Wednesday 14 July 2021

சமய சுதந்திரம் குறித்த முதல் உலக உச்சி மாநாடு

 

உலக மக்களில் ஏறத்தாழ 83 விழுக்காட்டினர், அரசியல் ஆதிக்கம், அல்லது. மதம் சார்ந்த சமுதாய காழ்ப்புணர்வு உள்ள நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அனைவருக்கும், எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும், சமய சுதந்திரம் உறுதிசெய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் நகரில், ஜூலை 13, இச்செவ்வாயன்று சமய சுதந்திரம் குறித்த முதல் உலக உச்சி மாநாடு துவங்கியுள்ளது.

அடிப்படை மனித உரிமைகள் உலகெங்கும் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில், இந்த உலக மாநாடு நடைபெறுவதற்கு தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர், அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை உட்பட, சமய சுதந்திரத்திற்கு ஆதரவாகச் செயல்படும், உலகின் பல்வேறு மதங்களின் நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களால், இந்த மாநாடு நடத்தப்படுகின்றது. ஜூலை 15, இவ்வியாழன் வரை இம்மாநாடு நடைபெறும்.

இம்மாநாடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும், அமைதி பணிக்குழுவின் தலைவரான ஆயர் David J. Malloy அவர்கள், அமெரிக்காவிலும், உலகெங்கிலும் சமய சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, இம்மாநாடு முயற்சிக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த மாநாடு, உலகளாவிய சமய சுதந்திர இயக்கத்திற்கு, உலக அரசியல் தளத்தில் ஆதரவு கிடைக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறது என்றுரைத்துள்ள ஆயர்  Malloy அவர்கள், மதம், மற்றும், பொது வாழ்வு குறித்து Pew அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...