எவரெஸ்ட் மலையை சுத்தம் செய்ய நேபாள அரசின் அதிரடி திட்டம்
இம்முறை வசந்த காலத்தில் எவரெஸ்ட் மலைச் சிகரத்துக்கு செல்லும் மலையேறிகளுக்கு நேபாள அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மலையிலிருந்து கீழே வரும் ஒவ்வொருவரும் தலா எட்டு கிலோகிராம் எடையுள்ள குப்பைகளை கொண்டு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.‘mount everest base camp’ என்ற 5,300 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள தளத்துக்கு மேல் செல்லும் எல்லோருக்கும் இந்தப் புதிய சட்டவிதி பொருந்தும் என நேபாள அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்டின் மீதும் அதனைச் சூழவும் கழிவுப் பொருட்கள் குவிந்து வருகின்றமை தொடர்பான கவலைகளை அடுத்தே அரசு இந்தப் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகளவான வெளிநாட்டு மலையேறிகளை ஈர்ப்பதற்காக எவரெஸ்ட் மற்றும் ஏனைய இமயமலைச் சிகரங்களுக்குச் செல்லும் தனிப்பட்ட மலையேறிகளுக்கான கட்டணத்தை கடந்த மாதம் நேபாளம் ரத்து செய்தது.
இதனால், மலையேறிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மலைகளில் குப்பைகள் குவிந்துவிடும் என்ற கவலைகளும் அதிகரித்தன.
மலையுச்சிகளில் குவிந்துள்ள கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் அவசியம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மலையேறிகளின் குழுக்களும் நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment