Thursday, 3 January 2019

ஈராக் நாட்டில் கர்தினால் பரோலின் பயணம்

ஈராக் நாட்டில் கர்தினால் பரோலின் பயணம் கரக்கோஷ் நகரில் சிரிய கத்தோலிக்கத் தலைவர்களுடன், கர்தினால் பரோலின், பேராலயத்திற்கு மேற்கொண்ட பவனி

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஈராக் நாட்டில், மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் இறுதி இரு நாள்களில் நிகழ்ந்தவை
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஈராக் நாட்டில், ஐந்து நாள் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்ட திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், டிசம்பர் 28, இவ்வெள்ளியன்று, கரக்கோஷ் நகரில், சிரிய கத்தோலிக்கப் பேராலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை, இக்னேசியஸ் ஜோசப் 3ம் யூனான், மோசூல் சிரிய கத்தோலிக்கப் பேராயர், யொஹான்னா பெத்ரோஸ், மற்றும் அப்பகுதியில் பணியாற்றும் அருள்பணியாளர், துறவியர், பொதுநிலையினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இத்திருப்பலிக்கு முன்னதாக, கடந்த சில ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்டு வந்த புனித பார்பராவின் துறவு மடத்தையும், அங்குள்ள சிரிய கத்தோலிக்க ஆலயத்தையும் கர்தினால் பரோலின் அவர்கள் பார்வையிட்டார்.
கர்தினால் பரோலின் அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் நான்காவது நாளான டிசம்பர் 27ம் தேதியன்று, எர்பில் நகரில், கல்தேய வழிபாட்டு முறை உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பணிகளை பார்வையிட்டார்.
குர்த் இனத்தவரின் குடியரசு கட்சித் தலைவர், மசூத் பர்சானி (Masoud Barzani) அவர்களையும், விரைவில் தன் பணிக்காலத்தை நிறைவு செய்யவிருக்கும் குர்திஸ்தான் பிரதமர் நெச்சிர்வான் பர்சானி (Nechirvan Barzani) அவர்களையும், கர்தினால் பரோலின் அவர்கள் சந்தித்தார்.
டிசம்பர் 27 மாலையில் கர்தினால் பரோலின் அவர்கள் எர்பில் கல்தேய வழிபாட்டு முறை பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய பின், அங்கு கூடியிருந்த மக்கள், உற்சாகமாக "திருத்தந்தை வாழ்க" என்று குரல் எழுப்பியதோடு, திருத்தந்தை தங்கள் நாட்டுக்கு வருகை தரவேண்டும் என்பதையும் பெரும் ஆர்வத்துடன் குரல் எழுப்பிக் கூறினர்.

No comments:

Post a Comment