செய்திகள் - 17.10.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. சாவியைப் பைக்குள் வைத்துக்கொண்டு, பூட்டிய கதவின் முன் நிற்பது அறிவுசார்ந்த செயல் அல்ல - திருத்தந்தை பிரான்சிஸ்
2. அலகாபாத் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, ஆயர் Raphy Manjaly
3. பாலஸ்தீன அரசுத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு
4. சுயநலத்தை விடுத்து, பிறர் நலத்தில் அக்கறை கொள்ளும்போதுதான் உண்மையான ஆலயங்களை எழுப்பமுடியும் - கர்தினால் Tagle
5. இடிந்துள்ள கோவில்களைக் கட்டியெழுப்புவதைவிட, இடிந்துகிடக்கும் மக்கள் வாழ்வைக் கட்டியெழுப்புவது அவசரமானத் தேவை - பிலிப்பின்ஸ் பேராயர் Villegas
6. வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவு விழா
7. "என் சார்பில் நீங்கள் சென்று ஏழைகளைச் சந்தியுங்கள்" - திருத்தந்தை பிரான்சிஸ்
8. திருத்தந்தையின் நிகழ்வுகளை, இத்தாலியத் தொலைக்காட்சியில் காண்போரின் எண்ணிக்கை கூடியுள்ளது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. சாவியைப் பைக்குள் வைத்துக்கொண்டு, பூட்டிய கதவின் முன் நிற்பது அறிவுசார்ந்த செயல் அல்ல - திருத்தந்தை பிரான்சிஸ்
அக்.17,2013. பையில் சாவியை வைத்துக்கொண்டு, பூட்டியக் கதவின் முன் நிற்கும் நிலையில் வாழும் கிறிஸ்தவ வாழ்க்கை குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.
இவ்வியாழன் காலை, புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில், லூக்கா நற்செய்தி 11ம் பிரிவில் (லூக்கா 11: 47-54) இயேசு பரிசேயருக்கும், திருச்சட்ட அறிஞருக்கும் விடுத்த கடுமையான எச்சரிக்கைகளை, திருத்தந்தை அவர்கள், தன் மறையுரையின் மையமாக்கினார்.
இறைவனைக் குறித்த தத்துவங்களை ஒரு சாவிக்கு ஒப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, இறைவனை கோவிலில் வைத்துப் பூட்டிவிட்டு, சாவியைப் பைக்குள் வைத்துக்கொண்டு, பூட்டிய கதவின் முன் நிற்பது அறிவுசார்ந்த செயல் அல்ல என்று குறிப்பிட்டார்.
இறைவனை, கோவிலுக்குள் பூட்டிவிடுவதால், அக்கோவிலைத் தேடிவரும் மக்கள் உள்ளே நுழைய முடியாமலும், பூட்டப்பட்ட இறைவன் வெளியே வர இயலாமலும் போகிறது என்பதை பரிதாப நிலையாக திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
இறைவனை ஒரு தத்துவமாக்கும் கிறிஸ்தவர், அந்தத் தத்துவ எண்ணங்களுக்குச் சீடராகிறாரே தவிர, உண்மையான இறைவனுக்குச் சீடராவதில்லை என்பதை, தன் மறையுரையில் வலியுறுத்திய திருத்தந்தை, பைக்குள் சாவியை வைத்துக்கொண்டு, பூட்டிய கதவின் முன் நிற்கும் நிலை இது என்று கூறினார்.
இத்தகைய ஒரு நிலை, அருள் பணியாளர்கள், ஆயர்கள், திருத்தந்தை ஆகியோருக்கு உருவானால், அது மிகவும் கவலைக்குரியது என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
பூட்டப்பட்டக் கதவைத் திறக்கும் உண்மையான சாவி, நம்பிக்கையுடன் நாம் எழுப்பும் செபங்கள் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலரும் பார்க்கும் வண்ணம் செபங்களை உரக்கக் கூறிய பரிசேயர்களைப் போல் இராமல், அமைதியில், அறைக்குள் மேற்கொள்ளப்படும் நமது செபங்களே சிறந்ததென்றும் கூறினார்.
மேலும், ‘ஞாயிற்றுக் கிழமைகளில், ஒரு மணிநேரம் மேற்கொள்ளும் முயற்சியாக நமது செபங்கள் மாறக் கூடாது. இறைவனோடு ஒவ்வொரு நாளும் உறவு கொள்வது மிகவும் அவசியம்’ என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. அலகாபாத் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, ஆயர் Raphy Manjaly
அக்.17,2013. வாரணாசி மறைமாவட்டத்தின் ஆயராக கடந்த ஆறு ஆண்டுகள் பணியாற்றிவந்த ஆயர் Raphy Manjaly அவர்களை, அலகாபாத் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.
1958ம் ஆண்டு பிறந்த ஆயர் Raphy Manjaly அவர்கள், 1983ம் ஆண்டு அருள் பணியாளராகவும், 2007ம் ஆண்டு வாரணாசி ஆயராகவும் அருள்பொழிவு செய்யப்பட்டவர்.
அலகாபாத் தலைமைப் பணியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய ஆயர் Isidore Fernandes அவர்கள், 2013ம் ஆண்டு சனவரி மாதம் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, கடந்த பத்து மாதங்கள் அலகாபாத் மறைமாவட்டத்தை அருள் பணியாளர் Ignatius Menezes அவர்கள் நிர்வகித்து வந்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. பாலஸ்தீன அரசுத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு
அக்.17,2013. திருப்பீடத்தை ஓர் இல்லமாக நீங்கள் கருதலாம், இங்கு தாங்கள் வந்திருப்பது எனக்குப் பெருமை தருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலஸ்தீன அரசுத் தலைவரிடம் கூறினார்.
இவ்வியாழன் காலையில், பாலஸ்தீன அரசுத் தலைவர் Mahmoud Abbas Abu Mazen அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து, 30 நிமிடங்கள் உரையாடியபோது, திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
அமைதியின் நகர் என்றழைக்கப்படும் பெத்லகேம் நகரின் உருவம் பொறிக்கப்பட்ட ஓர் ஓவியத்தையும், பாலஸ்தீனம் ஓர் அரசாக அறிவிக்கப்பட்டபின், அங்கு அச்சிடப்பட்ட ஒரு விவிலியத்தையும் அரசுத்தலைவர் Abu Mazen அவர்கள், திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.
புனித பேதுரு பசிலிக்காவின் தூணைப் போன்று உருவாக்கப்பட்டிருந்த ஒரு சிறப்பான பேனாவை, திருத்தந்தை அவர்கள், அரசுத் தலைவருக்குப் பரிசாக அளித்தபோது, அரசுத் தலைவர் ஒவ்வொரு நாளும் பலமுறை கையெழுத்திடுவதற்கு இது உதவும் என்பதை நகைச்சுவையாகக் கூறினார்.
இஸ்ரேல் நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் உருவாகி, அதில் தான் கையெழுத்திடுவதே தன் தலைசிறந்த ஆவல் என்று அரசுத்தலைவர் Abu Mazen அவர்கள் பதிலிறுத்தார்.
திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுத் துறைத் தலைவர், பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும், பாலஸ்தீன அரசுத்தலைவர் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தலைவர் Abu Mazen அவர்கள், தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மேற்கொண்ட இந்த முதல் சந்திப்பு, மிகுந்த மகிழ்வைத் தந்தது என்றும், புனித பூமியைக் காண திருத்தந்தை வரவேண்டும் என்ற அழைப்பை தான் விடுத்ததாகவும் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. சுயநலத்தை விடுத்து, பிறர் நலத்தில் அக்கறை கொள்ளும்போதுதான் உண்மையான ஆலயங்களை எழுப்பமுடியும் - கர்தினால் Tagle
அக்.17,2013. "என் ஆலயத்தை கட்டுவாய், என்
ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவாய்" என்று புனித பிரான்சிஸ் அவர்களிடம்
இறைவன் உரைத்த சொற்கள் இன்று மீண்டும் நம் உள்ளங்களில் எதிரொலிக்கின்றன
என்று மணிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle அவர்கள் கூறினார்.
அக்டோபர் 16, இப்புதன் முதல் அக்டோபர் 18, இவ்வெள்ளி முடிய பிலிப்பின்ஸ் நாட்டுத் தலைநகர் மணிலாவில், புதியவழி நற்செய்திப் பணியை மையப்படுத்தி நடைபெறும் ஆசியக் கருத்தரங்கு ஒன்றில், கர்தினால் Tagle அவர்கள், ஆரம்பத் திருப்பலியாற்றி, மறையுரை வழங்கியபோது இவ்வாறு கூறினார்.
இச்செவ்வாயன்று பிலிப்பின்ஸ் நாட்டின் Bohol பகுதியைத் தாக்கிய 7.2 ரிக்டர் அளவு கடுமையான நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த பல ஆலயங்களைக் குறிப்பிட்ட கர்தினால் Tagle அவர்கள், ஆலயங்களைக் கட்டியெழுப்புவதையும், திருஅவையைக் கட்டியெழுப்புவதையும் குறித்துப் பேசினார்.
இயேசுவை மூலைக்கல்லாகக் கொண்டு எழுப்பப்படும் உயிருள்ள ஆலயங்களாகிய நாம், சுயநலத்தை விடுத்து, பிறர் நலத்தில் அக்கறை கொள்ளும்போதுதான் உண்மையான ஆலயங்களை எழுப்பமுடியும் என்று கர்தினால் Tagle அவர்கள் எடுத்துரைத்தார்.
திருப்பலிக்குப் பின்னர், கர்தினால் Tagle அவர்கள், 'மனதோடு மனது' என்று நடத்தப்பட்ட ஓர் அமர்வில், மக்கள் கேட்ட கேள்விகளுக்கு தன் மனதில் எழுந்த பதில்களைப் பகிர்ந்துகொண்டார்.
நடைபெற்றுவரும் இந்த கருத்தரங்கிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் ஒளிவடிவச் செய்தி, இவ்வெள்ளியன்று வத்திக்கானிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. இடிந்துள்ள கோவில்களைக் கட்டியெழுப்புவதைவிட, இடிந்துகிடக்கும் மக்கள் வாழ்வைக் கட்டியெழுப்புவது அவசரமானத் தேவை - பிலிப்பின்ஸ் பேராயர் Villegas
அக்.17,2013. நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கோவில்களைக் கட்டியெழுப்புவதைவிட, இடிந்துகிடக்கும்
மக்கள் வாழ்வைக் கட்டியெழுப்புவது அவசரமானத் தேவை என்று பிலிப்பின்ஸ் ஆயர்
பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்கவிருக்கும் பேராயர் Socrates Villegas அவர்கள் கூறினார்.
கடந்த செவ்வாயன்று, பிலிப்பின்ஸ் நாட்டின் மத்தியப் பகுதியைத் தாக்கிய நிலநடுக்கத்த்தால், Cebu நகரில் உள்ள புகழ்பெற்ற குழந்தை இயேசு பேராலயம் உட்பட 58 கோவில்கள் இடிந்து கிடக்கின்றன.
இந்நிலையில், எனது கோவில், எனது மறைமாவட்டம் என்ற கோணத்தில் சிந்திக்காமல், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களின் தேவைகளை முன்னிறுத்த வேண்டும் என்று பேராயர் Villegas அவர்கள், இவ்வியாழனன்று அனைத்து அருள் பணியாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துயர் துடைப்புப் பணிகளுக்கென ஆயர் பேரவையின் சார்பில் அவசர உதவித் தொகையொன்று Bohol பகுதி மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நிலநடுக்கத்தால் இதுவரை இறந்தோரின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது என்றும், 34
இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 7.2
ரிக்டர் அளவு சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, குறைந்தது 100 நில அதிர்வுகள் உணரப்பட்டன என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
ஆதாரம் : UCAN
6. வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவு விழா
அக்.17,2013.
வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தில் உள்ள காமிராக்களின் கண்கள் அன்பினால்
தூண்டப்பட்டவை என்று வத்திக்கான் வானொலியின் இயக்குனராகப் பணியாற்றும்
அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் கூறினார்.
முன்னாள் திருத்தந்தை, முத்திப்பேறு பெற்ற 2ம் ஜான் பால் அவர்களின் ஆர்வத்தால், 1983ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி நிறுவப்பட்ட வத்திக்கான் தொலைக்காட்சி மையம், அக்டோபர் 18, இவ்வெள்ளியன்று தன் முப்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
இத்தருணத்தையோட்டி, உரோம் நகரில் நடைபெறும் ஒரு விழாவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இத்தாலியின் அரசுத்தலைவர் Giorgio Napolitano அவர்களும் வழங்கும் செய்திகள் வாசிக்கப்படும்.
இவ்விழாவில் வெளியிடப்படவிருக்கும் "புனித பேதுருவின் காமிராக்கள்" என்ற பெயர்கொண்ட நூலில், இந்த மையத்தின் முன்னாள் இயக்குனராக கடந்த ஆண்டு வரை பணியாற்றிய அருள் பணியாளர் Lombardi அவர்கள், தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த மையம் பதிவு செய்த அனைத்து காட்சிகளிலும், மறைந்த திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் இறுதி நாட்களை தொலைக்காட்சி காமிராக்கள் பதிவு செய்தது தன்னை ஆழமாகப் பாதித்தது என்றும், பேசமுடியாத நோயுற்ற நிலையிலும் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கலந்துகொண்ட விழாக்களில், அவரது பிரசன்னத்தை காட்டிய காமிராக்கள், திருத்தந்தையின் அன்பைப் பறைசாற்றின என்றும் அருள் பணியாளர் Lombardi அவர்கள் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. "என் சார்பில் நீங்கள் சென்று ஏழைகளைச் சந்தியுங்கள்" - திருத்தந்தை பிரான்சிஸ்
அக்.17,2013. "நான் Buenos Aires பேராயராகப் பணியாற்றியபோது, அடிக்கடி வெளியேச் சென்று ஏழைகளைச் சந்திக்க முடிந்தது, தற்போது அது முடியாது என்பதால், என் சார்பில் நீங்கள் சென்று ஏழைகளைச் சந்தியுங்கள்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னிடம் கூறியதாக, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
திருத்தந்தையின் தர்மப்பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ள பேராயர் Konrad Krajewski அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு தன் பணியைப் பற்றி அண்மையில் அளித்த பேட்டியொன்றில், இவ்விதம் கூறியுள்ளார்.
திருத்தந்தையின் ஆசீர் அடங்கிய சிறப்பு இதழ்களில் கையெழுத்திட்டு, அதன் வழியாக வரும் தொகையை ஏழைகளின் உதவிக்கென அனுப்புவது தர்மப்பணி மையத்தின் முக்கியப் பணியாக அமைத்தது என்றும், இவ்வாறு கையெழுத்திடுவது மட்டும் தன் பணியல்ல, மாறாக, ஏழைகளைச் சென்று சந்திப்பதும் தன் பணி என்பதை திருத்தந்தை தனக்குக் கூறியதாக பேராயர் Krajewski எடுத்துரைத்தார்.
வறியோர் அனுப்பும் கடிதங்களுடன் பங்குத் தந்தையின் பரிந்துரையும் இணைந்து அனுப்பப்பட வேண்டும் என்ற நியதியைக் கடந்து, தற்போது, வறியோர் நேரடியாக எழுதும் மடல்களுக்கும் திருத்தந்தை பதில் தருகிறார் என்றும் பேராயர் Krajewski தன் பேட்டியில் கூறினார்.
ஆதாரம் : CNA/EWTN
8. திருத்தந்தையின் நிகழ்வுகளை, இத்தாலியத் தொலைக்காட்சியில் காண்போரின் எண்ணிக்கை கூடியுள்ளது
அக்.17,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் பங்கேற்கும் நிகழ்வுகளை, இத்தாலியத் தொலைக்காட்சியில் காண்போரின் எண்ணிக்கை கூடியுள்ளதாக, “Il Fatto Quotidiano” என்ற இத்தாலிய நாளிதழ் புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டுள்ளது.
திருத்தந்தை ஒவ்வொரு ஞாயிறு மதியவேளையில் வழங்கும் மூவேளை செப உரை நிகழ்வைக் காண்போரின் எண்ணிக்கை, கடந்த ஆறு மாதங்களாக 7,50,000 பேர் என்ற அளவு கூடியிருப்பதாக, RAI 1 என்ற இத்தாலிய தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மார்ச் மாதம் 17ம் தேதி, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய முதல் மூவேளை செப உரையை 45 விழுக்காட்டு மக்கள் கண்டனர் என்று கூறும் RAI தொலைகாட்சி, வழக்கமாக, இத்தாலியப்
பார்வையாளர்களை அதிகமாகக் கவரும் கால்பந்து போட்டிகளைக் காணும் மக்களின்
எண்ணிக்கை போல இது அமைந்திருந்தது என்றும் அறிவித்துள்ளது.
அக்டோபர் 4ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அசிசி நகருக்குச் சென்றபோது, அங்கு செயலாற்றும் TV 2000 என்ற நிலையம் செய்த நேரடி ஒளிபரப்பு, இத்தாலியில் அதிகமான மக்களால் தொடரப்பட்டது என்று அந்நிலையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment