Wednesday, 2 October 2013

செய்திகள் - 01.10.13

செய்திகள் - 01.10.13
 -----------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவரின் பாதை பழிவாங்கும் பாதையல்ல

2. திருஅவையின் நிர்வாகத்தில் திருத்தந்தைக்கு உதவும் எட்டுக் கர்தினால்கள் குழுவின் கூட்டம்

3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலிய நாளிதழுக்கு அளித்த பேட்டி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் உண்மையிலேயே செபிக்கின்றோமா?

5. வத்திக்கான் வங்கி வரலாற்றில் முதன் ஆண்டறிக்கை

6. மனித வாழ்வு குறித்த உண்மை அனைவரோடும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும், பாஸ்டன் கர்தினால்

7. சட்டங்களினால் மட்டும் நாட்டை மாற்றிவிட முடியாது, மானாகுவா துணை ஆயர்

8. அக்.4, அனைத்துலக சிறார் ஒருமணி நேரத் திருநற்கருணை ஆராதனை 

9. அக்டோபர் 02, அனைத்துலக வன்முறையற்ற நாள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவரின் பாதை பழிவாங்கும் பாதையல்ல

அக்.,01,2013. கிறிஸ்தவரின் பாதை பழிவாங்கும் பாதையல்ல, மாறாக, கிறிஸ்தவரின் பாதை தாழ்மையும் சாந்தமும் நிறைந்த பாதை என்று இச்செவ்வாய் காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்தியத் திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையின் நிர்வாகத்தில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் எட்டுக் கர்தினால்களுடன் சேர்ந்து கூட்டுத்திருப்பலி நிகழ்த்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால்களுடன் நடைபெறும் கூட்டம், ஒவ்வொருவரும் மிகவும் தாழ்மையுள்ளவர்களாக மாறி, கடவுளில் அதிக நம்பிக்கை வைக்க உதவும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
மேலும், இயேசுவையும் அவரது சீடர்களையும் ஏற்றுக்கொள்ளாத அந்த ஊர் மக்களை வானத்திலிருந்து தீ வந்து அழிக்குமாறு செய்யவா என்று இயேசுவின் இரு சீடர்கள் கேட்டபோது அவர் அவர்களைக் கடிந்து கொண்டதை இந்நாளைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவரின் பாதை பழிவாங்கும் பாதையல்ல என்று கூறினார்.
புனித குழந்தை தெரேசாள் திருவிழாவாகிய இன்று, தாழ்மை, கனிவு, நன்மைத்தனம் ஆகிய உணர்வுகளை நினைத்துப் பார்ப்பது நமக்கு நல்லது என்றும், இந்த உணர்வையே நம் ஆண்டவர் நம் ஒவ்வொருவரிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த உணர்வுக்கு நம்மை இட்டுச்செல்லும் சக்தி, அன்பிலும், பிறரன்பிலும், வானகத்தந்தையின் கரங்களில் நாம் இருக்கிறோம் என்ற விழிப்புணர்விலும் கிடைக்கின்றது என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செவ்வாயன்று வத்திக்கானில் தொடங்கும், ஆலோசனை வழங்கும் இக்கர்தினால்களின் கூட்டம், தாழ்மை, பொறுமை, சாந்தம், கடவுள் நம்பிக்கை ஆகிய பண்புகளில் நம்மை இன்னும் அதிகமாக வளர்ப்பதற்கு இயேசுவிடம் வரம் கேட்போம் என்றும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதன்மூலம் திருஅவை மேலும் அதிகமான, அழகான சான்றை மக்களுக்கு வழங்கும், இறைமக்களையும், திருஅவையையும் பார்ப்பவர்கள் நம்மிடம் வரும் ஆவல் கொள்வார்கள் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
  
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருஅவையின் நிர்வாகத்தில் திருத்தந்தைக்கு உதவும் எட்டுக் கர்தினால்கள் குழுவின் கூட்டம்

அக்.,01,2013. கத்தோலிக்கத் திருஅவையின் நிர்வாகத்தில் தனக்கு உதவுவதற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள எட்டுக் கர்தினால்கள் அடங்கிய குழு, இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் தனது மூன்று நாள் கூட்டத்தைத் தொடங்கியுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இக்கர்தினால்கள் குழு தொடங்கியுள்ள இக்கூட்டம் குறித்து நிருபர் கூட்டத்தில் விளக்கிய திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், இக்குழுவின் ஆலோசனைகள் திருஅவையை நிர்வகிப்பதற்குப் புதிய ஊக்கத்தை அளிக்கும் எனத் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை குழுவுக்குள்ளேயே எண்பது அறிக்கைகள் விநியோகிக்கப்ப்ட்டுள்ளன எனவும், கடந்த சில மாதங்களாக இக்குழுக்களின் உறுப்பினர்கள் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றங்களை  நடத்தினர் எனவும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் நாட்டின் நிர்வாகத் தலைவர் கர்தினால் Giuseppe Bertello; சிலே நாட்டின் சந்தியாகோவின் முன்னாள் பேராயர் கர்தினால் Francisco Javier Errazuriz Ossa; மும்பை பேராயர் கர்தினால் Oswald Gracias; ஜெர்மனியின் மியூனிச் மற்றும் ஃப்ரெய்சிங் பேராயர் கர்தினால் Reinhard Marx; காங்கோ குடியரசின் கின்ஷாசா பேராயர் கர்தினால் Laurent Monsengwo Pasinya; அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாஸ்டன் பேராயர் கர்தினால் Sean Patrick O'Malley; ஆஸ்திரேலியாவின் சிட்னி பேராயர் கர்தினால் George Pe ll; ஹொண்டுராஸ் நாட்டின் தெகுசிகால்பா பேராயர் கர்தினால் Oscar Andres Rodriguez Maradiaga; ஆகியோர் இக்குழுவில் உள்ளனர்.
மேலும் இக்குழுவின் செயலராக இத்தாலியின் அல்பானோ ஆயர் மார்செல்லோ செமெராரோ செயல்படுகிறார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலிய நாளிதழுக்கு அளித்த பேட்டி

அக்.,01,2013. திருஅவையில் மாற்றம் கொண்டுவருவதற்கு தான் முயற்சிப்பதாகவும், இதன்மூலம் திருஅவை, மீண்டும் இறைமக்களின் சமூகமாக மாறும் எனவும் La Repubblica என்ற இத்தாலிய தேசிய நாளிதழுக்கு அளித்த தனிப்பட்ட நேர்காணலில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆன்மாக்களைக் கவனிக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கும் ஆயர்களும் குருக்களும் மேய்ப்பர்களும் இறைமக்களின் சேவையில் தங்களை அர்ப்பணிக்கும் இடமாக இறைமக்களின் சமூகம் அமையும் என்றும்  இந்நேர்காணலில் மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
La Repubblica நாளிதழின் நிறுவனர் Eugenio Scalfari என்பவர், கடந்த செப்டம்பர் 24ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் நடத்திய நேர்காணல் அக்டோபர் 1, இச்செவ்வாய்க்கிழமை இதழில் வெளியாகியுள்ளது. இது மூன்று பக்கங்களைக் கொண்ட நீண்ட நேர்காணலாகும்.
திருஅவையின் பணி மதம் மாற்றும் பணியல்ல, மாறாக, மக்களின் தேவைகள், ஆசைகள், ஏமாற்றங்கள், மனச்சோர்வுகள், நம்பிக்கைகள் ஆகியவற்றுக்குச் செவிமடுப்பதாகும் என்றும் Scalfariயிடம் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 
800 ஆண்டுகளுக்கு முன்னர் புனித பிரான்சிஸ் அசிசியால் வித்திடப்பட்ட மறைபோதக மற்றும் ஏழைத் திருஅவை இக்காலத்துக்கு இன்னும் அதிகமாகத் தேவையாக இருக்கின்றது, இளையோரிடையே நம்பிக்கையை நிலைநாட்டவும், முதியோருக்கு உதவவும், வருங்காலம் நோக்கிக் கதவுகளைத் திறக்கவும், அன்பைப் பரப்பவும் இத்தகையத் திருஅவை அவசியம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒதுக்கப்பட்டவர்கள் உட்பட ஏழைகள் மத்தியில் ஏழையாக இருக்கும் திருஅவையும், அமைதியைப் போதிக்கும் திருஅவையும் தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவர்கள் வாழ்வு மற்றும் அன்பின் புளிக்காரமாக இருக்க வேண்டுமென்றும், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக இருப்பதே ஒரு பலம் என்றும் La Repubblica நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் உண்மையிலேயே செபிக்கின்றோமா?

அக்.,01,2013. நாம் உண்மையிலேயே செபிக்கின்றோமா? கடவுளோடு நிலையான உறவு கொண்டிருக்காமல், உண்மையான மற்றும் முரண்பாடற்ற கிறிஸ்தவ வாழ்வை வாழ்வது கடினம் என்று இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளோடு நிலையான உறவில் வாழ்வதற்கு, செபம் இன்றியமையாதது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நன்றாகத் திட்டமிடப்பட்ட அறிவுச்சொத்து அமைப்பு, பொதுமக்களின் தேவைகளுடன் முதலீட்டாளர்களின் தனிப்பட்ட உரிமைகளையும் சமநிலைப்படுத்துகின்றது என்று, திருப்பீடச் செயலகம், @terzaloggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று எழுதியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. வத்திக்கான் வங்கி வரலாற்றில் முதன் ஆண்டறிக்கை

அக்.,01,2013. வத்திக்கான் வங்கி எனப் பொதுவாக அழைக்கப்படும் IOR என்ற திருப்பீடத்தின் சமயப் பணிகள் நிறுவனம் தனது 125 வருட வரலாற்றில் முதன்முறையாக ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டறிக்கையில், வத்திக்கான் வங்கி குறித்த KPMG தணிக்கை நிறுவனத்தின் அறிக்கை உட்பட, 2012ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டின் முதல் 8 மாதங்கள் வரை இடம்பெற்ற அனைத்து அலுவல் நடவடிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வறிக்கை குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த IOR நிறுவனத் தலைவர் Ernst von Freyberg, இந்த அறிக்கையை வாசித்தால் இச்சமயப் பணிகள் நிறுவனம் பற்றிய தெளிவு ஏற்படும் என்று கூறினார்.
KPMG தணிக்கை நிறுவனம், வத்திக்கான் வங்கியைக் கணக்குப் பரிசோதனை நடத்திய விபரங்கள் குறித்த அறிக்கை உட்பட, அறுபது பக்கங்ளுக்கு மேற்பட்ட விரிவான நிதி அறிக்கைகள் இந்த ஆண்டறிக்கையில் உள்ளது எனவும் Freyberg தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. மனித வாழ்வு குறித்த உண்மை அனைவரோடும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும், பாஸ்டன் கர்தினால்

அக்.,01,2013. மனித வாழ்வு குறித்த உண்மையை அனைத்துக் கத்தோலிக்கரும் உலகோடு பகிர்ந்துகொள்ளுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு பாஸ்டன் கர்தினால் Sean P. O'Malley அவர்கள் கேட்டுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் அக்டோபர் மாதம் வாழ்வை மதிக்கும் வாரமாகச் சிறப்பிக்கப்படவிருப்பதையொட்டி, அந்நாட்டு ஆயர் பேரவையின் வாழ்வுக்கு ஆதரவான ஆணையத் தலைவர் கர்தினால் O'Malley அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு  கேட்டுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுக்கும் அழைப்புக்கு உடனடியாகச் செவிமடுத்து பிறர்மீது அன்பும், கருணையும் கொண்ட வாழ்வுக்கு நம் இதயங்களைத் திறப்போம் எனவும் கர்தினால் O'Malley அவர்கள்  கேட்டுள்ளார்.
1970களின் தொடக்கத்தில் அமெரிக்க உச்சநீதிமன்றம் கருக்கலைப்பு குறித்த தீர்மானத்தை வெளியிட்டதிலிருந்து சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட கருக்கலைப்புக்களினால் 5 கோடியே 50 இலட்சம் உயிர்கள் இறந்துள்ளன என்ற கவலையையும் அவ்வறிக்கையில் வெளியிட்டுள்ளார் கர்தினால் O'Malley.

ஆதாரம் : CNS                   

7. சட்டங்களினால் மட்டும் நாட்டை மாற்றிவிட முடியாது, மானாகுவா துணை ஆயர்

அக்.,01,2013. மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவில் சட்டங்களினால் மட்டும் நாட்டை மாற்றிவிட முடியாது, மாறாக நாட்டினர் அனைவரும் மாற வேண்டுமென்று தலைநகர் மானாகுவா துணை ஆயர் Silvio Baez இத்திங்களன்று கூறினார்.
இளையோர் மற்றும் குடும்பங்கள் மத்தியில் உண்மையான விழுமியங்கள் பரப்பப்பட்டால் மட்டுமே நாட்டில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் ஒழியும் என்று, Masaya நகரில் அந்நகரின் பாதுகாவலர் புனித எரோணிமுஸ் விழாவைச் சிறப்பித்த பின்னர் கூறினார்.
நிக்கராகுவா பாராளுமன்றத்தில் சட்ட அமைப்பாளர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த சட்டங்களில் அண்மையில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்துக் குறிப்பிட்ட ஆயர் Baez அவர்கள், நிக்கராகுவா, சட்டங்களாலும், விதிமுறைகளாலும் மாறாது, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், கடுமையான சட்டங்களால் மாறாது என்று கூறினார்.
நல்லதொரு நாட்டை உருவாக்க விரும்பினால், ஒவ்வொருவருக்குள்ளிருந்தும் மாற்றம் ஏற்பட வேண்டுமென்று ஆயர் குறிப்பிட்டார். 

ஆதாரம் : Fides

8. அக்.4, அனைத்துலக சிறார் ஒருமணி நேரத் திருநற்கருணை ஆராதனை 

அக்.,01,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டு வாஷிங்டனில் அனைத்துலக சிறார் ஒருமணி நேரத் திருநற்கருணை ஆராதனை அக்டோபர் 4, வருகிற வெள்ளியன்று நடைபெறும்.
வாஷிங்டன் தேசிய அமலமரி பசிலிக்காவில், வெள்ளி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தச் சிறார் ஒருமணி நேரத் திருநற்கருணை ஆராதனை, EWTN தொலைக்காட்சியில் 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
ஆயிரக்கணக்கானப் பள்ளிச்சிறார் கலந்துகொள்ளும் இத்திருவழிபாட்டை   வாஷிங்டன் கர்தினால் Donald Wuerl தொடங்கி வைப்பார். அதேநேரத்தில் உலகெங்கும் பங்கு ஆலயங்கள் மற்றும் சிற்றாலயங்களில் இலட்சக்கணக்கான சிறார் இதே திருவழிபாட்டில் கலந்து கொள்வர்.
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் உலகின் சிறார் உலகின் குடும்பங்களுக்காகத் திருநற்கருணை முன்னர் செபிப்பார்கள்.

ஆதாரம் : Zenit

9. அக்டோபர் 02, அனைத்துலக வன்முறையற்ற நாள்

அக்.,01,2013. உலக அளவில் துன்பங்களும் நெருக்கடிகளும் குடியரசுக்கான மாற்றங்களும் இடம்பெற்றுவரும் இக்காலத்தில், மகாத்மா காந்தி அவர்களின் புரிந்துணர்வு மற்றும் அமைதி குறித்த செய்தியை நாம் அனைவரும் சிந்திக்குமாறு கேட்டுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
காந்திஜி பிறந்த அக்டோபர் 02ம் தேதி அனைத்துலக வன்முறையற்ற நாளாகச் சிறப்பிக்கப்படுகின்றது.
இந்நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், வன்முறையற்ற மற்றும் நிலையான அமைதி நிலவும் உலகை அமைக்க நாம் ஒன்றிணைந்து உழைப்போம் எனக் கேட்டுள்ளார்.
பகையுணர்வைக் கைவிடுவதைவிட ஆயுதத்தை எடுப்பதும்,  மன்னிப்புக்கான வழியைத் தேடுவதைவிட குறை கண்டுபிடிப்பதும் எளிதாக இருக்கலாம் என்று கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், மகாத்மா காந்தி அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வால் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் கவரப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

ஆதாரம் : UN
 

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...