செய்திகள் - 07.10.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை: நம்மை வடிவமைக்க இறைவனை அனுமதிப்போம்
2. Lesotho மன்னர் திருத்தந்தையுடன் சந்திப்பு
3. திருத்தந்தை பிரான்சிஸ் : உலகை, பாவத்திலிருந்து காப்பாற்றவல்ல சக்தி, கருணையே
4. திருத்தந்தை பிரான்சிஸ் : செபத்தின்வழி விசுவாசத்தை அதிகரிப்போம்
5. தங்கள் விசுவாசத்தை மறுதலிக்க மறுப்போர் ஊரைவிட்டு வெளியேற்றப்படுவர் என்கிறார் பங்களாதேஷ் கிராம அதிகாரி
6. யாழ் மாவட்டத்தில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து, அரசு தகவல்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை: நம்மை வடிவமைக்க இறைவனை அனுமதிப்போம்
அக்.,07,2013. தாங்கள்
தொந்தரவுச் செய்யப்படாமல் இருப்பதற்கு ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து
தப்பிச்செல்லவே விரும்புகின்றனர் என இத்திங்கள் காலை புனித மார்த்தா இல்லச்
சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
நினிவே நகருக்கு இறைவனால் அனுப்பப்பட்ட யோனாஸ், அதிலிருந்து
தப்புவதற்காக இஸ்பெயின் நோக்கிப் பயணம் செய்தது குறித்து இத்திங்கள் முதல்
வாசகம் கூறுவதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், 'இறைவனிடமிருந்து தப்பிச்செல்லல்' என்ற கருத்தை மையமாக வைத்து தன் மறையுரையை வழங்கினார்.
இறைவனின் பரிந்துரைகளுக்குச் செவிமடுக்காமல், அவரின் குரலைக்கேட்காமல் தப்பிச்செல்ல முயல்வது ஒவ்வொருவருக்கும் வரும் சோதனையாக உள்ளது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவனின் குரலைக்கேட்காமல் தப்பிச்செல்வதில் வேறு சில வழிகளும் உள்ளன என்ற திருத்தந்தை, அதற்கு உதாரணமாக, இயேசு
கூறிய நல்ல சமாரியர் உவமையில் வரும் குரு மற்றும் லேவியர் பற்றியும்
எடுத்துரைத்தார். காயமுற்றவரைக் கண்டும் வேறுபக்கம் திரும்பிச்சென்ற
இவர்கள், அந்த இடத்தில் இறைவனின் குரலைக்கேட்க தவறிவிட்டார்கள் என்ற திருத்தந்தை, அதேவழியாக வந்த பாவியாகிய சமாரியரே இறைவனின் குரலுக்குச் செவிமடுத்து உதவிகளை ஆற்றினார் என்றார்.
இறைவாக்கினர் யோனாவாலும், குருவாலும் லேவியராலும் கேட்கப்பட மறுத்த இறைவனின் குரலை பாவியாகிய சமாரியர் செவிமடுத்தது, இறைவனின் கைகளால் தான் எழுதப்பட அவரை அனுமதித்ததாகும், ஏனெனில் ஏனைய மூவரும் தங்களுக்குரியதை தாங்களே தேர்வுசெய்துகொண்டனர், ஆனால் சமாரியரோ தான் இறைவனால் மாற்றப்பட அனுமதித்தார் என்றார் திருத்தந்தை.
நம்
வாழ்வை நாமே வடிவமைக்க விரும்புகிறோமா அல்லது இறைவன் நம்மை
வடிவமைக்கட்டும் என அவர் கைகளில் ஒப்படைக்க ஆவல் கொள்கிறோமா என்ற
கேள்வியையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. Lesotho மன்னர் திருத்தந்தையுடன் சந்திப்பு
அக்.,07,2013. இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து உரையாடினார் Lesotho மன்னர் மூன்றாம் Letsie.
தன் மனைவி Mastenate Mohato Seeisoவுடன் இணைந்து திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுடன்
ஆன உறவுகளுக்கான திருப்பீட அவையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி
ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார் மன்னர் மூன்றாம்
Letsie.
