAO நிறுவனத்தின் உதவி இயக்குனர் Maria Helena Semedo அவர்கள், உலகிலுள்ள பல்லுயிரின வகைகளில், 25 விழுக்காட்டுக்கும் மேலாக, பூமியில் வாழ்கின்றன என்று கூறினார்.

மேலும், பூமிக்கோளத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் வாழ்கின்ற நாற்பது விழுக்காட்டுக்கும் அதிகமான பல்லுயிர்கள், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப தங்களின் வாழ்வையும் மாற்றுகின்றன என்றும், Semedo அவர்கள் கூறினார்.

மண்கள், மனிதரின் நல்வாழ்விற்கும், இப்பூமிக்கோளத்தின் வாழ்வைப் பேணுவதற்கும்  இன்றியமையாதவைகளாக இருந்தாலும், மனிதரின் செயல்பாடுகள், காலநிலை மாற்றம், மற்றும், இயற்கைப் பேரிடர்களால், அவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்று, Semedo அவர்கள் கூறினார்.

FAO நிறுவனம், 2013ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடத்திய கருத்தரங்கில் மண்வள உலகநாள் உருவாக்கப்படுமாறு பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்ற, ஐ.நா. பொது அவை, 2014ம் ஆண்டில், மண்வள உலகநாள், டிசம்பர் 05ம் தேதி சிறப்பிக்கப்படுமாறு கூறியது.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...