Wednesday, 9 October 2013

செய்திகள் - 08.10.13

செய்திகள் - 08.10.13
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : செபம் கடவுளுக்குக் கதவைத் திறந்து விடுகிறது

2. மூன்றாவது சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம், அக்.5-19,2014

3. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ வாழ்வின் இரகசியம் அன்பு

4. குடியேற்றதாரர் படகு கவிழ்ந்த லாம்பெதுசா தீவில் திருத்தந்தையின் பிறரன்புப் பணியாளர்

5. வத்திக்கானில் அக்.12, 13 மரியா தினக் கொண்டாட்டங்கள்

6. தென் கொரியத் தலத்திருஅவையின் மாபெரும் வளர்ச்சிக்கு கர்தினால் Filoni பாராட்டு

7. மியான்மாரில் இனவாத மோதல்கள் நிறுத்தப்பட்டு அமைதி காக்கப்படுமாறு யாங்கூன் பேராயர் வேண்டுகோள்

8. வியட்நாமில் மனச்சான்றின் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு சமயத் தலைவர்கள் வலியுறுத்தல்

9. உத்ராகாண்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி ரூபாய்ச் செலவில் இந்திய காரித்தாசின் புனர்வாழ்வுத் திட்டங்கள்

10. Higgs boson அறிவியலாளர்களுக்கு நொபெல் இயற்பியல் விருது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : செபம் கடவுளுக்குக் கதவைத் திறந்து விடுகிறது

அக்.08,2013. செபிக்கவும் மன்னிக்கவும் தெரிந்த இதயத்தைக் கொண்டிருப்பவரே கிறிஸ்தவர் என்று இச்செவ்வாய் காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்தியத் திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவைத் தனது வீட்டில் வரவேற்ற மார்த்தா மரியா சகோதரிகள் பற்றிய இந்நாளைய நற்செய்தியையும், இறைமனிதர் யோனா பற்றிய முதல் வாசகத்தையும் மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், செபம் வெறும் இயந்திரத்தனமான செயலாக இல்லாதவரை அது அற்புதங்களை நிகழ்த்தும் என்று கூறினார்.
மார்த்தாவுக்கும் யோனாவுக்கும் செபிக்கத் தெரியவில்லை என்றுரைத்த திருத்தந்தை, மரியா நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டார் என்று இயேசு சொன்னார், ஏனெனில் மரியா இயேசுவின் காலடிகளில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு தனது இதயத்திலிருந்து செபித்துக்கொண்டிருந்தார் என்றும் கூறினார்.
நம் வாழ்வில் முதல் வேலை செபமாக இருக்க வேண்டும், இந்தச் செபம் கிளி போன்று வார்த்தைச் செபமாக இல்லாமல், நம் ஆண்டவரை உற்றுநோக்கி, அவர் சொல்வதற்குச் செவிசாய்த்து அவரிடம் கேட்பதாக இருக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை.
செபம் அற்புதங்களை நிகழ்த்தும் என்பதை நாம் அறிந்துள்ளோம் என்றும், செபம், நினிவே பழங்கால நகரில்கூட புதுமை நிகழ்த்தியது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், நினிவே நகரைப் பொருத்தவரை இரக்கத்தை அல்லாமல் நீதியை விரும்பிய யோனாவின் எண்ணத்தையே மார்த்தாவின் எண்ணமும் ஒத்திருந்தது என்றும் கூறினார்.
இதயத்திலிருந்து எழும்பாமல் வாயப்பாடாக உள்ள செபமும், மன்னிப்பின்றி நீதிக்காக ஆசைப்படும் செபமும் சோதனைகள். எனவே கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் நல்ல பகுதியைத் தேர்ந்தெடுப்பதற்காக, இச்சோதனைகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
நாம் செபம் செய்யாமல் இருக்கும்போது நம் கதவுகளை ஆண்டவருக்கு மூடிவிடுகிறோம், அவரால் ஒன்றும் செய்ய இயலாது என அவருக்கு நம் கதவுகளை மூடிவிடுகிறோம், மாறாக, பிரச்சனைகள், இடரான சூழல்கள், துன்பங்கள் ஆகியவற்றில் ஆண்டவருக்கு நம் கதவுகளைத் திறக்க வேண்டும், அப்போது அவர் வந்து உதவுவார் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. மூன்றாவது சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம், அக்.5-19,2014

அக்.08,2013. மூன்றாவது சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம், 2014ம் ஆண்டு அக்டோபர் 5 முதல் 19 வரை வத்திக்கானில் நடைபெறும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
நற்செய்தி அறிவிப்புச் சூழலில் குடும்பத்தின் மேய்ப்புப்பணி சவால்கள் என்பது, இந்தச் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
திருஅவையில் உடனடித்தேவைகள் அதிகமாக இருக்கும்போது சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம் கூட்டப்படுகிறது. இதுவரை 1969 மற்றும் 1985ம் ஆண்டுகளில் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றங்கள் கூட்டப்பட்டுள்ளன.
கத்தோலிக்கத் திருஅவையில் உலக ஆயர்கள் மாமன்றம் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகும். 1965ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவுற்றபோது, உலகளாவியத் திருஅவையின் பணிக்கு, திருத்தந்தைக்கு ஆயர்களின் உதவி அவசியம் என்றுரைத்து  திருத்தந்தை ஆறாம் பவுல் உலக ஆயர்கள் மாமன்றத்தை உருவாக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ வாழ்வின் இரகசியம் அன்பு

அக்.08,2013. கிறிஸ்தவ வாழ்வின் இரகசியம் அன்பு. தீமையினால் ஏற்படும் காலியிடங்களை அன்பு மட்டுமே நிறைக்கும் என்று இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ வாழ்வில் அன்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கு அமைதி இன்றியமையாதது என்பதை ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும் என்று, திருப்பீடச் செயலகம், @terzaloggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று எழுதியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. குடியேற்றதாரர் படகு கவிழ்ந்த லாம்பெதுசா தீவில் திருத்தந்தையின் பிறரன்புப் பணியாளர்

அக்.08,2013. தென் இத்தாலியின் லாம்பெதுசா தீவில் ஆப்ரிக்கக் குடியேற்றதாரர் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் இறந்தவர்களுக்காகச் செபிக்கவும், அதில் உயிர்பிழைத்துள்ளவர்களுக்கு உதவுவதற்குமென தனது பிறரன்புப் பணியாளர் பேராயர் Konrad Krajewski அவர்களை அனுப்பியுள்ளார்  திருத்தந்தை பிரான்சிஸ்.
வட ஆப்ரிக்காவிலிருந்து 500க்கும் மேற்பட்ட குடியேற்றதாரரை ஏற்றிவந்த படகு இம்மாதம் 3ம் தேதி கவிழ்ந்ததில் இதுவரை 232 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன மற்றும் 155 பேர் உயிர்பிழைத்துள்ளனர். யாரோ ஒருவர் படகில் தீ வைத்ததில் படகு எரியத் தொடங்கியது. அதனால் பயணிகள் படகின் ஒரு பக்கத்துக்குச் செல்ல படகு கவிழ்ந்துள்ளது என இத்தாலிய அதிகாரிகள் சொல்கின்றனர்.
கடந்த ஜூலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தீவுக்கு ஒருநாள் திருப்பயணம் மேற்கொண்டு இங்குள்ள குடியேற்றதாரரைச் சந்தித்தார் மற்றும் படகில் கடலுக்குச் சென்று இத்தகைய பயணங்களில் ஏற்கனவே இறந்துள்ளவர்களை நினைத்து கடலில் மலர்வளையம் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவுக்கு வருவதற்கென பயணம் செய்த குடியேற்றதாரர்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 25 ஆண்டுகளில் மத்தியதரைக் கடலில் இறந்துள்ளனர் என ஐ.நா. கூறுகிறது. 
மேலும், லாம்பெதுசா தீவில் இம்மாதம் 3ம் தேதி இறந்த ஆப்ரிக்கக் குடியேற்றதாரரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற வேண்டுமெனச் செபிப்பதற்காக, இப்புதன் காலை 8 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் Leonardo Sandri அவர்கள் தலைமையில் திருப்பலி நடைபெறும். இதில் திருப்பீட எத்தியோப்பிய கல்லூரிக் குழுவினரும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/CNS
5. வத்திக்கானில் அக்.12, 13 மரியா தினக் கொண்டாட்டங்கள்

அக்.08,2013. கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் நம்பிக்கை ஆண்டின் ஒரு நிகழ்வாக, இம்மாதம் 12, 13 தேதிகளில், அதாவது, வருகிற சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மரியா நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.
வருகிற சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 5 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் மரியா வழிபாடு நடைபெறும்.
வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று உரோம் நேரம் காலை 10.30 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிகழ்த்துவார்.
இந்நிகழ்வுகள் இத்தாலிய மொழியில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. தென் கொரியத் தலத்திருஅவையின் மாபெரும் வளர்ச்சிக்கு கர்தினால் Filoni பாராட்டு

அக்.08,2013. தென் கொரியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் தலத்திருஅவை அடைந்துவரும் மாபெரும் வளர்ச்சிக்குத் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார் திருப்பீட நற்செய்திஅறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni.
கொரியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கர்தினால் Filoni அந்நாட்டின் பொதுநிலையினர் மற்றும் குருத்துவமாணவர்களைச் சந்தித்தபோது, இவ்வாறு பாராட்டியதோடு, அப்பொதுநிலையினர் எதிர்நோக்கும் மூன்று அச்சுறுத்தல்களையும் குறிப்பிட்டார்.
தென் கொரியாவில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும், உலகாதயுப்போக்கு, பொருளியக்கோட்பாடு, அதிவேக தொழில்நுட்பவளர்ச்சி ஆகியவை குறித்து அம்மக்கள் எச்சரிக்கையாய் இருக்குமாறு கேட்டுக்கொண்ட கர்தினால் Filoni, தனிப்பட்ட அல்லது சமூக நிலையில், கிறிஸ்துவின் நற்செய்திக்குப் பிரமாணிக்கமாய் இருந்து உறுதியான சாட்சிய வாழ்வு வாழவில்லையெனில் திருஅவை தனது சாரத்தை இழக்கும் எனக் கூறியுள்ளார்.
கொரியாவில் 1949ம் ஆண்டில் 1.1 விழுக்காடாக இருந்த கத்தோலிக்கரின் எண்ணிக்கை  தற்போது 10.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

ஆதாரம் : Fides

7. மியான்மாரில் இனவாத மோதல்கள் நிறுத்தப்பட்டு அமைதி காக்கப்படுமாறு யாங்கூன் பேராயர் வேண்டுகோள்

அக்.08,2013. புத்தமதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மாரில் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிராக புத்தமதத்தினர் தாக்குதலை நடத்திவரும்வேளை, அந்நாட்டில் இனவாத மோதல்கள் நிறுத்தப்பட்டு அமைதி காக்கப்படுமாறு வேண்டுகோள்விடுத்துள்ளார் யாங்கூன் பேராயர் Charles Maung Bo.
கருணையைப் போதித்த புத்தரின் செய்தி உலகஅளவில் நன்மதிப்பைப் பெற்றுள்ளது என்றும், இந்துவான மகாத்மா காந்தி, அஹிம்சையின் திருத்தூதராகத் திகழ்ந்தார் என்றும் யாங்கூனில் இடம்பெற்ற பல்சமயக் கூட்டத்தில் கூறினார் பேராயர் Bo.
புதிய மியான்மாரில் வெறுப்புணர்வு பேச்சுகளுக்கு இடமேயில்லை என்றும், அந்நாட்டின் மக்களுக்கு இடையே இருக்கும் உறவில் அமைதியும் நல்லிணக்கமும் சந்திப்பதாய் இருக்கவேண்டுமென்றும் கூறினார் பேராயர் Bo.
5 கோடியே 46 இலட்சம் மக்களைக்கொண்ட மியான்மாரில் 89 விழுக்காட்டினர் புத்தமதத்தினர். 4 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். 3 விழுக்காட்டினர் பிரிந்த கிறிஸ்தவ சபையினர் மற்றும் கத்தோலிக்கரும் இயற்கையை வழிபடுவோரும் முறையே ஒரு விழுக்காட்டினர்.
மியான்மாரில் புத்த தேசியவாதக் குழுக்களும், புத்தமதத் தீவிரவாதத் துறவிகளும் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வுகளை நாடெங்கும் விதைத்துவருவது வன்முறையைத் தூண்டியுள்ளது எனக் கூறப்படுகிறது.  
  
ஆதாரம் : Fides

8. வியட்நாமில் மனச்சான்றின் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு சமயத் தலைவர்கள் வலியுறுத்தல்

அக்.08,2013. வியட்நாமில் அரசியல் சார்ந்த தங்களது கருத்துக்களுக்காகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் 14 இளம் கத்தோலிக்க மற்றும் பிரிந்தசபை கிறிஸ்தவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு அந்நாட்டின் சமயத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
கத்தோலிக்க மற்றும் பிரிந்தசபைத் தலைவர்களும், பல்வேறு புத்தமதப் பிரிவுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டு அந்நாட்டின் தேசிய அவை உறுப்பினர்களுக்கென வெளியிட்டுள்ள மனுவில், வியட்நாமில் நீதியும் மனித உரிமைகளும் மதிக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
அண்மையில் சிறை வைக்கப்பட்டுள்ள 14 இளம் கத்தோலிக்க மற்றும் பிரிந்தசபை கிறிஸ்தவர்களும், பிற மனச்சான்றின் கைதிகளும் விடுதலை செய்யப்படுமாறு அம்மனுவில் கேட்டுள்ளதோடு, கைதிகள்மீது சித்ரவதைகளைப் பயன்படுத்த வேண்டாமென்றும், அவர்களுக்கு மருத்துவ வசதிகள்பெற அனுமதிக்கப்பட வேண்டுமென்றும்  கூறியுள்ளனர் அத்தலைவர்கள்.
வியட்நாம் அரசின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்த நடவடிக்கைகள் பல்வேறு குழுக்களால் அண்மை மாதங்களாகத் தொடர்ந்து குறைசொல்லப்பட்டு வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

ஆதாரம் : Fides

9. உத்ராகாண்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி ரூபாய்ச் செலவில் இந்திய காரித்தாசின் புனர்வாழ்வுத் திட்டங்கள் 

அக்.08,2013. இந்தியாவின் உத்ராகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி ரூபாய்ச் செலவில் புனர்வாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது இந்திய காரித்தாஸ்.
உத்ராகாண்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளையும், ஏறக்குறைய ஆயிரம் சிறாருக்கும், அவர்கள் வாழும் சமூகத்துக்கும் கல்வி மற்றும் நலவாழ்வு வசதிகளையும் செய்துகொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக  இந்திய காரித்தாஸ் இயக்குனர் அருள்பணி Frederick D’Souza கூறினார்.
இந்திய ஆயர் பேரவையின் சமூகநல அமைப்பான இந்திய காரித்தாசின் இத்திட்டமானது, உத்ராகாண்ட்டின் கருணா சமூகநலக் கழகம் மற்றும் ATI என்ற இந்திய தொழில்நுட்ப அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்படும் எனவும் அருள்பணி D’Souza கூறினார்.
ஆதாரம் : UCAN                    

10. Higgs boson அறிவியலாளர்களுக்கு நொபெல் இயற்பியல் விருது

அக்.08,2013. பிரிட்டனின் Peter Higgs, பெல்ஜியத்தின் Francois Englert ஆகிய இரு அறிவியலாளர்களுக்கு இவ்வாண்டுக்கான நொபெல் இயற்பியல் விருது வழங்கப்படுவதாக இச்செவ்வாயன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Higgs boson கொள்கை அல்லது கடவுள் துகள் குறித்த கண்டுபிடிப்புக்களுக்காக இவ்விருவருக்கும் நொபெல் இயற்பியல் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தின் அடிப்படை மூலக்கூறுகளுக்கும் ஏன் எடை உள்ளது என்பது குறித்து விளக்குவதற்கான ஒரு முறையை 1960களில் பயன்படுத்திய பல இயற்பியல் அறிவியலாளர்களில் இவர்களும் அடங்குவர்.
மேலும், நொபெல் மருத்துவ விருது அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஜேம்ஸ் ரோத்மன், ராண்டி ஷீக்மன் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் சுதோப்புக்கு கிடைத்துள்ளது.
வேதியப் பொருள்களை, உடலில் உள்ள செல்களுக்குக் கொண்டு செல்லும் முறை குறித்த ஆய்வுகளுக்காக, அமெரிக்கப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜேம்ஸ் ரோத்மன், ராண்டி ஷீக்மன் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் சுதோப்புக்கு, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அணுத்திரண்மங்கள், ஹார்மோன்கள் போன்ற மனித செல்களினால் தயாரிக்கப்படும் மூலக்கூறுகள், 'வெசிக்கல்ஸ்' என்ற சிறு பொதிகளாக, உரிய நேரத்தில், உரிய இடத்துக்கு எவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றன என்பதை இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
நீரிழிவு மற்றும் மூளைக் குறைபாடுகள் போன்ற நோய்கள் குறித்த ஆய்வுகளுக்கு இந்தக் கண்டுபிடிப்பு உதவும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...