Friday, 9 August 2024

நல்ல புத்தகம் வாழ்க்கைக்குப் பயிற்சி அளிக்கிறது – திருத்தந்தை

 

நல்ல புத்தகம் வாழ்க்கைக்குப் பயிற்சி அளிக்கிறது – திருத்தந்தை



படிக்கும் பழக்கம் நல்ல பலனைத் தரும், படிப்பதால் கற்பனைத்திறன் பெருகும், படைப்பாற்றல் அதிகரிக்கும், ஒருமுகப்படுத்தும் திறன் வளப்படும், மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும். - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒரு நல்ல புத்தகம் மனதை திறக்கிறது, இதயத்தை தூண்டுகிறது, வாழ்க்கைக்கு பயிற்சி அளிக்கிறது என்றும், இலக்கியம் பணியாளர்களின் மனதையும் இதயத்தை பயிற்றுவிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 4 ஞாயிற்றுக்கிழமை புகுநிலை அருள்பணித்துவ மாணவர்கள், மேய்ப்புப்பணியாளர்கள், மற்றும் அனைத்து கிறிஸ்தவர்களும் வாசிப்பு பழக்கத்தில் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ள வலியுறுத்தி அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

படிக்கும் பழக்கம் நல்ல பலனைத் தரும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், படிப்பதால் கற்பனைத்திறன் பெருகும், படைப்பாற்றல் அதிகரிக்கும், ஒருமுகப்படுத்தும் திறன் வளப்படும், மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும் என்றும், புத்தகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் நம் வாழ்வில் ஏற்படும் சிக்கலான சூழல்களை எதிர்கொள்ள ஆற்றல் அளிக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணியாளர்களின் இதயத்தையும் மனதையும் இலக்கியம் பயிற்றுவிப்பதால் ஒருவர் சுதந்திரமான பகுத்தறிவு, பணிவான பயிற்சி போன்றவற்றில் வளர்கின்றார் என்றும், வாசிப்பு பழக்கம் மனித மொழிகளின் பன்மைத்தன்மைக்கு பலனளிக்கின்றது, மனித உணர்திறனை விரிவுபடுத்துவதோடு ஒரு சிறந்த ஆன்மிக வெளிப்படைத்தன்மைக்கு வழிவகுக்கின்றது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

சலிப்பைக் கொடுக்கும் விடுமுறைகள், அதிக வெப்பம், கல்வித்தேர்வுகள், போன்றவற்றினால் சோர்வு, கோபம், ஏமாற்றம், தோல்வி போன்றவை ஏற்படும்போது ஆன்மாவின் அமைதியை நம்மால் காணமுடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள்,  அத்தகைய நேரங்களில் புத்தக வாசிபானது நமது உள்ளக்கதவுகளைத் திறந்து பரந்துபட்ட நிலையில் நாம் சிந்திக்க நமக்கு உதவும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

புத்தக வாசிப்பினால் ஒருவன் எழுத்தாளனிடமிருந்து பெறும் செழுமையினால் தன்னை வளப்படுத்திக் கொள்கின்றான் என்றும், வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் சுறுசுறுப்பானவர்களாக விளங்குகின்றார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

இலக்கியங்களை அடிக்கடிப் படிப்பதால் எதிர்கால அருள்பணியாளர்கள் மற்றும் மேய்ப்புப்பணியில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் முழு மனிதநேயம் கொண்டவர்களாக மாறுகின்றார்கள் என்றும், அவர்களிடத்தில் கிறிஸ்துவின் தெய்வீகம் முழுமையாக ஊற்றப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். 

குறைகூறுவதை விடுத்து இறைவேண்டலுக்கு முக்கியத்துவம்

 

குறைகூறுவதை விடுத்து இறைவேண்டலுக்கு முக்கியத்துவம்



குறைகூறுவதை விடுத்து இறைவேண்டலில் ஈடுபட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து சிந்தித்துப் பார்த்து, ஒருவர் மற்றவருக்காக செபிக்கும் அருளை வேண்டுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

யூபிலி ஆண்டுக்கு தயாரிக்கும் விதமாக 2024ஆம் ஆண்டை ஏற்கனவே இறைவேண்டலின் ஆண்டாக அறிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவர் ஒருவருக்காக செபிக்கும் அருளை இறைவனிடம் வேண்டுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

தன் டுவிட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 2, வெள்ளியன்று இவ்வழைப்பை விடுத்த திருத்தந்தை, நாம் அதிகமாக செபித்து குறைவாக குறைகூறத் துவங்கினால் என்ன நடக்கும் என்ற கேள்வியையும் அதில் முன்வைத்துள்ளார்.

நாம் பிறரைக் குறித்து குறைகூறுவதை விடுத்து அதிக நேரத்தை இறைவேண்டலில் செலவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து சிறிது சிந்தித்துப் பார்ப்பதுடன், ஒருவர் மற்றவருக்காக செபிக்கும் அருளை இறைவனிடம் வேண்டுவோம் என தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை.

2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் இதுவரை 5,500க்கும் மேற்பட்ட ஆங்கிலக் குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தை இதுவரை ஏறக்குறைய 1 கோடியே 85 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். 

உடல், ஆன்ம நலத்தை வழங்கும் வேளாங்கண்ணி திருத்தலம்

 

உடல், ஆன்ம நலத்தை வழங்கும் வேளாங்கண்ணி திருத்தலம்



வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் ஆயர் சகாயராஜ் தம்புராஜ் அவர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தமிழகத்தின் வேளாங்கண்ணியில் செப்டம்பர் 8ஆம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் ஆரோக்கிய அன்னை திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் ஆயர் சகாயராஜ் தம்புராஜ் அவர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை.

வேளாங்கண்ணியின் ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 16ஆம் நூற்றாண்டு முதல் சிறப்பிக்கப்படும் இந்த பக்தி கொண்டாட்டங்கள், அன்னை மரியா ஏழை மற்றும் நோயுற்ற சிறாரை நேரடியாக சந்தித்ததை பறைசாற்றி நிற்கின்றன எனக்கூறும் இந்த செய்தி, இயேசு நமக்கு அன்னையாகத் தந்த மரியாவின் நெருக்கமும் கனிவும் இந்த சந்திப்புகளில் வெளிப்பட்டதை நாம் அறிகிறோம் எனவும் தெரிவிக்கிறது.

லூர்து நகரில் தன்னை வெளிப்படுத்திய அன்னை மரியா வேளாங்கண்ணியிலும் ஆரோக்கிய அன்னையாக வெளிப்படுத்தியதை கௌரவிக்கும் விதமாக, 2002ஆம் ஆண்டு உலக நோயாளர் தினத்தை வேளாங்கண்ணியில் சிறப்பிக்க புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் தீர்மானித்ததையும் இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை.

உடல் நலத்தை மட்டுமல்ல, ஆன்ம நலத்தையும் மரியன்னை திருத்தலங்களில் பெறுகிறோம், ஏனெனில் அன்னை மரியாவின் திரு உருவம் குறித்து தியானிக்கும்போது, நம் கவலைகளை அகற்றி நமக்கு அமைதியைத் தரும் இயேசுவின் அன்பை கண்டுகொள்கிறோம் எனவும் அச்செய்தி மேலும் கூறுகிறது.

அன்னை மரியாவின் கையிலிருந்த குழந்தைக்கு ஏழை சிறுவன் தன் கையில் வைத்திருந்த பசும்பாலை வழங்கியது, நாமும் ஏழைகள் மீது அக்கறையுடன் செயல்படவேண்டும் என்பதை குறித்து நிற்கிறது என உரைக்கும் இச்செய்தி, கடல் புயலிலிருந்து காப்பாற்றப்பட்ட போர்த்துக்கீசிய மாலுமிகள் வேளாங்கண்ணியில் ஒரு கோவிலைக் கட்டியதும், வேளாங்கண்ணி திருத்தலக்கோவில் 2004 சுனாமியிலும் சேதமடையாமல் இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது.                

விசுவாசத்துடன் வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு வரும் திருப்பயணிகள் பெறும் ஆன்மீகக் கொடைகள் குறித்தும், கிறிஸ்தவர்கள் அல்லாத வேறு மதத் திருப்பயணிகளும் பயன்பெற்றுவருகிறார்கள் என்பதையும் குறிப்பிடும் இச்செய்தி, தூய ஆவியாரின் அருள் இங்கு செயல்படுவதைக் காணமுடிகிறது எனவும், கத்தோலிக்க திருஅவையின் அருளடையாளங்களை பெறமுடியாதவர்களுக்கு இயேசுவின் தாயாம் அன்னை மரியாவின் ஆறுதல் மறுக்கப்படுவதில்லை என்பதற்கு சான்றாக இவ்விடம் உள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  விசுவாசத்தின் திருத்தலமாகிய வேளாங்கண்ணியின் அழகை திருத்தந்தையோடு இணைந்து தானும் நினைவுகூர்வதாகவும், திருத்தந்தை இத்திருத்தலம் குறித்து கொண்டிருக்கும் மதிப்புடன் கூடிய பாராட்டை தன் வழியாக தெரிவிக்க கேட்டுக்கொண்டதாகவும், அவரின் தந்தைக்குரிய ஆசீரை அனைத்து திருப்பயணிகளுக்கும் வழங்குவதாகவும் அச்செய்தியில் மேலும் கூறியுள்ளார் விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் Víctor Manuel Fernandez.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

கேரளா நிலச்சரிவு மீட்புக்காக ஒன்றுபட்டுள்ள மதம் மற்றும் சமூகக் குழுக்கள்!

 கேரளா நிலச்சரிவு மீட்புக்காக ஒன்றுபட்டுள்ள மதம் மற்றும் சமூகக் குழுக்கள்!



ஜூலை 30, செவ்வாயன்று, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தற்போது 2,000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிளரேஷியன் சபையின் அருள்பணியாளர் ஜார்ஜ் கண்ணந்தானம் தலைமையிலான வயநாடு நிவாரணக் குழு உடனடித் தற்காலிகக் குடும்ப தங்குமிடங்களை வழங்குவதையும் இறுதியில் நிரந்தர வீடுகளைக் கட்டிக்கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுப் பணியாற்றுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன

மேலும் இக்குழுவினர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள், நிவாரண முகாம்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அவசரத் தேவைகளைக் கண்டறிய விரைவான ஆய்வறிக்கையை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது அச்செய்திக் குறிப்பு.

இக்குழுவினரின் ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, மாவட்டத்தின் முக்கிய நகரமான கல்பெட்டாவில் உள்ள புனித  வின்சென்ட் தெ பால் ஃபோரேன் கோவிலில், நிலைமையை ஆய்வு செய்ய, அப்பங்குதளத்தின் பங்குத்தந்தை அருள்பணியாளர் மேத்யூ பெரியபுரம் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட குழு கூடியதாகவும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மானந்தவாடி சீரோ மலபார் மறைமாவட்டம், பெங்களூரு இலத்தீன் மறைமாவட்டம், கோழிக்கோடு மறைமாவட்டம் உள்ளிட்ட பல்வேறு  துறவு சபைகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.

இக்குழுவினர் மாவட்ட ஆட்சியர் டி.ஆர்.மேகஸ்ரீயிடம் தங்களின் முன்மொழியப்பட்ட திட்டங்களை விளக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான வசதிகளுடன் கூடிய சிறப்புநிலை கொண்ட நகரத்தை உருவாக்குவதற்கான அரசின் முயற்சிக்கு முழு ஆதரவையும் வழங்க உறுதியளித்தனர் எனவும் சுட்டிக்காட்டுகிறது அச்செய்தி.

ஜூலை 30, செவ்வாயன்று, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தற்போது 2,000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்


மணிப்பூர் மக்களுக்குப் பணத்தைவிட அமைதிதான் தேவைப்படுகிறது!

 

மணிப்பூர் மக்களுக்குப் பணத்தைவிட அமைதிதான் தேவைப்படுகிறது!



மணிப்பூர் மாநிலத்தில் வாழும் 32 இலட்சம் பூர்வகுடி மக்களில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் 41 விழுக்காடாகவும், மெய்தி இந்துக்கள் 53 விழுக்காடாகவும் உள்ளனர். மெய்தி இன மக்களிடையே கிறிஸ்தவர்களும் உள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய வீடுகள் கட்டுவதற்குப் பணத்தை வழங்குவதற்குப் பதிலாக அமைதியை மீட்டெடுக்குமாறு அழைப்புவிடுத்துள்ளனர் அதன் பூர்வகுடி கிறிஸ்தவர்களின் தலைவர்கள் என உரைக்கிறது யூகான் செய்தி நிறுவனம்.

ஆகஸ்ட் 5, இத்திங்களன்று, மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய வீடுகள் கட்ட ரூ. 1,00,000 விநியோகம் செய்வதற்கான முடிவைப் பற்றி அம்மாநிலத்தின் முதல்வர் என். பிரேன் சிங், சட்டசபையில் தெரிவித்த வேளை, இத்தகையதொரு அழைப்பை விடுத்துள்ளனர் பூர்வகுடி கிறிஸ்தவர்களின் தலைவர்கள் என மேலும் கூறுகிறது அச்செய்திக் குறிப்பு.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில், 18,370-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 14,800-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும் மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் மாநில சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 6, இச்செவ்வாயன்று இதுகுறித்து யூகான் செய்தி நிறுவனத்திடம் பேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகப் பெயர் குறிப்பிட விரும்பாத தலத்திருஅவை தலைவர் ஒருவர், மணிப்பூரில் அமைதி மீட்டெடுக்கப்படாவிட்டால், அத்தகைய அறிவிப்பு எதுவும் பயனளிக்காது என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்தக் கலவரத்தால் இடம்பெயர்ந்து சென்றுள்ள மக்கள் அனைவரும், மீண்டும் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பி மனித மாண்புடன் வாழ்வதற்குத் தங்களுக்கு ஒரு வீடு வேண்டும் என கோரிக்கை வைப்பதாகவும், ஆகவே, அவர்கள் இல்லங்களுக்குத் திரும்புவதற்கான சூழலை அரசு உருவாக்க வேண்டும் என்றும் அச்செய்தி நிறுவனத்திடம் மேலும் தெரிவித்துள்ளார் அவர்.

வீடுகள் கட்டித்தருவதற்கான பணத்தை முதல்வர் சட்டசபையில் அறிவித்தார், ஆனாலும், மாநிலத்தில் அமைதி நிலவாவிட்டால் இத்தகையதொரு அறிவிப்பால் எந்தப் பயனும் இல்லை என்று பூர்வகுடி கிறிஸ்தவத் தலைவர் ஒருவரும் அச்செய்தி நிறுவனத்திடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மணிப்பூரில் உள்ள பெரும்பான்மையான மெய்தி இந்து சமூகத்திற்குப் பூர்வகுடி அந்தஸ்து வழங்குவதில் ஏற்பட்ட 15 மாத கால மோதலில் 226-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் | Stan Swam...

Stone Inscriptions | வியக்க வைக்கும் தமிழரின் வானியல் அறிவு.. வெளிவரும் ...

மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை

  மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்கள...