திருப்பீடத்திற்கும் Lesotho முடியரசுக்கும் இடையே நிலவும் நல்லுறவு, அந்நாட்டில் மதிக்கப்படும் மதசுதந்திரம், அரசுக்கும் தலத்திருஅவைக்கும் இடையேயான ஒத்துழைப்பு, பிறர்நலம், நீதி, அமைதி போன்றவைகளில் தலத்திருஅவையின் பங்களிப்பு போன்றவை இப்பேச்சுவார்த்தைகளின்போது விவாதிக்கப்பட்டன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : உலகை, பாவத்திலிருந்து காப்பாற்றவல்ல சக்தி, கருணையே
அக்.,07,2013. 'மனித குலத்தையும் உலகையும் பாவத்திலிருந்தும் தீமைகளிலிருந்தும் காப்பாற்றவல்ல உண்மையான சக்தி, கருணையே' என்று இத்திங்களன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருணையின் சக்தி குறித்துச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 'மில்லேனியம் வளர்ச்சி நோக்குகள் அனைத்துலக அளவில் வெற்றியடையவில்லை என்பதை நாம் புரிந்துகொள்வது கடினமல்ல' என்று, திருப்பீடச் செயலகம், @terzaloggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை பிரான்சிஸ் : செபத்தின்வழி விசுவாசத்தை அதிகரிப்போம்
அக்.,07,2013. செபத்தின்வழி இறைவனைத்தேடி அதன்மூலம் விசுவாசத்தை அதிகரிக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரின் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செபஉரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபமே விசுவாசத்தின் மூச்சுக்காற்று, அதுவே இறைவனுடன் ஆன்மா நடத்தும் கலந்துரையாடல்' என எடுத்துரைத்தார்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தில் 'தங்கள் விசுவாசத்தை அதிகரிக்க உதவுமாறு சீடர்கள் யேசுவிடம் கேட்ட பகுதி பற்றி மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, 'எங்கள் விசுவாசத்தை அதிகரிக்க உதவும்' என தன்னோடு சேர்ந்து செபிக்குமாறு கூட்டத்தினரை நோக்கி அழைப்புவிடுத்தார்.
மனிதனால் இயலாத, அதேவேளை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத செயல்களை ஆற்றுவதற்கு பெரிய அளவிலான விசுவாசம் தேவையில்லை, மிகச்சிறிய அளவு விசுவாசம் இருந்தாலே போதும் என்றார்.
சிறிய
அளவு விசுவாசம் கொண்டு மலைகளையும் நகர்த்திய எளிமையான மக்கள் குறித்து
நமக்குத்தெரியும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் கடவுளின் வல்லமையின் துணைகொண்டு கிறிஸ்துவுக்குச் சாட்சியம் வழங்கமுடியும் என்றார்.
கடந்த சனியன்று, திருஅவையில் முத்திப்பெற்றவராக அறிவிக்கப்பட்ட 14 வயது குருமாணவர் ரொலாண்தோ ரிவி குறித்தும், தன் மூவேளை செபஉரையின் இறுதியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இம்மாதம் மூன்றாம் தேதி இத்தாலியின் Lampedusa கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 100க்கும் மேற்பட்ட ஆப்ரிக்கக் குடியேற்றதாரர்கள் உயிரிழந்தது குறித்தும் எடுத்துரைத்து, அவர்களுக்காக சிறிதுநேரம் மௌனமாக செபிக்கும்படியும் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. தங்கள் விசுவாசத்தை மறுதலிக்க மறுப்போர் ஊரைவிட்டு வெளியேற்றப்படுவர் என்கிறார் பங்களாதேஷ் கிராம அதிகாரி
அக்.,07,2013. பங்களாதேசின்
மத்தியப்பகுதியில் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவசபைக் கோவிலின்
கட்டுமானப்பணிகளைத் தடுத்து நிறுத்தியுள்ள அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர், கிறிஸ்தவத்தை மறுதலிக்க மறுப்போர் ஊரைவிட்டு வெளியேற்றப்படுவர் என மிரட்டியுள்ளார்.
Bilbathuagani என்ற கிராமத்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கென செப்டம்பர் மாதம் 8ம் தேதி 25 எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையினர் இணைந்து துவக்கிய கோவில் கட்டுமானப்பணிகளை நிறுத்தியதோடு, கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய மசூதியில் சென்றே வழிபடவேண்டும் எனவும் கட்டாயப்படுத்தியுள்ளார் கிராம அதிகாரி Rafiqul Islam Faruk.
Bilbathuagani கிராமத்தைச்
சேர்ந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை மறுதலிக்க வில்லையெனில்
ஊரைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அவர்.
ஆதாரம் : ANS
6. யாழ் மாவட்டத்தில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து, அரசு தகவல்
அக்.07,2013. யாழ்ப்பாண
மாவட்டத்தில் சிறுநீராக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் ஆபத்து
ஏற்பட்டுள்ளதாக இலங்கை நல அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுவரை வடமத்திய மாநிலத்திலேயே சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது எனத் தெரிவிக்கும் நல அமைச்சகம், அங்கு 16 ஆயிரத்து 442 பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறுகிறது..
இந்த நோயாளிகளுள் 12 ஆயிரத்து 210 பேர் அனுராதபுரத்திலும் 4 ஆயிரத்து 232 பேர் பொலன்நறுவையிலும் உள்ளதாக நல அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வேதியக் கிருமி நாசினிகள், வேதிய உரம் போன்றவைகள் சிறுநீரக நோய் ஏற்படக் காரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment